இராமாயணம்

இராமாயணம் (ஒலிப்பு ) வால்மீகி என்னும் முனிவரால் சமசுக்கிருத மொழியில் இயற்றப்பட்ட மிகப் பழைய இதிகாசமாகும்[1]. இது கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கும் - கிபி 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இது இந்து சமயத்தின் முக்கியமான நூல்களுள் ஒன்று. மூல நூலான வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவிப் பல இந்திய மொழிகளிலும், பிற நாடுகளின் மொழிகளிலும் இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. கம்பர் என்னும் புலவர் இதனைத் தமிழில் எழுதினார். இது கம்ப இராமாயணம் எனப்படுகின்றது. கெமர் மொழியில் உள்ள ரீம்கெர், தாய் மொழியில் உள்ள ராமகியென், லாவோ மொழியில் எழுதப்பட்ட ப்ரா லாக் ப்ரா லாம், மலாய் மொழியின் இக்காயத் சேரி ராமா போன்றவை வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவியவை ஆகும். கோசல நாட்டின் தலை நகரமான அயோத்தியைச் சேர்ந்த ரகு வம்ச இளவரசரான ராமர், அவர் மனைவி சீதை ஆகியோரின் வாழ்க்கையை விவரிக்கும் இந்த இதிகாசம், உறவுகளுக்கு இடையேயான கடமைகளை எடுத்துக் காட்டுகின்றது. சிறந்த வேலையாள், சிறந்த தம்பி, சிறந்த மனைவி, சிறந்த அரசன் போன்றோர் எப்படி இருக்கவேண்டும் என்பது இதன் கதை மாந்தர்கள் மூலம் விளக்கப்படுகின்றது.[2]

இராமன் அனுமனின் தோளில் இருந்தபடி இராவணனுடன் போர்புரியும் காட்சி.

இராமாயணம் என்னும் பெயர் இராமன், அயனம் என்னும் சொற்களின் கூட்டாகும். அயனம் என்னும் சொல் சமசுக்கிருதத்தில் பயணம் என்னும் பொருளுடையது. இதனால், இராமாயணம் என்பது இராமனின் பயணம் என்னும் பொருள் குறிக்கிறது.

இந்திய மொழிகளில் இராமாயணம்

தமிழில் கம்பரும், வடமொழியில் வால்மீகியும், இந்தியில் துளசி தாசரும், மலையாளத்தில் எழுத்தச்சனும், அசாமியில் மாதவ் கங்குனியும், ஒரியாவில் பலராம்தாசுவும் இயற்றியுள்ளனர்.

வடமொழி இராமாயண நூல்கள்

  1. . யோக வசிஷ்ட (அல்லது) வசிஷ்ட இராமாயணம் (கி.பி. 8 அல்லது 12 ஆம் நூற்றாண்டு)
  2. . அத்யாத்ம இராமாயணம் (கி.பி. 13 ஆம் நூற்றாண்டு, இராமசர்மர் எழுதியது)[3]
  3. . அற்புத இராமாயணம் (முந்தையதற்குப் பிற்பட்ட காலகட்டம்)
  4. . ஆனந்த இராமாயணம் (கி.பி. 15 ஆம் நூற்றாண்டு) வால்மீகி பெயரால் வழங்கப்படுவது.[4]

வால்மீகி இராமாயணத்தின் அமைப்பு

இராமாயணத்தின் கதை பல மட்டங்களில் தொழிற்படுகின்றது. ஒரு மட்டத்தில் இது அக்காலத்துச் சமூகத்தை விவரிக்கின்றது. பரந்த பேரரசுகள், அடுத்த அரசர்களாக வரவிருக்கும் இளவரசர்களின் வாழ்க்கை, தாய்மாருக்கும் மாற்றாந் தாய்களுக்கும் இடையிலான போட்டி, உடன்பிறந்தோருக்கு இடையிலான அன்புப் பிணைப்பும் விசுவாசமும், இளவரசிகளை மணம் முடிப்பதற்கான போட்டிகள் போன்றவை இவற்றுள் அடக்கம். இன்னொரு மட்டத்தில் இது, நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு மனிதன், ஒரு தலைவனாக எவ்வாறு நடந்துகொள்கிறான் என்பதையும், நிலைமைகளை ஒன்றுபோல எதிர்கொண்டு, சமயத்துக்குத் தக்கபடி நடந்து, தனது சொந்தத் துன்பங்கள் முதலியனவற்றுக்கும் அப்பால் குடிமக்களை எவ்வாறு வழிநடத்துகிறான் என்பதையும் காட்டுகிறது. வேறொரு மட்டத்தில் இது, தீமையை ஒழித்து நீதியை நிலை நாட்டுவதற்காக மனிதனாகத் தனது ஏழாவது அவதாரத்தை எடுத்த விஷ்ணுவின் கதையும் ஆகும்.

