கோவா (மாநிலம்)

கோவா (ஆங்கிலம்: Goa; கொங்கணி: गोंय) பரப்பளவில் இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம் மற்றும் இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மக்கள் தொகை பட்டியலில் நான்காவது மிகக்குறைந்த மக்கள்தொகை உடைய மாநிலம் ஆகும்.இந்தியாவில் உள்ள மேற்கு கடற்கரை பகுதியான கொங்கனில் அமைந்துள்ளது. இது வடக்கு திசையில் மகாராஷ்டிரா மாநிலத்தையும், கிழக்கில் கர்நாடகா மாநிலத்தையும் மற்றும் தெற்கு திசையில் அரபிக்கடலையும் எல்லைகளாகக் கொண்டு மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

கோவா

गोंय

  மாநிலம்  
இருப்பிடம்: கோவா , இந்தியா
அமைவிடம் 15°33′47″N 73°49′05″E
நாடு  இந்தியா
மாநிலம் கோவா
மாவட்டங்கள் 2
நிறுவப்பட்ட நாள் 30 மே 1987
தலைநகரம் பனாஜி
மிகப்பெரிய நகரம் வாஸ்கோட காமா
ஆளுநர் மிருதுளா சின்கா
முதலமைச்சர் பிரமோத் சாவந்த்
சட்டமன்றம் (தொகுதிகள்) ஒர் அவை முறை (40)
மக்களவைத் தொகுதி கோவா
மக்கள் தொகை

அடர்த்தி

1 (25வது) (2001)

363/km2 (940/sq mi)

ம. வ. சு (2005)
0.779 (medium) (3வது)
கல்வியறிவு 82% (3வது)
மொழிகள் கொங்கணி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 3702 கிமீ2 (1429 சதுர மைல்)
ஐ. எசு. ஓ.3166-2 IN-GA
இணையதளம் www.goa.gov.in

பனாஜி இம்மாநிலத் தலைநகரம் ஆகும். வாஸ்கோட காமா இங்குள்ள மிகப்பெரிய நகரமாகும். இதன் வரலாற்றுப் புகழ் வாய்ந்த நகரமாகத் திகழ்கின்ற மார்கோ 16 ஆம் நூற்றாண்டில் வியாபாரிகளாக குடிபுகுந்து விரைவில் நாட்டையே வெற்றி பெற்ற போர்ச்சுகீசியர்களின் கலாச்சாரம், செல்வாக்கு பெற்றிருந்ததை தற்பொழுதும் வெளிப்படுத்துவதாக உள்ளது. இது 1961 இல் இந்தியாவோடு இணைக்கப்படும் வரை போர்ச்சுகீசியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக 450 ஆண்டுகளாக நீடித்தது.[1][2]

இங்குள்ள புகழ்வாய்ந்த கடற்கரைகள், இறைவழிபாட்டுத் தலங்கள் மற்றும் உலகப் புகழ் வாய்ந்த கட்டடக்கலைகள் ஆகியவை கோவாவிற்கு ஒவ்வொரு வருடமும் அயல்நாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளைக் கவருவதாக உள்ளது. இது தாவரம் மற்றும் விலங்கு சார்ந்த வனவளங்களைக் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைச் சார்ந்துள்ளது. இது பல்லுயிரியம் சார்ந்த முக்கியத்தலமாக வகைபடுத்தப்பட்டுள்ளது.

பெயர்வரலாறு

இதன் பெயர் கோவா என்பது போர்ச்சுகீசிய மொழியிலிருந்து ஐரோப்பிய மொழிக்கு வந்த சொல்லாகும், ஆனால் இதன் சரியான மூலம் எம்மொழியிலிருந்து தோன்றியது என்பது தெளிவின்றி காணப்படுகின்றது.பழமையான இலக்கியங்களில கோமண்டா, கோமான்சலா, கோபகபட்டம், கோபகபுரி, கோவெம் மற்றும் கோமண்டக் என பல பெயர்களில் வழங்கப்படுகின்றன.[3] தற்பொழுது கோவா எனப்படும் பகுதியை இந்திய இதிகாசமான மகாபாரதம் கோபராஷ்ட்ரா அல்லது கோவராஷ்ட்ரா என குறிப்பிடுகிறது. இதற்கு மராட்டிடையர்களின் தேசம் என்பது பொருளாகும். கோபகபுரி அல்லது கோபகபட்டினம் என பழமையான சமற்கிருத உரைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே பெயர்கள் இந்து சமய உரை நூல்களான ஹரிவன்சா மற்றும் கந்த புராணம் ஆகியவற்றிலும் குறிப்பிடப்படுகிறது. இதற்கு பிறகு கோவா கோமன்ச்சலா எனவும் அறியப்பட்டது. இந்த பகுதியே பரசுராம்பூமி என வழங்கப்பட்டது என்பதை சில கல்வெட்டுக்கள் மற்றும் புராணங்களின் உரைகள் உறுதியாக குறிப்பிடுகின்றன.[4] கி.மு மூன்றாம் நூற்றாண்டில் கோவா, அபரன்ந்தா என அழைக்கப்பட்டது என்பதை கிரேக்க புவியியல் ஆய்வாளர் தாலமி குறிப்பிட்டுள்ளார். கோவாவை கிரேக்கர்கள் 13 ஆம் நூற்றாண்டில் நெல்கிண்டா என குறிப்பிட்டுள்ளனர். கோவாவுக்கு சிந்தாபூர், சந்தாபர் மற்றும் மஹாசப்தம் என வேறு சில வரலாற்றுப் பெயர்களும் உள்ளன.[5]

வரலாறு

பழைய கோவாவிலுள்ள சீகேதட்ரல், போர்ச்சுகீசிய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகும்.

கோவாவின் பரந்த வரலாற்றை நோக்குகையில், கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசின் ஒரு பகுதியாக திகழ்கையில் மகதநாட்டினைச் சார்ந்த புத்தமத மன்னன் அசோகரால் ஆட்சி செய்யப்பட்டதை அறியலாம்.

புத்த துறவிகள் கோவாவில் புத்த மதத்தை வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டார்கள். கி.மு இரண்டாம் நூற்றாண்டுக்கும் கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கோவாவில் கர்வார்களை சார்ந்த சூதர்களும், கோல்ஹாபூரைச் சார்ந்த சதவாகன நிலக்கிழார்களும் (கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலும்) மேற்கத்திய கஷ்ரபஸ்களும்(கி.பி 150 ஆண்டுகளில்), மேற்கு மகாராஷ்டிராவைச் சார்ந்த அபிராக்களும், குஜராத்தின் யாதவ இன போஜர்களும் மற்றும் கலச்சூரி நிலக்கிழார்களாகிய கொங்கன் மௌரியர்களும் ஆட்சி செலுத்தினர்.[6]

இவர்களுக்கு பிறகு 578 க்கும் 753 க்கும் இடைபட்ட காலத்தில் பாடமியை சார்ந்த சாளுக்கியர்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களுக்கு பிறகு மால்கேதுவைச் சார்ந்த இராஷ்டிரகூடர்கள் 753 முதல் 963 வரை ஆட்சி புரிந்தனர். ஒருவாறாக 765 முதல் 1015 வரையிலான காலகட்டத்தில் கோவாவை கொங்கனைச் சார்ந்த தெற்கு சில்ஹரர்களாலும், சாளுக்கிய மற்றும் இராஷ்டிரகூட நிலக்கிழார்களும் ஆட்சிசெய்தனர்.[7] அதற்கடுத்த சில நூற்றாண்டுகளாக கோவாவை கடம்பர்களும், கல்யாணியைச் சேர்ந்த சாளுக்கிய நிலக்கிழார்களும் வெற்றிகரமாக ஆட்சி புரிந்தனர். அவர்கள் கோவாவில் சமண மதத்தை ஆதரித்தனர்.[8]

1312 இல் கோவா டெல்லி சுல்தான்களின் ஆட்சியின் கீழ் வந்தது. இப்பகுதியில் இவர்களது அரசாட்சி திறன் குறைவு காரணமாக வலுவிழந்து காணப்பட்டதால் 1370 இல் விஜயநகரப் பேரரசின் முதலாம் ஹரிஹரரிடம் இவர்கள் சரணடையும் கட்டாயத்திற்கும் உள்ளாகினர். இது குல்பர்காவைச் சார்ந்த பாமினி சுல்தான்களால் 1469 இல் கைபற்றப்படும் வரை விஜயநகர முடியாட்சி பிரதேசமாகவே இருந்தது. இந்த மன்னர் பரம்பரை தகர்த்தெறியப்பட்ட பிறகு, இப்பகுதி பிஜப்பூரைச் சார்ந்த அதில் ஷாய் அவர்களின் ஆளுகையின் கீழ் வந்தது. இவர் துணைத் தலைநகரமாக அப்பொழுது நிறுவிய நகரமே போர்ச்சுகீசியர்கள் பிற்காலத்தில் வெல்ஹா கோவா என்றழைக்கப்பட்டது.

1510 இல் போர்த்துகேயர்கள் அப்பொழுது ஆட்சியிலிருந்த பிஜப்பூர் அரசர்களை அப்பகுதி முன்னிலையாளர்களான ஐதர் அலி, திம்மையா ஆகியோர்களின் உதவியுடன் போராடி வெல்ஹா கோவாவில் (அல்லது பழைய கோவா) நிலையாக குடியமர்ந்தனர்.

போர்ச்சுகீயர்கள் ஆட்சியின் கீழ் கோவா இருந்தபொழுது கைகளில் அணியும் மேலுறை(1675)

போர்த்துகீசியரால் அங்கு வாழ்ந்த பிராமணர்கள் சிலுவைகளில் அறையப்பட்டு கொல்லப்பட்டனர்.[9]

போர்ச்சுகீசியர்கள் தங்கள் கீழுள்ள கோவாவின் பெரும்பகுதியினரை கிறித்துவர்களாக மாற்றினர். போர்ச்சுகீசியர்கள் மராத்தியர்கள் மற்றும் தக்காண சுல்தான்களுடன் மேற்கொண்ட தொடர் போர்கள் காரணமாகவும், அவர்களது கடுமையான மதக் கொள்கைகள் காரணமாகவும் பெரும்பாலான கோவா மக்கள் பக்கத்து நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். நெப்போலியன் போர்கள் நடந்து கொண்டிருந்த 1812 மற்றும் 1815 க்கு இடைபட்ட காலத்தில் கோவா பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்டது.

1843 இல் இதன் தலைநகரம் பனாஜிம்மிலிருந்து வெல்ஹா கோவாக்கு மாற்றப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஆக்கிரமப்பின் மூலம் தற்பொழுது உள்ள கோவா மாநில எல்லை போல பெரும்பான்மையாக விரிவடைந்தது. இஸ்டடோ டா இந்திய போர்ச்சுகிசியம் என்கிற கோவாவின் மிகப்பெரிய பிரதேசத்தின் எல்லைகளை நிலைநிறுத்தி உருவாக்குகின்ற வரையிலான அதே சமயத்தில் போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் உள்ள பிற இடங்களை இழந்தனர்.

1947 இல் இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, போர்த்துக்கல் இந்தியாவில் உள்ள தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியின் ஆட்சியுரிமையை திரும்பபெறுவதற்கான இந்தியாவுடனான உடன்படிக்கையை மறுத்தது. இந்திய இராணுவம் 1961 டிசம்பர் 12 இல் மேற்கொண்ட ஆப்ரேஷன் விஜய் என்னும் போர் நடவடிக்கை மூலம் கோவா, டாமன் மற்றும் டையூ ஆகிய இடங்களை கைப்பற்றி இந்தியாவுடன் ஒருங்கிணைத்தது. கோவா உள்ளிட்ட டாமன் மற்றும் டையூ ஆகியவை மத்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட இந்திய யூனியன் பிரதேசங்களாகும். 1987 ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு கோவா இந்தியாவின் 25 வது மாநிலமாக மாற்றப்பட்டது. டாமன் மற்றும் டையூ ஆகியவை யூனியன் பிரதேசங்களாகவே தொடர்கின்றன.

