சைவ சமயம்

சைவ சமயம், சிவநெறி என்றெல்லாம் அழைக்கப்படும் நெறி, சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும்.[1] இன்றைய இந்து சமயத்தின் கிளைநெறிகளில் ஒன்றாக அமைந்துவிளங்கும் சைவம், வைணவத்தைை பின்னால் தள்ளி இந்து சமயத்தின் பெரும்பான்மையான பின்பற்றுநர்களைக் கொண்ட சமயமாகக் காணப்படுகின்றது.[2] இன்றைய உலகில் சுமார் 452.2 மில்லியன் சைவர்கள் காணப்படுவதாக, மேற்கொள்ளப்பட்ட குடித்தொகை மதிப்பீடு ஒன்று சொல்கின்றது.[3]

திருக்கயிலையில் நந்தி தேவர் பணிவிடை செய்ய, பிள்ளையாரும் முருகனும் அருகிருக்க பார்வதி துணையிருக்க வீற்றிருக்கும் சிவபிரானே சைவர்களின் பரம்பொருளாக விளங்குகின்றார். பொ.பி 12ஆம் நூற்றாண்டில் தன் உச்சத்தை அடைந்திருந்த சைவநெறி, ஆப்கானிஸ்தான் முதல் கம்போடியா வரையான தெற்காசியா - தென்கிழக்காசியா முழுவதற்குமான தனிப்பெரும் நெறியாக விளங்கியமைக்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.[4] இன்றைக்கும் தமிழ்நாடு, கர்நாடகா, நேபாளம், காஷ்மீர், தமிழீழம், மலேசியா முதலான பகுதிகளின் முதன்மையான சமயமாக சைவமே திகழ்கின்றது.

தோற்றம்

சைவரின் முழுமுதல் இறைவன்

பழங்குடித் தொடர்ச்சி

இமய மலைச் சாரலில் வாழ்ந்த மலைக்குடி வேடுவர்களின் நீத்தார் வழிபாடே சிவ வழிபாடாக வளர்ந்திருக்கின்றது என்று நம்பப்படுகின்றது.[5] இமயம் காலத்தால் பிந்தியது என்பதால், தென்னகத்தே எழுந்த இன்னொரு மலைத்தெய்வ வழிபாடே சிவவழிபாடாக வளர்ந்து, மக்கள் குடிப்பெயர்ச்சியால் இமயம் வரை நகர்ந்திருக்கின்றது என்றும் சொல்லப்படுகின்றது.[6] சிவனை உருவகிப்பதில் சாம்பல் பூசுதல், புலித்தோலாடை தரித்தல், மானையும் மழுவையும் கையில் வைத்திருத்தல், பன்றிக்கொம்பு, எலும்புகளை அணிதல் போன்ற பழங்குடி அம்சங்கள் முக்கிய பங்கு வகிப்பதால், பல இனக்குழுக்களின் கலப்பின் விளைவாகப் பிறந்த பெருந்தெய்வமே சிவன் எனலாம். நாகர் பழைமை வாய்ந்த தனி இனம் என்று வாதிடுவோர், சிவனின் ஆபரணங்களாக நாகங்கள் காணப்படுவதைக் கொண்டு, சிவன் நாகரின் தெய்வம் என்பர்.[7] சிவ இலிங்க வழிபாட்டுக்கு அடிப்படையாக நடுகல் வழிபாடே அமைந்திருக்கலாம் என்ற கருதுகோளும் உண்டு. இத்தகைய சான்றாவணங்களால், சிவ வழிபாடு மிகத்தொன்மையானது என்றும், மானுடர்களின் மிகப்பழைய தெய்வங்களில் ஒருவன் ஈசன் என்றும் அறியமுடிகின்றது.

