திருவாரூர்
திருவாரூர் (ஆங்கிலம்:Tiruvarur), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர் வட்டம் மற்றும் திருவாரூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.
திருவாரூர் | |
---|---|
முதல் நிலை நகராட்சி | |
வான்மீகிநாதர் கோயில் கோபுரம் | |
திருவாரூர் திருவாரூர் | |
ஆள்கூறுகள்: 10.773°N 79.637°E | |
நாடு | |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் |
பகுதி | சோழ நாடு |
அரசு | |
• வகை | முதல் நிலை நகராட்சி |
• Body | திருவாரூர் நகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | ம. செல்வராசு |
• சட்டமன்ற உறுப்பினர் | பூண்டி கே. கலைவாணன் |
• மாவட்ட ஆட்சியர் | திரு டி. ஆனந்த், இ. ஆ. ப. |
பரப்பளவு | |
• மொத்தம் | 10.47 |
ஏற்றம் | 3 |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 58,301 |
• அடர்த்தி | 5 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 610xxx |
தொலைபேசி குறியீடு | 914366 |
வாகனப் பதிவு | TN:50 |
சென்னையிலிருந்து தொலைவு | 300 கி.மீ (187 மைல்) |
தஞ்சாவூரிலிருந்து தொலைவு | 61 கி.மீ (37 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 116 கி.மீ (72 மைல்) |
கும்பகோணத்திலிருந்து தொலைவு | 41 கி.மீ (26 மைல்) |
இணையதளம் | https://tiruvarur.nic.in/ta/ |
இவ்வூரில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் தேர் ஆசியாவின் மிக பெரிய தேர் ஆகும். இவ்வூரில் தான் மனு நீதி சோழன் தன் மகனை தேரில் இட்டு கொன்று பசுவிற்கு நீதி வழங்கினார்.
பெயர் காரணம்
திருவாரூர் = திரு+ஆரூர். திருவாரூரில் கோவில் கொண்டுள்ள தியாகராஜர் மேலும் 6 ஊர்களில் கோவில் கொண்டுள்ளார் (சப்தவிடங்க தலங்கள்) எனவே முதலில் ஆரூர் (தேவார பாடல்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது) என்றும் பின்னர் கோவில் ஊர் என்பதால் திரு சேர்க்கப்பட்டு திருஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது.
திருவாரூர் என்ற பெயருக்கு வழங்கப்படும் மற்றும் ஒரு காரணம், திருமகள் திருமாலை அடையவேண்டி திருவாரூரில் உள்ள வன்மீகநாதரை வழிபட்டு, வரம் பெற்று திருமாலை மணந்து கொண்டதுடன் தன் பெயரிலேயே இவ்வூர் வழங்கப்படவேண்டும் என்று கேட்டதால் கமலாலயம் (அ) திருவாரூர் ( திரு - லட்சுமி ,ஆர் - பூமாதேவி பூஜித்தது ) என பெயர் பெற்றது.
வேதாரண்யம் விளக்கழகு, திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.
வரலாறு
திருவாரூர் சோழர்களின் 5 தலைநகரங்களில் (உறையூர், பழையாறை, தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம்) ஒன்றாகும். திருவாரூரை ஆண்ட மனுநீதி சோழன், பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது. இந்த நிகழ்வை சோழர்கள் கல்தேராக வடித்தனர். திருவாரூர் கோவிலுக்கு வடகிழக்கே கல்தேர் அமைந்துள்ளது. கல்தேரை பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10.773°N 79.637°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3 மீட்டர் (9.8 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள்தொகை பரம்பல்
மக்கள்தொகை வளர்ச்சி | ||
---|---|---|
ஆண்டு | ம.தொ. | %± |
1971 | 35,858 | — |
1981 | 43,654 | +21.7% |
1991 | 49,194 | +12.7% |
2001 | 56,341 | +14.5% |
2011 | 58,301 | +3.5% |
Sources:
|
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 30 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 14,997 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 58,301 ஆகும். அதில் 28,397 ஆண்களும், 29,904 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 1,053 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5779 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,001 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 8,368 மற்றும் 383 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 84.38%, முஸ்லிம்கள் 14.13%, கிறிஸ்தவர்கள் 1.39%, சீக்கியர்கள் 0.02%, பௌத்தர்கள் 0.01%, சைனர்கள் 0.2%, 0.05% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.01% பேர்களும் உள்ளனர்.[3]
நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்
நகராட்சி அதிகாரிகள் | |
---|---|
தலைவர் | |
ஆணையர் | |
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் | |
சட்டமன்ற உறுப்பினர் | பூண்டி கே. கலைவாணன் |
மக்களவை உறுப்பினர் | ம. செல்வராசு |
திருவாரூர் நகராட்சியானது திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தைச் (திமுக) சேர்ந்த பூண்டி கே. கலைவாணன் வென்றார்.
