புதுச்சேரி

புதுச்சேரி (ஆங்கிலம்: Puducherry) அல்லது பாண்டிச்சேரி, புதுவை எனவும் இந்த ஒன்றியப் பகுதி அழைக்கப்படுகின்றது. சென்னை மாநகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில், இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியாக வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது. முன்பு இந்த நகரம் பிரெஞ்சு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. புதுச்சேரி, ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.

புதுச்சேரி
Pondichéry
ஒன்றியப் பகுதி

Seal of Puducherry

இந்தியாவில் புதுச்சேரி
நாடு இந்தியா
Formation7 சனவரி 1963
Capital and Largest cityபுதுச்சேரி
மாவட்டம்4
அரசு
  துணைநிலை ஆளுநர்கிரண் பேடி[1]
  முதலமைச்சர்வி. நாராயணசாமி (INC)
  சட்டமன்றப் பேரவைஓரவை முறைமை (33*seats)
பரப்பளவு
  மொத்தம்426
பரப்பளவு தரவரிசை33 வது
மக்கள்தொகை
  மொத்தம்1
  தரவரிசை29 வது
  அடர்த்தி2
இனங்கள்புதுச்சேரியர்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ
ஆட்சி மொழிகள்தமிழ்
மலையாளம்
தெலுங்கு
பிரெஞ்சு
இணையதளம்www.py.gov.in [2][3]
^* 30 elected, 3 nominated
தென்புதுவைக் கடற்கரைக் காட்சி

அதனால் இங்குள்ள அடித்தட்டு மக்களும் பிரெஞ்சுச் சொற்களை, மிகச் சாதாரணமாகப் பயன்படுத்துகின்றனர். ஆந்திர மாநிலத்தின், காக்கி நாடாவுக்கு அருகாமையில் உள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் அருகாமையில் உள்ள காரைக்கால் நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகில் உள்ள மாஹே நகரும், இந்த மாநிலத்தின் ஆட்சிப் பகுதிகளாக விளங்குகின்றன.

ஆகையால், ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் மொழிகளுடன், தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்களும் சிறுபான்மையினராக இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

பிரெஞ்சுக் குடியேற்றக் காலத்து புதுச்சேரி ஆட்சிப்பகுதி

புவியியல்

புதுச்சேரி ஒன்றியப் பகுதி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படாத நான்கு மாவட்டங்களைக் கொண்டுள்ளது. வங்காள விரிகுடாவை ஒட்டி புதுச்சேரி, காரைக்கால் ஏனாம் மாவட்டங்கள் உள்ளன. அரபிக் கடலைச் சார்ந்து மாஹே மாவட்டம் உள்ளன. பரப்பளவு, மக்கள்தொகை வகையில் புதுச்சேரியும் காரைக்காலும் பெரிய மாவட்டங்கள். இவை தமிழ்நாட்டின் பகுதிகளால் சூழப்பட்டுள்ளவை.

ஏனாம் நிலப்பகுதி, ஆந்திரப் பிரதேச மக்களின் அயலக வளாகமாகவும், மாஹே கேரள மக்களின் அயலக வளாகமாகவும் விளங்குகின்றன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் மொத்த பரப்பளவு 492 ச.கி. மீ ஆகும். பாண்டிச்சேரியின் பரப்பளவு 293 ச.கி.மீ; காரைக்காலின் பரப்பளவு 160 ச.கி.மீ; மாஹேயின் பரப்பளவு 9 ச.கி.மீ; ஏனாம் பரப்பளவு 30 ச.கி.மீ. ஆகும். 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி மொத்த மக்கள்தொகை 1,244,464 ஆகும். 68.31% மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர் இது இந்திய அளவில் 5வது இடமாகும்.[4]

தனித் தொகுதிகள்

இந்த வளாகங்கள் ஒன்றுகொன்று தொடர்புகள் இல்லாமல் தனித் தனிப் பகுதிகளாக உள்ளன. புதுச்சேரி மாவட்டத்தில் மட்டும் இத்தகைய 11 தனித் தொகுதிகள் உள்ளன. இவை முற்றிலும் தமிழ்நாட்டு நிலப்பகுதிகளால் சூழப்பட்ட மிகச்சிறியதான நிலப்பரப்புகள் ஆகும்.