சிந்துவெளி நாகரிகச் சான்றுகள்

சிந்துவெளியில் கிடைத்த "பசுபதி ஈசன்" முத்திரை

பொ.மு 2500 முதல் 2000 வரை நிலவியதாகக் கருதப்படும்[8] சிந்துவெளி நாகரிகக் களவெளிகளில் கிடைத்த சில ஆதாரங்கள், அக்காலத்தே கூட, சிவ வழிபாடு நிலவியிருக்கக்கூடும் என்ற ஊகத்தை வலுப்படுத்துவனவாக இருக்கின்றன. மொகெஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகளில் சிவலிங்கத்தை ஒத்த பல கற்கள் கிடைத்துள்ளன. இருகொம்புகளுடன் விலங்குகள் சூழ அமர்ந்திருக்கும் மனித உருவ முத்திரை, ஈசனின் "பசுபதித்" தோற்றத்தைக் குறிக்கின்றது என்றும் அதுவே மிகப்பழைய முந்து-சிவன் சிற்பம் என்றும் சிந்துவெளி ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்திருந்தனர்.[9] அதைக் கூர்ந்து ஆராய்ந்த பலர், அது சிவவடிவம் என உறுதியாகச் சொல்லமுடியாதென்றும், எனினும் அமர்ந்திருக்கும் நிலை, தெளிவற்றுத் தெரியும் மூன்று முகங்கள், பிறைநிலா எனக் கொள்ளக்கூடிய இரு கொம்புகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு, இது சிவன் எனும் பெருந்தெய்வம் எழுவதற்கு முந்திய வடிவமாக இருக்கக்கூடும் என்றும் சொல்கின்றனர்.[8]

வேதகாலச் சைவம்

இலகுலீசர் - பாசுபதத்தைத் தோற்றுவித்தவர்

பொ.மு 1500இற்கும் 500இற்கும் இடைப்பட்ட வேதகாலத்து நூல்களில் வருகின்ற உருத்திரன், இயமன் முதலான தெய்வங்களின் கலவையாகவே பின்னாளில் ஈசன் எழுந்தான் என்பர். இருக்கு வேதத்தில், எவ்வித முக்கியத்துவமும் இல்லாமல், மிகச்சில பாடல்களிலேயே போற்றப்படும் உருத்திரன், யசுர் வேதத்தின் திருவுருத்திரப் பகுதியில், இன்றைய சிவனாக வளர்ந்து நிற்பதைக் காணலாம். வேதங்களை அடுத்து உருவான உபநிடதங்களில் பல சிவ வழிபாட்டைப் போற்றுவதிலிருந்து, வேதகாலத்தின் பிற்பகுதியிலேயே சிவன் இன்றைய வழிபாட்டு முக்கியத்துவத்தை அடைந்துவிட்டதை அறியமுடியும்.

தென்னகச் சைவம்

சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு பற்றிய குறிப்புகள் காணப்படும் போதும், அவை கிறிஸ்துவுக்குப் பிந்தியவை என்பது பொதுவான கருத்தாக காணப்படுகின்றது. எனினும் தமிழக மற்றும் இலங்கையில் பொறிக்கப்பட்ட கிறிஸ்துவுக்கு முந்திய பிராமிச் சாசனங்களிலும் நாணயங்களிலும் காணப்படும் "சிவ" என்ற பெயரும், நந்தி, திரிசூலம், பிறைநிலா முதலான சிவசின்னங்களும், தென்னகத்தில் பல்லாண்டுகளாகவே சைவம் நிலவிவந்ததற்குச் சான்று கூறும்.[10]

சைவத்தின் எழுச்சி

தெளிவான அடையாளங்களுடன், சைவமானது முழுமையான ஒரு மதமாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டது, பொ.மு 3 முதல் பொ.பி 2ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் என்று சொல்லப்படுகின்றது.[11] பொ.மு 6 - 4 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே தொகுக்கப்பட்ட சுவேதாசுவதரமே மிகப்பழைமையான சைவ நூலாகக் கொள்ளப்ப்படுகின்றது.[12] உலக இன்பங்களைத் துறந்து கடுநோன்புகள் புரிந்து தாந்திரீக நெறியில் ஈசனை வழிபடும் வழக்கம், கிறிஸ்து காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. இவர்கள் "பாசுபதர்" என்று அறியப்பட்டனர். பாணினியின் அஷ்டாத்யயி எனும் சங்கத இலக்கண நூலுக்கு பதஞ்சலி முனிவர் எழுதிய மாபாடிய உரையில் (பொ.மு 2ஆம் நூற்றாண்டு) , பாசுபதர் பற்றிய குறிப்புகளைக் காணமுடிகின்றது. பாசுபதரில் தலைசிறந்தவரான இலகுலீசர் இக்காலத்திலேயே (பொ.மு 2 முதல் பொ.பி 2ஆம் நூற்றாண்டு) தோன்றி, பாசுபத நெறியை வளப்படுத்தியதாகத் தெரிகின்றது.

