தமிழ்நாடு

தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றாகும். இதை தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகரமாக சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கருநாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது. இலங்கை நாட்டுடன் கடல்வழி எல்லையைக் கொண்டுள்ளது. புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன.

தமிழ்நாடு
மாநிலம்
மேல் இடமிருந்து வலம்:
அழியாத சோழர் பெருங்கோயில்கள், பத்மநாபபுரம் அரண்மனை, அரங்கநாதர் கோயில், மாமல்லபுர மரபுச்சின்னங்கள், மெரீனா கடற்கரை மற்றும் நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து

சின்னம்
பண்: "தமிழ்த்தாய் வாழ்த்து"

இந்தியாவில் தமிழ்நாட்டின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 13.09°N 80.27°E / 13.09; 80.27
நாடு இந்தியா
உருவாக்கம்1 நவம்பர் 1956 (1956-11-01)
தலைநகரம் மற்றும் பெரிய நகரம்சென்னை
மாவட்டங்கள்37
அரசு
  Bodyதமிழ்நாடு அரசு
  ஆளுநர்பன்வாரிலால் புரோகித்
  முதலமைச்சர்எடப்பாடி க. பழனிச்சாமி (அஇஅதிமுக)
  துணை முதலமைச்சர்ஓ. பன்னீர்செல்வம் (அஇஅதிமுக)
  சட்டமன்றம்ஓரவை (234)[1]
  உயர்நீதிமன்றம்சென்னை உயர்நீதிமன்றம்[2]
பரப்பளவு
  மொத்தம்1,30,058
பரப்பளவு தரவரிசை10வது
மக்கள்தொகை (2011)[3]
  மொத்தம்7,21,47,030
  தரவரிசை6வது
  அடர்த்தி550
இனங்கள்தமிழர்
GDP[4][5]
  மொத்தம் (2018–19)
  தனிநபர் வருமானம் (2017–18)1,66,934 (US$2,354.49)
மொழி
  அலுவல் மற்றும் முதன்மைதமிழ்[6]
  கூடுதல் அலுவல்ஆங்கிலம்[6]
நேர வலயம்IST (ஒசநே+05:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-TN
வாகனப் பதிவுTN
HDI (2017) 0.708[7]
high · 11th
படிப்பறிவு (2011)80.33%[8]
பாலின விகிதம் (2011)996 /1000 [9]
^# ஜன கண மன is the national anthem, while "Invocation to Mother Tamil" is the state song/anthem.
^† Established in 1773; Madras State was formed in 1950 and renamed as Tamil Nadu on 14 January 1969[10]
சின்னங்கள்
சின்னம்
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
அலுவல் மொழி(கள்)
தமிழ்
பாடல்
"தமிழ்த்தாய் வாழ்த்து"
நடனம்
பரதநாட்டியம்
விலங்கு
நீலகிரி வரையாடு
பறவை
மரகதப்புறா
மலர்
செங்காந்தள்
மரம்
ஆசியப் பனை
விளையாட்டு
கபடி

முற்காலதில், தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனைத் தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்தார்.[11] பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.

தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் பத்தாவதாகவும், மக்கள்தொகையில் ஆறாவதாகவும் விளங்குகிறது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் இரண்டாவதாகவும் உள்ளது.[12] 2006 ஆம் ஆண்டில் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பத்தாமிடத்தில் (ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் சேர்த்தால் பதினாறாவது இடத்தில்) இருந்தது.[13] மேலும் இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது.[14] இந்தியாவின் 6% மக்கள்தொகையே கொண்டிருந்தும் மிகக் கூடுதலான வணிக நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் (10.56%) மொத்த வேலை வாய்ப்புகள் கொண்ட மாநிலங்களுள் இரண்டாவதாகவும் (9.97%) விளங்குகிறது[15].

கி.மு. 500க்கும் முன்பிருந்தே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 20000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த தமிழ் மொழி கல்வெட்டுக்களும் இலக்கியமும் காணக் கிடைக்கின்றன.[16] தொன்கதைப் பாரம்பரியத்தின் படி தமிழ் மொழியானது சிவப் பெருமானால் அகத்தியருக்குக் கற்பிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.[17][18][19][20][21][22][23][24] தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், தமிழர் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; எட்டு உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.[25][26]

புவியமைப்பு

Tamil Nadu topography map

தமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் தென் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் கருநாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. ஒன்றியப் பகுதி, புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது. நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர்திசம்பர் மாதங்களில் "வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று" மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர். இம்மாநிலத்தின் முதன்மையான ஆறான காவிரி ஆறு வடக்கே கருநாடக மாநிலத்தில் குடகு மலையில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை ஆறு, பாலாறு ஆகியவை பிற முதன்மையான ஆறுகளாகும். மதராஸ் என்று 1996 வரை அழைக்கப்பட்டு வந்த சென்னையே தமிழ்நாடு மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் அதன் தலைநகரமுமாகும். பதிமூன்று கிலோமீட்டர் நீளமுடையதும், உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையுமான, மெரீனா கடற்கரை சென்னையில் உள்ளது. மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திண்டுக்கல், திருநெல்வேலி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி மற்றும் வேலூர், நாகர்கோவில், ஓசூர் தமிழ்நாட்டின் மாநகரங்கள் ஆகும்.