வால்மீகி இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது. இவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை இராமரின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விளக்குகின்றன. அவை:

  1. பால காண்டம்: இராமனினதும் உடன்பிறந்தோரினதும் பிறப்பு, கல்வி, திருமணம் என்பவை பற்றிய கதைப் பகுதி.
  2. அயோத்தி காண்டம்: இராமன் சீதையை மணந்து கொண்ட பின்னர் இளவரசனாக அயோத்தியில் வாழ்ந்த காலத்துக் கதைப் பகுதி.
  3. ஆரண்ய காண்டம்: இராமன் காட்டுக்குச் சென்றதும் அங்கு வாழ்ந்ததும்.
  4. கிஷ்கிந்தா காண்டம்: கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடிச் செல்லும்போது வானரர் நாட்டில் இராமனது வாழ்க்கை.
  5. சுந்தர காண்டம்: சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குச் சென்றது, அங்கே சீதையைக் கண்டது ஆகியவற்றை உள்ளடக்கிய கதைப் பகுதி.
  6. யுத்த காண்டம்: இராமனுக்கும் இராவணனுக்கும் இடையிலான போரை உள்ளடக்கிய கதைப் பகுதி.
  7. உத்தர காண்டம்: இராமன் அயோத்திக்கு திரும்ப வந்து அரசனானதையும் சீதை மீண்டும் காட்டுக்கு அனுப்பப்பட்டதையும் உள்ளடக்கிய கதைப் பகுதி.

இந்த இராமாயணத்தில் காணப்படும் முதல் காண்டமும் இறுதிக் காண்டமும் வால்மீகியால் எழுதப்பட்டதா என்பதில் சில ஐயப்பாடுகளும் நிலவுகின்றன. இவ்விரு பகுதிகளினதும் மொழி நடை ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபடுவதும் அவற்றின் உள்ளடக்கங்களில் முரண்பாடுகள் காணப்படுவதும் இத்தகைய ஐயப்பாடுகளுக்குக் காரணமாகும். எனினும் பலர் இவ்வேழு காண்டங்களும் வால்மீகியால் எழுதப்பட்டதாகவே நம்புகின்றனர்.

வால்மீகி இராமாயணத்தின் கதைச் சுருக்கம்

பால காண்டம்

அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லாமல் இருந்து வந்தார். அதனால் தன் மந்திரி சுமந்தரர் மற்றும் தன் குலகுருவான வசிட்டரின் அறிவுரைப்படி புத்திர-காமேஷ்டி யாகம் நடத்தினார். அப்போது மகா விஷ்ணு தோன்றி, ஓர் தங்கத்திலான பாத்திரத்தை தசரதனிடம் கொடுத்து அதிலிருக்கும் புனிதமான தேனைத் தசரதனின் மனைவியரை பருகும்படி கேட்டு கொண்டார். அதன்படி தசரதரும் தன் மனைவியரான கௌசல்யா, சுமித்திரை மற்றும் கைகேயியிடம் அந்த தேனை பகிர்ந்தளிதார். விரைவிலேயே கௌசல்யாவுக்கு இராமனும், கைகேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு இரட்டையரான இலக்குவன் மற்றும் சத்ருகனன் ஆகியோர் பிறந்தனர்.

சிறிது காலத்திற்கு பின்பு நால்வரும் வசிட்டரிடம் சீடர்களாக சேர்ந்து பல்வேறு கலைகளை கற்று கொள்ள ஆரம்பித்தனர். இந்நிலையில் விசுவாமித்திர முனிவர், அயோத்தியை அடைந்து தசரதரிடம் தன் யாகங்களுக்கு சில ராட்சகர்களால் இடையூறு ஏற்படுவதால் அவர்களை அழிக்க இராமனை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். முதலில் தயங்கினாலும் பிறகு இராமனையும், லட்சுமணனனையும் அவருடன் அனுப்பி வைத்தார். சகோதரர்கள் வந்த வேலையை செவ்வனே செய்த்தால், விசுவாமித்திரர் அவர்களுக்கு சில அஸ்திரங்களை அருளி ஆசிர்வதித்தார்.

அயோத்தி காண்டம்

போட்டியில் மகாதேவரின் வில்லை முறித்த இராமன், (இராஜா ரவி வர்மாவின் ஓவியம்)