சங்கரநாரணன் வடிவில் இந்தோனேசியாவில் ஈசன்.

இலகுலீசருக்குப் பின் அவர் ஏற்படுத்திய புரட்சி, பாசுபதத்திலிருந்து, காளாமுகம், காபாலிகம் எனும் இரு கிளைச்சைவங்களை அடுத்தடுத்து உருவாக்கியது. இவை மூன்றும் ஆதிமார்க்கம் என்றே அறியப்பட்டதுடன், துறவிகளுக்கு, குறிப்பாக அந்தணராகப் பிறந்து சைவ சன்னியாசிகளாக மாறியோரால் மாத்திரமே கடைப்பிடிக்கப்பட்டது. வைணவம், பௌத்தம், சமணம் முதலான நெறிகளுடன் இவைகொண்ட உரையாடல்கள், சைவத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டுச்சென்றதுடன், பொ.பி 5ஆம் நூற்றாண்டுக்குப் பின் சைவம் மாபெரும் சமயமாக எழுச்சிபெறுவதற்கான உறுதியான கால்கோள்களாக விளங்கின.

சைவத்தின் உன்னதகாலம்

பொ.பி 600 முதல் 1200 வரையான காலம், சைவத்தின் பேரெழுச்சிக் காலமாக அறியப்படுகின்றது. ஆதிமார்க்கத்துக்குப் பின் உருவான சித்தாந்தமும், வாமம், தட்சிணம் முதலான புறச்சித்தாந்த நெறிகளும் மந்திரமார்க்கம் எனும் பிரிவை சைவத்தில் தோற்றுவித்தன. இவை துறவிகளுக்கு மாத்திரமன்றி, இல்லறத்தாருக்கும் உலகியல் இன்பங்களுக்கும் உரிய முன்னுரிமை கொடுத்ததால், தீவிரமாக மக்கள் மத்தியில் பரவலாயிற்று. சமணம், பௌத்தம் என்பவற்றுக்கு எதிராக, அப்பர், சம்பந்தர் முதலான நாயன்மார், பக்தி இயக்கத்தை ஏற்படுத்தி, சமூக மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தனர். வடநாட்டில் இதேகாலத்தில் உருவான புராணங்கள் மக்கள் மத்தியில் சைவத்தை எடுத்துச்செல்லலாயின.

இக்காலத்தில் சைவம், இந்திய உபகண்டத்தில் மாத்திரமன்றி, தென்கிழக்காசியா வரை கூட மிகச்சிறப்புடன் திகழ ஆரம்பித்தது. பாதாமி சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் (660 கி.பி), கீழைக்கங்கன் தேவேந்திரவர்மன் (682/683), காஞ்சியின் இரண்டாம் நரசிம்ம பல்லவன் (680 - 728) போன்றோர், சைவ ஆச்சாரியர்களிடம் மகுடாபிஷேகம் பெற்றே பட்டம்சூடிக்கொண்டதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. கம்போடியாவின் அங்கோர் வம்சத்து முதல் மன்னன் ஈசானவர்மனும் சைவத்துறவியிடமே இராஜ்யாபிஷேகம் பெற்றுக்கொண்டதும், சாவகத்து மயாபாகித்துப் பேரரசு மன்னன் விஜயன், சைவ மகுடாபிஷேகம் பெற்று நாட்டை ஆண்டதும், தென்கிழக்காசிய வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.[13] இவ்வாறு, துறவிகளின் மதமாக இருந்த சைவம், அரச ஆதரவைப் பெற ஆரம்பித்ததுடன், அதற்கு முன் அரச ஆதரவைப் பெற்றிருந்த சமணம், பௌத்தம் என்பவற்றைத் தன் தத்துவச்செழிப்பால் தோற்கடித்து தன்னை வலுப்படுத்திக்கொண்டது.

