தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் தூத்துக்குடி ஆகும். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சில பகுதிகளை பிரித்து 1985 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மேற்கே திருநெல்வேலி மாவட்டமும், கிழக்கே வங்காள விரிகுடா கடலும், வடக்கே இராமநாதபுரம் மாவட்டமும் அமைந்துள்ளது.நீர் நிறைந்த நிலத்தைத் தூத்துத் துறைமுகமும் குடியிறுப்பும் தோன்றிய ஊர் என்பதால் தூத்துக்குடி என்றாயிற்று. வாகைக்குளம், கங்கைக்கொண்டான் கல்வெட்டுக்களில்,[1] இவ்வூர்ரைத் 'தூற்றிக்குடி' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்
தலைநகரம் தூத்துக்குடி
மிகப்பெரிய நகரம் தூத்துக்குடி
மாவட்ட ஆட்சித் தலைவர்

சந்தீப் நந்தூரி இ.ஆ.ப
காவல்துறைக் கண்காணிப்பாளர்

ஆக்கப்பட்ட நாள்
பரப்பளவு 4,745 km2 (1,832 sq mi)
மக்கள் தொகை 1,750,176
(மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆண்டு) 2011
அடர்த்தி 369
வருவாய் கோட்டங்கள் 3
வட்டங்கள் 10
மாநகராட்சி 1
நகராட்சிகள் 2
பேரூராட்சிகள் 19
ஊராட்சி ஒன்றியங்கள் 12
ஊராட்சிகள் 403
வருவாய் கிராமங்கள்|480
இணையதளம் http://thoothukudi.nic.in/
பின்குறிப்புகள்

வரலாறு

சென்னை மாகாணத்தின் திருநெல்வேலி மாவட்ட வரலாற்றுப் பகுதிகள் தற்போது உருவாக்கப்பட்ட தூத்துக்குடி மாவடத்தில் உள்ளன. கொற்கையிலும், ஆதிச்சநல்லூரிலும்,சேரன் மாதேவியிலும் சிவகளையிலும் மேற்கொண்ட புதைபொருள் ஆய்வுகள் வழி தமிழர்களின் பழங்கால நாகரிகங்கள் உலகுக்குத்தெரிய வந்தன. வேளாண்மை, தொழில் திறமை, பழக்க வழக்கங்கள் பற்றிய சிறப்பை இங்குக் கிடைத்த பொருட்களின் மூலம் உணர முடிகிறது. கி.மு.1200-இல் நெல் பயிரிடப்பட்ட தையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், மேலை நாடுகளுக்கும் அனுப்புவதற்காக இரும்பு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட விபரங்களும் இந்தப்புதை பொருள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இம்மாவட்டத்து ஊர்ப் பெயர்கள் அனைத்தும் வரலாற்றுச் செய்திகளைக் கூறுவனவாகவே உள்ளன. பாண்டி நாட்டின் தென்பகுதியே திருநெல்வேலி சீமை. பாண்டியர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து இப் பகுதியை ஆண்டதை வரலாறு மெய்பிக்கிறது.[2] திருநெல்வேலியை அடைந்து 'நெல்லைப் பாண்டியர்'களாக காலங்கழித்தனர் 15-நூற்றாண்டு முதல் விஜயநகர, நாயக்கர் ஆட்சி மதுரையில் தொடங்கியது. பாண்டிய அரசு தூண்டாடப்பட்டு தமிழ் நாடே 72 பாளையப்பட்டாக நாயக்கர் ஆட்சியில் பிரிக்கப்பட்டது. இந்தப் பாளையங்கள் உருமாறி 1910ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது 31 ஜமீன்கள் இருந்தன. அவற்றில் குறிப்பிட்டத்தன : நாங்குனேரி, சொக்கம்பட்டி, சிவகிரி, தலைவன் கோட்டை, நெற்ட்டுசேவல், ஊற்றுமலை, எட்டயபுரம் பாளையபட்டுகளை நிர்வகித்தவர்கள் அரியநாத முதலியாரும், வடமலைப்பன் பிள்ளையும் ஆவர்.