புவியியல் மற்றும் தட்பவெப்ப நிலை

கோவா கடலோர பகுதி
கோவாவின் மிகுதியான கடற்கரைகள்

புவியியல்

கோவாவின் சுற்றுவட்ட பரப்பளவு 3,702 கிமீ²(1,430 சதுர மைல்கள்)ஆகும். இது நிலநேர்கோடுகள் 14°53'54" N மற்றும் 15°40'00" மற்றும் நிலநிரைகோடுகள் 73°40'33" E மற்றும் 74°20'13" E ஆகியவற்றின் இடைபட்ட பகுதிகளில் அமைந்துள்ளது. கோவாவின் பெரும்பான்மையான பகுதி கொங்கண் மண்டலம் எனப்படும் கடலோரப் பிரதேசம் ஆகும். இங்குள்ள நேர்செங்குத்தான மலைச்சரிவு மேற்கு தொடர்ச்சி மலைகள் வரை நீடிக்கிறது. இது தக்காண பீடபூமியிலிருந்து தனித்து காணப்படுகிறது. இதில் 1,167 மீட்டர்கள்(3,827அடிகள்)உயரம் உடைய சோன்சோகர் மலையே மிக உயரமானது ஆகும். கோவா 101 கி.மீ(63 மைல்கள்) கடலோர பகுதியைக் கொண்டுள்ளது.

கோவாவில் மண்டோவி,சுஹாரி, தெர்கோல்,சோப்ரா, சல் ஆகிய முக்கிய ஆறுகள் ஒடுகின்றன. மர்மகோவா துறைமுகம் சுஹாரி ஆற்றின் வாய்பகுதியில் அமைந்துள்ளது. இது தெற்கு ஆசியாவின் மிகச் சிறந்த இயற்கை துறைமுகங்களுள் ஒன்றாகும். சுஹாரி, மண்டோவி ஆகியன கோவாவின் பாதுகாப்பு அரண்களாக திகழ்கின்றன.இவற்றின் கிளையாறுகள் இவற்றின் புவிநிலப்பரப்பில் 69% பகுதியை சுத்தப்படுத்துகின்றன. கோவா நாற்பதுக்கும் மேற்பட்ட கழிமுகங்களையும், எட்டு கடல் துருத்துகள், தொண்ணூறு ஆற்றிடை துருத்து களையும் கொண்டுள்ளது. கோவா ஆறுகளின் மொத்த பயணத்தொலைவு 253 கி.மீ(157 மைல்கள்) ஆகும். கோவாவில் கடம்பா அரச மரபினரால் கட்டப்பட்ட முந்நூற்றுக்கும் மேற்பட்ட பழமையான குளங்களும் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவகுணம் வாய்ந்த நீரூற்றுக்களும் உள்ளன.

கோவாவின் பெரும்பகுதி மண்ணானது இரும்பு அலுமினியம் கலந்த கூட்டுப்பொருளால் ஆன சிவந்த நிறமுடைய களிமண்ணாகும். எஞ்சியுள்ள நிலப்பகுதி மற்றும் ஆற்றங்கரை பகுதிகளில் பெரும்பாலும் வண்டல் மண் மற்றும் செம்மண் ஆகியவை உள்ளன. இந்த மண்வகைகள் மிகுந்த கனிமங்கள் மற்றும் மக்கிய இலைதழைகள் நிறைந்தவையாகும். இவை தோட்டத்திற்கு உகந்தவையாகும். இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பழமையான பாறைகள் சில கர்நாடகாவுடன் இணைந்த கோவாவின் எல்லை பகுதிகளான மோலெம் மற்றும் அன்மோட் இடையே கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாறைகள் 3,600 மில்லியன்கள் பழமை வாய்ந்த டிராண்ட்ஜெமிடிக் கடினப்பாறைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.இவை ரூபிடியம் ஐசோடோப்பு காலத்திற்கு இணையானதாகும். இந்த பாறையின் மாதிரி கோவா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தட்பவெப்ப நிலை

கோவா ஆண்டின் பெரும்பாலான காலங்களில் வெப்பம் மற்றும் ஈரத்தன்மை வாய்ந்த அரபிக்கடல் அருகமைந்த வெப்பமண்டல பகுதியாக உள்ளது. மே மாதமே மிக அதிக வெப்பமுடையதாகும், அச்சமயம் பகல் நேர வெப்பநிலை 35 °C (95 °F) ஆனது மிகுந்த ஈரப்பதத்துடன் இணைந்து காணப்படும். ஒவ்வொரு வருடமும் ஜீன் மாதத்தில் வரும் பருவகாற்றால் வரும் மழைகள் வெப்பம் தரும் அவதிகளை நீக்க மிகவும் அவசியமாகிறது. பெரும்பாலும் வருடந்தோறும் பருவகாற்றால் ஏற்படும் மழைபொழிவினை கோவா செப்டம்பர் இறுதி வரை பெறுகிறது.

கோவா டிசம்பர் மத்தியில் மற்றும் பிப்ரவரி வரையிலான இடைப்பட்ட குறுகிய காலத்தையே குளிர்காலமாகக் கொண்டுள்ளது. இம்மாதங்களில் இரவு நேர வெப்பநிலை 20 °C (68 °F) வரையிலும் மற்றும் பகல் நேர வெப்பநிலை 29 °C (84 °F) வரையிலும் மிதமான அளவு ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. இவை மட்டுமின்றி பிற உள்நாடுகளில், அவற்றின் உயரம் சார்ந்து மேலும் சில டிகிரிகள் குளிர்ச்சியாக இருக்கும்.

மார்ச் 2008 இல் கோவா வெள்ளத்துடன் கூடிய பெருமழை மற்றும் கடுங்காற்றை சந்தித்தது. இதுவே 29 ஆண்டுகாலத்தில் கோவா மார்ச் மாதத்தில் பெற்ற முதல் மழையாகும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், கோவா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 31.6
(88.9)
31.5
(88.7)
32.0
(89.6)
33.0
(91.4)
33.0
(91.4)
30.3
(86.5)
28.9
(84)
28.8
(83.8)
29.5
(85.1)
31.6
(88.9)
32.8
(91)
32.4
(90.3)
31.28
(88.3)
தாழ் சராசரி °C (°F) 19.6
(67.3)
20.5
(68.9)
23.2
(73.8)
25.6
(78.1)
26.3
(79.3)
24.7
(76.5)
24.1
(75.4)
24.0
(75.2)
23.8
(74.8)
23.8
(74.8)
22.3
(72.1)
20.6
(69.1)
23.21
(73.78)
பொழிவு mm (inches) 0.2
(0.008)
0.1
(0.004)
1.2
(0.047)
11.8
(0.465)
112.7
(4.437)
868.2
(34.181)
994.8
(39.165)
512.7
(20.185)
251.9
(9.917)
124.8
(4.913)
30.9
(1.217)
16.7
(0.657)
2,926
(115.2)
சராசரி பொழிவு நாட்கள் 0.0 0.0 0.1 0.8 4.2 21.9 27.2 13.3 13.5 6.2 2.5 0.4 90.1
சூரியஒளி நேரம் 313.1 301.6 291.4 288.0 297.6 126.0 105.4 120.9 177.0 248.0 273.0 300.7 2,842.7
ஆதாரம்: உலக வானிலையியல் அமைப்பு (ஐநா),[10] Hong Kong Observatory[11] for data of sunshine hours

உட்பிரிவுகள்

கோவாவின் வட்டாரங்கள் கருஞ்சிவப்பு வண்ணமுள்ளவை வடக்கு கோவா மாவட்டத்திலுள்ள வட்டங்களையும், ஆரஞ்சு வண்ணம் தெற்கு கோவாவின் வட்டங்களையும் சுட்டுகிறது.

இந்த மாநிலம் வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு கோவாவின் தலைநகரமாக பனாஜியும் தெற்கு கோவாவின் தலைநகரமாக மார்கோவாவும் உள்ளது. ஒவ்வொரு மாவட்டமும் இந்திய அரசாங்கத்தின் ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியாளரால் ஆட்சிசெய்யப்படுகிறது.

இந்த மாவட்டங்கள் மேலும் பதினோரு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடகோவாவின் வட்டங்களாவன பார்டெஸ்,பிகோலிம், பெர்னெம்,போண்டா,சட்டாரி மற்றும் திஸ்வடி ஆகியனவாகும். தெற்கு கோவாவைச் சார்ந்த வட்டங்களாவன கேன்கோனா,மர்மகோவா,கியூபெம்,சல்சிட்டெ மற்றும் சங்குயெம் ஆகியனவாகும். இந்த வட்டங்களின் தலைமையிடங்கள் முறையே மாப்யுசா,பிகோலிம், பெர்னெம்,போண்டா,வால்பாய்,பனஜிம்,சௌதி, வாஸ்கோ,கியூபெம்,மார்கோவா மற்றும் சங்குயெம் ஆகியனவாகும்.

கோவாவின் முக்கிய நகரங்களாவன வாஸ்கோ,மார்கோவா, மர்மகோவா,பனஜிம் மற்றும் மாப்யுசா ஆகியனவாகும். முதல் நான்கு நகரங்களையும் இணைத்து மெய்யான நகரக்கூட்டம் அல்லது அதிக அல்லது குறைந்த தொடர் நகர்புறம் என கருதப்படுகிறது.

தாவரவளம் மற்றும் விலங்குவளம்

பூமத்தியரேகை காடுகள் கோவாவின் ஆதிக்கத்தில் உள்ளது.1,424 km2 (549.81 sq mi)[3] பெரும்பான்மையானவை அரசுக்கு சொந்தமானவையாகும். அரசுக்கு சொந்தமான காடுகள் மதிப்பிடப்பட்டு1,224.38 km2 (472.74 sq mi) தனியாரிடம் இருந்து பெறப்பட்டதாகும்.200 km2 (77.22 sq mi) மாநிலத்தின் பெரும்பானமையான காடுகள் மாநிலத்தின் கிழக்கு பிரதேசங்களின் உட்பகுதியில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெரும்பான்மையானவை கிழக்கு கோவாவில் அமைந்துள்ளது.இவை சர்வதேச நாடுகளால் உலகின் பல்லுயிரியம் சார்ந்த முக்கியத்தலமாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது. 1999 பிப்ரவரி மாத நேஷனல் ஜாகிரஃபிக் மேகஸின் இதழானது கோவாவை அதன் சிறப்பான வெப்பமண்டல பல்லுயிரியம் சார்ந்த வளத்திற்காக அமேசான் மற்றும் காங்கோ பள்ளத்தாக்குகளுடன் ஒப்பிட்டிருந்தது.

கோவாவின் வனவிலங்கு சரணாலயங்கள் 1512 க்கும் மேற்பட்ட ஆவணபடுத்தப்பட்ட தாவர இனங்களும்,275 க்கும் மேற்பட்ட பறவையினங்களும், 48க்கும் மேற்பட்ட வகையான விலங்குகள் மற்றும் 60 க்கும் மேற்பட்ட ஊர்வன இனங்கள் உள்ளன என்ற பெருமையைக் கொண்டுள்ளன.[12]

அரிசி முக்கிய உணவுப் பயிராகும்.இதனுடன் பருப்புவகைகள்,கேழ்வரகு மற்றும் பிற உணவுப்பயிர்களும் விளைகின்றன. முக்கிய பணப்பயிர்களாக தேங்காய்]],முந்திரி,பாக்கு,கரும்பு ஆகியனவும் மற்றும் அன்னாசி,மாம்பழம் மற்றும் வாழை ஆகிய பழங்களும் உள்ளன[3]. இந்த மாநிலம் 1,424 கி.மீ² தொலைவுக்கும் மேற்பட்ட பரந்த வளம் வாய்ந்த காடுகளைப் பெற்றுள்ளது. கோவாவின் தேசிய விலங்கு கோர்(எருமையினம்),தேசிய பறவை செங்கழுத்து மஞ்சள் புல்புல்(கொண்டலாட்டி) ஆகும்.இது கருப்பு கொண்டை புல்புல் பறவையிலிருந்து வேறுபட்டதாகும். மாநிலத்தின் தேசிய மரம் அசன் ஆகும்.