வரலாறு

கீழடி,சங்க காலம் நகர தொல்லியல் எச்சம்

தமிழ்நாடு பண்டைக் காலத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களால் ஆளப்பெற்றது. மேலும், இம்மாநிலம் பல கோயில்களையும், சிற்பங்களையும் பெற்ற கலை குணங்கொண்டப் பகுதியாக விளங்குகிறது.

தமிழகத்தின் எல்லைகளைத் தொல்காப்பியப் பாடல்

வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்

என்று வரையறுக்கிறது (தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம், 1-3).

தொன்றுதொட்டே தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அதற்குச் சான்றாகக் கீழ்வரும் இலக்கியக் குறிப்புகளைக் காட்டலாம்:

வையக வரைப்பில் தமிழகம் கேட்ப (புறநானூறு, 168 :18)
இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க (பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம் : 5)
இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய (சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை : 38)
சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் (மணிமேகலை, 17: 62)

தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழ்கின்ற தமிழ் இன மக்களின் தோற்றம் தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருந்த தமிழர்கள், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இக்கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு தமிழர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் (1600). 170 அடி உயரத்தில் எழுகின்ற தெற்குக் கோபுரம்

இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய தமிழர் நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச மரபுகள் ஆண்டு வந்தன. இவற்றுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர்கள்,வேளிர்கள் பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர்.

மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந்தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. தமிழகத்தின் மக்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, உரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் ஆற்றல் மிக்க அரச தலைமுறைகளில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.

கிபி 1 முதல் 4 ஆம் நூற்றாண்டு வரை

சங்ககால மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர் கிபி முதலாம் நூற்றாண்டு தொடங்கி நான்காம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் சேரர்களில் செங்குட்டுவன் மன்னனும், சோழர்களில் கரிகால் சோழன் மன்னனும், பாண்டியர்களில் நெடுஞ்செழியன் மன்னனும் பெயர் பெற்ற ஆட்சியாளர்களாகத் திகழ்ந்து, மிகவும் புகழ்பெற்று விளங்கினர். சேரர்கள் தற்கால கேரள மற்றும் கொங்கு மாவட்டங்களிலும், சோழர்கள் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளிலும், பாண்டியர்கள் மதுரை, நெல்லை மற்றும் தென் கேரள மாவட்டங்களிலும் சாய்கால்(செல்வாக்கு) செலுத்தினர். இவர்கள் கூட்டணியால் தமிழகம் வடதிசை மௌரிய குப்தா பேரரசுகளின் ஆளுகையினை எதிர்த்து தனியரசுகளாக விளங்கின. இவர்களின் போர் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியதாக நம்பப்படுகிறது.

கிபி 4 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை

கடற்கரைக் கோயில்; அமைத்தவர்: பல்லவர்; இடம்: மாமல்லபுரம்; காலம்: (கி.பி.எட்டாம் நூற்றாண்டு.) – யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களம்.

கி.பி. நான்காம் நூற்றாண்டு முற்பகுதியில் களப்பிரர் என்னும் குலம் தெரியாத அரசர்கள் தமிழகத்தை ஆண்டனர். அவர்கள் மூவேந்தர்களையும் அடக்கி ஆண்டதால் அவர்களின் வரலாறு தெரியாமல் போயினும், பல்லவர் என்னும் அக்கால புதிய அரசர்கள் தன்னாட்சி செலுத்தியதால் அவர்களைப் பற்றி மட்டும் குறிப்பிடத்தக்க ஆவணங்கள் கிடைத்துள்ளன. இக்களப்பிர அரசர்கள் கிபி 4 தொடக்கம் 6 ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட காலத்தைத் தமிழகத்தின் இருண்ட காலம் என்று வரலாற்றாளர்கள் கூறுவதுண்டு. கி.பி. நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு தமிழ்நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் பெருமை இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகிறது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். பல்லவர் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே வளர்ச்சியடைந்து உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராசிதன் ஆவான். இவன் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது.

இக்காலகட்டத்தில் (கிபி 300 – கிபி 600) பௌத்தம் தமிழகத்தில் மிகவும் பரவலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.[27]

9 தொடக்கம் முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை

இராசேந்திர சோழன் ஆட்சியில் சோழப் பேரரசு கி.பி. 1030

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராசராச சோழன் மற்றும் அவனது மகனான இராசேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஆற்றல் மிக்கவர்களாக உருவெடுத்தனர். இவர்களுடையப் பேரரசு, மைய இந்தியா, ஒரிசா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது.

இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து, இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, சாவா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதின்மூன்றாம் நூற்றாண்டுவாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.