பிற்காலம்

காஷ்மீரில் பல்கிப்பெருகிய சைவநெறி, தொடர்ச்சியான முகலாயப் படையெடுப்பால் தென்னகம் நாடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏற்கனவே சைவம் செழித்திருந்த தென்னகம், சைவத்தை மேலும் வரவேற்றதுடன், காஷ்மீரில் தோன்றி வளர்ந்துகொண்டிருந்த சித்தாந்த மந்திரமார்க்கத்தை மேலும் வலுப்படுத்தி, இந்திய மெய்யியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, சமஸ்கிருதம் அல்லாத வேற்றுமொழியொன்றில் - தமிழில் - சைவ மெய்யியலொன்றைத் தோற்றுவித்துச் சரித்திரம் படைத்தது. அதேகாலத்தில் பிராமண எதிர்ப்புடன் கன்னட தேசத்தில் தோன்றிய வீர சைவம் சாதிமத வேறுபாடின்றி, சகலரிடமும் சைவத்தைக் கொண்டு சேர்த்தது. இவ்வாறு, தமிழகம், காஷ்மீர், கன்னடம் ஆகிய மூன்று பகுதிகளும், சைவ சமயத்தின் தவிர்க்கமுடியாத - இன்றியமையாத பாகங்களாக மாறிப்போயின.

சைவக் கிளைநெறிகள்

சைவம் - அதன் கிளைநெறிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

ஊர்த்தசைவம், அனாதி சைவம், ஆதிசைவம், மகாசைவம், பேதசைவம், அபேத சைவம், அந்தரசைவம், குணசைவம், நிர்க்குணசைவம், அத்துவாசைவம், யோகசைவம், ஞானசைவம், அணுசைவம், கிரியாசைவம், நாலுபாதசைவம், சுத்தசைவம் என்று பதினாறு வகைப்பட்டதாய்ச் சிவனைப் பரதெய்வமாகக்கொண்டு வழிபடுஞ் சமயம், சைவம் ஆகும்.[14]

  1. காசுமீர சைவம்
  2. வீர சைவம்
  3. சிவாத்துவைதம்
  4. பாசுபதம்
  5. காபாலிகம்
  6. காளாமுகம்

இவற்றின் தத்துவங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றில் சில வேறுபாடுகள் உள்ளனவாயினும் அவற்றின் அடிப்படைக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை. சைவ சித்தாந்தத்தை தத்துவமாகக் கொண்டு விளங்குவது சித்தாந்த சைவம், இந்தியாவில் மட்டுமன்றி நேபாளம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பிறநாடுகளிலும் விளங்குகிறது.

சைவ மெய்யியல்

சிவக்குறியாம் இலிங்கவடிவிலேயே ஈசன் வழிபடப்படுவன்: திருவானைக்கா ஈசன்

வாழ்ந்தே ஆகவேண்டிய தவிர்க்க முடியாத நியதிக்கு உட்பட்டிருக்கும் நமது வாழ்க்கை பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் (பற்று) என்ற மூலங்கள் மூன்றின் சேர்க்கையால் ஆனது. இவற்றில் பதிக்குப் பாசத்தால் ஆவதொன்றுமில்லை. பாசத்துக்குப் பதியைத் தொழுது பயன் பெற்றுக் கொள்ளமுடியாது. மூன்றாவதாகிய பசுவே பதியின் இடையறாத உபகாரத்தால் தனது வினைப் பயனாகப் பிறந்து இறந்து பெறும் நீண்டகால அனுபவத்தில் பாசத்தடையில் (பற்றிலிருந்து) இருந்து நீங்கிப் பதியினைச் சார்ந்து விடுதலை பெறுவதற்கான நிலையில் உள்ளது. இந்த நிலையே ஞானம் எனப்படுகிறது. இந்த ஞானமே சைவ வழிபாட்டின் தனித்துவப் பண்பாகும்.