மூங்கில் பிரம்புகள், மரத்தா பார்க்ஸ்,சில்லர் பார்க்ஸ் மற்றும் பிஹிரண்ட் ஆகியன காட்டில் கிடைக்கக் கூடிய முக்கியப்பொருள்களாகும். கோவாவின் உயரமான பகுதிகள் தவிர்த்து அனைத்து இடங்களிலும் நீக்கமறக் காணப்படக்கூடியது தென்னை மரங்கள் ஆகும். மிகுந்த அளவில் இலையுதிர்க்கும் தாவரவகைகளான தேக்கு,சல்,முந்திரி மற்றும் மாம்பழ மரங்களும் இங்கு காணப்படுகிறது. பலாப்பழம், மாம்பழம், அன்னாசிப்பழம் மற்றும் மேற்கத்திய நாவல்பழம் ஆகிய பழங்களும் கிடைக்கின்றன.

நரிகள், காட்டு பன்றிகள் மற்றும் இடம்பெயர்ந்துவரும் பறவைகள் முதலியவைகள் கோவாவின் வனங்களில் காணப்படும். வட்டார பறவைகளில் மீன்கொத்திகள்,மைனா மற்றும் கிளிகள் ஆகியனவும் அடங்கும். கோவாவின் கடல் மற்றும் ஆறுகளில் ஏராளமான மீன் வகைகளும் காணப்படுகிறது. நண்டு,கடல் நண்டு, கூனி இறால்கள், ஜெல்லிமீன்,சிப்பிகள் மற்றும் கெளுத்திமீன்கள் ஆகியன இங்கு பிடிபடும் மீன்வகைகளாகும். கோவா மிகுதியான பாம்புகளை உடைய பகுதியாதலால் இங்கு கொறித்துண்ணும் பிராணிகளின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவா சலீம் அலி பறவை சரணாலயம் உள்ளிட்ட பல தேசிய பூங்காக்களை உடையது. வனவிலங்கு சரணாலயங்களில், போண்டிலா வனவிலங்கு சரணாலயம், மொலம் வனவிலங்கு சரணாலயம், கோட்டிகோ வனவிலங்கு சரணாலயம், மேடி வனவிலங்கு சரணாலயம்,நேட்ராவலி வனவிலங்கு சரணாலயம்,மஹாவீர் வனவிலங்கு சரணாலயம் ஆகியனவும் அடங்கும் மற்றும் சலிம் அலி பறவைகள் சரணாலயம் சோரோ தீவில் அமைந்துள்ளது.

கோவா தன் புவிப்பரப்பில் 33% க்கும் மேற்பட்ட பகுதியில் அரசாங்க காடுகளைக் கொண்டுள்ளது(1224.38 கி.மீ²). இவற்றில் ஏறத்தாழ 62% பகுதிகள் வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களை உடைய பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்ட பகுதியாகும். இவை தவிர்த்த கணிசமான நிலப்பரப்பில் தனியாருக்கு சொந்தமான காடுகள் மற்றும் முந்திரி, மாம்பழம், தென்னை போன்ற மரங்கள் அடங்கிய பரந்த நிலப்பரப்பும் உள்ளது. மொத்த புவிப்பரப்பில் 56.6% பகுதியில் காடுகள் மற்றும் மரங்கள் அமைந்துள்ளது.

பொருளாதாரம்

மாநிலத்தின் மொத்த உற்பத்தித் திறன்(மில்லியன் பண மதிப்பில்) [13]
GSDP
1980 3,980
(1985) 6,550
1990 12,570
1995 33,190
2000. 76,980
மர்மகோவா துறைமுகம், வாஸ்கோவுக்கு இரும்பு தாதைக் கொண்டு செல்லும் இரயில்

2007 ஆம் ஆண்டில் கோவாவின் மொத்த உற்பத்தி திறன் மதிப்பு நடைமுறை விலையில் $3 பில்லியன்களாக மதிப்பிடப்பட்டது. மொத்த தனி நபர் தலா உற்பத்தி மிக அதிகமாக உடைய வளம் வாய்ந்த இந்திய மாநிலங்களில் கோவாவும் ஒன்றாகும் மற்றும் நாட்டின் மொத்த தனிநபர் தலா உற்பத்தியை விட இது இரண்டரை மடங்கு அதிக வளர்ச்சியாகும்.மேலும் இதன் அதிவேகமான வளர்ச்சிவீதத்தில் ஒன்று 8.23% ஆகும்(1990-2000 ஆண்டுகளுக்கான சராசரி).[14].

கோவாவின் முதல்நிலை தொழில் சுற்றுலா

சுற்றுலாவே கோவாவின் முதல்நிலை தொழிலாகும். இந்தியாவுக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளில் 12% பேரை தன்னகத்தே கொண்டுள்ளது.[15] கோவா இரண்டு விதமான சுற்றுலாவுக்கு உகந்த காலங்களைக் கொண்டுள்ளது: அவையாவன கோடை மற்றும் குளிர் காலங்களாகும்.குளிர் காலங்களில் அயல்நாட்டைச் சார்ந்த(குறிப்பாக ஐரோப்பா)சுற்றுலா பயணிகள் இதன் சிறப்புவாய்ந்த காலநிலையை அனுபவிக்க வருகின்றனர். கோடை காலங்களில்(கோவாவில் மழைக்காலம்) இந்தியாவைச் சார்ந்த சுற்றுலாவினர் தங்கள் விடுமுறையைக் கழிக்க வருகின்றனர். கோவாவின் கடற்கரை பகுதிகளை மையமாக வைத்தே சுற்றுலா நடைபெறுகிறது.இச்சமயம் உள்நாட்டு சுற்றுலாவினர் வருகை குறைவாக இருக்கும். 2004 இல் 2 மில்லியனனுக்கும் மேற்பட்ட சுற்றுலாவினர் கோவாவிற்கு வருகை புரிந்தனர். இவர்களில் 400,000 பேர் அயல்நாட்டினர் ஆவார்கள்.

கடற்கரை நீங்கிய பிற நிலப்பரப்பில் கிடைக்கும் வளம் வாய்ந்த கனிமங்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் சுரங்கங்கள் ஆகியன இரண்டாவது பெரிய தொழிலாகும். கோவாவின் சுரங்கங்கள் இரும்பு தாதுக்கள், பாக்சைட், மாங்கனிசு, களிமண், சுண்ணாம்புக்கல் மற்றும் சிலிக்கா ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன. மர்மகோவா துறைமுகம் கடந்த ஆண்டில் 31.69 மில்லியன் டன்கள் சரக்குகளை கையாண்டது. இதில் 39% இந்தியாவின் இரும்புதாதுக்கள் ஏற்றுமதி குறித்ததாகும். கோவாவின் இரும்பு தாது தொழிற்சாலையில் முதன்மையானவற்றுள் செசா கோவா(இப்பொழுது வேதாந்தாக்கு சொந்தமானது) மற்றும் டெம்போ ஆகியன அடங்கும். இங்குள்ள ஏராளமான சுரங்கங்களில் உள்ள வளமான இரும்பு தாது மற்றும் பிற கனிமங்கள் தற்பொழுது இங்குள்ள காடுகள் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் அபாயம் உள்ளது. சுரங்க நிறுவனங்களுள் சில உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக சுரங்கங்கள் அமைத்து தங்கள் விருப்பப்படி செயல்படுகின்றன.

கடந்த நாற்பது ஆண்டுகளாக பொருளாதாரத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது. இது பெரும்பகுதியான பொதுமக்களுக்கு பகுதி நேர பணியை அளிக்கிறது. அரிசி முக்கிய விவசாயப் பயிராக உள்ளது.இதைத் தொடர்ந்து பாக்கு,முந்திரி மற்றும் தேங்காய் போன்ற பிற விவசாயமும் நடைபெறுகிறது. மீன்பிடி தொழிலானது நாற்பதாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது. இதுகுறித்த சமீபத்திய அலுவலக விளக்கப்படமானது இயந்திரமயமாக்கப்பட்ட பெருவலைவீசும் கப்பல் மூலம் மீன்பிடித்தல் மற்றும் பாரம்பரிய வலைவீசி மீன்பிடித்தல் இரண்டும் ஒரே சமயம் நடைபெறுவதால் வலைகள் கிழிபடுதல் முதலிய காரணத்தால் இத்தொழிலின் முக்கியத்துவம் குறைந்து நலிவுற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது.

நடுத்தர தொழில்களாக பூச்சிக்கொல்லி, உரங்கள், டயர்கள், டியூப்கள், காலணிகள், இரசாயனங்கள், கோதுமை பொருள்கள், எஃகு உருட்டுதல், பழங்கள் மற்றும் மீன் பதப்படுத்தல்,முந்திரிகள்,துணி நெசவு,மது வடித்தல் ஆகிய தொழில்கள் அமைந்துள்ளன.

சுஹாரி தொழிற்சாலை(2005 இன் மொத்த வருமானம் ரூ.36,302 மில்லியன்)மற்றும் செசா கோவா(2005 இன் மொத்த வருமானம் ரூ.17,265 மில்லியன்)இந்த இரண்டு கோவாவின் கூட்டாண்மைக்குரிய அலுவலகங்களின் ஒருங்கிணைந்த நிறுவனம் S&P CNX 500 ஆகும். கோவா அரசாங்கம் சமீபத்தில் கோவாவில் வேறு புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்களை (SEZs) அனுமதிக்கக் கூடாதென முடிவெடுத்தது. இந்த கடுமையான கொள்கை இந்தியாவின் பிற மாநிலங்களின் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அரசுக்கு வருமான வரிகளை பெற்றுத் தந்தன மற்றும் பிற பகுதிகளைக் காட்டிலும் குறைவான வரிவீதம் உடையதால் இங்கு தோன்றிய மிகுதியான தொழிற்சாலைகள் உள்ளூர் மக்களுக்கான பணி வாய்ப்புகளை நல்கின. கோவாவில் தற்பொழுது 16 திட்டமிடப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. மாநில அரசின் இந்த முடிவானது சிறப்பு பொருளாதார மண்டலங்கள் குறித்து அரசியல் கட்சியனர் மற்றும் கோவா கத்தோலிக்க சர்ச்சினர் ஆகியோரின் கடும் எதிர்ப்புக்கு பிறகு எடுக்கப்பட்டது.[16]

கோவாவில் மதுபானம் மீது விதிக்கப்படும் குறைந்த சுங்கவரி காரணமாக குறைவான விலையில் கிடைக்கும் மதுபானத்திற்கும் சிறப்புடையதாக அறியப்படுகிறது. கோவாவின் அநேக மக்கள் அயல்நாடுகளில் பணியாற்றுவதால், அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு அனுப்பும் பணமும் மாநிலத்தின் உள்நாட்டு வருவாயை அதிகரிக்க வழிவகுக்கிறது.

