விஷ்ணு

விஷ்ணு என்பவர் இந்து சமயத்தின் முக்கியமான கடவுள்களில் ஒருவரும் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளும் ஆவார். மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு உலகைக் காப்பவராக இருக்கிறார்.

விஷ்ணு
விஷ்ணு-நான்கு கரங்களுடன்
அதிபதிகாத்தல்
தேவநாகரிविष्णु
சமசுகிருதம்viṣṇu
வகைமும்மூர்த்திகள்
இடம்வைகுந்தம்
ஆயுதம்சங்கு, சக்கரம், வில் மற்றும் கதாயுதம்
துணைஇலக்குமி
பூதேவி மற்றும் ஸ்ரீதேவியுடன், நாபிக் கமலத்தில் பிரம்மனுடன் கூடிய மகாவிஷ்ணுவின் பஞ்சலோக சிலை
தியான நிலையில் நான்கு கைகளுடன் கூடிய விஷ்ணுவின் சிற்பம், அரசு அருங்காட்சியகம், மதுரா

விஷ்ணு என்ற சொல்லுக்கு எங்கும் நிறைந்திருப்பவர் என்று பொருள். வைணவ சமயத்தின் படி, பரப்பிரம்மனான விஷ்ணு, உலகில் அதர்மம் தலைதூக்கும் போது தர்மத்தை நிலைநாட்ட பல்வேறு அவதாரங்கள் எடுப்பார் என்று கூறப்படுகிறது. அதன்படி அவர் எடுத்த தசாவதாரங்களில் ராம மற்றும் கிருஷ்ண அவதாரங்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.

நாராயணன், வாசுதேவன், ஜகன்நாதர், விதோபர், ஹரி என்று பல பெயர்களால் விஷ்ணு அறியப்படுகிறார். இவர் நீல நிற தோலுடன் கீழ் வலது கையில் கௌமேதகியும் கீழ் இடது கையில் பத்மாவும் மேல் வலது கையில் சுதர்சனமும் மேல் இடது கையில் பாஞ்சஜன்யமும் தாங்கிய தோற்றத்துடன் காணப்படுகிறார். மேலும் இவர் பாற்கடலில் லட்சுமி தேவியுடன் ஆதிசேஷன் என்ற நாக படுக்கையில் படுத்திருப்பதாக நம்பப்படுகிறது.[1]

விஷ்ணு சிவ பூஜை செய்து சுதர்சன சக்கிரம் பெற முயன்றபோது தனது கண்ணையே பூவாக அர்சித்து இறுதியில் சுதர்சன சக்கரம் பெற்றாரென்று வேதவியாசர் எடுத்தியம்புகிறார்.[2] இவருடைய வாகனமாக கருடனும், அருவ வடிவமாகக் சாளக்கிராமமும் கருதப்படுகிறது.

இந்துக்கோவில்களில் சயனக் கோலத்தில் மூலவராக இருக்கும் ஒரே இறைவன் இவரே. திருவரங்கம் போன்ற வைணவத்தலங்களில் இந்த கோலமுள்ளது.[3]விஷ்ணு தனக்கு வலப்புறம் பிரம்மாவை படைப்பதற்கும் இடப்புறம் சிவனை அழிப்பதற்காகவும் தோற்றுவித்தார் என வேதவியாசரால் இயம்பப்படுகிறது.

இதிகாசங்களான மகாபாரதம் இவருடைய கிருஷ்ண அவதாரத்தினையும், இராமாயணம் இராம அவதாரத்தினையும் விளக்குகிறது. பாகவத புராணம், அரி வம்சம், விஷ்ணு புராணம், மச்சபுராணம், வாமன புராணம் உள்ளிட்ட பன்னிரு புராண நூல்கள் விஷ்ணுவின் பெருமைகளை விவரிக்கின்றன.[4]

குணநலன்கள்

விஷ்ணுவின் குணங்களாக நான்கு குணங்கள் கூறப்பெறுகின்றன. அவையாவன,

  1. வாத்சல்யம் - தாய்ப்பசுவின் கன்று கொள்கின்ற அன்பு.
  2. சுவாமித்துவம் - கடவுள்களுக்கெல்லாம் தலைமையேற்கும் சிறப்பு.
  3. சௌசீல்யம் - ஏற்றத்தாழ்வின்றி நட்பு பாராட்டுவது.
  4. சௌலப்யம் - கடவுளின் எளிமையை குறிப்பது.