இடச்சுக்காரர்

கி.பி. 1532-இல் முதன் முதலாக போர்ச்சுக்கீசியர்கள் இம்மாவட்டத்தில் கால் வைத்தனர். 1658-இல் டச்சுக்காரர்கள் வந்ததனால் போர்ச்சுகல் ஆதிக்கம் அகன்றது. பாளையக்காரர் களின் அழைப்பின் பேரிலும், திருவாங்கூர் மன்னரின் படை உதவியுடனும், டச்சுக்காரர் கள் முன்னேறத் தொடங்கினர். முகம்மது யூசுப் படைதிரட்டுவதை கேள்விப்பட்டதும் டச்சுக்காரர்கள் மணப்பாட்டை காலி செய்து விட்டு, தூத்துக்குடி வழியாக தாய்நாடு சென்று விட்டனர். நாய்க்கர் ஆட்சி சந்தாசாகிப்பினால் முடிவுற்றது. கர்நாடகம் ஆற்காடு நவாப் கையில் விழுந்தது. முகம்மதலி திருநெல்வேலியைக் கைப்பற்ற ஒரு படையை அனுப்பினார். 1755-இல் ஹெரான் தலைமையில் ஆங்கிலேயர் படை கிளம்பியது. பாளையக்காரர்கள் கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் இரண்டையும் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் ஒப்படைத்தனர். இக்காலத்தில் நவாப்பிற்குக் கப்பங்கட்ட மறுத்தவர்களில் தலையானவர் பூலித்தேவர் ஆவார்.

ஆங்கிலேயர்கள்

இப்பகுதியில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் தொடர்ந்து கலகம் செய்து வந்தனர். பாளையக்காரர்களுக்கு ஆதரவாக சந்தாசாகிப், பிரஞ்சு படைகள் இருந்தன. 1761-இல் புதுச்சேரியை ஆங்கிலேயர் கைப்பற்றியதால் பிரஞ்சுகாரர்கள் பாளையக்காரர் களுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டனர். 1764-ஆம் ஆண்டு பாளையங்கோட்டை ஆங்கிலேயர் வசம் வந்தது. காளக்காடு, பணகுடி பகுதிகள் நவாப்பிற்கும், செங்கோட்டை திருவாங்கூர் அரசருக்கும் விட்டுக் கொடுக்கப்பட்டன. 1767 மேஜர் பிளிண்ட் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தான். 1783-ஆம் வருடம் புல்லர்டன் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி சூறையாடப்பட்டது. அங்கிருந்த 40,000 பொன் நாணயங்களை ஆங்கிலேயர்கள் பங்கு போட்டுகொண்டனர். 1785-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நவாப்பின் அமில்தாரிடம் ஒப்படைக்கப் பட்டது. 1797-ஆம் ஆண்டு கலெக்டர் ஜாக்சனை கட்டபொம்மன் பேட்டி காண்பதற்கு, இராமநாத புரத்திலுள்ள இராமலிங்க விலாசத்திற்கு சென்ற போது குழப்பம் வரவே, ஆங்கிலத் தளபதி கிளார்க் கொலை செய்யப்பட்டான். இதன் பின்னர் சிலகாலம் கழித்து பாஞ்சாலங்குறிச்சி பானர்மேனால் வெற்றிகொள்ளப்பட்டது. படிப்படியாக எதிர்த்த பாளையக்காரர்கள் அனைவரையும் ஒடுக்கி, நவாப்பையும் செல்லாக்காசாக்கி விட்டு ஆங்கிலேயர் 1801-ஆம் வருடம் திருநெல்வேலியை எடுத்துக் கொண்டனர். 1910-ஆம் ஆண்டிற்கு பிறகு இராமநாதபுர மாவட்டத்தை உண்டாக்கினர். 1986-ஆம் ஆண்டு நிர்வாக வசதி கருதி கடற்கரையோரப் பகுதிகளை பிரித்து தூத்துக்குடி மாவட்டம் உண்டாக்கப்பட்டது.