போக்குவரத்து

பெரும்பான்மையான கோவா சாலைகளால் இணைக்கப் பெற்றுள்ளன.
தேசிய நெடுஞ்சாலை 17 கோவாவை கடக்குமிடம்.
பிரின்சியஸ் நதி கண்டோலிம் கடற்கரை

கோவாவின் ஒரே விமானநிலையம், இங்குள்ள தபோலிம் விமானநிலையம் ஆகும். இது இராணுவம் மற்றும் குடிமுறை சார்ந்தவர்களுக்கான விமானநிலையம் ஆகும்.இங்கிருந்து செல்லும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமானங்கள் இடைவழியில் நிறுத்தங்களைக் கொண்டு பிற இந்திய பகுதிகளுக்கு போய் சேருகிறது. இந்த விமான நிலையம் மிகுந்த அளவில் வரைமுறைபடுத்தப்பட்ட விமானங்களை கையாள்கிறது. கோவாவிற்கு துபாய்,ஷார்ஜா மற்றும் மத்திய கிழக்கு நாடான குவைத் மற்றும் ஐக்கிய பேரரசு,ஜெர்மனி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் பன்னாட்டு விமானங்களும் சுற்றுலா காலங்களில் ஒப்பந்த அடிப்படையிலான விமானங்களும் வருகின்றன. தபோலிம் விமான நிலையத்தில் ஏர் இந்தியா, இந்தியன் ஏர் லைன்ஸ், கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ், கோ ஏர், ஸ்பேஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ் போன்ற விமான போக்குவரத்துகளும், இவை தவிர்த்து ஐக்கிய பேரரசு, ரஷ்யா, ஜெர்மனியிலிருந்து இயக்கப்படும் தாமஸ்குக்,கண்டோர் மற்றும் மோனார்க் ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவனங்களும் தங்கள் சேவைகளை வழங்கி வருகின்றன.

கோவாவின் மக்கள் போக்குவரத்து, நகரங்களையும் கிராமப்புறங்களையும் இணைக்கும் தனியார் பேருந்துகளை மிகுதியான அளவில் கொண்டுள்ளது. அரசு இயக்கும் பேருந்துகள் கடம்பா போக்குவரத்து கழகத்தால் பராமரிக்கப்பட்டு இரு முக்கிய வழித்தடங்கள்(பனாஜிம்-மார்கோவா போன்றவை) மற்றும் மாநிலத்தின் பிற தொலைதூர வழித்தடங்களையும் இணைக்கின்றன. பெரிய நகரங்களான பனாஜிம் மற்றும் மார்கோவா நகரங்களில் உள்ளூர் பேருந்துகளும் இயங்குகின்றன. கோவாவின் மக்கள் கோக்குவரத்தானது குறைந்த அளவே வளர்ச்சியுற்றிருப்பதால், கோவா மக்கள் பெரும்பாலும் தங்களுக்கு சொந்தமான மோட்டார் இருச்சக்கர வாகனங்களையே சார்ந்துள்ளனர். கோவாவில் இரு தேசிய நெடுஞ்சாலைகள் கடந்து செல்கின்றன. NH-17 இந்தியாவின் மேற்கு கடற்கரைபகுதி மற்றும் கோவாவையும், வடக்கில் மும்பை மற்றும் தெற்கில் மங்களூரையும் இணைக்கிறது. NH-4A மாநிலத்தின் குறுக்குவாட்டில் சென்று தலைநகர் பனாஜிமிலிருந்து கிழக்கில் உள்ள பெல்காமையும், கோவாவிலிருந்து தக்காணத்தின் பிற நகரங்களையும் இணைக்கிறது. NH-17A ஆனது NH-17 உடன் சேர்ந்து கோர்டலிமை மர்மகோவா துறைமுகத்துடன் இணைக்கிறது மேலும் புதிய் NH-17B என்கிற நான்குவழி தேசிய நெடுஞ்சாலையானது மர்மகோவா துறைமுகத்தை NH-17 இன் மற்றொரு இடத்தில் இணைத்து வெர்னா வழியாக தபோலிம் விமானநிலையத்துடன் இணைகிறது. கோவா மொத்தத்தில்224 km (139 mi) தேசிய நெடுஞ்சாலைகளையும்,232 km (144 mi) மாநில நெடுஞ்சாலைகளையும் மற்றும் 815 கி.மீ மாவட்ட நெடுஞ்சாலைகளையும் கொண்டுள்ளது.

வாடகைக்கு பயணிக்கும் போக்குவரத்தில் மீட்டர் இல்லாத கார்கள் மற்றும் நகர்புறங்களில் இயக்கப்படும் ஆட்டோரிக்‌ஷாக்களும் அடங்கும். கோவா போக்குவரத்தில் தனித்துவம் வாய்ந்தது வட்டார வழக்கில் பைலட்ஸ் என அழைக்கப்படுபவர்களால் இயக்கப்படும் மோட்டார் சைக்கிள் கார் ஆகும். இந்த வாகனங்களில் ஒரு பின்னிருக்கை பயணி மட்டுமே பயணிக்கலாம், செல்லும் இடத்திற்கேற்ப பொதுவாக பேரம் பேசி விலை நிர்ணயிக்கலாம். கோவாவில் ஆற்றைக் கடப்பதற்கு ஆற்று போக்குவரத்துறையால் இயக்கப்படும் தட்டையான அடிப்பாகமுடைய பயணப் படகுகள் உள்ளன. கோவாவின் இரண்டு இரயில் வழித்தடங்களில் ஒன்று தென்மேற்கு இரயில்வேயினாலும் மற்றொன்று கொங்கன் இரயில்வேயினாலும் இயக்கப்படுகிறது. காலனிய காலத்தோடு தொடர்புடைய துறைமுக நகரமான வாஸ்கோட காமாவில் அமைக்கப்பட்ட தென்மேற்கு இரயில்வே வழித்தடமானது கோவாவுடன் ஹூப்ளி,கர்நாடகாவை, மார்கோவா வழியாக இணைக்கிறது. 1990 இல் உருவாக்கப்பட்ட கொங்கன் இரயில்வேயின் வழித்தடம் கடற்கரைக்கு இணையாகச் சென்று மேற்கு கடற்கரை பகுதியிலுள்ள முக்கிய நகரங்களை இணைக்கிறது.

வாஸ்கோ நகரத்துக்கு அருகிலுள்ள மர்மகோவா துறைமுகம் கனிம தாதுக்கள்,பெட்ரோலியம்,நிலக்கரி மற்றும் பன்னாட்டு சரக்குகளை கையாள்கிறது. பெரும்பாலான கப்பல்கள் கோவாவின் கடற்கரைப் பகுதிகளிலிருந்து கிடைக்கும் கனிமங்கள் மற்றும் தாதுக்கள் அடங்கிய சரக்குகளை கொண்டுள்ளன. மண்டோவி நதிக்கரையில் அமைந்துள்ள பனாஜிம் என்ற சிறிய துறைமுகம்,1980 இலிருந்து கோவா மற்றும் மும்பைக்கு இடையே பயணிகளுக்கான நீராவிப் படகுகளை இயக்கி வருகிறது. மேலும் 1990 இலிருந்து டமானியா ஷிப்பிங் என்ற நிறுவனம் மும்பை மற்றும் பனாஜியை இணைக்கும் குறுகிய கால கட்டுமரச்சேவையை வழங்கி வருகிறது.

மக்கள் வாழ்க்கை கணக்கியல்

கோவாவின் பூர்வீக மக்கள் ஆங்கிலத்தில் கோயன் எனவும்,கொங்கணியில் கோயங்கர் எனவும்,போர்த்துகீசிய மொழியில் கோயஸ் (ஆண்கள்) அல்லது கோயிசா (பெண்கள்) எனவும் மற்றும் மராத்தியில் கோவேக்கர் எனவும் அழைக்கப்படுகின்றனர். கோவா 1.3444 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டு இந்தியாவின் நான்காவது மிகக்குறைந்த(சிக்கிம்,மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை அடுத்து) மக்கள் தொகையைக் கொண்ட மாநிலமாகத் திகழ்கின்றது. ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் இதன் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் 14.9% ஆகும்.[20] ஒவ்வொரு சதுர கிலோமீட்டர் நிலப்பகுதிக்கும் 363 பேரைக் கொண்டுள்ளது.[18] நகர்புறங்களில் வாழும் 49.76% மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு ,அதிக விழுக்காடு உடைய நகர்புற மக்கள் தொகை கொண்ட மாநிலமாக கோவா உள்ளது.[21] கோவா 82% க்கும் மேற்பட்ட கல்விகற்றோரைக் கொண்டுள்ளது.[22] 1000 ஆண்களுக்கு 960 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் கொண்டுள்ளது. 2007 இல் பிறப்பு விகிதம் 1000 நபர்களுக்கு 15.70 சதவிகிதம் ஆகும்.[23] இந்தியாவில் மிகக்குறைந்த பழங்குடியின மக்களை கொண்ட மாநிலமாகவும் கோவா உள்ளது.[24]

சமயம்

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 963,877 (66.08 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 121,564 (8.33 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 366,130 (25.10 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 1,109 (0.08 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 1,095 (0.08 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,473 ஆகவும் (0.10 %) பிற சமயத்து மக்கள் தொகை 258 (0.02 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 3,039 (0.21 %) ஆகவும் உள்ளது.[19]

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கோவா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 1,458,545 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 37.83% மக்களும், நகரப்புறங்களில் 62.17% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 8.23% ஆக உயர்ந்துள்ளது. மொத்த மக்கள் தொகையில் 739,140 ஆண்களும் மற்றும் 719,405 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 973 வீதம் உள்ளனர். 3,702 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 394 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 88.70 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 92.65 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 84.66 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 144,611 ஆக உள்ளது. [19]

கிழக்கிந்தியர்கள்: கத்தோலிக்க கம்யூனிட்டி ஆஃப் பாம்பே சால்சேட் அண்ட் பேசீன் என்ற புத்தகத்தை எழுதிய எல்ஸீ வில்ஹெல்மினா பப்டிஸ்டா என்பவரின் கூற்றுப்படி கொங்கனில் கிறித்துவமதம் நம்பும் இயேசுவின் 12 திருத்தூதர்களில் ஒருவராகிய புனித பர்த்தலமேயு என்பவர் கிறித்துவ மத மார்க்கத்தை உபதேசித்து கொங்கனியர்கள் சிலரை கிறித்துவர்களாக மாற்றினார்.[25] ஆனால் 16 ஆம் நூற்றாண்டிற்கு முன் கோவாவில் பூர்வீக கிறித்துவர்கள் இருந்ததாற்கான எந்த உறுதியான ஆதாரமும் இல்லை. போர்ச்சுகீசியகடற்பயணியாகிய அஃபோன்சா டி அல்புகியர்கியூ 1510 பிப்ரவரி 15 இல் பான்கோவாவைக் கண்டுபிடித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வந்தார். அவர் வருகைக்கு பின் ரோமன் கத்தோலிக்க கிறித்துவ மதம் கோவாவில் பரவத்தொடங்கியது.[26] 1560 இல் நடந்த கோவாவின் நீதி விசாரணையில், பெரும்பாலான கொங்கணி பேசும் பூர்வீக மக்கள் கோயன் கத்தோலிக்கர்கள் என பரவலாக அழைக்கப்படும் ரோமன் கத்தோலிக்கர்களாக மதம் மாறி கோவாவின் கிறித்துவ மதத்தினரின் எண்ணிக்கையை உயர்த்தினர் என்பது உறுதிபடுத்தப்பட்டது.