14ஆம் நூற்றாண்டு

14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சிப் பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316 இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்சி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இசுலாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் ஆற்றலற்றவர்களாக்கி இசுலாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இசுலாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விசயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் அமைக்கப்பட்டனர். அம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விசய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.

ஆனால், 1564 ஆம் ஆண்டு போக்கில் நடந்த தலிகோட்டா போரில், தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விசயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டன. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசியல் அமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டன, பாளையங்கள் உருவாக்கப்பட்டு ஊர்ப்புற தன்னாட்சி முறை ஒழிக்கப்பட்டது. தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ்ப்பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களைப் புதுப்பிக்கவும் செய்தனர்.

இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி உரோமானியர்களுடனான வணிகத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தச் சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.

17 ஆம் நூற்றாண்டு

1639இல் ஆங்கிலேயர்கள் மதராசில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவியபிறகுத் தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதியப்பகுதி தொடங்கியது. தமிழ்நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு, அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தைச் செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தைத் தம் வசப்படுத்திய இந்தக் காலகட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன்,அனந்த பத்மநாப நாடார், பூலித்தேவன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வாண்டாயத் தேவன், அழகு முத்துக்கோன், வீரன் சுந்தரலிங்கம், ஒண்டி வீரன், பெரிய காலாடி, தீரன் சின்னமலை போன்ற ஆட்சியாளர்கள் வெள்ளையரை எதிர்த்துப் போரிட படைகளைத் தலைமையேற்று நடத்தினர்.

20 ஆம் நூற்றாண்டு

மதராசு மாகாண வரைபடம்

1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராசு மாகாணம் (படம்) (The Madras Province) மதராசு மாநிலம் ஆனது. ஆனால் 1948ஆம் ஆண்டுவரை புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதுவே இந்தியாவோடு சேர்ந்த கடைசி சில அரசர்பகுதிளுள் ஒன்றாகும். தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கருநாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராசு மாநிலத்தின் கீழ் வந்தன. 1953இல் மதராசு மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்களுள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும், தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராசு மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறுவரையறைச் செய்யும் சட்டத் திருத்தத்தின் மூலம் மதராசு மாநிலத்தின் மேற்கு கடற்கரைப் பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1969இல், மதராசு மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ‎திருவாங்கூர்-கொச்சி மாநிலத்தின் தென்பகுதியில் தமிழ் பேசும் மக்கள் வாழிடம் கன்னியாகுமரி மாவட்டமாக உருவாக்கப்பட்டு, நவம்பர் 1, 1956இல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.

பாரம்பரியம்/மரபு

தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று.

சுப்பிரமணிய பாரதி, வ. உ. சிதம்பரம்பிள்ளை, சி. வி. இராமன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பெருந்தலைவர் காமராசர், சுப்பிரமணியன் சந்திரசேகர், ஆர். கே. நாராயண், ஆர். வெங்கட்ராமன், சி. என். அண்ணாதுரை, சீனிவாச ராமானுசன், அப்துல் கலாம், பாரதிதாசன், அயோத்தி தாசர், திரு.வி.க., கண்ணதாசன், என்.எஸ்.கிருட்டிணன், ஈ.வே.ரா பெரியார் ஆகியோர் மாநிலத்தின் நன்கு அறியப்பட்டவர்களில் சிலராவர். இவர்களோடு, இளங்கோவடிகள், கண்ணகி, திருவள்ளுவர், தொல்காப்பியர், ஔவையார், கம்பர், கரிகால்சோழன், இராசராச சோழன், போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாகும்.

அரசியல்

தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234 மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39 ஆகும். 1986 வரை தமிழ்நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் படிநிகராளிகள்(பிரதிநிதிகள்) தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்.

தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன. இந்திய தேசிய காங்கிரசு, இந்தியக் குடியரசுக் கட்சி, அகில இந்திய பார்வார்டு பிளாக், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், பாரதிய ஜனதா கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், முஸ்லீம் லீக், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி குறிப்பிடத்தக்க முதன்மை வாய்ந்த கட்சிகளாக உள்ளன.

பெரியார் 1916இல் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து, 1949 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை சி. என். அண்ணாதுரை தோற்றுவித்தார். 1947 இல் இந்திய விடுதலைக்குப் பிறகு 1967 வரை தமிழ்நாட்டை இந்திய தேசிய காங்கிரசு ஆண்டது. 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972 இல் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, ம. கோ. இராமச்சந்திரன் தோற்றுவித்தார். 1977இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது.

1967 முதல் 2016 இல் கடைசியாக நடந்த சட்டமன்றத் தேர்தல்வரை தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள் பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன. தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதுண்டு என்றாலும், இதுவரை தனிக்கட்சி ஆட்சியே நடைபெறுகிறது. முதன் முறையாகத் தி.மு.க. ஒரு அறுதிப் பெரும்பான்மையற்ற சிறுபான்மை அரசாகச் (2006–2011) செயல்பட்டது. இருப்பினும், தமிழக கட்சிகள் நடுவண் அரசில் செல்வாக்கோடு விளங்கிக் கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும், பங்கேற்கவும் செய்கின்றன.