மக்கள்தொகை பரம்பல்

4,745 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தின் 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, தூத்துக்குடி மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 1,750,176 ஆகும். அதில் ஆண்கள் 865,021 ஆகவும்; பெண்கள் 885,155 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 11.32% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1023 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 369 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 86.16% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 183,763 ஆகவுள்ளனர்.[3]

இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 78.50 % ஆகவும், கிறித்தவர்கள் 16.68 % ஆகவும், இசுலாமியர்கள் 4.61 % ஆகவும், மற்றவர்கள் 0.21% ஆகவும் உள்ளனர்.

நிருவாகம்

மாவட்ட வருவாய் நிர்வாகம்

இம்மாவட்டம் மூன்று தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் என மூன்று வருவாய் கோட்டங்களும், 10 வருவாய் வட்டங்களும், 41 உள்வட்டங்களும் கொண்டுள்ளது.[4]

வருவாய் வட்டங்கள்

  1. எட்டயபுரம் வட்டம்
  2. கோவில்பட்டி வட்டம்
  3. ஒட்டபிடாரம் வட்டம்
  4. சாத்தான்குளம் வட்டம்
  5. ஸ்ரீவைகுண்டம் வட்டம்
  6. தூத்துக்குடி வட்டம்
  7. திருச்செந்தூர் வட்டம்
  8. விளாத்திக்குளம் வட்டம்
  9. திசையன்விளை
  10. ஏரல்

உள்ளாட்சி, ஊராட்சி அமைப்புகள்

இம்மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 1 மாநகராட்சி, 2 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள்[5], ஊராட்சி அமைப்புகளில் 12 ஊராட்சி ஒன்றியங்கள், 403 கிராம ஊராட்சிகள் அமைந்துள்ளன[6].

மாநகராட்சி

நகராட்சிகள்

  1. காயல்பட்டிணம்
  2. கோவில்பட்டி

பேரூராட்சிகள

  1. ஆழ்வார்திருநகரி பேரூராட்சி
  2. ஆறுமுகநேரி பேரூராட்சி
  3. ஆத்தூர் பேரூராட்சி
  4. ஏரல் பேரூராட்சி
  5. எட்டயபுரம் பேரூராட்சி
  6. கடம்பூர் பேரூராட்சி
  7. கழுகுமலை பேரூராட்சி
  8. கணம் பேரூராட்சி
  9. கயத்தார் பேரூராட்சி
  10. நாசரெத் பேரூராட்சி
  11. பெருங்குளம் பேரூராட்சி
  12. சாத்தான்குளம் பேரூராட்சி
  13. சாயர்புரம் பேரூராட்சி
  14. ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி
  15. தென்திருப்பேரை பேரூராட்சி
  16. திருச்செந்தூர் பேரூராட்சி
  17. உடன்குடி பேரூராட்சி
  18. புதூர் பேரூராட்சி
  19. விளாத்திகுளம் பேரூராட்சி

ஊராட்சி ஒன்றியங்கள்

  1. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்
  2. கருங்குளம் ஊராட்சி ஒன்றியம்
  3. திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம்
  4. ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம்
  5. திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம்
  6. உடன்குடி ஊராட்சி ஒன்றியம்
  7. சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம்
  8. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்
  9. ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம்
  10. கயத்தாறு ஊராட்சி ஒன்றியம்
  11. புதூர் ஊராட்சி ஒன்றியம்
  12. விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்

அரசியல்

சட்டமன்றம, நாடாளுமன்றத் தொகுதி

இம்மாவட்டம் 5 சட்டமன்றத் தொகுதிகளும், 1 மக்களவைத் தொகுதியும் கொண்டது.[7] இந்தியத் தொகுதி மறு சீரமைப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த நான்கு தொகுதிகளில் 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் குறித்த விவரம்:

  1. கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி) - கடம்பூர் செ. ராஜூ - அ.இ.அ.தி.மு.க
  2. தூத்துக்குடி (சட்டமன்றத் தொகுதி) - சி.த. செல்லப்பாண்டியன் - அ.இ.அ.தி.மு.க
  3. விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி) - ஜி. வி. மார்க்கண்டேயன் - அ.இ.அ.தி.மு.க
  4. ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி) - எஸ்.பி. சண்முகநாதன் - அ.இ.அ.தி.மு.க
  5. திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி) - அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் - தி.மு.க
  6. ஓட்டப்பிடாரம் (சட்டமன்றத் தொகுதி) - டாக்டர். கிருஷ்ணசாமி - புதிய தமிழகம்