விசுவாமித்திரர் இராமனையும், இலட்சுமணனையும் ஜனகன் என்னும் அரசன் ஆட்சி செய்த விதேக நாட்டின் தலைநகரமான மிதிலைக்கு அழைத்துச் சென்றார். ஜனகனுடைய மகள் சீதை. இவளுக்குத் திருமணம் செய்வதற்காக அரசர் போட்டியொன்றை ஒழுங்கு செய்திருந்தார். பல இளவரசர்கள் கலந்து கொண்ட அப்போட்டியில் வென்ற இராமன், சீதையை திருமணம் செய்து கொண்டு அயோத்திக்கு மீண்டான். இராமனுக்கும், சீதைக்கும் திருமணமாகி பன்னிரண்டு ஆண்டுகள் ஆனதும், வயதான தசரதர், இராமருக்கு மகுடம் சூட்ட விருப்பம் தெரிவிக்கிறார், அதற்கு கோசல அரசவையும் குடிமக்களும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள். மாபெரும் நிகழ்வின் முந்திய நாளில், மந்தரை என்கிற பொல்லாத வேலைக்காரியால் கைகேயியின் பொறாமை தூண்டப்படுகிறது. தசரதன் நீண்ட காலத்திற்கு முன்பு தனக்கு வழங்கிய இரண்டு வரங்களை நினைவு கூறுகிறார். இராமரை பதினான்கு ஆண்டுகள் காட்டிற்குள் அனுப்புமாறும், தனது மகன் பரதன் நாடாள வேண்டுமென்றும் தசரதனிடம் கைகேயி கோருகிறார். இதனால் மனம் உடைந்த அரசன், கொடுக்கப்பட்ட வரத்தின் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டு, கைகேயியின் கோரிக்கைகளுக்கு இணங்குகிறார். இராமர் தனது தந்தையின் ஆணையை முழுமையான சமர்ப்பிப்பு மற்றும் அமைதியான சுய கட்டுப்பாட்டுடன் ஏற்றுக்கொள்கிறார். இது கதை முழுவதும் அவரை வகைப்படுத்துகிறது.

இவருடன் சீதாவும் லட்சுமணனும் இணைந்து காடு செல்கின்றனர். அவரைப் பின்தொடர வேண்டாம் என்று அவர் சீதாவிடம் கூறும்போது, ​​"நீங்கள் வசிக்கும் காடு எனக்கு அயோத்தி, நீங்கள் இல்லாமல் அயோத்தி என்பது எனக்கு ஒரு உண்மையான நரகமாகும்" என்று கூறுகிறாள். ராமர் வெளியேறிய பிறகு, தசரத மன்னர், துக்கத்தை தாங்க முடியாமல் காலமாகிறார். இதற்கிடையில், தனது நாட்டிற்குத் திரும்பிய பரதன், அயோத்தியில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்கிறார். பரதன் தனது தாயின் பொல்லாத சூழ்ச்சியினால் அரியணை ஏற மறுத்து, காட்டில் ராமரை சந்திக்கிறான். பரதன் ராமரிடம் திரும்பி வந்து ஆட்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார். ஆனால் தனது தந்தையின் கட்டளைகளை நிறைவேற்ற தீர்மானித்த ராமர், நாடு திரும்ப மறுக்கிறார்.

ஆரண்ய காண்டம்

சில காலத்தின் பின் தனது மூத்த மகனான இராமனுக்கு முடிசூட்டத் தசரதர் எண்ணினார். அரச குடும்பத்தினரும் மக்களும் இது குறித்து மிகவும் மகிழ்ந்தனர். ஆனால், கைகேயியின் பணிப்பெண்களில் ஒருத்தியான கூனி என்பாள் இராமன் மீது வெறுப்புற்றிருந்தாள். இராமன் அரசனாவதை அவள் விரும்பவில்லை. அதனால், கைகேயியைத் தூண்டி விட்டு இராமன் அரசனாவதைத் தடுக்க எண்ணினாள். கைகேயியும் கூனியின் வலையில் விழுந்துவிட்டாள். முன்னொருபோது தசரதனின் உயிரைக் கைகேயி காத்தமைக்காக இரண்டு வரங்கள் தருவதாகத் தசரதன் வாக்களித்திருந்தான். அவ்விரு வரங்களையும் கேட்டு வாங்கும்படி கூனி கைகேயிக்கு ஆலோசனை கூறினாள். தனது மகனான பரதன் அரசனாக வேண்டும், இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழவேண்டும் என்னும் இரண்டு வரங்களைக் கைகேயி தசரதரிடம் கேட்டாள். மனதை மாற்றிக்கொள்ளும்படி தசரதர் வேண்டியும் கைகேயி பிடிவாதமாக மறுத்துவிட்டதனால், தான் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதற்காக வேறு வழியின்றி அவளுடைய கோரிக்கைக்குத் தசரதன் இணங்க வேண்டியதாயிற்று. தசரதரின் முடிவைக் கேள்வியுற்ற இராமன் உடனடியாகவே காட்டுக்குக் கிளம்பினான். அவன் தடுத்தும் கேளாமல் சீதையும், இலட்சுமணனும் இராமனுடன் காட்டுக்குக் கிளம்பினர். இராமன் காட்டுக்குப் போய்விட்டான் என்பதைக் கேள்வியுற்ற தசரதர் கவலை தாங்காமல் உடனேயே இறந்துவிட்டார். அவ்வேளையில் பரதனும், சத்துருக்கனும் நாட்டுக்கு வெளியே இருந்தனர். தந்தையின் இறப்புச் செய்தி கேள்வியுற்ற அவர்கள் உடனடியாக நாடு திரும்பி நடந்ததை அறிந்து கொண்டனர்.

