விசுவாமித்திரர்

விசுவாமித்திரர் (சமஸ்கிருதம் विश्वामित्र) பண்டைய இந்தியாவின் மிகப்பெரும் முனிவராகக் கருதப்படுபவர். குசநாபரின் மகன். கௌசிகன் என்ற பெயருடைய மன்னன். வசிட்டரோடு ஏற்பட்ட போட்டியின் காரணமாக, கடுமையான தவங்களைச் செய்து பிரம்ம ரிஷியானவர். காயத்ரி மந்தரம் உட்பட பழமையான ரிக் வேதத்தின் பல பகுதிகளை எழுதியதாக கருதப்படுகிறார். புராணங்களின் படி ஆதி முதல் 24 ரிஷிகளே முழு ஞானத்தையும் சக்தியையும் பெற்றவர்களாக இருந்தாக கூறப்படுகிறது.

விசுவாமித்திரர்-மேனகை ரவி வர்மா ஓவியம்

விசுவாமித்திரரின் கதை வால்மீகி இராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.[1]

மேனகை

விஸ்வாமித்தர முனிவர் கடுந்தவம் புரிந்தார். அவருடைய தவத்தின் கனல் தேவ லோகத்தில் இருக்கும் இந்திரனுக்கு அச்சத்தினை உண்டாக்கியது. எனவே தேவ கன்னிகையான மேனகையை விஸ்வாமித்தரர் முன் நடனமாடச் செய்து, முனிவரின் தவத்தினை கலைக்க கட்டளையிட்டான். அவ்வாறே மேனகை விஸ்வாமித்திரர் முன் நடனமாடினாள்.

அவளுடைய நடனத்தினால் முனிவரின் தவம் கலைந்தது. அத்துடன் மேனகையை மனைவியாக ஆக்கிக்கொண்டார் விஸ்வாமித்திரர். இவர்கள் இருவருக்கும் சகுந்தலை என்ற மகள் பிறந்தாள். பின்னர், சகுந்தலை அரசன் துஷ்யந்தனை மணமுடித்து, அவர்களுக்கு பரதன் மகனாக பிறந்தான். ஆனாலும், தன் தவம் மேனகையால் கலைக்கப்பட்டதற்காக மேனகையை விசுவாமித்திரர் சபித்தார்.

பிரம்மரிஷி

மேனகையை சபித்த பின்னர், ஆயிரம் ஆண்டுகளுக்கு கடுந்தவம் செய்யும் பொருட்டு இமாலயத்திற்கு சென்று விடுகிறார் கௌசிகர். உண்ணாமல், மூச்சு விடுவதையும் கூட அறவே குறைத்துவிடுகிறார்.

பல ஆண்டுகளுக்கு பின் விரதத்தை முடித்து உண்ண முடிவு செய்யும் கௌசிகரை இந்திரன் மீண்டும் சோதிக்கிறார். ஏழை அந்தணராக வரும் இந்திரன், கௌசிகரிடம் யாசகம் கேட்க, அவரும் உணவை யாசகமாக கொடுத்துவிட்டு தன் தவத்தை தொடர்ந்தார். அந்த ஆயிரம் ஆண்டுகள் தவவலிமையை கண்ட தேவலோக தலைவர் பிரம்மா, கௌசிகருக்கு "பிரம்மரிஷி" எனும் பட்டத்தை வழங்கி, விசுவாமித்திரர் எனும் பெயரும் இடுகிறார்.

திரிசங்கு

திரிசங்கு எனும் ஓர் அரசன், மஹாகுரு வசிட்டரிடம் தன்னை உடலுடன் சொர்க்கத்திற்கு அனுப்புமாறு கோரிக்கை விடுகிறார். அவ்வாறு செய்ய இயலாது என்று வசிட்டர் மறுத்துவிடுகிறார். அதனை தொடர்ந்து, வசிட்டரின் ஆயிரம் புதல்வர்களிடமும் அதே கோரிக்கையை வைக்கிறார் திரிசங்கு. அவர்களும் மறுத்து, சிரிசங்குவை வெட்டியானாக போக சபித்துவிடுகிறார்கள். அதனால், சாம்பல் பூசப்பட்ட உடலுடன், இரும்பு அணிகலன்களும், கருப்பு ஆடையும் அணிந்த மனிதனாக உரு மாறுகிறார் திரிசங்கு. தன் உரு மாறியதால் அடையாளம் தெரியாமல் போக, ராஜாங்கத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார் திரிசங்கு.

வெளியேறும் பொழுது, விசுவாமித்திரரை சந்திக்க நேரிடுகிறது. அவர், திரிசங்குவிற்கு உதவ ஒப்புக்கொள்கிறார். விசுவாமித்திரரின் தவபலம் உச்சத்தில் இருக்கும் பொழுது, திரிசங்குவை உடலுடன் சொர்க்கத்தில் ஏற்றுக்கொள்ள வைக்கும்படி யாகம் ஒன்றை வளர்த்தார். மாறாக, எந்த தேவரும் செவிசாய்க்கவில்லை. மேலும் கோபமுற்ற அவர், தனது மொத்த தவப்பலத்தையும் பயன்படுத்தி, திரிசங்குவை சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்தார். உள்ளே நுழையும் பொழுது, சிரிசங்குவை தடுத்து அனுமதி மறுத்தார் இந்திரன்.

அதனால், திரிசங்குவிற்காக என்றே புது உலகம் ஒன்றை படைத்தார். அப்போது, பிருகஸ்பதி தலையிட்டு, விசுவாமித்திரரை மேலும் செய்யவேண்டாம் என்று உத்தரவு இட்டார். இருப்பினும் சொர்கம் சென்ற திரிசங்கு, வானிலே தலைகீழாக மாட்டிக்கொண்டு நட்சத்திரமாக மாறினார்.[2]

கோவில்

விசுவாமித்திரருக்குத் தனிக் கோவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் விஜயாபதி எனும் ஊரில் உள்ளது.


மேற்கோள்கள்

  1. "வால்மீகி ராமாயணம்".
  2. "நட்சத்திரம் - திரிசங்கு".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.