மாஹேயில் இத்தகைய மூன்று நிலப்பரப்புகளில் முற்றிலும் கேரள மாநிலத்தவர் குடி அமர்ந்துள்ளனர். குடிமைப்பட்ட காலத்தில் புதுச்சேரி ஒன்றியப் பகுதி பிரெஞ்சு இந்தியாவின் எல்லைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, இந்த வழக்கத்திற்கு மாறான புவியியல் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.

ஆறுகள்

புதுச்சேரியின் நான்கு மாவட்டங்களுமே கடலோரத்தில் அமைந்துள்ளன. எனவே சில ஆறுகள் புதுச்சேரியில் கடலில் கலந்தாலும் அனைத்துமே புதுச்சேரியில் தொடங்குபவை அல்ல. புதுச்சேரி மாவட்டத்தில் ஐந்து ஆறுகளும், காரைக்காலில் ஏழு ஆறுகளும், மாஹேயில் இரண்டும், ஏனாமில் ஒன்றும் கடலில் கலக்கின்றன.

வரலாறு

ஸ்ரீ பொட்டி ஸ்ரீராமுலு ஏனாம் பாலம்

புதுச்சேரியின் மிகத் தொன்மையான வரலாறு இரண்டாம் நூற்றாண்டில் தொடங்குகிறது. இரண்டாம் நூற்றாண்டின் செங்கடல் செலவு, பொடுகெ எனப்படும் சந்தை இடத்தைக் குறிக்கிறது. இந்த இடம் நவீன புதுச்சேரியிலிருந்து 2 கிமீ தொலைவிலுள்ள அரிக்கமேடு (தற்போது அரியாங்குப்பத்தின் பகுதி) என ஜி.டபுள்யூ.பி. ஹன்டிங்போர்டு என்பவர் அடையாளம் காண்கிறார்.

இதே வரலாற்று ஆசிரியர் 1937ஆம் ஆண்டில் அரிக்கமேட்டில் உரோமானிய மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டதாகக் கூறுகின்றார். 1944 லிருந்து 1949 வரை அந்த இடத்தில் தொல்லியல் ஆழ்ஆய்வுகள் நடத்தப்பட்டன. அந்த வகையில் கி.பி. முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அந்த இடத்தில் உரோமானியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வணிக மையமாக விளங்கியதைச் சுட்டுவதாகக் குறிப்பிடுகின்றார்.[5]

நகரமைப்பு

புதுச்சேரி ஒன்றியப் பகுதி நகரங்கள் பிரெஞ்சுக்காரகளால் வடிவமைக்கப்பட்டதால் சாலைகள் பெரும்பாலும் நேர்கோட்டில் அமைந்தவை என்பது ஒரு சிறப்பு அம்சமாகும். அது குறித்து ஒரு சொலவடை உள்ளது. ‘நீதி அழகு இல்லையென்றாலும் வீதி அழகு உண்டு’ என்பதாகும். புதுச்சேரி, காரைக்கால், மற்றும் ஏனாமின் கிழக்குப் பகுதிகளில் வங்காள விரிகுடாக் கடற்கரை உள்ளது. மாஹேயின் மேற்குப் பகுதியில் அரபிக் கடலின் கடற்கரை உள்ளது.

கல்வி நடுவம்

ஏனாம் கோதாவரியின் கழிமுகத்திலும், காரைக்கால் காவிரியின் கழிமுகத்திலும் அமைந்துள்ளன. சிறிய மாநிலமான புதுச்சேரியில் ஒன்பது மருத்துவக் கல்லூரிகளும், பதினைந்து  பொறியியல் கல்லூரிகளும், பல கலை, அறிவியல், தொழில்நுட்பக் கல்லூரிகளும் அமைந்துள்ளன. இது ஒரு கல்வி மையம் என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும் புதுவையில் உள்ள அரசுப் பள்ளிகளில் (சி.பி.எஸ்.சி) பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.