நடந்தவை அனைத்துக்கும் தனது தாயே காரணம் என்பதை அறிந்த பரதன் கோபம் கொண்டான். முடி சூட்டிக்கொள்ள மறுத்த அவன் இராமனைத் திரும்பவும் கூட்டி வருவதற்காகக் காட்டுக்குச் சென்றான். தந்தையின் சொல்லைக் காப்பாற்றுவதற்காக அயோத்திக்கு வர இராமன் மறுக்கவே, பரதன் இராமனின் காலணிகளை கேட்டுப் பெற்றுக்கொண்டு அயோத்திக்குச் சென்றான். அங்கே இராமனின் பாதுகைகளை அரியணையில் வைத்து இராமன் காட்டிலிருந்து மீளும் வரை அவனுக்காகப் பரதன் ஆட்சியை நடத்தினான்.

இராமனும், சீதையும், இலட்சுமணனும் காட்டில் வாழ்ந்து வந்தபோது அரக்கர் குலத்தைச் சேர்ந்த இலங்கை அரசன் இராவணனின் தங்கையான சூர்ப்பனகை என்பவள் இராமன் மீது ஆசை கொண்டாள். இலட்சுமணன் அவளது மூக்கை வெட்டித் துரத்திவிட்டான். இதனால் கோபமடைந்த அவள் தனது அண்ணனிடம் முறையிட்டாள். தனது தங்கைக்கு நேர்ந்த நிலையையிட்டுச் சினம் கொண்ட இராவணன் இராமனைப் பழிவாங்க எண்ணிச் சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து இலங்கையில், அசோகவனத்தில் சிறை வைத்தான். சீதையில் அழகில் மயங்கிய அவன், தன்னை மணந்து கொள்ளுமாறும் அவளை வற்புறுத்தினான்.

கிஷ்கிந்தா / சுந்தர / யுத்த காண்டங்கள்

சீதையைத் தேடி அலைந்த இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் வானரர்களின் அரசனான சுக்கிரீவனின் நட்புக் கிடைத்தது. சுக்கிரீவனின் அமைச்சனும், காற்றுக் கடவுளின் மகனுமான அனுமன் இராமனிடம் பெரும் பக்தி கொண்டிருந்தான். சுக்கிரீவனின் ஆணைப்படி வானரப் படைகள் பல திசைகளிலும் சென்று சீதையைத் தேடின. அனுமன் கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றான். அங்கே அசோக வனத்தில் சிறையிருந்த சீதையைக் கண்டான்.

இராமனும், சீதையும் அமர்ந்திருக்கின்றனர். அருகின் இலட்சுமணன் நிற்க, அனுமன் இராமனை வழிபடும் காட்சி.

அனுமன் மூலம் சீதை இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட இராமன், வானரப் படைகளின் உதவியோடு இலங்கைக்குச் சென்றான். இராவணனின் தம்பியான விபீடணன், சீதையை விட்டுவிடுமாறு இராவணனுக்கு ஆலோசனை கூறியும் அவன் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். நியாயத்துக்கு எதிராக இராவணனுக்கு உதவ விரும்பாத விபீடணன் இராமனை அடைந்து அவனுக்கு உதவினான். இடம்பெற்ற போரில் இராவணனும், அவனது கூட்டத்தினரும் மாண்டனர். இராமன் விபீடணனை இலங்கை அரசனாக முடி சூட்டினான். இராமன் சீதையை மீட்டான். எனினும், சீதையின் தூய்மையை நிரூபிப்பதற்காக சீதை தீக்குள் புகுந்து வெளிவர வேண்டியதாயிற்று. இவ்வேளையில் இராமனுக்கு விதிக்கப்பட்ட நாடுகடந்த வாழ்க்கைக் காலமான பதினான்கு ஆண்டுகள் முடிவடைந்தன. இராமன், சீதை, இலட்சுமணன் ஆகியோர் அயோத்திக்கு மீண்டனர். இராமன் அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.

ஒருநாள் அயோத்தியின் குடிமக்களில் ஒருவன், சீதை இராவணனால் கடத்திச் செல்லப்பட்டதைக் குறித்து ஐயுற்றுப் பேசியதை அறிந்த இராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்பினான். அப்போது சீதை கருவுற்றிருந்தாள். காட்டில் சீதை வால்மீகி முனிவரின் ஆதரவில் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு லவன், குசன் என இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் வால்மீகியின் ஆசிரமத்திலேயே வளர்ந்தனர்.