மொழிகள்

1987 இன் கோவா,டாமன் மற்றும் டையூ ஆட்சி மொழி சட்டமானது தேவநாகரி எழுத்துமுறையில் அமைந்த கொங்கனி மொழியே கோவாவின் ஒரே ஆட்சி மொழி என்றது, மேலும் மராத்திமொழியையும் "அனைத்து அல்லது ஏதேனும் அலுவல் காரியங்களுக்கு" பயன்படுத்தலாம் என்பதையும் குறிப்பிட்டுள்ளது. அரசாங்கமும் மராத்தியில் வரும் தகவல் பரிமாற்றங்களுக்கு மராத்தியில் பதில் அளிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளது.[27] ரோமன் எழுத்துமுறையில் மாநில தேவைகள் சார்ந்து கொங்கனி மற்றும் மராத்திக்கு சமமான மதிப்பு இருந்த போதிலும்,As of அக்டோபர் 2008 கொங்கனியே ஒரே ஆட்சி மொழியாக நீடிக்கிறது.[28][29]

மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் மொழிகள் கொங்கணி, மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகும்.[30] கொங்கனி முதன்மையாகப் பேசப்படும் மொழியாகவும், மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவை இலக்கியம்,கல்வி மற்றும் அலுவலகம் சார்ந்த மொழியாகவும் பயன்படுத்தப்படுகின்றன. பரவலாக பயன்படுத்தப்படும் பிற மொழிகளில் இந்தி மற்றும் போர்த்துக்கீசியமும் அடங்கும். போர்த்துகீசிய மொழி காலனி காலத்திய உயர்ந்தோர் மொழியாக இருந்தது, குறைந்த எண்ணிக்கையிலான பேச்சாளர்களே இதனை பயன்படுத்தினர். இதனை பேசுபவர்கள் குறைவாக இருப்பினும் மக்கள் தற்பொழுதும் இதனை வீட்டில் பேச விரும்புகின்றனர். சமீப ஆண்டுகளில் சில போர்ச்சுகீசிய புத்தகங்களும் பதிப்பிக்கப் பெறுகின்றன.

சுற்றுலா

கோவாவின் சுற்றுலா பொதுவாக கடற்கரை பகுதிகளை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இங்கு உள்நாட்டு சுற்றுலா செயல்பாடுகள் குறைந்து காணப்படுகிறது. 2004 இல் 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர். அவர்களில் 400,000 பேர் அயல்நாட்டினர். உருசியாவில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர் [31]. உருசியாவையடுத்து பிரிட்டனில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர்.[32]

கோவாவின் கடற்கரைகளை வட கோவா மற்றும் தென் கோவா என பிரிக்கலாம். வட கோவாவின் முக்கிய கடற்கறைகள் : கலங்குட் கடற்கரை, கண்டோலிம் கடற்கரை, பாகா கடற்கரை ஆகும்.தெற்கு கோவாவில் அமைந்துள்ள கோல்வா கடற்கரையானது வெண்மணல் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது.

கோவாவின் கடற்கரைப்பகுதிகளில் அதிகமாக தரிசு நிலங்கள் காணப்படுகின்றன. இவற்றை கஜான் என்று அழைக்கிறார்கள். இவற்றில் சாகுபடி செய்வதின்மூலம் வெளிநாட்டினரின் வருகையை பெருக்கும் நடவடிக்கையில் அரசு முன்வந்துள்ளது. [33]

மக்களும் கலாச்சாரமும்

காவ்லெமில் உள்ள சாந்தா துர்க்கா கோவில்

கோவா பற்றிய காட்சி அரங்கமானது, மத நல்லிணக்கத்தை மையப்படுத்தி தீபஸ்தம்பம்,சிலுவை,பொய்கால் குதிரைகளை தொடர்ந்து வரும் ரதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறுபட்ட மதங்கள் மற்றும் கலாச்சாரங்களின் ஒருங்கிணைவாக அரசர்களின் மேற்கத்திய பாரம்பரிய உடைகளோடு உள்ளூர் நடனங்கள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தப்படுகின்றன. சிக்மோ மெல் என்னும் இசை மற்றும் நடனம் சார்ந்த விழா வேற்றுமையில் ஒற்றுமை என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.[34] சிக்மோவைத் தவிர கொங்குனியில் சாவோத் எனப்படும் கணேஷ் சதுர்த்தி , தீபாவளி ,கிறிஸ்துமஸ் ,ஈஸ்டர்,சம்ஸார் பட்வோ மற்றும் சாம்பல் புதன் களியாட்டம் போன்ற விழாக்களும் கோவா மக்களால் கொண்டாடப்படுகின்றன. கோவா புத்தாண்டு கொண்டாட்டங்களிலும் சிறந்து விளங்குகிறது. கோவாவின் சாம்பல் புதன் களியாட்டங்கள் பெருமளவு சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

நடனம் மற்றும் இசை

மண்டோ மற்றும் டல்பாட் ஆகியவை கோவாவின் பாரம்பரிய இசை வடிவங்கள் ஆகும். கோவாவில் உள்ள இந்துக்கள் நாடகங்கள்,பஜனைகள் மற்றும் கீர்த்தனைகளில் மிகுந்த விருப்பமுடையவர்கள். லதா மங்கேஷ்கர்,ஆஷா போஸ்லே,கிஷோரி அமோன்கர்,கேசர்பாய் கேர்கர்,ஜிதேந்திரா அபிஷேகி, பண்டிட் பிரபாகர் கேர்கர் போன்ற பல புகழ்பெற்ற இந்திய பாரம்பரிய இசைப் பாடகர்கள் கோவாவிலிருந்து தோன்றியுள்ளனர். டேக்னி,பக்டி மற்றும் கொரிடின்கோ ஆகியவை கோவாவின் சில பாரம்பரிய நடனங்கள் ஆகும். இவையே கோவா டிரான்ஸின் பிறப்பிடமாகவும் இருக்கிறது.

திரையரங்கு

நாடகம், திரையரங்கம் மற்றும் சோகர் ஆகியவை கோவாவின் முதன்மையான பாரம்பரிய நிகழ்த்துக்கலை வடிவங்கள் ஆகும். ரன்மலே,தசாவதாரி,கலோ,கொலன்கலா,லலித்,கலா மற்றும் ரத்கலா ஆகியவை பிற கலை வடிவங்களாகும். இராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகள் சமூக நிலைக்கேற்ப நவீனமயமாக்கப்பட்டு பாடல் மற்றும் நடனத்துடன் காட்டப்படுகிறது.[35][36] மேளக்கலைஞர்கள் மற்றும் கீபோர்டு கலைஞர்கள் மற்றும் கிதார் கலைஞர்கள் காட்சியின் பகுதியாக இருந்து பின்ணனி இசையை வழங்குகின்றனர்.

உணவு

அரிசிச் சோற்றுடன் கூடிய மீன் குழம்பு வகைகளே(கொங்கணியில் சிட் கோடி ) கோவா மக்களின் முக்கிய உணவாகும். கோவாவின் சமையற்கலை புகழடைந்திருப்பதற்கு காரணம் பல்வேறுபட்ட உயர்ந்த மீன் வகை உணவுகள் நேர்த்தியான முறையில் சமைக்கப்படுவதே ஆகும். கோவா மக்கள் தங்கள் சமையலில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை பரவலாக பயன்படுத்துவதோடு மிளகாய் மிளகுத்தூள்,மசாலாக்கள் மற்றும் வினிகர் ஆகியவற்றையும் சேர்த்து சமைப்பதால் உணவு தனித்தன்மை வாய்ந்த நறுமணம் பெற்றதாக உள்ளது. பன்றி இறைச்சி உணவு வகைகளான விண்டலோ,சக்யூடி மற்றும் சார்பொடெல் ஆகியவை கோவா கத்தோலிக்கர்களின் பெரிய விழாக்களில் சமைக்கப்படும். கோவாவிற்கு அயல்நாட்டிலிருந்து வரப்பெற்ற காத்கட்டே என அறியப்படும் காய்கறி ஸ்டீவ் ஆகும். இதுவே இந்து மற்றும் கிறித்துவர்களின் விரும்பத்தக்க விழாக் கொண்டாட்டங்களில் சமைக்கப்படும் மிகப்பிரபலமான உணவாகும். காத்கட்டேயில் குறைந்தது ஐந்து காய்கறிகளாவது அடங்கியிருக்கும். சுத்தமான தேங்காய் மற்றும் கோவாவின் சிறப்பான மசாலாக்கள் நறுமணத்திற்காக சேர்க்கப்படும். சன்னாஸ் என்னும் வித்தியாசமான இட்லியும் மற்றும் கோய்லோரி என்னும் வித்தியாசமான தோசையும் கோவாவில் தோன்றியவையாகும். தரமான முட்டையை பல அடுக்குகளாக அடிப்பாகத்தில் கொண்டு செய்யப்படும் பிபின்கா என்னும் இனிப்பு வகை கிறிஸ்துமஸ் காலத்தில் சிறப்புடையதாகும். கோவாவின் மிகப் பிரபலமான மது பானம் ஃபென்னி ஆகும்.முந்திரி ஃபென்னி முந்திரி மரத்தின் பழங்களை புளிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது, அது போல தேங்காய் ஃபென்னி தென்னைமரச் சாறின் கள்ளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

கட்டிடக் கலை

கோவா-போர்ச்சுகீசிய கத்தோலிக்க தோட்ட மாளிகை
போன்டைன்ஹஸ் பானஜியிலுள்ள புராதான கட்டிடக்கலைக்காக பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். வீடுகளில் வாழும் மக்கள் வீட்டினுள் மட்டுமே புதுப்பிக்க இயலும் வீட்டின் வெளிப்புறம் எப்பொழுதும் போல் இருக்க வேண்டும்.

கோவாவின் கட்டிடக்கலையானது இந்திய,முகலாய மற்றும் போர்ச்சுகீசிய முறைகளின் ஒருங்கிணைந்த கலையாகும். நான்கு நூற்றாண்டுகள் ஆட்சி செலுத்திய போர்ச்சுகீசியர்களுக்கு பிறகு,பெரும்பான்மையான தேவாலயங்கள் மற்றும் வீடுகளில் இருந்த போர்ச்சுகீசிய கட்டிடக்கலை முறை நீக்கப்பட்டன. முகலாயர்களும் கோவாவை ஆட்சி செலுத்தியதன் காரணமாக, முகலாயக் கட்டிடக்கலை முறையில் கட்டப்பட்ட மாடங்கள் நிறைந்த நினைவுச்சின்னங்கள் கோவாவில் காணப்படுகின்றன. கோவாவின் கட்டிடக்கலை முறையானது மிகவும் எளிமையான மற்றும் மேம்போக்கான கட்டிடங்களைக் கொண்டு நவீனமயமாகக் காட்சியளிக்கிறது.