இந்த நான்கு குணங்களும் விஷ்ணுவுடைய கிருஷ்ண அவதாரத்தில் வெளிப்பட்டதாகவும் கருதப்பெறுகிறது. அர்ஜூனனின் தவறை நோக்காது, பாரத போரினை நிகழ்த்தியமை வாத்சல்யமாகவும், அர்ஜூனனுக்கு தன்னுடைய பரத்துவத்தை விளக்கியமை சுவாமித்தரமாகவும், குசேலனிடம் நட்பு பாராட்டியமை சௌசீல்யமாகவும், இறைவனாகிய விஷ்ணு மனிதனாக அவதரித்தது சௌலப்யமாகவும் சொல்லப்பெறுகிறது.[5]

விஷ்ணுவின் அவதாரங்கள்

உலகில் அதர்மம் தலையெடுக்கும்போது விஷ்ணு உலகில் அவதரித்து உலகைக் காப்பதாக வைணவர்கள் கருதுகின்றனர். இதற்காக விஷ்ணு எடுத்த அவதாரங்களை சப்தாவதாரம், தசாவதாரம் என எண்ணிக்கை அடிப்படையில் குறித்துவைக்கின்றனர். பாகவத புராணத்தில் விஷ்ணு இருபத்தைந்து அவதாரங்களை எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.[6]

விஷ்ணுவின் அவதாரங்களை அவதாரம், ஆவேசம், அம்சம் என பிரிக்கின்றார்கள்.[7]

  1. அவதாரம் - முழு சக்தியை கொண்டது.
  2. ஆவேசம் - தேவையின் போது மட்டும் சக்தி கொண்டவனாகுதல்.
  3. அம்சம் - விஷ்ணு சக்தியின் ஒரு பகுதி ஓர் உருக்கொண்டு வெளிப்படுவது.

சப்தாவதாரம்

அசுரகுருவான சுக்கிராச்சாரியாரின் மனைவியை விஷ்ணு கொன்றதால், அவரை ஏழுமுறை மனிதனாக பூமியில் பிறக்கும் படி சுக்கிராச்சாரியார் சபித்தார். இதனால் தத்தாத்ரேயர், பரசுராமர், இராமர், வியாசர், கிருஷ்ணன், உபேந்திரன், கல்கி முதலிய சப்த அவதாரங்களை விஷ்ணு எடுத்ததாக வாயு புராணம் கூறுகிறது.

தசாவதாரம்

விஷ்ணுவும் லட்சுமியும் பாற்கடலில் தனித்திருக்கும் வேளையில் சில முனிவர்கள் விஷ்ணுவைக் காண வந்தார்கள். அவர்களை ஜெயன், விஜயன் எனும் இரு வாயிற்காவலர்களும் தடுத்தனர். இறைவனின் தரிசனத்திற்கு வந்த தங்களைத் தடுத்தமையால் கோபம் கொண்ட முனிவர்கள் வாயிற்காவலர்களைக் கொடூர அசுரர்களாகப் பிறக்கும்படி சாபமிட்டனர். இதையறிந்த விஷ்ணு தன்னுடைய வாயிற்காவலர்கள் அரக்கர்களாகப் பிறக்கும் போது, அவர்களை ஆட்கொள்ள தசாவதாரம் எடுத்ததாகக் காரணம் சொல்லப்படுகிறது.

பத்து அவதாரங்கள் அல்லது தசாவதாரங்கள் என்று கூறப்படுவன:

  1. மச்ச அவதாரம்
  2. கூர்ம அவதாரம்
  3. வராக அவதாரம்
  4. நரசிம்ம அவதாரம்
  5. வாமண அவதாரம்
  6. பரசுராம அவதாரம்
  7. இராம அவதாரம்
  8. பலராம அவதாரம்
  9. கிருஷ்ண அவதாரம்
  10. கல்கி அவதாரம்

பௌத்த மதத்தினை தோற்றுவித்தவரான கௌதம புத்தரும் விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் திருபாற்கடலை கடையும் போது அசுரர்களை மயக்கிய தேவி மோகினியும் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. இதுகுறித்து புராணங்களிலும் செய்திகளுள்ளது. அத்துடன் மகாபலிபுரத்தில் அரியரன் சிற்பத்தின் மேல் உள்ள கல்வெட்டொன்றில் தசாவதாரம் குறித்து கீழ்க்கண்ட வடமொழி சுலோகம் எழுதப்பெற்றுள்ளது.இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளிலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை

மத்சய கூர்ம வராஹஸ்ச நாரசிம்மஸ்ச வாமணஹ
ராமோ ராமஸ்ச ராமாஸ்ச புத்தக் கல்கீ தசாஸ்மிருதா:[8]

(ஆனால் வைணவ நூல்களில் புத்தர் குறித்த குறிப்புகள் இல்லை.)