பாராளுமன்றத் தொகுதி

சில தகவல்கள்

  • மழையளவு: 662 மி.மீ
  • சாலை நீளம்: 3,839 கி.மீ
  • பதிவுபெற்ற வாகனங்கள்: 31,504
  • காவல் நிலையங்கள் 44
  • வங்கிகள்: 164
  • அஞ்சலகங்கள் : 418
  • அரசு மருத்துவமனைகள் 10
  • தொடக்க மருத்துவ நல நிலையங்கள் 47
  • திரையரங்கங்கள் 62

ஆற்று வளம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஆறுகள் எதுவுமில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஆறுகள் தூத்துக்குடி மாவட்டம் வழியாக பாய்ந்து கிழக்கிலுள்ள கடலில் போய்ச் சேருகின்றன.

ஸ்ரீவைகுண்டம் வட்டம்

பொருநைப் பாசனத்தால் சிறப்பு பெறுகிறது. மருதூர் அணைக்கட்டிலிருந்து மேலக்கால், கீழக்கால் ஆகிய இரு கால்வாய்களும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து தெற்கு வடக்குப் பிரதான வாய்க்கால்களும் பாசனத்துக்கு நீர் வழங்குகின்றன.

கோவில்பட்டி வட்டம்

மலட்டாறு, உப்போடை போன்றவை மேட்டு நிலங்களில் பெய்யும் மழைநீரை பெற்று, தூத்துக்குடிக்குத் தெற்கு 1 கி.மீ. தொலைவிலுள்ள கோரப்பள்ளம் குளத்தின் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது.

விளாத்திக்குளம் வட்டம்

வைப்பாற்றில் திடீர் வெள்ளம் ஏற்படும். விளாத்திக் குளம்-கோவில்பட்டி சாலைக் கடக்குமிடத்தில் வெள்ள காலங்களில் போக்குவரத்து இருக்காது. அனுமன்நதி- திருவாங்கூரில் உற்பத்தியாகி இங்கு கடலில் கலக்கிறது.

சிறீவைகுண்டம் அணைக்கட்டு

இது 1889-இல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 17.75 இலட்ச ரூபாயில் தாமிரபரணி ஆற்றின் மேலே கட்டப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் 12,000 ஏக்கருக்கு மேற்பட்ட நஞ்சை நிலங்கள் பாசன வாய்ப்பு பெற்றுள்ளன.

மணிமுத்தாறு அணைக்கட்டு

இந்த அணைக்கட்டு மூலம் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் வட்டங்கள் பெருமளவு பாசன நீர் பெறுகின்றன.

காட்டுவளம்

தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுவளம் குறைவே. விடத்தேரை என்னும் கனமான, கரையான் அரிக்க முடியாத ஒருவகை மரம் திருச்செந்தூர் வட்டத்தில் காணப்படுகிறது. சிங்கம்பட்டி மலைப்பகுதியிலும், மணி முத்தாற்றின் இரு கரைகளிலும், நெல்லிமரங்கள் அதிகம் உள்ளன. குறுமலையிலும், கொழந்து மலையிலும் மருத்துவ மூலிகைகள் கிடைக்கின்றன. இம்மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் பனை மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன.

தேரிகள்

திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் தேரி என்னும் மணற்குன்றுகள் காணப்படுகின்றன. தேரி என்பது செக்கச் சிவந்த மணற்பாங்கான இடம். கோடைக் காற்றினால், தேரிகள் தோற்றம் மாறி, மாறி காணப்படும். இடையன் குடி, குதிரைமொழி, சாத்தான் குளம் பகுதிகளிலுள்ள தேரிகள் உயரமான அகன்ற மேடாகும். இது போன்ற தேரிகளை பிற மாவட்டங்களில் காணமுடியாது.

வேளாண்மை

இம்மாவட்டத்தின் வடகோடியிலும், தென் கோடியிலும் பாசன வசதி போதியளவு இல்லை. இடைப்பட்ட வட்டங்களில் புஞ்சைபயிர்கள் பயிரிடப்படுகின்றன.