18 ஆம் நூற்றாண்டில் இறுதியில் கோவாவின் கட்டிட முறைகளில் மாற்றம் ஏற்பட்டது. போர்ச்சுகீசிய கட்டிடக்கலையின் விளைவாக, அதிக வீரியமுள்ள வண்ணங்கள் மற்றும் கூரை ஓடுகள் ஆகியவற்றினை பயன்படுத்துவது மிகுதியானது. நீலம் மற்றும் சிவப்பு ஆகியவை விரும்பத்தக்க வண்ணங்களாக மாறின, பெரும்பாலான வீடுகளில் அடர் நீல நிற வண்ணங்கள் பூசப்பெற்றன அதன் கூரைகள் சிவப்பு நிற ஓடுகளால் மூடப்பட்டிருந்தது. பொதுவாக வீடுகள் பெரியதாகவும் மற்றும் காற்றோட்டத்திற்காக சன்னல்கள் அமைக்கப்பெற்று விசாலமான அறைகளைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் கடவுளின் படங்கள் மற்றும் சிலைகளை வைப்பதற்கென தனி அறை அல்லது இடத்தை கொண்டுள்ளன.[37]

கோவாவின் இந்த உயர்ந்த புகழானது போர்ச்சிகீசியத்துக்கு இணையானத் தன்மையைப் பெற்றுள்ளது. ஆனால் இதன் கம்பீரம் போர்ச்சிகீசியத்திடமிருந்து கைவரப்பெற்றதாகும். இந்திய மன்னர்குலத்தை சார்ந்த அநேகத் தளபதிகள்,மன்னர்கள் ஆகியோர் தங்கள் அரசகுல ஆடம்பரத்தைக் காட்ட மின்னுகின்ற சிறிய அணிகலன்களை உருவாக்கினர். கோவாவை பாட்புரர்கள்,பஹீஜாஸ்கள், அசோகர், மௌரியர்கள் மற்றும் சாதவாகனர்கள் ஆகியோர் ஆட்சி புரிந்தனர். கி.பி 1000 ஐ சார்ந்த கல்வெட்டானது (கோவாவில் கடம்ப வம்சத்தை சார்ந்த சாஷ்டதேவா சிம்மாசனத்தில் இருந்த பொழுது)அக்கால தலைநகர் கோவாவை பற்றி விவரிப்பதாவது: ’எல்லா பக்கங்களிலும் தோட்டங்கள், வெள்ளை மிலாறுகளாலான வீடுகள்,குறுகிய சந்துகள், குதிரை லாயங்கள், பூந்தோட்டங்கள், சந்தைகள், தேவதாசிகளின் காலனிகள் மற்றும் குளங்கள் ஆகியன இருந்தன. அவரது மகனது காலத்தில் கோவா பதினான்கு அயல் நாடுகளில் வர்த்தகம் செய்யும் உரிமையைக் கொண்ட சக்தியுடைய நாடக விளங்கியது. இதன் விளைவாக பெற்ற ஆக்கிரமிப்பு நிலங்களுடன் கூடிய மிகவும் விரும்பப் பெறும் இந்திய துறைமுக நகரமாக கோவா விளங்கியது. இத்தகைய புகழ் பரவுவதற்கு,அதன் சட்டதிட்டமும் ஒரு காரணமாய் அமைந்தது. இங்கிருந்து நட்புசார்ந்த நாடுகளின் துறைமுகங்களுக்கு பொங்குகின்ற நீலக்கடலலைகள் வழியாக உலகம் முழுவதும் நடந்த வணிகம், காலனிய ஆதிக்கம் ஏற்படவும் மற்றும் பிற நாடுகளை வெற்றி கொள்ளவும் வழியமைத்தது.

1497 ஜீலை 4 இல் லிஸ்பனில் உள்ள தாகூஸ் நதியிலிருந்து சோ கேபிரியல் என்ற கொடிமர கப்பலுடன் வாஸ்கோடகாமா புறப்பட்ட பொழுது, இந்த பயணத்தின் விளைவுகளை யாரும் கறபனை கூட செய்திருக்க முடியாது. அந்த சமயத்தில் கிழக்கில் உள்ள சுதேசிகள் மேற்கில் பொருளாதார நெருக்கடிக்குள்ளான அரசர்களைக் காட்டிலும் செல்வந்தர்களாக விளங்கினார்கள். கோவாவின் கடற்கரை நகரமான வாஸ்கோ(கோவாவின் பெரிய நகரம்), வாஸ்கோடகாமா பெயரில் இருந்த போதிலும் அவர் ஒருபோதும் கோவாவிற்கு வந்ததில்லை. நகரத்தின் இப்பெயர் போர்ச்சுக்கல் நினைவாக வைக்கப்பட்டது. போர்ச்சிகீசிய பேரரசு இந்தியாவில் முதலில் அழியவும் பிறகு வேரூன்றி வளரவும் காரணமாக அமைந்தவர் அஃபோன்சா டி அல்புகியர்கியூ ஆவார். கோவா தன்முகத்தை மாற்றும் என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். தற்பொழுது புதிதாக ஆட்சிக்கட்டிலில் ஏறியிருப்பவர்கள் பழையவற்றை மறுவடிவமைத்தும், புதியவற்றை உருவாக்கியும் எதிர்கால மாறுதலுக்கேற்ப கோவா மக்களை மாற்றும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

போர்ச்சுகீசியர்கள் கோவாவை மேற்குபகுதியில் அமைந்த கம்பீரமான வலிமையுடைய நாடாக மாற்றி புகழின் உச்சத்தில் வைக்க முனைந்தனர். அவர்களது இந்த எண்ணம் உயர்ந்ததாகவும் வானுயர்ந்த குறிக்கோளாகவும் இருந்தது, ஆனால் இது குறுகிய காலம் மட்டுமே ஒளிவீசும் எரி நட்சத்திரம் போல் ஆனது. ’போர்ச்சுக்கல் வீரயுக மக்களைக் கொண்ட மிகச்சிறிய தேசம்’ என வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கோவாவின் சிறப்பைப் பொறுத்து அது உலகஅதியங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. அதே நேரத்தில் லண்டன் மற்றும் லிஸ்பானை விட சிறப்புடைய அதிசயமாக இது விளங்குகிறது. 300,000 மக்கள் இங்கு வீடுகளை அமைத்துள்ளனர். டச்சுக்காரராகிய லின்சோடென் எழுதிய ’மீட்டிங் அபான் தி பர்ஸ் இன் அண்ட்வெர்பி’ என்ற நூல் கோவாவை ’ஆசியாவின் ரோம்’ மற்றும் கிழக்கு நாடுகளின் பவளம் என்ற அடை மொழிகளால் வர்ணிக்கிறது. `கோவா டோரடா’ அல்லது `தங்க கோவா’கடற்கரை என்ற வாசகங்கள் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக சொல்லப்பட்டாலும், இங்குள்ள தேவாலயங்களில் மிகவும் நுணுக்கமான முறையில் தங்க முலாம் பூசப்பெற்ற பலிபீடம் மற்றும் அதன் பின்பக்க திரை ஆகியவை போர்ச்சுகீசியர் ஆப்பிரிக்காவில் கண்டுபிடித்த சுத்தமான தங்கத் தகடுகளால் அமைந்துள்ளது.

இது குறித்து சமகாலத்தவரால் வரும் விமர்சனங்கள் பெரிதுபடுத்தப்படுவதில்லை. `கியூம் வியு கோவா எஸ்கியுசா டி வெர் லிசோபா’' என்ற வாக்கியம் `கோவாவைக் கண்டவர்கள் லிஸ்பனைக் காண வேண்டியதில்லை’ என்பதை குறிக்கிறது. 1606 இல் கோவாவின் கிழக்கில், சண்டா மோனிகா என்ற முதல் கன்னியாஸ்திரி மடம் உருவாக்கப்பெற்றது. இங்குள்ள பாம் ஜீசஸ் மண்டபம் கிறித்துவர்கள் விரும்பக்கூடியதாகவும் பிற மதத்தினர்க்கு விரும்பத்தகாததாகவும் இருந்தது. நகரத்தை சுற்றிலும் பரவலாக பெருமை வாய்ந்த இத்தாலிய கட்டிடக்கலையினை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட தேவாலயங்கள் உள்ளன. வருடந்தோறும் மழைக்காலம் முடிந்த பிறகு இங்குள்ள மாளிகைகளில் வண்ணம் பூசவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. கட்டடக்கலையை வரைமுறை படுத்தும் விதத்தில் கட்டடங்களின் வெளிமூலை மற்றும் சுவர்களில் வெள்ளை வண்ணமும்,சன்னல் விளிம்புகள் மற்றும் மாடி கைப்பிடிசுவர் தாங்கும் சிறுதூண்கள் ஆகியவற்றை சுவர் பரப்பிலிருந்து வேறுபடுத்தி காட்ட மஞ்சள் காவி,இந்திய சிகப்பு அல்லது இளம்பச்சை போன்ற வண்ணமும் பூசப்பட வேண்டும் என்ற விதிகள் வகுக்கப்பட்டன.கட்டடங்களை தவிர்த்து தேவாலயங்கள் முழுமையாக வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டது. 1839 இல் கேப்டன் மரியத் என்பவர் தான் எழுதிய தி பாண்டம் ஷிப் என்ற நாவலில் கோவாவை பின்வருமாறு குறிப்பிடுகிறார்: அரண்மனையை சுற்றியுள்ள சதுக்கங்கள் மற்றும் அகலமான தெருக்களில் பகட்டான சேணைகளுடைய யானைகள்,மூடப்பெற்ற அல்லது சட்டமிடப்பட்ட சிறப்பான கொட்டகைகளில் உள்ள குதிரைகள் போன்ற பல்வேறு உயிரினங்கள் இருந்தன: உள்ளூர்வாசிகள் தூக்கும் பல்லக்குகளில் நிறைய பேர் சவாரி செய்தனர்;ஒடிக்கொண்டிருக்கும் பாதசாரிகள்;குசினிக்காரர்கள்;பெருமை மிகு போர்ச்சுகீசியர்கள் முதல் அரையாடை அணிந்த உள்ளூர்வாசி வரை தேசத்தின் பல்வேறு மனிதர்களும் இருந்தனர்;முஸ்லிம்கள்,அரபியர்கள், இந்துக்கள், ஆர்மேனியர்கள்;அதிகாரிகள்,சீருடையணிந்த படைவீரர்கள் ஆகியோர் கூட்டம் மற்றும் குழுக்களில் ஒரேநேரத்தில் காணப்பட்டனர்.அனைவரும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தனர். இதுவே செல்வ வளம், பகட்டு மற்றும் பெருமை மிகு ஆடம்பரம் கொண்ட, கிழக்கின் மகாராணி எனப்படும் கோவா நகரின் சிறப்பாகும். என வர்ணிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

இந்தியாவின் மேற்கு கடற்கரையிலுள்ள கோவாவின் கல்ஃப் வகுப்பு.

கால்பந்தாட்டம் கோவாவின் மிகப்புகழ்பெற்ற மற்றும் கோவா கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்குகின்ற விளையாட்டாகும்.[38] கோவா மாநிலத்தில் இவ்விளையாட்டானது 1883 இல் கோவாவிற்கு வருகைபுரிந்த ஐரோப்பிய மதகுருவான, பாதர். வில்லியம் ராபர்ட் லைன்ஸ் என்பவரால் கிறித்துவ கல்வியின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டது. 1959 டிசம்பர் 22 இல் அசோசியாகோ டி ஃபுட்பால் டி கோவா என்று உருவாக்கப்பட்ட அமைப்பானது பிறகு கோவா கால்பந்தாட்ட சங்கம் என்ற புதிய பெயரில் மாநில நிர்வாகிகளால் நடத்தப்பட்டு தொடர்ந்து செயல்படுகிறது.[38] கோவா,மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவுடன் இணைந்துள்ளது.[38] இது நாட்டின் கால்பந்தாட்ட மையத்தளமாகவும் மற்றும் இந்தியாவின் பல்வேறு கால்பந்தாட்ட குழுக்கள் சங்கங்களின் தாயகமாகவும் விளங்குகிறது. மாநிலத்தின் கால்பந்தாட்ட ஆற்றல் மையங்களாக சல்கோகர்,டெம்போ,சர்ச்சில் சகோதரர்கள்,வாஸ்கோ விளையாட்டு குழு மற்றும் ஸ்போர்ட்ஸ் கிளப் டி கோவா ஆகிய குழுக்கள் உள்ளன. மாநிலத்தின் முக்கியமான கால்பந்தாட்ட மைதானம்,ஃபெட்ரோடா(அல்லது நேரு மைதானம்) மாகோவாவில் அமைந்துள்ளது. இங்கு கிரிக்கெட்டும் நடைபெறுகிறது.[39]

இந்திய கால்பந்தாட்ட குழுவில் கோவாவிலிருந்து பலர் பங்கேற்றாலும், அவர்களில் பிரம்மானந் சன்க்வால்கர்,புருனோ கோடின்ஹோ,மௌரிசியோ அஃபன்சோ மற்றும் ராபர்டோ ஃபெர்னாண்டஸ் ஆகிய நான்கு பேர் மட்டும் தேசிய குழுவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை அணித்தலைவர்களாக இருந்துள்ளனர்.