மாநில நிர்வாகப் பிரிவுகள்

தமிழ்நாடு நிர்வாக வசதிகளுக்காக பல்வேறு பிரிவுகளாப் பிரிக்கப்பட்டுள்ளது.[28]

மாவட்டங்கள்வருவாய்ப் பிரிவுகள்வட்டங்கள்குறுவட்டங்கள்வருவாய் ஊர்புறங்கள்மாநகராட்சிகள்நகராட்சிகள்பேரூராட்சிகள்ஊராட்சி ஒன்றியங்கள்நகரப் பஞ்சாயத்துகள்கிராமப் பஞ்சாயத்துகள்மக்களவைத் தொகுதிகள்சட்டமன்றத் தொகுதிகள்
3782285134917,6801252812538556112,61839234

மாவட்டங்கள்

தமிழ் நாட்டில் தற்போது 37 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலமலை மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாகப் பெயர்மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழக தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன. இந்த 37 மாவட்டங்களில் 288 வருவாய் வட்டங்கள் உள்ளது.

  1. அரியலூர் மாவட்டம்
  2. இராமநாதபுரம் மாவட்டம்
  3. ஈரோடு மாவட்டம்
  4. கடலூர் மாவட்டம்
  5. கரூர் மாவட்டம்
  6. கள்ளக்குறிச்சி மாவட்டம்
  7. கன்னியாகுமரி மாவட்டம்
  8. காஞ்சிபுரம் மாவட்டம்
  9. கிருட்டிணகிரி மாவட்டம்
  10. கோயம்புத்தூர் மாவட்டம்
  11. சிவகங்கை மாவட்டம்
  12. சென்னை மாவட்டம்
  13. சேலம் மாவட்டம்
  14. தஞ்சாவூர் மாவட்டம்
  15. தருமபுரி மாவட்டம்
  16. திண்டுக்கல் மாவட்டம்
  17. திருச்சிராப்பள்ளி மாவட்டம்
  18. இராணிப்பேட்டை மாவட்டம்
  19. திருப்பத்தூர் மாவட்டம்
  1. திருநெல்வேலி மாவட்டம்
  2. திருப்பூர் மாவட்டம்
  3. திருவண்ணாமலை மாவட்டம்
  4. திருவள்ளூர் மாவட்டம்
  5. திருவாரூர் மாவட்டம்
  6. தூத்துக்குடி மாவட்டம்
  7. தேனி மாவட்டம்
  8. நாகப்பட்டினம் மாவட்டம்
  9. நாமக்கல் மாவட்டம்
  10. நீலமலை மாவட்டம்
  11. புதுக்கோட்டை மாவட்டம்
  12. பெரம்பலூர் மாவட்டம்
  13. மதுரை மாவட்டம்
  14. விருதுநகர் மாவட்டம்
  15. விழுப்புரம் மாவட்டம்
  16. வேலூர் மாவட்டம்
  17. தென்காசி மாவட்டம்
  18. செங்கல்பட்டு மாவட்டம்

மாநகரங்கள்

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் முதல் 16 பெரிய நகரங்கள்:[29]

உள்ளாட்சி அமைப்புகள்

தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகளும், 123 நகராட்சி மன்றங்களும், 529 பேரூராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றியங்களும் மற்றும் 12,524 ஊராட்சி மன்றங்களும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

தமிழ்நாடு இந்தியாவின் ஏழாவது மக்கட்தொகை மிகுந்த மாநிலமாகும். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7,21,47,030 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 36,37,975 மற்றும் பெண்கள் 3,60,09,055 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 74,23,832 ஆக உள்ளது. அதில் சிறுவர்கள் 3,820,276 ஆகவும்: சிறுமிகள் 36,03,556 ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.61% ஆக உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 996 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 555 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் படிப்பறிவு 5,18,37,507 (80.09 %) ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 2,80,40,491 (86.77 %) ஆகவும், பெண்களின் படிப்பறிவு 2,37,97.016 (73.44 %) ஆகவும் உள்ளது. நகரப்புறங்களில் 48.40% மக்களும், கிராமப்புறங்களில் 51.60 % மக்களும் வாழ்கின்றனர்.[30]

சமயம்

தமிழகத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 63.188.168 (87,58 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 4,229,479 (5,86 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 4.418.331 (6,12 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 14.601 (0,02 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 89.265 (0,12 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 11.186 (0,02 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 7.414 (0,01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 188.586 (0,26 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

89% அதிகமான மக்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தெலுங்கு (5.65%), கன்னடம் (1.68%), உருது (1.51%), மலையாளம் (0.89%) ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன.

பழங்குடிகள்

தமிழகத்தின் மக்கள்தொகையில் 3.5% மக்கள் பழங்குடிகள் (2001 கணக்கெடுப்பு). மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்ட பழங்குடிகள் உள்ளனர். நீலமலை, ஆனைமலை, கொல்லிமலை ஆகிய பகுதிகளில் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் தோடர், காடர், குறும்பர், காணிக்காரர், மலமலசர், பணியர், பளியர் முதலிய பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர்.