அக்காலத்தில் இராமன் தனது பேரரசை மேலும் பெருப்பிக்கும் நோக்குடன் அசுவமேத யாகம் எனப்பட்ட யாகத்தை ஒழுங்கு செய்தான். இந்த யாகத்தைச் செய்யும் ஒரு மன்னன் ஒரு குதிரையைப் பெரும் படையோடு அண்டை நாடுகளுக்கு அனுப்புவான். அவனுடன் போரிடமுடியாமல் அடிபணிய விரும்பும் அரசர்கள் அக் குதிரையைத் தமது நாட்டில் உலவ விடுவர். அப்படியின்றி அவ்வரசன் அடிபணிய விரும்பாவிட்டால் குதிரையைப் பிடித்துக் கட்டிவிடுவான். குதிரையை அனுப்பிய அரசன் போர் புரிந்து குறிப்பிட்ட நாட்டைத் தோற்கடிக்கவேண்டும். இராமன் அனுப்பிய குதிரை அவனது பிள்ளைகளான லவனும், குசனும் வாழ்ந்த காட்டில் உலவியபோது அவர்கள் அதனைப் பிடித்துக் கட்டியதுடன், அதனுடன் வந்த படையினருடன் மோதி அவர்களைத் தோற்கடித்தனர். இதைக் கேள்வியுற்ற இராமன் காட்டுக்கு வந்து தனது பிள்ளைகளையும், சீதையையும் கண்டான். சில காலத்தின் பின் புவியில் தனது காலம் முடிவுக்கு வருவதை சீதை உணர்ந்து தன்னை ஏற்றுக்கொள்ளும்படி புவியன்னையை வேண்டினாள். சீதையின் வேண்டுகோளுக்கு இணங்கிப் புவி பிளந்து அவளை ஏற்றுக்கொண்டது. லவனும், குசனும் அயோத்திக்குச் சென்று தந்தையுடன் வாழ்ந்தனர்.

சுந்தர காண்டம்

சுந்தர காண்டம் வால்மீகி ராமாயணத்தின் இதயமாகவும், அனுமனின் சாகசங்களைப் பற்றிய விரிவான, தெளிவான கதையயும் கொண்டுள்ளது. சீதையைப்பற்றி அறிந்த பிறகு, அனுமன் ஒரு அழகிய வடிவத்தை எடுத்துக் கொண்டு, கடலுக்கு குறுக்கே இலங்கைக்கு பறந்து செல்கிறார். வழியில் அவர் தனது திறன்களை சோதிக்க ஒரு பேய் வடிவத்தில் வரும் ஒரு கந்தர்வ கன்னியை எதிர்கொள்வது போன்ற பல சவால்களை சந்திக்கிறார். அவர் மைனாகுடு என்ற மலையை எதிர்கொள்கிறார். அவர் அனுமனுக்கு ஓய்வு அளித்து அவருக்கு உதவுகிறார். சீதாவைத் தேடுவதற்கு இன்னும் சிறிது காலமே மீதமுள்ளதால் அனுமன் அவருடைய உதவியை மறுக்கிறார்.

இலங்கைக்குள் நுழைந்த பிறகு, இலங்கை முழுவதையும் பாதுகாக்கும் லங்கினி என்ற அரக்கியை காண்கிறார் அனுமன் அவளுடன் சண்டையிட்டு இலங்கைக்குள் செல்வதற்காக அவளை அடிபணியச் செய்கிறார். இந்த செயல்பாட்டில், லங்கினியை தோற்கடித்தால் இலங்கையின் முடிவு நெருங்குகிறது என்று அர்த்தமாகும் என்று கடவுளர்களிடமிருந்து பெற்ற எச்சரிக்கையை லங்கினி எடுத்துரைக்கிறாள். இங்கே, அனுமன் அரக்கர்களின் நாட்டை ஆராய்ந்து இராவணனை வேவு பார்க்கிறார். அவர் சீதையை அசோக வனத்தில் காண்கிறார். அங்கு சீதையை தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ராவணன் அச்சுறுத்துகிறான். நம்பிக்கையின் அடையாளமாக ராமரின் மோதிரத்தை கொடுத்து அனுமன் சீதாவுக்கு உறுதியளிக்கிறார். அவர் சீதையை மீண்டும் ராமரிடம் கொண்டு செல்ல முன்வருகிறார்; இருப்பினும், அவள் மறுத்து, அது தர்மம் அல்ல என்று கூறி, அனுமன் அவளை ராமரிடம் அழைத்துச் சென்றால் ராமாயணத்திற்கு முக்கியத்துவம் இருக்காது என்று கூறுகிறாள் - "ராமர் இல்லாதபோது ராவணன் சீதையை வலுக்கட்டாயமாக சுமந்து சென்றான். ராவணன் இல்லாதபோது, ​​அனுமன் சீதையை மீண்டும் ராமனிடம் கொண்டு சென்றான் " என்ற அவப்பெயர் வராதிருக்கவும் தான் கடத்தப்பட்ட அவமானத்திற்கு பழிவாங்கவும் இராமரே வர வேண்டும் என்று சீதை கூறுகிறாள்.

அனுமன் பின்னர் இலங்கையில் மரங்களையும் கட்டிடங்களையும் அழித்து இராவணனின் வீரர்களைக் கொல்வதன் மூலம் அழிவை ஏற்படுத்துகிறார். ராவணனின் வீரர்கள் தன்னைப் பிடித்து ராவணனிடம் அழைத்துச் செல்ல அனுமதிக்கிறார். சீதையை விடுவிக்க ராவணனுக்கு தைரியமான சொற்பொழிவு செய்கிறார். ராவணனால் அவரது வால் தீ வைக்கப்பட்டுள்ளது, ஆனால் அவர் பிணைப்புகளில் இருந்து தப்பித்து கூரையிலிருந்து கூரைக்குத் தாவுகிறார். ராவணனின் கோட்டைக்கு தீ வைத்து விட்டு தீவில் இருந்து பறந்து செல்கிறார். மகிழ்ச்சியான செய்திகளுடன் கிஷ்கிந்தாவுக்குத் திரும்புகிறார்.