புதுச்சேரியில் பிரெஞ்சுத் தாக்கம்

புதுச்சேரியின் நகரமைப்பு பிரான்சிய வலைமுறை வடிவமைப்பும் செக்டர்களையும் ஒன்றையொன்றை வெட்டும் சாலைகளையும் கொண்டுள்ளது. நகரம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது: பிரெஞ்சுப் பகுதி (வில்ல் பிளாஞ்ச்சே அல்லது 'வெள்ளையர் நகர்') மற்றும் இந்தியப் பகுதி (வில்ல் நோய்ர் அல்லது 'கறுப்பர் நகர்'.) பல சாலைகள் இன்றும் தங்கள் பிரெஞ்சுப் பெயர்களை தக்க வைத்துக்கொண்டுள்ளன; பிரெஞ்சு பாணியிலான மாளிகைகளையும் காணலாம்.

பிரெஞ்சுப் பகுதியில் குடிமைப்பட்ட கால பாணியில் உயரமான சுவர்களுடனும் நீண்ட சுற்றுச்சுவர்களுனும் உள்ள கட்டிடங்களைக் காணலாம். இந்தியப் பகுதியில் வீடுகள் தாழ்வாரங்களுடன் பெரிய கதவுகளுடன் காணப்படுகின்றன. இந்த பிரெஞ்சு மற்றும் இந்திய பாணி வீடுகள் அடையாளப்படுத்தப்பட்டு அந்த வடிவமைப்புகள் அழிவிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. பிரெஞ்சு மொழிச் சொற்கள் பேச்சுவழக்கில் ஊடுருவியிருப்பதை இன்றும் காணலாம்.

பிரெஞ்சு இந்தியாவின் எச்சங்களாக பிரெஞ்சு கட்டிட வடிவமைப்புக்களை இன்றும் காணலாம்.

புதுச்சேரியில் பல இந்தியர்களும் சிறுபான்மை இந்திய வம்சாவளியல்லாதவர்களும் இன்னமும் பிரெஞ்சுக் கடவுச்சீட்டு வைத்துள்ளனர். இவர்கள், 1954இல் புதுச்சேரியை விட்டு விலகும்போது பிரான்சிய அரசு வழங்கிய விருப்பத் தேர்வின்படி பிரான்சிய குடிமக்களாக நீடிக்க விரும்பியவர்களின் சந்ததியினர் ஆவர்.

அரசின் அலுவல்முறை மொழிகள்

புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் புதுச்சேரி மாவட்டப் பகுதி

புதுச்சேரியின் அலுவல்முறை மொழிகளாக தமிழ் (89%), மலையாளம் (4.8%), தெலுங்கு (2.9% ஏனாம்) மற்றும் பிரெஞ்சு (1%). ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த மொழிகளின் நிலை மாறுபடுகிறது. வெவ்வேறு மொழிகள் பேசும் மாவட்டங்களிடையே தொடர்பாடலுக்கு நடைமுறை வசதி கருதி பொதுவாக ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

  • தமிழ் - தமிழ் பெரும்பான்மையாகப் பேசப்படும் மாவட்டங்களுக்குள்ளும் (புதுச்சேரி , காரைக்கால்) இடையேயும் அரசாணைகள் வெளியிடவும் புதுச்சேரி அரசால் பயன்படுத்தப்படுகிறது. தெலுங்கு புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாமில் பரவலாகப் பேசப்படுகிறது. மலையாளம் மாஹேயிலும் புதுச்சேரியிலும் பேசப்படுகிறது.
  • பிரெஞ்சு ஒன்றியப் பகுதியின் அலுவல் மொழிகளில் ஒன்றாக உள்ளது. 1673 முதல் 1954 வரை பிரெஞ்சு இந்தியாவின் ஆட்சி மொழியாக இருந்தது. 1956ஆம் ஆண்டு மே 28 அன்று பிரான்சிய அரசுடன் இந்திய ஒன்றியம் கையொப்பிட்ட ஆயநிலை அளிப்பு உடன்பாட்டின்படி பிரெஞ்சு மொழி சட்டப்படி ஆட்சிமொழியாக தொடர்கிறது:

மக்களின் சார்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வேறுவிதமாக தீர்மானிக்காதவரை அனைத்து அமைப்புகளின் ஆட்சிமொழியாக பிரெஞ்சு மொழி நீடிக்கும்" [தமிழாக்கம்][6]