பருத்தி

தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் பருத்தியும், மிளகாயும் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோவில்பட்டி வட்டம், இந்தியாவிலேயே மிகுந்த அளவில் பருத்தி விளையும் பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பகுதி காலந்தாழ்ந்து மழை பெறுகின்ற காரணத்தால், பிற மாவட்டங்களுக்குப் பின்னரே, இங்குப் பருத்தி விளைவது வழக்கம்.

முந்திரி

திருச்செந்தூர் வட்டத்தில் முந்திரிப் பயிறு விளைச்சல் குறிப்பிடத் தக்கதாகும். முந்திரி விளைச்சலுக்குப் பூவரசந்தழையை உரமாகப் பயன்படுத்துவது இங்கு வழக்கம்.

பனை

நெடுங்காலமாகவே, இம்மாவட்டத்தின் மணற்பரப்பில் பனை வளர்ந்து செழித்துக் காணப்படுகிறது. திசையன்விளை, குலசேகரப்பட்டினம், உடன்குடி போன்ற ஊர்கள் பனைக்கு புகழ் பெற்றவை.

பிற பயிர்கள்

கோவில்பட்டி வட்டத்தில் பருத்திக்கு அடுத்தபடியாக கம்பு, உளுந்து, சோளம், மிளகாய், மல்லி, வெங்காயம் முதலியன நல்ல விளைச்சலைக் கண்டு வருகின்றன.

வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்

கோவில்பட்டியில் உள்ள இந்த ஆய்வு நிறுவனம் பருத்தி வேளாண்மைப்பற்றி ஆய்வு களை நடத்தி வருகிறது. சோளத்துக்குப் பிறகு பயிரிடப்படும் பருத்திக்குக் கேடு உண்டாகா வண்ணம், சோளத்துக்கு சூப்பர் பாண்டேட் உரமும் பருத்திக்கு அமோனியம் சல்பேட்டு உரமும் பயன்படுத்த படலாம் என்பது இந்த ஆய்வு நிறுவனத்தால் கண்டறியப்பட்டுள்ளது. இங்குக் கண்டு பிடிக்கப்பட்ட புதிய வகை பருத்திகள்: கே2, கே5, கே6 என்ற கருங்கண்ணிப் பருத்திவகைகள். இவை இந்தியா எங்கும் பரவியுள்ளன. சீ ஐலண்டு காட்டன் என்றும் நீண்ட இழைப் பருத்தி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. சீரிய முறையில் இயங்கும் அரசு விதைப் பண்ணைகளில் இதுவும் ஒன்று.

தொழில் வளர்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் 86-ஆம் ஆண்டு புதிதாக பிறந்த மாவட்டம் ஆகையால் இனி தான் இங்கு தொழில்வளர்ச்சி ஏற்படவேண்டும். இருந்தபொழுதிலும் தூத்துக்குடி துறைமுகம் இங்கு உள்ளதால் தமிழகத்தின் தென்மாவட்டங்களுல் பெரிதும் தொழில் வளர்ச்சி பெற்ற மாவட்டமாக திகழ்கிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையம், மேலமருதூர் அனுமின் நிலையம், ஸ்டெர்லைட் ஆலை முதலிய தொழிற்சாலைகள் புகழ்பெற்றவை.

மரபுத் தொழில்கள்

முத்துக் குளித்தல், மீன்பிடித்தல், மட்பாண்டங்கள் செய்தல், பாய் பின்னுதல், உப்புக் காய்ச்சுதல், கைத்தறி நெசவு முதலியவை பாரம்பரியமாக நடந்து வருகிறது.

பாய் பின்னுதல்

கோரை புற்களை 25 நாட்கள் வெயிலில் உலர்த்தி, பொன்னிறம் பெற்றதும், ஓடுகின்ற நீரில் ஒருவாரம் நனைய வைத்து, கழிவு நார்கள் நீக்கப்பட்டு, மேல் தோல் பட்டுப் போன்ற நுண்ணிய இழைகளாக நீளமாகக் கிழிக்கப்பட்டு முடையப்படுகிறது.