கடந்த பத்தாண்டு காலத்தில்,கிரிக்கெட் விளையாட்டே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால்,தேசியத் தொலைக்காட்சியின் பெரும்பானமை நேரங்களை இந்த விளையாட்டே ஆக்கிரமித்து கொள்வதை கண்கூடாகக் காணலாம். பிரிட்டிஷ் பேரரரசுடன் தொடர்புடைய தெற்கு ஆசியப் பகுதிகளிலும் இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கோவா தற்பொழுது தனக்கென ஒரு கிரிக்கெட் அணியைக் கொண்டுள்ளது. 2008 இல் நடந்த இந்திய பிரிமீயர் லீக் துவக்கநிகழ்வு ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்வப்னில் அஸ்னோத்கர் சிறப்பாக விளையாடி அணிவெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.மேலும் தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐ.பி.எல் 2009 கிரிக்கெட் விளையாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸில் வாஸ்கோவைச் சார்ந்த ஷாதப் ஜக்தி விளையாடி அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தினார். ஆனால்,இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் திலிப் சர்தேசாய் மட்டுமே இன்றுவரை விளையாடி வருகிறார்.[40]

அரசு மற்றும் அரசியல்

இந்திய பாராளுமன்றத்தில் கோவா இரண்டு இடங்களைக் கொண்டுள்ளது. மாவட்டங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட மக்களவையில் ஓரிடமும்,மாநிலங்களவையில் ஓரிடமும் பெற்றுள்ளது. கோவாவின் தலைநகரம் பனாஜி ஆகும். இது பனாஜிம் என ஆங்கிலத்திலும் பான்கிம் என போர்ச்சுகீசிய காலத்திலும் வட்டார மொழியில் பொன்ஜி என்றும் அழைக்கப்படுகிறது. கோவாவின் நிர்வாக தலைநகர் பனாஜி மண்டோவி நதியின் இடதுகரையோரம் அமைந்துள்ளது. கோவாவின் சட்டமன்ற கட்டிடம் பொர்வோரிமில் அமைந்துள்ளது. கோவா சட்டசபையின் இருப்பிடம் மண்டோவி நதியின் குறுக்காக உள்ளது. கோவா மாநிலத்தின் நீதித்துறை நடவடிக்கைகள் மும்பையைச்(கோவாவின் அருகமைந்த மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரமாகவும் முன்பு பம்பாய் என அழைக்கப்பட்டதும் ஆகும்) சார்ந்ததாகும். கோவா மாநிலத்தின் நீதித்துறை பம்பாய் உயர்நீதி மன்றத்தின் கீழ் வருகிறது. இதன் உயர்நீதிமன்ற கிளையானது பனாஜியில் அமைந்துள்ளது. மற்ற மாநிலங்களைப் போலில்லாமல் கோவா மாநிலமானது,பிரிட்டிஷ் இந்திய சட்டத்தை மாதிரியாகக் கொண்டு தனிநபர் சமயம் சார்ந்த குடியுரிமை சட்டங்களை பின்பற்றி வருகிறது,நெப்போலியனியக் குறியீடுகளை அடிப்படையாகக் கொண்ட போர்ச்சுக்கீசிய சீரான குடியுரிமை குறியீடுகளை கோவா அரசு தொடர்கிறது. கோவா முக்கிய நிர்வாக அதிகாரங்களைக் கொண்ட முதலமைச்சரின் தலைமையில், நாற்பது சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரே அமைப்பு முறையிலான சட்ட சபையை பெற்றுள்ளது. தற்போது கோவாவின் முதலமைச்சராக திரு.திகம்பர் காமத் அவர்களும்,எதிர்கட்சித் தலைவராக திரு.மனோகர் பாரிக்கர்அவர்களும் உள்ளனர். இங்குள்ள ஆளுங்கட்சியானது தங்கள் கட்சி அல்லது கூட்டணிகளோடு ஒருங்கிணைந்து மாநிலத் தேர்தலில் பெற்ற பெரும்பான்மையான இடங்களில் உள்ள தங்கள் ஆதரவாளர்கள் துணையுடன்,சபையில் எளிமையாக பெரும்பான்மையை பெற்று ஆட்சி செய்து வருகிறது. இதன் ஆளுநர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இங்கு ஆளுநரின் பங்களிப்பு பெரும்பான்மையாக சம்பிரதாயமானதாக உள்ளது,ஆனால் அடுத்த ஆட்சியை யார் நிர்வகிப்பது என்று முடிவெடுக்கும் சூழலிலும் அல்லது சமீபத்தில் நடந்தது போன்று சட்டசபையை கலைக்கும் பொழுதும் முக்கிய பங்காற்ற கூடியவராகவும் இருக்கிறார். 1990 வரையிலான முப்பதாண்டு காலம் நிலையான ஆட்சியாளர்களை சந்தித்த பிறகு, கோவா அதன் அரசியல் நிலையின்மை காரணமாகவும் பெயர்பெற்றதாக விளங்குகிறது.1990 மற்றும் 2005 க்கான பதினைந்து ஆண்டுகளில் பதினான்கு ஆட்சியாளர்களை சந்தித்து அரசியல் நிலையின்மையைப் புலப்படுத்தியுள்ளது.[41] மார்ச் 2005 இல் இதன் சட்டசபை ஆளுநரால் கலைக்கப்பட்டது மற்றும் இதன் சட்டசபை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு குடியரசுத் தலைவரின் ஆட்சி அறிவிக்க்ப்பட்டது. 2005 இல் நடந்த இடைத்தேர்தலில் தான் நின்ற ஐந்து இடங்களில் மூன்றில் வெற்றி பெற்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் கட்சி மற்றும் பி.ஜே.பி ஆகிய இரண்டு கட்சிகளும் மாநிலத்தின் பெரிய கட்சிகளாகும். 2007 இல் நடைபெற்ற சட்டசபை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கூட்டணி முன்னணியில் வெற்றி பெற்று மாநிலத்தின் ஆட்சிக்கு வந்தது.[42] பிற கூட்டணி கட்சிகளாவன ஐக்கிய கோயன்ஸ் ஜனநாயகக் கட்சி,இந்திய நேஷனலைஸ்டு காங்கிரஸ் கட்சி, மஹாராஷ்டிரவதி கோமண்டக் கட்சி ஆகியனவாகும்.[43]

ஊடகம் மற்றும் தகவல் பரிமாற்றம்

கோவா பெரும்பாலும் இந்தியாவின் அனைத்து தொலைகாட்சி அலைவரிசைகளையும் வழங்கி வருகிறது. கோவாவின் பெரும்பகுதிகளில் அலைவரிசைகள் மின் இணைப்பான்களால் பெறப்படுகின்றன. உள்ளூர் பகுதிகளில் அலைவரிசைகளானது செயற்கைக்கோள் அலைவாங்கி வழியாகப் பெறப்படுகிறது. தேசிய தொலைக்காட்சி ஒலிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் இரண்டு இலவச அலைவரிசைகளை காற்றில் மக்களுக்காக வழங்குகிறது.

DTH (டைரக்ட் டு ஹோம்) சேவைகளை டிஷ் டிவி,டாடா ஸ்கை மற்றும் டி.டி. டைரக்ட் ப்ளஸ் நிறுவனங்கள் மூலம் வழங்குகிறது. மாநிலத்தின் ஒரே வானொலி நிறுவனமான அகில இந்திய வானொலியானது,பண்பலை(FM) மற்றும் அதிர்வலை(AM)ஆகிய இரண்டு அலைவரிசைகளையும் ஒலிபரப்புகிறது. இரண்டு அதிர்வலை ஒலிபரப்பில் முதல்நிலை அலைவரிசை 1287 kHz லும் மற்றும் விவித் பாரதியானது 1539 kHz லும் ஒலிபரப்பாகும். அகில இந்திய வானொலியின் பண்பலை வரிசை ஒலிபரப்பு எஃப்.எம்.ரெயின்போ என அழைக்கப்படுகிறது. இது 105.4 MHz இல் ஒலிபரப்படுகிறது. தனியார் பண்பலை வானொலிகளான பிக் எஃப்.எம் 92.7 MHz லும்,ரேடியோ மிர்ச்சி 98.3 MHz லும்,ரேடியோ இண்டிகோ 91.9 MHz லும் ஒலிபரப்பாகின்றன. இங்கு இக்னோ(IGNOU) நிறுவனத்தால் பனாஜியிலிருந்து ஒலிபரப்பப்படும் கேயன் வாணி என்கிற கல்வி ஒலிபரப்பு 107.8 MHz இல் ஒலி பரப்பப்படுகிறது. மாநிலத்திலேயே முதல் முறையாக 2006 இல் மாப்யூசா விலுள்ள புனித சேவியர் கல்லூரி வாய்ஸ் ஆஃப் சேவியர் என்ற பெயரில் வளாக சமுதாய வானொலி நிலையத்தை தோற்றுவித்தது.

கோவாவில் ரிலையன்ஸ் இன்ஃபோகாம்,டாடா இண்டிகாம்,வோடோஃபோன்(முன்பு ஹட்ச்),பாரதி ஏர்டெல்,பி.எஸ்.என்.எல் மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற முக்கிய செல்லுலார் சேவை நிறுவனங்கள் தங்கள் சேவைகளை வழங்கி வருகின்றன.

உள்ளூர் செய்தித்தாள் பதிப்பு நிறுவனங்களில், ஆங்கில மொழியில் வருபவை தி ஹெரால்ட்(கோவாவின் மிகப்பழமையான போர்ச்சுகீசிய மொழி தாளானது ஓ ஹெரால்டோ எனப்படுகிறது), தி கோமண்டக் டைம்ஸ் மற்றும் நவ்ஹிந்த் டைம்ஸ் என்பனவாகும். இத்துடன் கூடுதலாக பாம்பே மற்றும் பெங்களூர் போன்ற நகர்புறங்களில் இருந்து வரவழைக்கப்படும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகியவையும் கிடைக்கின்றன. 0}தி டைம்ஸ் ஆஃப் இந்தியா சமீபத்தில் மாநிலத் தலைநகரிலிரிந்து உள்ளூர் மக்களுக்கான செய்தி சேவைகளை வழங்க கோவாவில் தனது பதிப்பை துவங்கியுள்ளது. இவற்றில் அலுவலகரீதியாக-அங்கீகரிக்கப்பட்டவைகளாக,கொங்கனியில் வரும் சுனாபரண்ட் (தேவநாகரி எழுத்திலும்), தி நவ்ஹிந்த் டைம்ஸ் ,தி ஹெரால்ட் டைம்ஸ் ,தி கோமண்டக் டைம்ஸ் ஆகியவை ஆங்கிலத்திலும்; மற்றும் கோமண்டக் ,தருண் பாரத் ,நவபிரபா ,கோவா டைம்ஸ் ,சனதன் பிரபாத் ,கோவ தூத் (அனைத்தும் மராத்தியிலும்)ஆகியவைகள் உள்ளன. இவை அனைத்தும் நாளிதழ்களாகும். மாநிலத்தின் பிற பதிப்பு நிறுவனங்களில், கோவா டுடே (ஆங்கில மாத இதழ்),கோயன் அப்சர்வர் (ஆங்கில வார இதழ்),வாவ்ர்ட்டினாச்சோ இக்சட் (ரோமன் எழுத்து கொங்கனி வார இதழ்),கோவா மெஸன்ஜர் ,குலாப் (கொங்கனி மாத இதழ்),பிம்ப் (தேவநாகரி எழுத்திலான கொங்கனி) ஆகியனவும் அடங்கும்.