வட்டார அலுவல் மொழிகள்

  • தமிழ்: புதுச்சேரியின் அலுவல் மொழிகளில் ஒன்றாகும். இதுவே மிகப் பெரும்பாலோரால் பேசப்படும் மொழியாகும். தமிழ்நாட்டால் சூழப்பட்டுள்ள புதுச்சேரி மாவட்டமும், காரைக்கால் மாவட்டமும் அம்மாநிலத்தின் தமிழ் பண்பாட்டை பகிர்கின்றன.
  • பிரெஞ்சு: பிரான்சின் குடிமைப்படுத்தப்பட்ட பகுதியாக இருந்தமையால் பிரெஞ்சு அலுவல் மொழியாக நீடிக்கிறது.[7]
  • தெலுங்கு: புதுச்சேரியின் அலுவல் மொழிகளில் ஒன்று. இருப்பினும் இது ஏனாம் (ஆந்திர வட்டாரம்) மாவட்டத்தினுள் மட்டுமே கூடுதலாக பயன்படுத்தப்படுகிறது. எனவே சரியாகச் சொல்வதென்றால் புதுச்சேரியின் வட்டார அலுவல் மொழியாகவும், ஏனாமின் அலுவல் மொழியாகவும் விளங்குகிறது.
  • மலையாளம்: புதுச்சேரியின் அலுவல் மொழிகளில் ஒன்றான இது மாஹேயில் (கேரள வட்டாரம்) மட்டுமே கூடுதலாகப் பயன்படுத்தப்படுகிறது . எனவே சரியாகச் சொல்வதென்றால், புதுச்சேரியின் வட்டார அலுவல் மொழியாகவும், மாஹேயின் அலுவல் மொழியாகவும் விளங்குகிறது.

அரசியல்

இந்தியாவில் உள்ள 7 ஒன்றியப் பகுதிகளில் (டெல்லி தவிர்த்து) சட்டமன்றமும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் உள்ள ஒரே ஒன்றியப் பகுதி புதுச்சேரி மட்டும் தான்.

மாநிலத்தில் மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றுள் 23 தொகுதிகள் புதுவையிலும், 5 காரைக்காலிலும், ஏனாம் மற்றும் மாஹியில் தலா 1 தொகுதியும் உள்ளன.

மேலும், புதுவை 1 மக்களவை உறுப்பினரையும் , 1 மாநிலங்களவை உறுப்பினரையும் கொண்டுள்ளது.

புதுச்சேரி சுதந்திரம் அடைந்தது முதல், அதிக காலம் காங்கிரஸ் கட்சி ஆட்சி புரிந்து வந்துள்ளது. இடையே திமுக, அதிமுக, ஆகியவை ஆட்சி புரிந்தாலும், காங்கிரஸ் கட்சியே பெரும்பாலும் ஆட்சி புரிந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்த என். ஆர். காங்கிரசு கட்சி தான், புதுவையில் 5 ஆண்டு காலம் முழுமையாக ஆட்சி புரிந்த ஒரே மாநில கட்சியாகும்.

மேலும் மூன்று முறை, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாத நபர்கள் மாநிலத்தின் முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மக்களவை உறுப்பினர் ப.சண்முகம்  இரண்டு முறையும், முன்னாள் மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி ஒரு முறையும் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்கள்.

கடந்த 2000 ஆம் ஆண்டு, திமுக கூட்டணியில் இருந்து தமாகா விலகியதால், அப்போதைய திமுக முதல்வர் ஜானகிராமன் பதவி விலகினார். கண்ணன் தலைமையிலான த.மா.கா, காங்கிரசுடன் கைகோர்த்து ஆட்சியில் அமர்ந்தது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ப.சண்முகம் முதல் முறையாக  முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

பின்னர் 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ப. சண்முகம் இரண்டாம் முறையாக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். மேலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரும் தங்களது பதவியை ராஜினமா செய்ய முன்வராததால், சட்டமன்ற உறுப்பினராக இல்லாத சண்முகம் பதவி விலக நேர்ந்தது.