உத்தர காண்டம்

சீதையை வால்மீகி ஆசிரமத்தில் சேர்த்தல், லவன்-குசர்கள் பிறப்பு மற்றும் வால்மீகி லவ-குசர்களுக்கு கல்வி மற்றும் போர் பயிற்சி கற்றுத் தருதல் மற்றும் இராமகாதையை எடுத்துரைத்தல்

கம்ப இராமாயணத்தின் இறுதிக் காண்டமாக உத்தர காண்டம், ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டது.

கம்பர் தம் இராமாயணத்தைப் பால காண்டம் முதல் யுத்த காண்டம் முடிய உள்ள ஆறு காண்டங்களில் நிறைவு செய்துள்ளார். யுத்த காண்டத்தின் நிறைவில், விடைகொடுத்த படலம் என்றொரு படலம் உள்ளது. அதில் சுக்ரீவன், அனுமன், வீடணன் மற்றும் வானரர் முதலியோர்க்கு பரிசில்கள் கொடுத்து இராமன் விடை தந்து அனுப்பிய செய்தி கூறப்பட்டுள்ளது.

அதன் பின்பு இராமர் பல்லாண்டு மனுநெறி தவறாமல் ஆட்சி செய்ததை விளக்கி, இராமாயணத்தைக் கம்பர் நிறைவு செய்து விட்டார். அதன்பின் நிகழ்வுகளாக, சீதை தொடர்பான வதந்தியினை குடிமகன் மூலம் கேட்ட இராமன், ஐந்து மாத கர்ப்பிணியான சீதையை, இலக்குமணனைக் கொண்டு காட்டில் விட்டுவிடுதல், காட்டில் சீதைக்கு வால்மீகி ஆசிரமத்தில் லவன் மற்றும் குசன் எனும் இரட்டைக் குழுந்தைகள் பிறப்பதும், இராமர் செய்த அசுவமேத யாகக் குதிரைகளை லவ-குசர்கள் கட்டி வைத்தல், சத்துருக்கனன், பரதன் மற்றும் இலக்குமணராலும் வெல்ல முடியாத இலவ-குசர்களை, இராமரே நேரில் வந்து பார்த்து போரிடுவதும், பின்னர் லவ-குசர்களை அயோத்திக்கு அழைத்து செல்லுதலும், பூமி பிளந்து சீதை பூமாதேவியுடன் சேர்தல் போன்ற செய்திகளை, தான் எழுதிய உத்தர காண்டம் மூலம் ஒட்டக்கூத்தர் வடிவம் கொடுத்துள்ளார்.

இறையியல் முக்கியத்துவம்

இராமாயணத்தின் முக்கிய கதை மாந்தனான இராமன், இந்துக்களின் முதன்மைக் கடவுளரில் ஒருவர். மும்மூர்த்திகளுள் ஒருவரான திருமாலின் 10 அவதாரங்களுள் ஒருவராகப் போற்றி வழிபடப்படுபவர். உலகில் தீமையை ஒழித்து அறத்தை நிலைநாட்டுவதற்காக திருமால் இப் புவியில் தோன்றியதாக இந்துக்கள் நம்புகின்றனர். ஆண்டு தோறும் பலர் இராமர் பயணம் செய்த பாதையைப் பின்பற்றி யாத்திரை செய்கின்றனர். இந்த இதிகாசம், ஒரு இலக்கியமாக மட்டுமன்றி, இந்து சமயத்துடன் இரண்டறக் கலந்துள்ளது. இதனைப் படிப்பவர்களதும், படிக்கக் கேட்பவர்களதும் பாவங்கள் நீங்கி, இறைவன் அருள் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

மகாபாரதத்தில் இராமாயாணம்

மகாபாரத காவியத்தின் வன பருவத்தில் இராமாயண நிகழ்வுகளை மார்க்கண்டேய முனிவர் தருமனுக்கு எடுத்துரைத்தார்.[5]

திராவிட இயக்கமும், இராமாயணமும்

தமிழ் நாட்டில் திராவிட இயக்கத்தினர், இராமாயணத்தைத் திராவிடர்கள் மீது ஆரியர்களின் மேலாதிக்கத்தின் சின்னமாகப் பார்த்தனர். இவர்களது கருத்துப்படி இராம இராவணப் போர் திராவிடர்களுக்கும், அவர்களை அடக்கியாள விழைந்த ஆரியர்களுக்கும் இடையிலான போராட்டமாகும். சிவனை வணங்கியவனான இராவணன் திராவிடன் எனவும், ஆரியர்கள் அவனையும் அவனைச் சார்ந்தோரையும் அரக்கர்கள் எனக்கூறி இழிவு படுத்தினர் என்பதும் அவர்கள் கருத்து. வால்மீகியால் அறவழியில் நின்று அண்ணனான இராவணனை எதிர்த்தான் எனக் கூறப்படும் விபீடணனைத் திராவிட இயக்கத்தினர், திராவிடரைக் காட்டிக்கொடுத்த துரோகி என்றனர்.