கடவுளுடனான உறவு

இந்துக் கடவுளும் சிவனின் மனைவியுமான பார்வதி தேவியின் சகோதரனாக விஷ்ணு கூறப்படுகிறார். விஷ்ணுவின் கண்ணீரில் இருந்து தோன்றிய வள்ளி மற்றும் தெய்வானையை சிவன்-பார்வதி மைந்தனான முருகப்பெருமான் மணந்து விஷ்ணுவின் மருமகன் ஆனார். மேலும் பிரம்ம தேவனை தன் நாபியிலிந்து படைத்து அவருக்கு தந்தையானவர்

தாருகாவனத்தில் ரிஷிகளின் ஆணவத்தினை அடக்க சிவபெருமான் பிட்சாடனர் வடிவெடுத்து சென்று ரிஷிபத்தினிகளை கவர்ந்ததைப் போல, அவருடன் விஷ்ணு மோகினி வடிவெடுத்து சென்று ரிஷிகளை வசப்படுத்தியதாக இந்து தொன்மவியல் கதைகள் கூறுகின்றன.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்றப் பின்பு, அமுதத்தினை அசுரர்கள் அருந்தினால் சாகாவரம் பெற்றவர்களாக ஆகிவிடுவார்கள் எனப் பயந்த தேவர்கள், விஷ்ணுவிடம் வேண்டினர். விஷ்ணு மோகினி என்னும் பெண் அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு மட்டும் அமுதம் கிடைக்கப்பெறச் செய்தார். இந்நிகழ்வின் பொழுது மோகினி அவதாரத்தினைக் காண இயலாத சிவபெருமான் விஷ்ணுவை மீண்டும் மோகினி அவதாரம் எடுக்க வேண்டியதாகவும் அதை ஏற்று மோகினியாக மாறிய விஷ்ணுவின் அழகில் மயங்கி சிவபெருமான் உறவாடியதாகவும் ஒரு கதையுண்டு. இவர்கள் இருவருக்கும் சாஸ்தா என்பவர் பிறந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.[9]

விஷ்ணு நாமாவளி

விஷ்ணு நாமாவளி என்பது திருமாலின் வேறுபட்ட பெயர்களின் தொகுப்பாகும். நாம ஆவளி என்பதற்கு பெயர்களின் வரிசை என்று பொருளாகும். கோவிந்த நாமாவளி, சத்யநாராயண அஷ்டோத்திர சதநாமாவளி, விஷ்ணு சஹஸ்ரநாமம் அவற்றில் குறிப்பிடத்தக்கன. இதில் விஷ்ணு சஹஸ்ரநாமம் வைணவத்தலங்களில் மந்திரமாக மூலவரின் முன் மட்டுமல்லாது பெரும்பான்மையானோரால் தினமும் இல்லத்திலும் ஓதப்படுவதாக உள்ளது.

விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்

விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களை கோர்வையாக ஒருங்கினைத்து விஷ்ணு சஹஸ்ரநாமம் என்ற தொகுப்பாக விசாயர் அருளியுள்ளார். இது விஷ்ணு ஸ்ஹஸ்ர நாமாவளி என்ற பெயரிலும் அழைக்கப்பெறுகிறது. மகாபாரதத்தில் பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு போர்க்களத்தில் விஷ்ணுவின் பெயர்களைக் கூறுவதாக அப்பகுதி அமைந்துள்ளது. ச.கேசவன் என்பவர் அப்பகுதியை தமிழில் எழுதியுள்ளார்.[10] இவ்வாறான நாமாவளிகளுக்கு உரை எழுதுவது பாஷ்யம் என்று அழைக்கப்பெறுகிறது. விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு ஆதிசங்கரரால் உரையெழுதப்பெற்றது என்ற நம்பிக்கையுள்ளது.[11][12]

இந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தினை நூறு பேர் ஒரே சமயத்தில் வாசிப்பதை விஷ்ணு சகஸ்ரநாம லட்சார்ச்சனை என்கிறார்கள். இது வைணவத் தலங்களில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் லட்சார்ச்சனை விழா என்ற பெயரில் நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கநாதசுவாமி கோவில், இந்தியாவின் மிகப்பெரிய இந்துக் கோவில்.[13]

காண்க

மேற்கோள்கள்

  1. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd1.jsp?bookid=120&part=II&pno=1146
  2. http://m.dinamalar.com/temple_detail.php?id=10975
  3. http://www.bdu.ac.in/virtual_library/0120/89.htm
  4. http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=19
  5. http://temple.dinamalar.com/news_detail.php?id=4744
  6. http://temple.dinamalar.com/StoryDetail.php?id=36211
  7. [ http://www.dinamani.com/religion/article611053.ece?service=print புவியினர் போற்றும் பூவராகன் - எஸ். வெங்கட்ராமன் - ஏப்ரல் 17, 2009]
  8. http://www.tamilartsacademy.com/journals/volume12/articles/article5.xml
  9. அருள்மிகு வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில்
  10. http://www.indusladies.com/forums/pujas-prayers-and-slokas/118104-vishnu-sahasranamam-in-tamil.html
  11. http://www.visvacomplex.com/SriGanEsa_Sahasranamam1.html
  12. http://www.tamilhindu.com/2011/04/tamils-and-vedanta-3/
  13. Mittal & Thursby 2005, பக். 456.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.