அதனைத்தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இல்லாத வி.நாராயணசாமி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

புதுச்சேரியின் சின்னங்கள்

ஏப்ரல் 16, 2007 அன்று புதுச்சேரி அரசு, அம்மாநிலத்தின் சின்னங்களை அறிவித்தது. சட்டசபையில் அப்போதைய விவசாயத்துறை அமைச்சர் வி. வைத்தியலிங்கம் இவற்றை முன்மொழிந்தார்.[8]

புதுச்சேரி - அரசு குறியீடுகள்
அலுவல் மொழி(கள்)தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் பிரெஞ்சு
பாடல்தமிழ்த்தாய் வாழ்த்து
விலங்குஅணில்
பறவைகுயில்
மலர்நாகலிங்கப் பூ
மரம்வில்வ மரம்

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பாண்டிச்சேரி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 1,247,953 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 31.67% மக்களும், நகரப்புறங்களில் 68.33% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 28.08% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 612,511 ஆண்களும் மற்றும் 635,442 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1037 பெண்கள் வீதம் உள்ளனர். 490 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 2,547 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 85.85 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 91.26 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 80.67 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 132,858 ஆக உள்ளது. [9]

சமயம்

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,089,409 (87.30 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 75,556 (6.05 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 78,550 (6.29 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 1,400 (0.11 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 451 (0.04 %) ஆகவும் சீக்கிய சமய மக்கள் தொகை 297 (0.02 %) ஆகவும் , பிற சமயத்து மக்கள் தொகை 168 (0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 2,122 (0.17 %) ஆகவும் உள்ளது.

பல சமயத்தினருக்கும் பொதுவான பன்னாட்டு நகரியமும் ஆய்வுமையமுமான ஆரோவில் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. உரோமைய ரோலாண்டு பொது நூலகம் பல அரிய பிரெஞ்சு சமய நூல்களைக் கொண்டுள்ளது.

புதுச்சேரியினதும் காரைக்காலினதும் பூர்வீக‌க் குடிமக்களில் பலரும் இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் குடியுரிமை பெற்று இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களாக உள்ளார்கள்.

இந்து சமயம்

இந்து சமயத்துறவியான சிறீ அரபிந்தோவின் அரவிந்தர் ஆசிரமம் இங்குள்ளது. வெள்ளையர் பகுதியில் உள்ள மணக்குள விநாயகர் கோவில் மிகவும் புகழ்பெற்றத் தலமாகும். புதுச்சேரியை சித்தர்களின் பூமி என்று அழைக்கின்றனர். இங்கு முப்பதுக்கும் மேற்பட்ட சித்தர்களின் ஜீவசமாதிகள் அமைந்துள்ளன. புதுச்சேரியைப் பற்றிய தனிப்பாடல் ஒன்றில் சித்தர் வாழ் புதுவை என்று போற்றப்பட்டுள்ளது.[10] கண்டமங்கலம் குருசாமி அம்மையார் கோயில் போன்ற சித்தர் கோயில்களும் உள்ளன.

நவக்கிரகங்களில் ஒருவரும், மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுபவருமான சனீஸ்வரன் சுயம்புவாக அமைந்த திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயிலும், தேவாரம் பாடல் பெற்ற திருவேட்டக்குடி சுந்தரேசுவரர் கோயில், திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் கோயில், தருமபுரம் யாழ்மூரிநாதர் கோயில் மற்றும் திருவாண்டார்கோயில் பஞ்சநதீசுவரர் கோயில் ஆகிய சிவதலங்கள் அமைந்துள்ளன. பக்தி இயக்கத்தின் முன்னோடியான காரைக்கால் அம்மையார் கோயிலும் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கிறித்தவம்

முன்னாள்களில் பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்ட புதுச்சேரி 1674 வரை ஒரு சிறு கிராமமாக இருந்தது. போர்த்துகீசியர்கள் அங்குக் குடியேற்றம் அமைத்து அதை ஒரு நகரமாக வளர்த்தெடுத்தார்கள். கிறித்தவ சமயத்தைப் பரப்பும் நோக்கத்துடன் சென்னையிலிருந்து வந்த கப்புச்சின் சபைத் துறவிகள் முதலில் அங்கு செயல்பட்டார்கள். பின்னர் 1689இலிருந்து இயேசு சபையினர் அங்கு மறை பரப்பினர். 1773இல் பாரிசு அயல்நாட்டு மறைபரப்பு சபை சமயத் தொண்டு ஆற்றியது. அவ்வமயம் புதுச்சேரியில் சுமார் 30,000 கத்தோலிக்கர் இருந்தனர். ஆயினும் வெளியிலிருந்து மறைபரப்புநர் வருவது குறைந்ததாலும், போர்த்துகீசிய மறைபரப்புநர் தெரிவித்த எதிர்ப்பு காரணமாகவும் புதுச்சேரி மறைத்தளம் நலியலாயிற்று.

