கோடியக்கரை அமுதகடேசுவரர் கோயில்

கோடியக்கரை அமுதகடேசுவரர் கோயில் சுந்தரரின் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 127ஆவது சிவத்தலமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
திருக்கோடி குழுகர் கோயில், கோடியக்கரை அமுதகடேசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கோடி, கோடியக்கரை, கோடிக்கரை
பெயர்:திருக்கோடி குழுகர் கோயில், கோடியக்கரை அமுதகடேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருக்கோடி
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர்.
தாயார்:அஞ்சனாட்சி, மைத்தடங்கண்ணி.
தல விருட்சம்:குராமரம்
தீர்த்தம்:அக்கினி (கடல்) தீர்த்தம், அமுத தீர்த்தம்.
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர்

இறைவன், இறைவி

இத்தலத்தின் மூலவர் குழகேஸ்வரர், தாயார் மைத்தடங்கண்ணி. இத்தலத்தின் தல விருட்சமாக குரா மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் அமுதக்கிணறும் உள்ளன. [1]

வழிபட்டோர்

இத்தல இறைவனாரை இந்திரன், சுவேதமுனிவரின் மகன் பிரமன், நாரதர், குழகமுனிவர், சித்தர்கள் முதலானோர் வழிபட்டுள்ளனர்.

தல வரலாறு

திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமுதக் கலசத்தை வாயு பகவான், தேவருலகிற்கு எடுத்துச் சென்ற போது அமுதம் சிதறிக் கீழே விழ, அது சிவலிங்கமாக ஆயிற்று என்று தல வரலாறு கூறுகிறது. சேரமான் பெருமாள் நாயனாருடன் இத்தலத்திற்கு வந்த சுந்தரர், கோயில் கடலருகே தனித்திருப்பதைக் கண்டு உள்ளம் வருந்தி பாடியதாக வரலாறு சொல்லப்படுகிறது. இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்றத் தலமுமாகும். தட்சிணாயன, உத்தராயண புண்ணிய காலங்களில் தல தீர்த்தமாகிய கடலில் நீராடுவது சிறப்பு எனக் கருதுகின்றனர். இத்தலத்து முருகப்பெருமான் ஓர் முகமும், ஆறு கரங்களும், ஏனைய ஆயுதங்களுடன் ஒரு திருக்கரத்தில் அமுத கலசமும் ஏந்தியிருக்கிறார். அமுத கலசம் ஏந்தியிருப்பது தலப்புராணம் தொடர்புடையதாக இருக்கலாம். இத்தலத்து விநாயகரும் அமிர்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். கடற்கரையிலுள்ள சித்தர் கோயிலில் சித்தர்கள் பலர் இன்னும் வாழ்வதாக நம்பப்படுகிறது. நவகிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன; இத்தலம் கோளிலி தலம் எனப்படுகிறது.

அமைவிடம்

இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் வேதாரண்யத்திலிருந்து கோடியக்கரை செல்லும் வழியில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோடியக்காடு என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.

பாடல்கள்

சுந்தரரின் "கடிதாய்க் கடற்காற்று (7-32)." எனத் துவங்கும் தேவாரப்பாடல் இத்தல இறைவனார் மீது பாடப்பட்ட ஒன்று. இந்த தலத்தைப் போற்றி சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் உள்ளன.

ஏழாம் திருமுறையில் இடம் பெற்றுள்ள பாடல், கொல்லிப் பண்ணில் அமைந்தது.
கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேற்
குடிதான் அயலேஇருந் தாற்குற்ற மாமோ
கொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர்
அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே. (7.32.1)
கோடிக்குழகர் கோயிலின் அயலிலும் அதன் புறத்திலும் எங்கும் தேடியும் ஒரு குடியும் காணாத நிலையில், கோயிலுள் புகுந்து இறைவரின் திருவடியைத் தொழுது உள்ளம் வருந்தி மலர் போன்ற கண்களில் நீர் வரக் `கடிதாய்க் காற்று' எனத் தொடங்கும் பதிகம் பாடிக், கொற்றவையுடன் இறைவர் வீற்றிருக்கின்ற தன்மையையும் அப்பதிகத்துள் வைத்துப் போற்றினர்.
பன்னிரண்டாம் திருமுறையில், கழற்றறிவார் நாயனார் புராணத்தில் 89வது பாடலிலும் குறிப்பு உள்ளது.
கோடிக் குழகர் கோயில்அயல்
குடிக ளொன்றும் புறத்தெங்கும்
நாடிக் காணா துள்புக்கு
நம்பர் பாதந் தொழுதுள்ளம்
வாடிக் கடிதாய்க் கடற்காற்றென்று
எடுத்து மலர்க்கண் ணீர்வாரப்
பாடிக் காடு காள்புணர்ந்த
பரிசும் பதிகத் திடைவைத்தார்.
திருத்தொண்டர் புராணத்தின் பன்னிரண்டாம் திருமுறையில் இரண்டாம் காண்டத்திலும் சில பாடல்கள் உள்ளன.
88, 89வது பாடல்கள்
எழுந்து பணிந்து புறத்து எய்தி இருவர் பெரும் தொண்டரும் சில நாள்
செழுந்தண் பழனப் பதியதனுள் அமர்ந்து தென்பால் திரைக் கடல் நஞ்சு
அழுந்து மிடற்றார் அகத்தியான் பள்ளி இறைஞ்சி அவிர் மதியக்
கொழுந்து வளர் செம் கடைக் குழகர் கோடிக் கோயில் குறுகினார்
கோடிக் குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்து எங்கும்
நாடிக் காணாது உள்புக்கு நம்பர் பாதம் தொழுது உள்ளம்
வாடிக் கடிதாய்க் கடல் காற்று என்று எடுத்து மலர்க் கண்ணீர் வாரப்
பாடிக் காடு காள் புணர்ந்த பரிசும் பதிகத்து இடை வைத்தார்

பொன்னியின் செல்வன்

கல்கி தமது பொன்னியின் செல்வன் நூலில் இத்தலக்குறிப்பை பயன்படுத்தியுள்ளார். அந்நூலில் இரண்டாம் பாகத்தின் முதல் அத்தியாயத்தில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இத்தலத்திற்கு சுந்தரமூர்த்தி நாயனார் வந்து இறைவனை வணங்கியதாகவும், இத்தலத்து இறைவன் தனிமையில் இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

இவற்றையும் பார்க்க

படத்தொகுப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.