கல்வி

கோவா பல்கலைக்கழகம்

2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி கோவாவில் கல்வி கற்றோர் சதவீதம் 82% ஆகும். இதில் ஆண்களில் 89% பேரும்,பெண்களில் 76% பேரும் கல்வி கற்றவர்கள் ஆவார்கள்.[44] ஒவ்வொரு வட்டமும் கிராமங்களைக் கொண்டுள்ளன,ஒவ்வொரு வட்டமும் அரசால் நடத்தப்படும் பள்ளிக்கூடத்தைப் பெற்றுள்ளது. நாட்டின் பிற பகுதிகளோடு ஒப்பிடுகையில் குறைந்த அளவிலான முறைகேடுடைய அரசு பள்ளிகளின் தரம் காரணமாக,தனியார் பள்ளிகளின் தேவை குறைந்துள்ளது. அனைத்து பள்ளிகளும் மாநிலத்தின் SSC யின் கீழ் இயங்குகிறது. இதன் பாடத்திட்டங்கள் மாநில கல்வித்துறையால் பரிந்துரைக்கப்படுகிறது. இங்குள்ளவற்றில் சில பள்ளிகள் அனைத்து இந்திய ICSEவாரியத்தால் இயக்கப்படுகிறது. கோவாவின் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் உயர்நிலை பள்ளி படிப்பை ஆங்கில வழியில் படிக்கின்றனர். மற்றொரு நிலையில் தொடக்கப்பள்ளிகளில் பெரும்பாலும் கொங்கனி மற்றும் மராத்தி மொழியில்(தனியார்,ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகள்)இயங்குகின்றன. இவ்வகையில் இந்தியாவில் பெரும்பாலும் தாய்மொழியில் கல்வி கற்பவர்களை விட அதிகமானோர் ஆங்கில வழியில் கல்வி பயில்கின்றனர். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான அறிக்கை, 84% கோவா பள்ளிகள் நிர்வாக தலைமை இன்றி இயங்குகின்றன எனத் தெரிவிக்கிறது.[45]

பத்து ஆண்டுகள் பள்ளி படிப்புக்கு பிறகு,மாணவர்கள் சிறந்த படிப்புகளான அறிவியல்,கலையியல்,சட்டம் மற்றும் வணிகவியல் போன்றவற்றை நல்கும் மேல்நிலை பள்ளியில் சேருகின்றனர். ஒரு மாணவன் தொழில்முறை கல்வியையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். கூடுதலாக பலரும் மூன்றாண்டு பட்டயப் படிப்புகளில் சேருகின்றனர். இதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கல்லூரி தொழில்முறை பட்ட படிப்பும் உள்ளது. மாநிலத்தின் ஒரே பல்கலைக்கழகமாக டேலிகோவாவில் அமைந்துள்ள கோவா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த மாநிலத்தில் நான்கு பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஒரு மருத்துவ கல்லூரி உள்ளது. கோவா பொறியியல் கல்லூரி மற்றும் கோவா மருத்துவ கல்லூரி ஆகியவை மாநில அரசாலும் இவை தவிர்த்த பிற மூன்று பொறியியல் கல்லூரிகள் தனியார் நிறுவனங்களாலும் நடத்தப் பெறுகின்றன.

கோவாவிலுள்ள டான் பாஸ்கோ உயர்நிலை பள்ளி, ஏ.ஜெ.டி அல்மிடியா உயர்நிலை பள்ளி, பீப்பிள்ஸ் உயர்நிலை பள்ளி, மனோவிகாஸ்,முஸ்டிஃபண்ட் உயர்நிலை பள்ளி போன்ற பள்ளிகள் மாநிலத்தின் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க பள்ளிகளாகும்.

குறிப்பிடத்தக்க சிறந்த கல்லூரிகளாக,ஜி.வி.எம் இன்,எஸ்.என்.ஜெ.ஏ மேல்நிலை பள்ளி, டான் பாஸ்கோ கல்லூரி, டி.எம். இன் கல்லூரி, புனித சேவியர் கல்லூரி, கார்மல் கல்லூரி,சௌகுலே கல்லூரி,டெம்பே கல்லூரி,தமோதர் கல்லூரி,எம்.ஈ.எஸ் கல்லூரி போன்றவைகள் உள்ளன.

தனியார் பொறியியல் கல்லூரிகளாவன, ஸ்ரீ ராயேஷ்வர் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்,சிரோடா மற்றும் பட்ரே கான்சிகோ பொறியியல் கல்லூரிபோன்றவையாகும். மருந்தியல்,கட்டிடக்கலை மற்றும் பல்மருத்துவம் சார்ந்த படிப்புகளைத் தரும் கல்லூரிகளுடன் சட்டம், கலையியல், வணிகவியல் மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளை வழங்கும் ஏராளமான தனியார் கல்லூரிகளும் உள்ளன. இங்கு இரண்டு தேசிய கடலியல் அறிவியல் சார்ந்த மையங்கள் உள்ளன,NCAOR மற்றும் தேசிய கடலியல் நிறுவனம்(NIO) இவை முறையே வாஸ்கோ மற்றும் பனாஜிம்மில் உள்ளன. 2004 இல் பிட்ஸ் பிலானி பல்கலைக்கழகம் தன் முதல் செயற்கைக்கோளை துவக்கியது. பிட்ஸ் பிலானி கோவா வளாகமானது தபோலிம் அருகிலுள்ளது.

மிகுதியான பொறியியல் கல்லூரிகளை அடுத்து,அதிக அளவிலான தொழில்நுட்ப கல்விநிறுவனங்களும் உள்ளன, அவற்றில் சில ஃபாதர் ஏக்னல் தொழில்நுட்பக்கல்லூரி, வெர்னா மற்றும் கப்பல்கட்டுமான தொழில்கல்வி நிறுவனம்,தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை பயிற்சி தரும் வாஸ்கோடாமா நிறுவனம் போன்றவைகளாகும்.

பிற மாநிலங்களைச் சார்ந்த பெரும்பான்மையினர் தாங்கள் தேர்ந்தெடுக்க விரும்பி கிடைக்காத படிப்புகளுக்கான வாய்ப்புகள் கோவாவில் இருப்பதால், இங்கு இப்படிப்புகளின் தேவை அதிகரித்துள்ளது. கோவா மேலும் கடல்சார் பொறியியல், மீன்வளம்,ஹோட்டல் நிர்வாகம் மற்றும் சமையற்கலை சார்ந்த படிப்புகளாலும் நன்கு அறியப்படுகிறது. இம்மாநிலம் 1993 இல் ரோமுலட் டிசோசா என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட கோவா இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் என்ற வணிகப்பள்ளியையும் கொண்டுள்ளது. சில பள்ளிகள் தங்கள் பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக போர்ச்சுகீசிய மொழியை மூன்றாவது மொழியாக கற்பிக்கிறது. கோவா பல்கலைக்கழகம் போர்ச்சுகீசிய மொழியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட படிப்புகளையும் வழங்குகிறது.

இவற்றையும் பார்க்கவும்

கோவாவின் சுற்றுலாத்துறை
கலங்குட் கடற்கரை
பாகா கடற்கரை

குறிப்புகள்

  1. "Liberation of Goa". Government Polytechnic, Panaji. பார்த்த நாள் 2007-07-17.
  2. Pillarisetti, Jagan. "The Liberation of Goa: an Overview". The Liberation of Goa:1961. bharat-rakshak.com. பார்த்த நாள் 2007-07-17.
  3. "Goa". National Informatics Centre(NIC). பார்த்த நாள் 2009-01-04.
  4. Press Information bureau. "Goa – The Vibrant State on March". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2009-01-05.
  5. Sakshena 2003, p. 5
  6. De Souza 1990, p. 9
  7. De Souza 1990, p. 10
  8. De Souza 1990, p. 11
  9. http://www.outlookindia.com/article/The-Hindu-Rate-Of-Wrath/238886
  10. "Weather Information for Goa".
  11. "Climatological Information for Goa, India". Hong Kong Observatory (15 August 2011). பார்த்த நாள் 16 December 2011.
  12. "Wildlife Sanctuaries in Goa". பார்த்த நாள் 2008-07-18.
  13. "Ministry of Statistics and Programme Implementation". பார்த்த நாள் 2006-09-07.
  14. சண்டிகரின் தனிநபர் வருமானம் தான் இந்தியாவில் உயர்ந்தது
  15. goenkar.com இணையத்தளத்திலிருந்து 2005-04-02 அன்று சரிபார்க்கப்பட்ட கோவாவின் பொருளாதாரம்.
  16. "Goa not to have any more SEZs". பார்த்த நாள் 2007-11-13.
  17. "Census Population" (PDF, 40 KB). Census of India. Ministry of Finance India. பார்த்த நாள் 2008-12-18.
  18. Goa Population Census data 2011
  19. "Goa Population Policy (March 2007)" (DOC, 156 KB). Government of Goa. பார்த்த நாள் 2009-01-05.
  20. "Rural-Urban Distribution". Census Department of India. பார்த்த நாள் 2009-01-05.
  21. "Education". Government of Goa. பார்த்த நாள் 2009-01-05.
  22. "Demographic status of Goa". Navhind Times. பார்த்த நாள் 2009-02-05.
  23. "Scheduled Casts & Scheduled Tribes Population". Census Department of India. பார்த்த நாள் 2009-01-05.
  24. Baptista, Elsie Wilhelmina (1967). The East Indians: Catholic Community of Bombay, Salsette and Bassein. Bombay East Indian Association.
  25. "Vasco da Gama (c.1460 – 1524)". பிபிசி. பார்த்த நாள் 2008-01-05.
  26. Commissioner Linguistic Minorities, 42nd report: July 2003 - June 2004, p. para 11.3, retrieved 2007-06-06
  27. "Solving the Language Imbroglio". Navhind Times. பார்த்த நாள் 2008-10-15.
  28. "Konkani:The Tussule over the script". Navhind Times. பார்த்த நாள் 2008-10-18.
  29. "Table 26: Three Main Languages in every State, 1991". Census of India 1991. Office of the Registrar General, India. பார்த்த நாள் 2007-08-01.
  30. Goa ready for larger tourist flow from Russia this season
  31. Visa on arrival will bring 'achche din' for Goa Tourism
  32. எக்ஸ்பிரஸ்: தரிசுநிலச் சாகுபடிக்கு கோவா அரசின் புதிய திட்டம் இந்து தமிழ் திசை - வெள்ளி, நவம்பர் 22 2019
  33. Press Information Bureau. "Twenty eight tableaux to participate in year's Republic Day Parade". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2009-01-05.
  34. தியேடர் எனும் கோவாவின் நாட்டுப்புற நாடகம் http://www.goablog.org/posts/tiatr-folk-drama-of-goa/
  35. Smitha Venkateswaran (14 Apr, 2007). "Konkan goes Tiatrical". The Economic Times. பார்த்த நாள் 2008-12-14.
  36. "கோவாவின் கட்டிடக்கலை"
  37. Mills, James (Summer 2001). "Football in Goa: Sport, Politics and the Portuguese in India". Soccer & Society 2 (2): 75–88.
  38. "Nehru stadium". Cricinfo.com. பார்த்த நாள் 2007-07-19.
  39. http://www.mail-archive.com/goanet@lists.goanet.org/msg15601.html
  40. ஒட்ஸ் ஸ்டாக்ட் அகைன்ஸ்ட் பாரிக்கார்,அனில் சாஸ்திரி, தி ஹிந்து , 2005-01-31, சரிபார்க்கப்பட்டது 2005-04-02
  41. Banerjee, Sanjay (6 June 2007). "Congress set to rule Goa again". indiatimes.com (Times Internet Limited). http://timesofindia.indiatimes.com/articleshow/2101667.cms. பார்த்த நாள்: 2007-08-05.
  42. வடக்கு கோவா மாவட்ட இணையத்தளம், பனாஜி கோவா http://northgoa.nic.in
  43. "District-specific Literates and Literacy Rates, 2001". Education for all in India. பார்த்த நாள் 2007-07-18.
  44. "No Administrative head". Times of India. பார்த்த நாள் 2009-04-06.

பிற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.