பொருளாதாரம்

தமிழ்நாடு, நல்ல தொழில் வளர்ச்சி கண்டுள்ள ஒருசில இந்திய மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழக மக்கள் தொகையில் குறிப்பிடத் தகுந்த பகுதியினர் வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் பொறியியல், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்கள், நெசவாலைகளுக்கும், ஆடை ஏற்றுமதி, பயிர்த்தொழில் உபகரணங்கள், விசைப்பொறி, அரவைப்பொறி உற்பத்திக்கும், ஈரோடு மஞ்சள் உற்பத்தி மற்றும் விற்பனை, பால் உற்பத்தி, போர்வைகள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், கரூர் இல் நெய்தலாடைகள் ஏற்றுமதி மற்றும் கனரக வாகன கூடு கட்டும் தொழில்களுக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு, அலுமினியம், ஆலைகளுக்காகவும், சவ்வரிசி, மாம்பழம், பட்டுச் சேலை, பருத்தி உற்பத்திக்கும், கனரக தொழிற்சாலைகளுக்கும், மின்சார உற்பத்திக்காகவும், கனரக வாகனங்கள் கட்டுமானத்திலும், நிலக்கடலை, கரும்பு, தக்காளி போன்ற பயிர் உற்பத்திக்கும், நாமக்கல் கோழிப் பண்ணைகளுக்கும், சிவகாசி அச்சுத்தொழில், பட்டாசு உற்பத்திக்கும், காவிரி பாசன பகுதியில் அமைந்துள்ள திருச்சி, தஞ்சாவூர் போன்ற பகுதிகளும் கன்னியாகுமரி மாவட்ட நாஞ்சில் நாட்டுப் பகுதியும் உழவுத்தொழிலிற்கும், வேலூர் தோல் தொழிலுக்கும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன. இந்தி திரைப்படத்துறை பிறகு, தமிழகத் திரைப்படத்துறை இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத் தொழில் மையமாகக் கோலிவுட் என்னும் பெயரோடு (கோடம்பாக்கம் + ஹாலிவுட் என்பதன் பெயர்த் தழுவல்) திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பெருமளவில் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் உருவாக்கப்படுகின்றன.

  • தற்போதைய விலையில், 2011–2012 ஆண்டு கணக்கின்படி, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி – 132.4 பில்லியன் அமெரிக்க டாலர் [31].
  • இந்தியாவில் தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் - 26122 [32]
  • மொத்த தொழில்துறை உற்பத்தியில் நாட்டில் முதலிடம்.
  • வெளிநாட்டு நேரடி முதலீட்டில் இந்தியாவில் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்று.
  • இந்தியாவில் வாகன உதிரிபாகங்கள் உருவாக்கத்தில், தமிழ்நாட்டின் பங்கு 35 %
  • சென்னையின் தானுந்துத் தயாரிப்பு திறன்: தானுந்து 13,80,000: வர்த்தக வாகனங்கள்: 3,61,000: ஸ்யுவி: 1,50,000
  • தானுந்துத் தொழிற்சாலைகள்: யுன்டாய், போர்டு, நிசான், அசோக் லேய்லான்ட்
  • சென்னையில் உள்ள டயர் உருவாக்கும் நிறுவனங்கள்: எம்.ஆர்.எஃப், அப்பல்லோ டயர்ஸ், மிஷ்ஷலின், ஜெ.கெ டயர்ஸ்
  • மின்னணுசார் தொழிற்துறை: நோக்கியா, பாக்ஸ்கான், பிளக்ஸ்டிராநிக்ஸ், டெல், பிஒய்டி, வீடியொக்கான், சாம்சங், மோட்டரோலா
  • இந்தியாவில் கறி-கோழி வளர்ப்பில், தமிழ்நாடு இரண்டாவது பெரியது [33].
  • இந்தியாவில் பால் உற்பத்தியில், தமிழ்நாடு இரண்டாவது பெரியது [33].
  • மின்சாரம்: 18083 மெகா வாட்(இரண்டாவது பெரியது)
  • சிறப்பு பொருளாதார மண்டலம்: 92; தொழிற் பூங்கா: 19 [33]
  • அதிக சாலை அடர்த்தி (மூன்றாவது பெரியது).
  • சுகாதாரம், வீடமைப்பு, கல்வி ஆகிய துறைகளில் வளர்ச்சி அடைந்த மாநிலம்.
  • ரகுராம் ராஜன் அறிக்கையின் படி தமிழ்நாடு இந்தியாவின் மூன்றாவது முன்னேறிய மாநிலம்[34].

தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை

ரகுராம் ராஜன் அறிக்கையின் படி 2013 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் விகிதம் 11.28 விழுக்காடு. இது மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடுகயில், தமிழ்நாட்டின் ஏழ்மை விகிதம் குறைவு.[35]

2004/2005ஆம் ஆண்டுகள் எடுத்த கணக்கெடுப்பு பணியின்போது 29.4 சதவீதத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தனர்.[36] ஆனால் இது 1999/00 கணிப்பீட்டின் படி 12-17 மில்லியன் மக்கள் அல்லது 21 விழுக்காடு மட்டுமே இருந்தது.[37]

கல்வி அறிவு மற்றும் சமூக வளர்ச்சி

சமூக முன்னேற்றத்தின் குறியீடுகளான (மனித வளர்ச்சிச் சுட்டெண்) பரவலான கல்வியறிவு, ஆண் - பெண் சமன்மை, மேம்பட்ட பொது சுகாதாரம், நீண்ட சராசரி மனித வாழ்நாள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்குகிறது.

தமிழ்நாட்டு மக்களின் கல்வியறிவு இந்தியாவின் சராசரியைவிட அதிகம். இங்கு 2001–2011 கால கட்டத்தில் 74.04%ல் இருந்து 80.33% என்று கல்வியறிவு அதிகரித்தது. இன்று தமிழ்நாட்டில் 86.81% ஆண்களும் 73.86% பெண்களும் கல்வியறிவுடையவர் ஆவர். தமிழ்நாட்டில் 37 பல்கலைக்கழகங்கள், 454 பொறியியல் கல்லூரிகள், 1,150 கலைக் கல்லூரிகள், 2,550 பள்ளிக்கூடங்கள் மற்றும் சுமார் 5,000 மருத்துவமனைகள் உள்ளன. இங்கு இரண்டு நடுவண் அரசு கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை சென்னையில் அமைந்த இந்திய தொழில்நுட்பக் கழகம்,பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சியில் அமைந்த நாட்டுடை தொழில்நுட்ப கழகம் ஆகும். மேலும் புகழ் மிக்க சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், சேலம் சோனா பொறியியல் கல்லூரி, பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம், வேலூர் கிறுத்துவ மருத்துவ கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர், சென்னையில் பச்சையப்பன் கல்லூரி,இலயோலாக் கல்லூரி ஆகியனவும் உள்ளன. தமிழகத்தில் ஆண்டுதோறும் 1,30,000 பேர் பொறியியல் படிப்பு முடித்துத் தேர்ச்சி பெறுகின்றனர். இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது.

  • 525 பொறியியல் கல்லூரிகள்– 226034 பொறியியல் பட்டதாரிகள் (2012).
  • 447 பலதொழில்நுட்பப் பயிலகம் – 171637 தொழில்நுட்பர்கள் (2012).
  • 1622 தொழில் பயிற்சி நிறுவனம் – 173746 (2012).
  • மருத்துவ கல்லூரி – 28 (ஆண்டு – 2012)[38].

பண்பாடு

தமிழர் பண்பாடு நீண்ட கால வரலாறு கொண்டது. இலக்கியம், இசை, நாடகம் என்பன சார்ந்த பல்வேறு கலை வடிவங்கள் தமிழ்நாட்டில் சிறப்பான நிலையில் உள்ளன. பரத நாட்டியம், கர்நாடக இசை, திராவிடக் கட்டிடக்கலை போன்ற புகழ் பெற்ற உயர் கலை வடிவங்கள் பெரும்பாலும் தமிழகத்தில் வளர்ச்சியடைந்து சிறப்பெய்தியவை.

மொழியும் இலக்கியமும்

தமிழ்நாட்டின் ஆட்சி மொழி தமிழ் மொழி ஆகும். ஆங்கிலமும் அலுவல் மொழியாகப் பயன்படுகிறது. இந்தியா செம்மொழியாக அடையாளங்கண்ட மொழிகளில் தமிழ் முதலிடத்தில் உள்ளது. தமிழரின் பண்பாட்டில் தமிழ் மொழி மிக இன்றியமையாத இடத்தை வகிக்கிறது. சங்க இலக்கியங்கள் எனப்படும் தமிழின் மிகப் பழமையான இலக்கியங்கள் யாவும் செய்யுள் வடிவில் இயற்றப்பட்டவையாகும். தொன்மைக் காலம் முதலே இலக்கியம் மட்டுமல்லாமல் மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்ட மொழி தமிழ் மொழியாகும்.

திருக்குறள் என்ற அறநூல் தமிழின் மிகச் சிறந்த அறநூல் ஆகும். இது உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவினிலே வேறெந்த மொழியிலும் இருக்கும் நூல்கள் போலல்லாது, அதிக மொழிகளில் பெயர்க்கப்பட்டது இந்நூலேவாகும். தன்னை இன்னாரென அடையாளம் காட்டாத ஒரு சிறந்த தமிழ்ப் புலவரால் இயற்றப்பட்டது இந்நூலாகும். நாடு, மொழி, இனம் கடந்து உலக மக்கள் யாவருக்கும் பொதுவான அறநெறிகளைக் கூறுவதால் திருக்குறள் உலகப் பொதுமறையெனப் போற்றப்படுகிறது.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை (திருக்குறள் 400)