உப்புக் காய்ச்சுதல்

தென்மேற்குப் பருவக்காற்றை குற்றாலமலைத் தடுப்பதும், வடகிழக்குப் பருவக்காற்றின் வலுவிழந்தத் தன்மையும் உப்புக் காய்ச்சுவதற்கு ஏற்ற சூழ்நிலையத் தருவதனால் இத்தொழிலில் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பின் அளவு இந்திய அளவில் பத்தில் ஒரு பங்காகும். இத்தொழிலில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர்.

முத்துக்குளித்தல்

மரபாக நடந்துவரும் தொழிலாகும். இது ஆண்டு முழுவதும் நடைபெறும் தொழில் அல்ல. மற்ற காலங்களில் சங்கு எடுக்கும் தொழில் நடைபெறுகிறது.

மீன்பிடித்தல்

இம்மாவட்டத்தின் கடலோரங்கள் எங்கும் மீன் பிடி தொழில் சிறப்பாக நடந்து வருகிறது. இதன் காரணமாக பல குளிர்பதனச் சாலைகள் தோன்றியுள்ளன. மீன்கள் பதப்படுத்தப்பட்டு டின்களில் அடைத்து ஏற்றுமதி செய்வது 1963-இல் தொடங்கி நடந்து வருகிறது. இதனால் அந்நியச் செலாவணி கிடைக்கிறது.

நூலாலைகள்

இம்மாவட்டத்தில செயல்பட்டு வரும் ஆலைகள்; மதுரை மில்-தூத்துக்குடி; லாயல் டெக்ஸ்டைல்ஸ்-கோவில்பட்டி; லெட்சுமி மில்-கோவில்பட்டி; தூத்துக்குடி ஸ்பின்னிங் மில்-தூத்துக்குடி; திருச்செந்தூர் கோவாபரேடிவ் ஸ்பின்னிங்மில்-நாசரேத்.

பொட்டாசியம் குளோரைடு தொழிற்சாலை

இத்தொழிற்சாலை ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் மத்திய உப்பு ஆராய்ச்சி நிறுவனத் தால் தூத்துக்குடியில் நடத்தப்பட்டு வருகிறது.

கோத்தாரி பெர்டிலைசர்ஸ்

1966இல் தொடங்கப்பட்டது. தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலை ஆண்டுக்குச் சுமார் 5 இலட்சம் டன் அமோனியம் பாஸ்பேட் உரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

தரங்கத்தாரா இரசாயன தொழிற்சாலை

தூத்துக்குடிக்கு 25 கி.மீ. தெற்கே, கடற்கரைக்கு தொலைவில், இந்நிறுவனம் அமைக்கப் பட்டிருக்கிறது. ஆண்டுக்கு சுமார் 75,000 டன் காஸ்டிக் சோடா தயாரிக்க முடியும். உற்பத்திக்குச் சாதகமாக நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கால்ஷியம் கார்பைடு 15,000 டன்னுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. பிளாஸ்டிக்கில் பயன்படுத்தப் படும் போலிவினில் குளோரைடு முதலிய பல பொருள்களும் இங்குத் தயாராகின்றன. இது ஆசியாவிலேயே பெரிய இரசாயனத் தொழிற்சாலை ஆகும். தொடக்கத்தில் மூன்றரைக் கோடி ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்பட்ட இத்தொழிற்சாலை, இன்று இம்மாவட்டத்தில் வளரும் பெரிய தொழிற்சாலைகளில் ஒன்றாகும்.

தொழில் தொடங்கச் சாத்தியக் கூறுகள்

இம்மாவட்டம் தொழில் வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதால் தொழிலுக்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்த தேசிய தொழில் வளர்ச்சி நிறுவனம் இம்மாவட்டத்தில் தொழில்கள் தொடங்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து கீழே கண்டவைகளை செயல்படுத்துவது தொழில் முனைவோருக்கு வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது, அவையாவன :