சைவ வழிபாட்டிற்கு ஆதார நூலாக விளங்கும் சிவாகமங்கள் இந்த ஞானம் பற்றிய விளக்கத்தை முதலில் வைத்தே கடவுள் வழிபாட்டு விதிமுறைகளைத் தெரிவிக்கின்றன. சைவ வழிபாட்டுத் தலமான ஆலயமும் ஞானி ஒருவரின் உடல் அமைப்பின் மாதிரியிலேயே உருவமைக்கப்படும். அங்கு நிகழும் கிரியைகள் யாவும் (விழுந்து கும்பிடுதல் முதல் பூசை செய்தல் வரை) இந்த ஞான விளக்கப் பின்னணியிலேயே அமையும்.

கொலை, களவு, கள்ளுக் குடித்தல், ஊண் உண்ணல், பொய் பேசுதல், சூதாடுதல் போன்றவற்றினை சைவம் பாவம் என்கிறது. இதனை செய்பவர்கள் நரகத்தில் விழுந்து அத்துன்பத்தை அனுபவிப்பர் என்கிறது. புண்ணியம், பதிபுண்ணியம் பசுபுண்ணியம் என இருவகைப்படும். பதி புண்ணியம் சிவபுண்ணியம் எனவும்படும். பசு புண்ணியம் உயிர்புண்ணியம் எனவும் படும். பதி புண்ணியம், சிவபெருமானை நோக்கிச் செய்யப்படும் நற்செயல்கள் ஆகும். சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நோக்கிச் செய்யும் நற்செயல்கள் அனைத்தும் பசுபுண்ணியம் ஆகும். பதி புண்ணியங்கள் ஒருபோதும் அழிவில்லாமல் என்றும் நின்று முத்தியைக் கொடுக்கும். பசு புண்ணியங்களுக்கும் பயன் உண்டு; ஆனால், அப்பயன் அனுபவித்து முடிந்ததும் அழிந்துவிடும். பதி புண்ணியப்பயன் சிவபெருமானால் அனுபவிக்கப்படாததால், அழிவதில்லை. அதன் பயன், உயிர்களுக்கு நிலையான இன்பத்தைத் தருவதே ஆகும்.

“பசித்து உண்டு, பின்னும் புசிப்பானை ஒக்கும்
இசைத்து வருவினையில் இன்பம்."  - சிவஞானபோதம் 8:1

இதன் பொருள் பசியோடு இருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுப்பது பசு புண்ணியம்; அவ்வுணவின் பயனாக, அவனுக்குள்ள பசி ஆறுகிறது. அவனுக்கு மீண்டும் பசி வரும்போது, முன்புண்ட உணவின் பயன் அனுபவிக்கப்பட்டுவிட்டதால், அவனுக்குச் செய்த பசு புண்ணியமும் அத்தோடு அழிந்துவிடுகிறது.

சிவமே முதல் எனக் கருதிச் செய்யப்படும் அனைத்தும் சிவ புண்ணியமாகும், மேலும் 1. கடவுளை வழிபடல், 2. தாய், தந்தை, ஆசான் இவர்களைப் பேணுதல், 3. உயிர்க்கு இரங்குதல், 4. உண்மை பேசுதல், 5. செய்நன்றி அறிதல் போன்றனவும் புண்ணியத்தில் சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு புண்ணியங்களை செய்தவர்கள் சிவ இன்பத்தையும், சீவ ( உயிர் ) புண்ணியங்களைச் செய்தவர் சுவர்க்க இன்பத்தையும் அனுபவிப்பர் என்று சைவர்கள் நம்புகிறார்கள்.[15] சைவ அடியாளர்கள் உடலில் திருநீறு அணிய வேண்டும். சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே உறக்கம் நீங்கி எழ வேண்டும்.திருநீறு அணிந்து சிவபெருமானை நினைந்து திருப்பள்ளி எழுச்சி முதலிய திருமுறைப் பாடல்களை ஓத வேண்டும். தூய நீர் கொண்டு அனுட்டானம் செய்து திருவைந்தெழுத்தை எண்ணித் திருமறைகள், திருமுறைகள் ஓத வேண்டும்.