தமிழின் இலக்கியங்களிலிருந்து அக்கால தமிழ் மக்களின் தலைசிறந்த பண்பாடு, வாழ்க்கை முறை போன்ற கூறுகளை நாம் அறியமுடிகிறது. இந்தியாவின் முதல் நூல்கள் தமிழிலேயே அச்சாயின. தமிழகத்தின் முதல் அச்சுக்கூடம் புன்னைக்காயலில் 1578இல் போர்த்துகீசியரால் நிறுவப்பட்டது.[39] பின்னர் தரங்கம்பாடி அச்சுக்கூடத்திலும் சென்னையிலும் ஏராளமான தமிழ் இலக்கியங்கள் அச்சுவடிவம் பெற்றன. இந்திய விடுதலைப் போரில் மக்களின் விடுதலை உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு தமிழ் கவிஞர்களான பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் பாடல்கள் உதவின. தற்காலத்தில் வாலி, வைரமுத்து, தாமரை போன்ற தமிழ்க் கவிஞர்கள் பாடல்களைப் படைக்கின்றனர். தமிழ் எழுத்தாளர்களால் புதினங்கள், சிறுகதைகள், பெருங்கதைகள் எனத் தமிழ் நூல்கள் வெளிவருகின்றன.

போக்குவரத்து

தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து மூலம் சிறுங்குறு ஊர்களை இணைப்பதால் போக்குவரத்து வளர்ச்சி அடைந்துள்ளது. தொடர்வண்டிப் போக்குவரத்து மூலம் பெரும்பான்மையான நகரங்களையும், வான்வழி போக்குவரத்து மூலம் முதன்மை நகரங்களையும் இணைக்கின்றன. 2013-ஆம் கணக்கெடுப்பின் படி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

விழாக்கள்

தமிழர்களின் வீரவிளையாட்டுக்களில் ஒன்றான ஏறுதழுவலில் காளையை அடக்கும் இளைஞன்

சுற்றுலாத்துறை

தமிழ்நாடு அழகிய நிலப் பகுதிகள், தொன்மரபு கலைவடிவங்கள் நிறைந்த சுற்றுலா முதன்மை மாநிலமாகும். தமிழ்நாடு, திராவிடக் கட்டிடக்கலை பாணியைப் எதிரொளிக்கும் கோயில்களுக்குப் புகழ் பெற்றது. இக்கோயில்களுக்கு வியக்க வைக்கும் கோபுரங்களும் தேர்களும் அழகு சேர்க்கின்றன. இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோவிலின் மூன்றாம் திருவழி, உலகின் மிகப் பெரியதாகும். சோழர் கால தஞ்சை பெரிய கோவிலும், பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும் கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அடையாளங்காண்ப்பட்டுள்ளது. இராமநாதபுரம், தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை, சுவாமிதோப்பு காஞ்சி, சேலம், தாரமங்கலம் கைலாயநாதர் கோவில், மேச்சேரி பத்ரகாளியம்மன் மற்றும் செங்காட்டூர்(சேலம்) ஆகியவை கோயில் நகரங்களாகத் திகழ்கின்றன. கன்னியாகுமரி கடல் முனையில் அமைந்துள்ள வள்ளுவர் சிலையும் காண வேண்டிய இடமாகும். எழில் கொஞ்சும் நீலமலை மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த காட்டுப் பகுதிகள், கிழக்குக் கடற்கரை, ஏற்காடு, மேட்டூர், பூலாம்பட்டி போன்ற சுற்றுலா தளங்கள் உள்ளன.