1. கரும்பு சக்கைகளைப் பயன்படுத்தி காகித ஆலைகள். 2. மணப்பாடு-தூத்துக்குடி முதலிய கடலோரங்களில் கிடைக்கும் சுண்ணாம்பு படிவங்களைக் கொண்டு சிமெண்ட் தொழிற்சாலைகள் 3. மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்தல் 4. வானம் பார்த்த 'விளாத்திக்குளம்' பகுதிகளில் வேளாண்மை நடைபெற முயற்சி செய்தல். 5. தேரி மணலிலிருந்து இரசாயனங்களைப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை. 6. உப்பு தொழில்கள். 7. முத்துகுளி-சங்கெடுத்தலை ஏற்றுமதி செய்வது

கனிமவளம்

  • ஜிப்சம் : கோவில்பட்டி வட்டத்திலும், அருணாசலபுரம், ஒட்டப்பிடாரம்,

எட்டையாபுரம், பகுதிகளிலும் மிகுந்த அளவில் ஜிப்சம் கிடைக்கிறது. இது சிமெண்ட் உற்பத்திக்கு தேவையான பொருள்.

  • அல்லனைட் : இந்த மூலப்பொருள் அணுசக்திக்கு மிகவும் தேவையானது.
  • லித்தியம் : லிதியம் என்பது நெஞ்சக நோய் தீர்க்கும் மருந்துக்குத் துணையாகும்.

கோவில்பட்டிக்கருகில் உள்ள சூலமங்கலம் கிராமத்தில் லிதியம் கலந்த நீர் கிடைக்கிறது. இரத்த விருத்தி மருந்து செய்ய இந்த நீரை வேறு இடங்களுக்கு அனுப்பி மருந்துகள் செய்கின்றனர்.

கார்னர்டு மணல்

உப்புத்தாள் செய்யத் தேவைப்படும் இப்பொருள் இம்மாவட்டத்தின் கடலோரங்களின் சில பகுதிகளில் கிடைக்கிறது.

கிராபைட்

உருக்கு வேலைக்கும், சிலவகை எண்ணெய் தயாரிக்கவும் பயன்படக்கூடிய இது பென்சிலில் உள்ள எழுதுபொருள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

மோனசைட்

உலோக சத்து நிறைந்த இந்தப் பொருளும் கடற்கரை மணலில் காணப்படுகிறது. சில வகை மருந்துகள் தயாரிக்க மிகவும் தேவைப்படக் கூடியது.

சுண்ணாம்புக்கல்

திருச்செந்தூர் வட்டம், சாத்தான் குளம் பகுதியில் ஒரு வகை உயர்தரச் சுண்ணாம்புக்கல் மிகுதியாகக் கிடைக்கிறது. இதைப் பளிங்குக் கற்களாக மாற்றினால் கட்டட வேலைகளுக்கு மிகவும் பயன்படக்கூடும்.

நுரைக்கல்

இந்த வகைச் சுண்ணாம்புக் கல்லைப் பயன்படுத்தியும் சிமெண்ட் தயாரிக்கலாம். கடற்கரையோரமாய் உள்ள தீவுப் பகுதிகளில் இது மிகுதியாய் உள்ளது.

இல்மனைட்

ஏராளமான அளவில் சாத்தான் குளத்திலும், கோவில்பட்டி வட்டத்திலும் கிடைக்கிறது. இதில் இரும்பு, டிட்டானியம் ஆக்ஸைடுகள் கலந்து உள்ளன.

பாஸ்டேட்

மலைக்கல் போன்ற இவ்வகை பாஸ்பேட்டுகள், தூத்துக்குடிக் கடற்கரைப் பகுதிகளில் கிடைக்கிறது.

கெட்டிமண்

கட்டடம் கட்டப்பெரிதும் பயன்படும் இவ்வகைமண்தூத்துக் குடியிலும், அதையடுத்த தீவுகளிலும் மிகுதியாக உள்ளது.

சுற்றுலா

ஆதிச்ச நல்லூர் சிவகளை கொற்கை தொல்லியல்.