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த ம. செல்வராசு வென்றார்.
போக்குவரத்து
சாலை போக்குவரத்து
திருவாரூர் நகரமானது மூன்று தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 45எ - விழுப்புரம், தேசிய நெடுஞ்சாலை 67 - கோயம்புத்தூர். திருவாரூர் நகரம் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, காரைக்கால் மற்றும் தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலை 23 மயிலாடுதுறை முதல் திருத்துறைப்பூண்டி வரை, மாநில நெடுஞ்சாலை 67, தஞ்சாவூரிலிருந்து - கோடியக்கரை வரை, மாநில நெடுஞ்சாலை 65 திருவாரூரிலிருந்து - கும்பகோணம் வரை, மாநில நெடுஞ்சாலை 66 கும்பகோணத்தில் இருந்து அதிராம்பட்டினம் வரை, மாநில நெடுஞ்சாலை 67 நாகூரிலிருந்து - நாச்சியார்கோயில் வரை, மாநில நெடுஞ்சாலை 146 மன்னார்குடியிலிருந்து - சேதுபாவாசத்திரம் வரை, மாநில நெடுஞ்சாலை 147 கும்பகோணம் முதல் காரைக்கால் வரை, மாநில நெடுஞ்சாலை 151 கீழ்வேளூர் முதல் கஞ்சானம் வரை ஆகிய மாநில நெடுஞ்சாலைகள், இந்நகரின் வழியே செல்கிறது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள், திருவாரூர் வழியாக திருச்சிராப்பள்ளி முதல் வேளாங்கண்ணி வரை இயக்கப்படுகிறது. திருவாரூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு தினமும் 25க்கு மேற்பட்ட பேருந்துகள், உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. பெங்களூர், திருவனந்தபுரம், சென்னை போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தொடருந்து போக்குவரத்து
இங்கு இரயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த இரயில் நிலையமானது மேற்கில் தஞ்சாவூர், வடக்கில் மயிலாடுதுறை, கிழக்கில் நாகப்பட்டினம் மற்றும் தெற்கில் திருத்துறைப்பூண்டி ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கிய இரயில் நிலையமாக உள்ளது. திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால், மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களுக்கு செல்ல பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து, எர்ணாகுளம் வரை மயிலாடுதுறை வழியாக தினமும் விரைவு இரயில் இயக்கப்படுகிறது. மன்னார்குடியிலிருந்து திருப்பதி வரை மற்றும் வேளாங்கண்ணியிலிருந்து கோவா வரை இரண்டு ரயில்கள் உள்ளன. இது வாரத்தில் மூன்று நாள் திருவாரூர் வழியாக, இந்த இரயில்கள் இயக்கப்படுகிறது.
வானூர்தி நிலையம்
இதன் அருகிலுள்ள விமான நிலையம், 116 கி.மீ தொலைவிலுள்ள திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.
காலாச்சாரம்
திருவாரூர் தியாகராஜர் கோயில்
திருவாரூர் தியாகராஜர் கோயில், மிகவும் புகழ்பெற்ற பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். திருவாரூர் சப்தவிடங்க ஸ்தலங்களில் தலைமை இடமாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாகும். சோழ கல்வெட்டுகளில், தியாகராஜாவை விதிவிதாங்கர் என்றும் "தியாகராஜா" என்ற பெயர் கி.பி 15-16 ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை | |
---|---|
ஆண்டு | ம.தொ. |
2001 | 2,60,750 |
2002 | 2,75,900 |
2003 | 3,01,100 |
2004 | 3,21,400 |
சான்றுகள்:
|
தேர் திருவிழா
திருவாரூர் தேரானது, ஆசியாவிலேயே மிகப் பெரிய தேராகும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுக்கின்றனர். அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியும், 300 டன் எடையும் ஆகும். இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.
புகழ்பெற்றவர்கள்
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள்.
மேற்கோள்கள்
- "Census India 2011". Government of India.
- Thiruvarur population 2011.
- திருவாரூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
- Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited 2008, பக். 35–36.