தமிழ்நாடு நாள்

1956 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் இருந்து மொழிவாரி அடிப்படையில் கருநாடகம், கேரளம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இந்த நாளை, சம்பந்தப்பட்ட மற்ற மாநிலங்கள் பல ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் இந்நாளை 63 ஆண்டுகள் கொண்டாடாமல் இருந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு முதல் தமிழகத்திலும் தமிழ்நாடு நாள் நவம்பர் முதல் நாளில் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.[40][41]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "Tamil Nadu: Girija Vaidyanathan is the new chief secretary". தி டெக்கன் குரோனிக்கள் (Tamil Nadu). 23 December 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/231216/tamil-nadu-girija-vaidyanathan-is-the-new-chief-secretary.html. பார்த்த நாள்: 31 December 2016.
  2. "Rajendran is new DGP". thehindu.com. பார்த்த நாள் 18 October 2016.
  3. "Census of india 2011". Government of India.
  4. "Tamil Nadu fin_budget_speech_e_2018_19". பார்த்த நாள் 15 March 2018.
  5. "MOSPI Gross State Domestic Product" (3 August 2018).
  6. "52nd report of the Commissioner for Linguistic Minorities in India (July 2014 to June 2015)". Ministry of Minority Affairs (Government of India) (29 March 2016). மூல முகவரியிலிருந்து 25 May 2017 அன்று பரணிடப்பட்டது.
  7. "Sub-national HDI - Area Database" (en). Institute for Management Research, Radboud University. பார்த்த நாள் 25 September 2018.
  8. "censusindia.gov.in".
  9. "Sex ratio of Tamil Nadu". Census of India. பார்த்த நாள் 27 February 2014.
  10. Tamil Nadu Legislative Assembly history 2012.
  11. "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றக் கோரிக்கை சங்கரலிங்கனார் உயிர்த்தியாகம்
  12. "Indian States by Economic Freedom - StatisticsTimes.com".
  13. HDI and GDI Estimates for India and the States/UTs: Results and Analysis
  14. Tamil Nadu the most urbanised State: Minister.
  15. Enterprises in India.
  16. Anwar S. Dil "Language and Linguistic Area: Essays by Murray Barnson Emeneau", Stanford University Press: Stanford, California – Reprinted (1980).
  17. Imagining a Place for Buddhism : Literary Culture and Religious Community in. பக். 134. http://books.google.co.in/books?id=CvetN2VyrKcC&pg=PA134&dq=lord+shiva+taught+tamil+,sanskrit&hl=en&sa=X&ei=LX0oUvamJIe8rAfh7YCwDw&ved=0CC0Q6AEwAA#v=onepage&q=lord%20shiva%20taught%20tamil%20%2Csanskrit&f=false.
  18. Companion Studies to the History of Tamil Literature. பக். 241. http://books.google.co.in/books?id=aP5PA2OyJbMC&pg=PA15&dq=shiva+taught+tamil+,sanskrit&hl=en&sa=X&ei=mX0oUoaZKsujrQePgYHYDg&ved=0CFkQ6AEwCA#v=onepage&q=shiva%20taught%20tamil%20%2Csanskrit&f=false.
  19. Handbook of Oriental Studies, Part 2. பக். 63. http://books.google.co.in/books?id=Kx4uqyts2t4C&pg=PA63&dq=shiva+taught+tamil+,sanskrit&hl=en&sa=X&ei=mX0oUoaZKsujrQePgYHYDg&ved=0CEUQ6AEwBA#v=onepage&q=shiva%20taught%20tamil%20%2Csanskrit&f=false.
  20. History of the Tamils from the Earliest Times to 600 A.D. பக். 218. http://books.google.co.in/books?id=ERq-OCn2cloC&pg=PA218&dq=shiva+taught+tamil+,sanskrit&hl=en&sa=X&ei=mX0oUoaZKsujrQePgYHYDg&ved=0CF8Q6AEwCQ#v=onepage&q=shiva%20taught%20tamil%20%2Csanskrit&f=false.
  21. Facets of South Indian art and architecture, Volume 1. பக். 132. http://books.google.co.in/books?id=F72fAAAAMAAJ&q=lord+shiva+taught+tamil+,sanskrit&dq=lord+shiva+taught+tamil+,sanskrit&hl=en&sa=X&ei=LX0oUvamJIe8rAfh7YCwDw&ved=0CDcQ6AEwAg.
  22. "Michel Danino – Vedic Roots of Early Tamil Culture". Micheldanino.voiceofdharma.com (12 April 2000). பார்த்த நாள் 23 September 2013.
  23. "Metamorphosis Design Free Css Templates". Guruvesaranam.com. பார்த்த நாள் 23 September 2013.
  24. "Agastiya Nadi Leaves History – Shri Agastiya". Shriagastiya.webs.com. பார்த்த நாள் 23 September 2013.
  25. Press Information Bureau.
  26. UNESCO World Heritage List.
  27. ராசு கொளதமன். (2004). க. அயோத்திதாசர் ஆய்வுகள். சென்னை: காலச்சுவடு பதிப்பகம்.
  28. "தமிழ்நாடு அரசு". தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ வளைதளம். பார்த்த நாள் ஏப்ரல் 14, 2019.
  29. "Provisional Population Totals, Census of India 2011 – Urban Agglomerations/Cities having population 1 lakh and abov". பார்த்த நாள் 1 பெப்ரவரி 2015.
  30. http://www.census2011.co.in/census/state/tamil+nadu.html
  31. TamilNadu Presentation – 2012 Page 9
  32. TamilNadu Presentation – 2012
  33. About Tamilnadu 2012
  34. Rajan Panel report: It's a battle of the States
  35. rajan-panel-reportSection Povetry
  36. http://data.gov.in/access-point-download-count?url=http://data.gov.in/sites/default/files/Poverty_Ratio_2004-05.xls&nid=4820
  37. http://siteresources.worldbank.org/INTINDIA/Resources/TamilNadu-PovertyProfile.pdf
  38. TamilNadu At Glance
  39. முதல் அச்சுக்கூடம்
  40. "தமிழக அரசு சார்பில் முதல் முறையாக தமிழ்நாடு நாள் இன்று கொண்டாட்டம்".ஒன்இந்தியா தமிழ் (நவம்பர் 01, 2019)
  41. "அரசு சார்பில் 'தமிழ்நாடு நாள்' இன்று கொண்டாட்டம்".புதியதலைமுறை (நவம்பர் 01, 2019)

வெளி இணைப்புகள்

   
தமிழ்நாடு வலைவாசல்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.