இராமாயணமும் இலங்கையும்

இராமாயணத்தில் கூறப்படும் இலங்கை இன்றைய இலங்கைத் தீவைக் குறிக்கிறது என்பதே பெரும்பாலோரது கருத்து. எனினும், இதை மறுத்து இந்தியாவில் ஒடிசாவில் உள்ள லங்கையை இராமாயணத்தின் இலங்கையாகக் கொள்பவர்களும் உள்ளனர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படுவனவும், இராமர் பாலம் என்று அழைக்கப்படுவனவுமான ஆழம் குறைந்த திட்டுக்களே வானரப் படைகளால் அமைக்கப்பட்ட பாலம் எனச் சிலர் கருதுகின்றனர். அத்துடன் இலங்கையின் மையப் பகுதியில், நுவரெலியா என்னும் நகருக்கு அண்மையில் உள்ள சீதா எலிய என அழைக்கப்படும் இடமே சீதையைச் சிறைவைத்த அசோகவனம் என்கின்றனர்.

இராமாயண அவையடக்கம்

சோழ அரசனின் ஆணைப்படி கம்பரால் இயற்றப்பட்டது கம்பராமாயணம். இதனைக் கம்பர் வான்மீகி முனிவரின் இராமாயணத்தின்படி எழுதியிருக்கின்றார். அதனை அவர் தனது இராமாயண அவையடக்கத்தில் பின்வருமாறு கூறுகின்றார் -

“தேவபாடையின் இக்கதை செய்தவர்
மூவரானவர் தம்முளும் முந்திய
நாவினார் உரைப்படி நான் தமிழ்ப்
பாவினால் இஃதுணர்த்திய பண்பரோ!“

வடமொழியில் இராம கதையை வகுத்து வான்புகழ் கொண்ட வான்மீகி முனிவரின்படி நான் தமிழ்ப்பாவினால் பாடியிருக்கின்றேன் என்று கம்பர் கூறுகின்றபோதும் - சிற்சில இடங்களில் அழகுசெய்வான் பொருட்டு வான்மீகி இராமாயணத்தில் இல்லாதவற்றையும் எழுதியிருக்கின்றார். இவை தமிழ் மக்களிடையே நிலவிய இராமாயணக் கதைகளில் இருந்தும் சேர்ந்திருப்பதால், கம்பர் மெருகூட்டியவை முழுதும் அவரது கற்பனையே என்று ஊறு விட இயலாது.

உதாரணம் : இராமனும் சீதையும் திருமணத்திற்கு முன்னர் ஒருவரையொருவர் கண்டு கழிபெரும் காதல் கொண்டதாய் வான்மீகி கூறவில்லை. ஆயினும், கம்பர் தமிழ் மரபினைத் தழுவி, தலைவனும் தலைவியும் திருமணத்தின் முன்னர் ஒருவரையொருவர் கண்டு கழிபெருங் காதல் கொண்டதாய்ச் சொல்கிறார். தமிழியற் கொப்ப அவ்வாறு கூறியமை - முதனூலுக்கு மாறுகொள்ளக் கூறியமை - வழுவாகாத; மரபெனவே கொள்ளப்படுகிறது.

இராமாயணம் பற்றி மாற்றுக் கருத்தளித்தவர்கள்

மகாத்மா காந்தி: என்னுடைய ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு. என் ராமன் சீதையின் கணவனல்ல-தசரதன் மைந்தனல்ல. ராமாயணக் கதையில் வரும் ராமனை நான் பூஜிக்கவே மாட்டேன்.

ஜவகர்லால் நேரு: ஆரிய திராவிடப் போராட்டமே ராம-ராவண யுத்தம்

ஹென்றி ஸ்மித்: ராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்களென்றும் குடியாதவர்களை அசுரருகள் என்றும் கூறப்பட்டிருக்கிறது [6]

ரமேசு சந்திரதத்: ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென்னிந்தியாவில் உள்ளவர்களை, ஆரியர் அல்லாதவர்களைக் குறிப்பதாகும்.[7]

பண்டிதர் பி பொன்னம்பலம் பிள்ளை: ராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாக கூறவும் திராவிடர்களை இழிவுபடுத்திக் கூறவும் எழுதப்பட்ட நூலாகும்[8]

சி. ஜே. வர்க்கி: ராமாயணம் தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதையும் அதை கைப்பற்றியதையும் உணர்த்தும் நூல்[9]

ஷோஷி சந்திரதத்: திராவிடர்களை ஆரியர்கள் வென்று விட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால் இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்து பல நாகரீகங்களை இந்த பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்.[10]

சி.பி. காவெல்: விட்டுணு என்கிற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனைக் கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாக கூறப்பட்டிருக்கிறது.[11]

சந்திரசேகர பாவலர்: சூத்திரன் தவம் செய்யக்கூடாது என்பதற்காகவே ராமன் சம்பூகனை கொன்றான்

ராவ்சாகிப் திமேசு: இராவணன் சீதையை வலுக்கட்டாயமாகக் கவர்ந்து சென்றான் என்பதற்கு ஆதாரமே கிடையாது[12]

ஈ. வெ. இராமசாமி இராமாயண பாத்திரங்கள் போலியானதும் கற்பனைக் கெட்டாததும் என வாதிட்டு நூலொன்றை எழுதினார்.