1845இல் "பாண்டிச்சேரி மறையாட்சித் தளம்" (vicariate) நிறுவப்பட்டது. 1887இல் அது ஒரு உயர்மறைமாவட்டமாக எழுப்பப்பட்டது.[11] இன்று புதுச்சேரியில் வாழ்கின்ற கிறித்தவர்களுள் மிகப் பெரும்பான்மையோர் கத்தோலிக்கர் ஆவர். கிறித்தவர்கள் மொத்த மக்கள் தொகையில் சுமார் 7% ஆவர்.[12] தமிழகத்திலிருந்து முதன்முறையாக கர்தினால் பதவிக்கு உயர்த்தப்பட்ட கர்தினால் துரைசாமி சைமன் லூர்துசாமி புதுவை உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்.

படக்காட்சியகம்

போக்குவரத்து

சாலைப் போக்குவரத்து

புதுவையில் சாலைப் போக்குவரத்து பெரும்பாலும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலமும், புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் மூலமும் பூர்த்தி செய்யப்படுகிறது.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன. இது புதுவையிலிருந்து சென்னை, பெங்களூர், திருப்பதி, நாகப்பட்டினம், காரைக்கால், நாகர்கோயில், மாகி, நெய்வேலி நகரம், கடலூர், விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை, ஆரணி, வேலூர் ஆகிய ஊர்களுக்கு நேரடி பேருந்து சேவையை வழங்குகின்றது.

மேலும் காரைக்காலில் இருந்த கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், திருச்சி ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

மேலும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, பெங்களூர் திருவனந்தபுரம், செங்கோட்டை ஆகிய ஊர்களுக்கு விரைவுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அது மட்டும் இன்றி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் புதுவையிலிருந்து வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், திருத்தணி, ஓசூர், சென்னை, ஆரணி, வந்தவாசி, காரைக்கால், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் காரைக்காலில் இருந்து சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, சிதம்பரம், திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தொடர்வண்டி நிலையம்

புதுச்சேரி தொடர்வண்டி நிலையம்

புதுச்சேரி விழுப்புரம் மற்றும் சென்னையுடன் ஐந்து இணைப்பு தொடர்வண்டி அகல பாதையால் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி, வேலூர் - காட்பாடி, மும்பை, கொல்கத்தா, புது தில்லி முதலிய பல பெருநகர்களுக்கு விரைவு தொடர்வண்டி இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து தொடர்வண்டி வழியாக புதுச்சேரியை அடைய நான்கு மணிநேரம் ஆகும்.

காரைக்கால் புகைவண்டி நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.

சாலைகள்

புதுச்சேரியின் சாலைகளின் முழு நீளம் 2552 கிமீ ஆகும். இது இந்தியாவிலேயே மிக அதிகமானதாகும்.

தமிழகம் மற்றும் இந்திய சாலைகளின் நீளத்தோடு ஒப்பீடு
சாலைகள்
புதுச்சேரியின் சாலைகளின் முழு நீளம் 2552 கிமீ.
1000 சதுர கிமீக்கு சாலைகளின் நீளம் புதுச்சேரி தமிழ்நாடு இந்தியா
4575 1572 663
சாலைகளின் வகைகள்
எண் வகை நீளம் (கி.மீ)
1 தேசிய நெடுஞ்சாலை 64.450
2 மாநில நெடுஞ்சாலை 49.304
3 மாவட்ட, பிற வீதிகள்
புதுச்சேரி  – 173.384
காரைக்கால் – 55.162
மாகி – 19.622
ஏனாம் – 26.460
274.628 274.628
4 கிராமப்புற சாலைகள்
புதுச்சேரி – 164.964
காரைக்கால் – 83.470
248.434 248.434
கூட்டுத்தொகை 636.816

விமான நிலையங்கள்

புதுச்சேரியின் விமான நிலையம் இலாஸ்பேட்டையில் அமைந்துள்ளது. இது 2012ஆம் ஆண்டு புதுபிக்கப்பட்டு பெரிய விமானங்களும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டது.[13] இப்புதிய விமான நிலையம் சனவரி 2013இல் திறக்கப்பட்டு பெங்களூருக்கு செல்லும் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.[14] காரைக்காலில் கட்டப்படும் புதிய விமான நிலையம் 2014இல் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முழுதும் தனியார் மூலதனத்தோடு ஆரம்பிக்கப்படும் முதல் விமான நிலையம் இது ஆகும்.[15]