சைவ அடியவர்கள்

நால்வர்

சைவ உலகில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தர மூர்த்தி சுவாமிகளும், மாணிக்கவாசகரும் நால்வர் எனப்படுவர். இவர்களை சைவசமயக் குரவர்கள் என்றும் அழைப்பர். சந்தான குரவர் என்போர் இவரிலும் வேறுபட்ட, மெய்யியல் சான்றோர். வீர சைவருக்கு பசவர் முதலான சரணரும், காஷ்மீரிகளுக்கு அபிநவகுப்தர், வசுகுப்தர் முதலானோரும், சிரௌத்தருக்கு அப்பைய தீட்சிதர், ஸ்ரீகண்டர், அரதத்தர் ஆகியோரும், நாத சைவருக்கு கோரக்கர் முதலானோரும் முக்கியமான சைவப்பெரியோர்.

சைவ நெறி நூல்கள்

சைவ ஆகமங்கள் முக்கியமான சைவநூல்கள். வடநாட்டில் வழக்கிலுள்ள பைரவ தந்திரங்களும் இத்தகையன. தமிழ்ச் சைவருக்கு பன்னிரு திருறைகள், பதினான்கு சாத்திரங்கள் முக்கியமானவை. வீரசைவருக்கு வசன சாகித்தியம், நாத சைவருக்கு சித்த சித்தாந்த பத்ததி, சிரௌத்தருக்கு சுருதி சூக்தி மாலை என்று சைவ நூல்கள் அளவில.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202111.htm
  2. Olasky, M. (2004). The Religions Next Door: What We Need to Know about Judaism, Hinduism, Buddhism, and Islam--and what Reporters are Missing. B&H Publishing Group..
  3. Todd M. Johnson and Brian J. Grim. (2013) “The World’s Religions in Figures: An Introduction to International Religious Demography”, First Edition, John Wiley & Sons Ltd., pp. 1 – 27.
  4. Kanchan, R. K. (1990). Hindu Kingdoms of South-East Asia (Vol. 13). Cosmo Publications..
  5. Tiwari, S. K. (2002). Tribal roots of Hinduism. Sarup & Sons..
  6. Sen, S. N. (1999). Ancient Indian history and civilization. New Age International..
  7. Lochtefeld, J. G. (2002). The Illustrated Encyclopedia of Hinduism: AM (Vol. 1). The Rosen Publishing Group. p.454.
  8. > Flood, Gavin (1996). An Introduction to Hinduism. Cambridge: Cambridge University Press. ப.20-28. ISBN 0-521-43878-0..
  9. Michaels, Axel (2004). Hinduism: Past and Present. Princeton, New Jersey: Princeton University Press.ப.312 ISBN 0-691-08953-1..
  10. பத்மநாதன்.சி (2013). இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம். பக். 1 - 20.
  11. Flood, Gavin (1996). An Introduction to Hinduism. Cambridge: Cambridge University Press. ப.204 - 205 ISBN 0-521-43878-0..
  12. Chakravarti, Mahadev (1994), The Concept of Rudra-Śiva Through The Ages (Second Revised ed.), Delhi: Motilal Banarsidass, ப.9 ISBN 81-208-0053-2.
  13. White, D. G. (2001). Tantra in practice (Vol. 8).p.133. Motilal Banarsidass Publ...
  14. சென்னைப் பேரகரமுதலி - சைவ வகைகள்
  15. சைவ சமயம் - வினாவிடை

உசாத்துணை

  • க. கணேசலிங்கம், சைவசித்தாந்த வினாவிடை, கொழும்பு, 2005

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.