திருவேட்டக்குடி சுந்தரேசுவரர் கோயில்

சுந்தரேஸ்வரர் கோயில் திருஞானசம்மந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 49ஆவது சிவத்தலமாகும்.இத்தலத்தில் தேவதீர்த்தம் எனும் தீர்த்தமும், தலவிருட்சமாக புன்னை மரமும் உள்ளது. இப்பகுதியின் பெயர் கோயில் மேடு.

தேவாரம் பாடல் பெற்ற
திருவேட்டக்குடி சுந்தரேசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):புன்னகவனம், வேட்டக்குடி, அம்பிகாபுரம்
பெயர்:திருவேட்டக்குடி சுந்தரேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருவேட்டக்குடி
மாவட்டம்:புதுச்சேரி : காரைக்கால் வட்டம்
மாநிலம்:புதுச்சேரி
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சுந்தரேஸ்வரர்,திருமேனியழகர்
உற்சவர்:வேடமூர்த்தி
தாயார்:சௌந்தர நாயகி,சாந்தநாயகி
தல விருட்சம்:புன்னை
தீர்த்தம்:தேவதீர்த்தம்
ஆகமம்:காரணாகமம்
சிறப்பு திருவிழாக்கள்:மாசிமகத்தில் 3 நாட்கள் விழா, திருக்கார்த்திகை, சிவராத்திரி.
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்மந்தர்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

தலவரலாறு

பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன் தனக்கு பசுபதாஸ்திரம் என்றும் ஆயுதம் வேண்டி கடுந்தவம் புரிந்தார். அவருடைய தவத்தினை பன்றி வடிவில் வந்த அரக்கன் கலைத்தார். அதனால் அரக்கனை அர்ஜூனன் தன்னுடைய வில் அம்பினால் வதம் செய்தார். அந்நேரத்தில் வேறொரு வேடன் தானே பன்றியைக் கொன்றதாகக் கூறி உரிமைக் கொண்டாடினார். இறுதியில் வேடனாக வந்தது சிவபெருமான் என்பதை அர்ஜூனன் உணர்ந்தார். சிவபெருமான் அர்ஜூனனுக்கு ஆயுதங்களில் உயரியதான பசுபதாஸ்திரத்தினை அளித்தார். இத்தலத்தில் முருகனும் வேடன் வடிவத்தில் வில்லேந்தி காட்சிதருகிறார். சிவபெருமானின் மகனான ஐயப்பன் தனது இரு மனைவியர்களுடன் காட்சியளிக்கின்றார்.

இறைவன், இறைவி

இத்தலத்தின் இறைவன் சுந்தரேஸ்வரர், இறைவி சௌந்தரநாயகி.

அமைப்பு

மூலவர், அம்மன் விமானங்கள்

ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி பீடம், கொடி மரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. கருவறையில் மூலவராக திருமேனியழகர் எனப்படும் சுந்தரேஸ்வரர் உள்ளார். கருவறையின் முன்பாக வலப்புறம் விநாயகர் உள்ளார். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் சுந்தரவிநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், புன்னைவனநாதர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. புன்னைவனநாதருக்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. அடுத்து சம்பந்தர், சனீஸ்வரர், மகாலட்சுமி, அய்யனார் ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதியும், நவக்கிரக சன்னதியும் உள்ளன. அடுத்து நால்வர், பைரவர்,சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு இடது புறமாக சௌந்தரநாயகி அம்மன் சன்னதி உள்ளது.

குடமுழுக்கு

28 மே 1999இல் இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

மேற்கோள்கள்

    இவற்றையும் பார்க்க

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.