ராமாயணம் குறித்து சுவாமி விவேகானந்தர் கருத்து

  • சுவாமி விவேகானந்தர்: தென்னிந்தியாவில் உள்ள மக்களேதான் குரங்குகளாகவும் அரக்கர்களாகவும் வர்ணிக்கப்பட்டார்கள்[13]
  • விஷ்ணு புராணம், ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களில் வரலாற்று உண்மை உள்ளதா என்ற இந்து பத்திரிக்கை நிருபரின் கேள்விக்கு அளித்த பதிலில் சுவாமி விவேகானந்தர்:

"ஏதோ ஒரு வரலாற்று உண்மையே புராணத்தின் கருவாக உள்ளது. உயர்ந்த கருத்துக்களைப் பல வடிவங்களில் மக்களுக்குக் கற்பிப்பதே புராணங்களின் நோக்கம்...ராமாயணமும் மகாபாரதமும் கண்ட நியதிப்படி, அவை ராமரையும் கிருஷ்ணரையும் சார்ந்திருக்க வேண்டியதே இல்லை..ஆனால் அவை உயர்ந்த கருத்துக்களை மனித இனத்தின் முன் வைப்பதால், அவற்றைச் சிறந்த அடிப்படை நூல்களாகக் கருத வேண்டும்..

எந்தப் புராணமானாலும் சரி, அதிலுள்ள தத்துவத்தை அறிய, அதில் வரும் பாத்திரங்கள் உண்மையா கற்பனையா என்ற ஆராய்ச்சி தேவையில்லை. மனித இனத்திற்குப் போதிப்பதே புராணங்களின் நோக்கம்...

ராமாயணத்தில் வரும் பத்துத் தலை அசுரன் வாழ்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவன் ஓர் உண்மைப் பாத்திரமா அல்லது கற்பனையா என்ற கேள்வியைத் தள்ளி வைத்துவிட்டு, அவன்மூலம் நமக்கு என்ன போதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும்.. [14]

இதையும் பார்க்க

திராவிட இயக்க ஆதரவாளர் எம்.ஆர்.ராதாவின் இராமாயண எதிர்ப்பு நூல்கள்:

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. இதிகாசம் என்றால் மரபுவழி வரலாறு, கதை என்று பொருள் படும். பெரும்காவியம் என்றும் பொருள். வாமன் சிவராமன் ஆப்தேயின் த பிராக்டிக்கல் சமசுக்கிருத-இங்கிலீசு அகராதி, திருத்திய, விரிவாக்கிய பதிப்பு (V. S. Apte's the Practical Sanskrit-English Dictionary ), பக்கம் 382: इतिहासः itihāsḥ इतिहासः [fr. इति-ह-आस (3rd. pers. sing. Perf. of अस् to be); so it has been] (1 History (legendary or traditional); धर्मार्थकाममोक्षाणामुपदेशसमन्वितम् .
  2. இராம அவதாரம்
  3. அத்யாத்ம இராமாயணம்
  4. http://www.tamilvu.org/slet/l3100/l3100pd3.jsp?bookid=56&auth_pub_id=69&pno=36
  5. இராமாயணம் ஆரம்பம்! - வனபர்வம் பகுதி 272
  6. ஹென்றிஸ்மித் L.L.T சித்திரக்காரர்களின் உலக சரித்திரம், பக் 587-589
  7. ரமேசு சந்திரடட், பண்டைய இந்தியாவின் நாகரீகம், பக் 139-141
  8. பண்டிதர் பி. பொன்னம்பலம் பிள்ளை, மலபார் குவாட்டர்லி ரிவியூ
  9. C.J. வர்க்கி, M.A., இந்திய சரித்திர பகாகுப்பாடு, பக்கம் 15
  10. ஷோஷி சந்திரடட், இந்தியா அன்றும், இன்றும் பக்கம் 15
  11. சி.பி காவெல் 1918ல் எழுதிய இந்தியாவில ஆரியர் ஆட்சியின் சரித்திரம் பக்கம் 32
  12. ராவ்சாகிப் தினேசு சந்திரசென், வங்காளி ராமாயணங்கள்
  13. சுவாமி விவேகாந்தரின் சொற்பொழிவு கட்டுரை, பக் 587-589
  14. எழுந்திரு! விழித்திரு! சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் எழுதியவற்றின் தொகுப்பு 6; பக்கம் 375, 376

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.