புதுச்சேரியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் பட்டியல்

புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் மொத்தம் 10 சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது .அணைத்து சார் பதிவாளர் அலுவலகமும் கணினி மையமாக்கப்பட்டு உள்ளது. மென்பொருள் கொண்டு பதிவு செய்யும் நில பதிவு கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது நில பதிவுகளுக்கு மின்-முத்திரைத்தாள் பயன்படுத்தப்படுகிறது .சொத்தின் மீது எடுக்கப்படும் வில்லங்க சான்றிதழ் கணினி மையமாக்கப்பட்டு வருகிறது, பட்டா மற்றும் செட்டில்மென்ட் நகல் பொது சேவை மையம் வாயிலாக பொது மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. திருமண பதிவு இங்கு கொடுக்கப்படும் ஒரு சேவை ஆகும்.

புதுச்சேரி மாவட்டத்தில் (மாகி மற்றும் ஏனாம் பகுதி உள்ளடக்கிய ) உள்ள சார் பதிவாளர் அலுவலகம்

  1. புதுச்சேரி சார் பதிவாளர் அலுவலகம்
  2. உழவர்கரை சார் பதிவாளர் அலுவலகம்
  3. வில்லியனுர் சார் பதிவாளர் அலுவலகம்
  4. பாகூர் சார் பதிவாளர் அலுவலகம்
  5. திருக்கனுர் சார் பதிவாளர் அலுவலகம்
  6. மாகி சார் பதிவாளர் அலுவலகம்

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம்

  1. காரைக்கால் சார் பதிவாளர் அலுவலகம்
  2. திருநள்ளார் சார் பதிவாளர் அலுவலகம்

இவற்றையும் பார்க்கவும்

புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் ஆட்சியிடங்கள்

மேற்கோள்கள்

  1. "புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டார்". தி இந்து. 22 மே 2016. http://www.thehindu.com/news/national/kiran-bedi-appointed-as-lieutenant-governor-of-puducherry/article8633040.ece.
  2. Government of Puducherry Directorate of Information Technology(11 பெப்ரவரி 2013). "Press Release". செய்திக் குறிப்பு.
  3. "NIC Puducherry". Pon.nic.in.
  4. http://www.censusindia.gov.in/2011-prov-results/paper2-vol2/data_files/Puducherry/Chapter/Chapter-4.pdf
  5. The Periplus of the Erythraean Sea, transl. G.W.B. Huntingford (Hakluyt Society, 1980), p. 119.
  6. Le français restera langue officielle des Établissements aussi longtemps que les représentants élus de la population n'auront pas pris une décision différente [பிரெஞ்சு மொழியில்)]
  7. "Pondichéry". Tlfq.ulaval.ca. பார்த்த நாள் 2013-01-02.
  8. The Hindu: Puducherry comes out with list of State symbols, Dated: ஏப்ரல் 16, 2007
  9. Puducherry Population Census data 2011
  10. எத்தலம் சென்றிட்டாலும் எத்தீர்த்தம் ஆடிட்டாலும் இந்த சித்தர்வாழ் புதுவைபோல்
  11. Thirusabhacharithram, Rev. Dr. Xavier Koodappuzha
  12. http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Social_and_cultural/Religion.aspx
  13. "Flight operations await new terminal". சிஎன்என்-ஐபிஎன். 10 மே 2012. http://ibnlive.in.com/news/flight-operations-await-new-terminal/256422-60-118.html. பார்த்த நாள்: 3 ஜூலை 2012.
  14. "First flight to Puducherry from Bangalore on சனவரி 17". பார்த்த நாள் 5 பெப்ரவரி 2013.
  15. "Coimbatore firm to build இந்தியா's first private airport in Karaikal". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 13 மார்ச் 2012. http://articles.timesofindia.indiatimes.com/2012-03-13/coimbatore/31159347_1_greenfield-airports-private-airport-karaikal. பார்த்த நாள்: 3 ஜூலை 2012.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.