மாவட்டத் திருவிழாக்கள்

  • திருச்செந்தூர் சூரசம்காரம் திருவிழா
  • குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா (அக்டோபர்)
  • ஏரல் சேர்மன் அருணாச்சலம் சுவாமி கோவில் விழாக்கள் (ஆகஸ்ட்)
  • வெள்ளப்பட்டி அதிசய கடல் மாதா கோவில் திருவிழா (மே)
  • தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா (ஆகஸ்ட்)
  • புளியம்பட்டி புனித அந்தோணியார் திருவிழா (மே)
  • வீரபாண்டிய கட்டபொம்மன் விழா (ஜனவரி)
  • பாரதியார் விழா (செப்டம்பர், டிசம்பர்)
  • புனித சவேரியார் திருவிழா- மணப்பாடு (செப்டம்பர்)
  • பேயன்விள பொன்மடசாமி திருக்கோயில் திருவிழா (புரட்டாசி)
  • பசுவந்தனை கைலாசநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்

முக்கிய இடங்கள்

தூத்துக்குடி துறைமுகம்

நெல்லையிலிருந்து மிக அருகிலுள்ள தூத்துக்குடி மிகச்சிறந்த இயற்கைத் துறைகமாகும். இங்குதான் பிரபல ஸ்பிக் உரத்தொழிற்சாலை உள்ளது. முத்துக்குளித்தலுக்கு பெயர் பெற்ற இடமான தூத்துக்குடியிலிருந்து அண்டை நாடான இலங்கைக்கு படகிலேயே சில மணிநேரங்களில் சென்றுவிடலாம். தூத்துக்குடி உப்புஉற்பத்தி மற்றும் மீன்வளத்தில் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது.

ஸ்ரீவைகுண்டம்

இங்கு விஷ்ணுவின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது வைகுண்டபதி சாமி கோவில். இங்கு யானைக்கால் மண்டபம், தமிழ்நாட்டின் மிகப்பிரசித்தி பெற்ற பண்டிகையான வைகுண்ட ஏகாதசியன்று மக்கள் தங்கள் பிரார்த்தனையை செலுத்தும் மண்டபம் ஆகியவை இக் கோவிலில் உள்ளன.

ஒட்டப்பிடாரம்

விடுதலைப்போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் இங்குதான் பிறந்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட இவர் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுகிறார்.வீரபாண்டிய கட்டபொம்மன் , ஈகி சுந்தரலிங்கனார் போன்ற விடுதலைப்போராட்ட வீரர்கள் வாழ்ந்து மறைந்த இடம் .

குலசேகரபட்டினம்

திருச்செந்தூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள குலசேகரப்பட்டினத்தில் செப்டம்பர் -அக்டோபர் மாதத்தில் நடைபெறும் தசரா பண்டிகை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். இப்பண்டிகையில் மாநிலம் முழுவதும் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள் இங்கு கூடி இப்பண்டிகையை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

திருச்செந்தூர்

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. கந்தசஷ்டி விழா இங்கு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது ஆயிரக்கணக்கில் கூடும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எட்டயபுரம்

புரட்சிக்கவிஞர் பாரதியாரின் பிறந்த இடமான எட்டையாபுரம் வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். இதே ஊரில்தான் இஸ்லாமியக் கவிஞர் உமறுப்புலவரும் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இங்கு பாரதியார் பிறந்த இல்லம், பாரதியார் மணிமண்டபம் ஆகியவை தமிழக செய்தி-மக்கள் தொடர்புதுறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பாஞ்சாலங்குறிச்சி

17 ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த ஊரில் இருந்து கொண்டுதான் ஆங்கிலேயருக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இந்த இடம் மிகச்சிறந்த வரலாற்றுச் சிறப்பிடமாக போற்றப்படுகிறது.இங்கு 1974 ல் தமிழக அரசால் கட்டபொம்மன் கோட்டை கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டைக்கு அருகில் ஆங்கிலேயர்களால் இடிக்கப்பட்ட கோட்டை தோண்டி எடுக்கப்பட்டு முள்வேலி போடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. https://www.tnarch.gov.in/epigraphy
  2. https://ta.wikisource.org/s/xrg
  3. Thoothukkudi District : Census 2011 data
  4. தூத்துக்குடி மாவட்ட வருவாய்த் துறை
  5. தூத்துக்குடி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்
  6. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி அமைப்புகள்
  7. தூத்துக்குடி மாவட்ட நாடாளுமன்றம் & சட்டமன்றத் தொகுதிகள்

வெளி இணைப்புகள்



This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.