இயேசு சபை

இயேசு சபை (சேசு சபை - சுருக்கம்: சே.ச.) (இலத்தீன்: Societas Iesu, எஸ்.ஜே. மற்றும் எஸ்.ஐ.; ஆங்.: Society of Jesus) கத்தோலிக்க திருச்சபையில் அமைந்துள்ள ஒரு (Religious Order) துறவற சபை ஆகும். இயேசு சபையில் ஆண்கள் மட்டுமே உறுப்பினராகலாம். அவர்களில் பெரும்பான்மையினர் குருக்களும் சிலர் அருட்சகோதரரும் ஆவர். பொதுவழக்கில் "கடவுளின் வீரர்கள்" என்றழைக்கப்படும் இவர்கள் [2] தம் சபை அமைப்புக் கொள்கைகளுக்கிணங்க இயேசு கிறித்துவின் நற்செய்தியைப் பரப்புவதிலும் (evangelization) திருத்தூதுப் பணி (apostolic ministry) ஆற்றுவதிலும் 112 நாடுகளில் ஆறு கண்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இயேசு சபை
சுருக்கம்சே.ச. (SJ)
குறிக்கோள் உரைஇலத்தீனில்:Ad maiorem Dei gloriam
தமிழில்: கடவுளின் அதி உன்னத மகிமைக்காக
உருவாக்கம்27 செப்டம்பர் 1540 (1540-09-27)
வகைகத்தோலிக்க துறவற சபை
தலைமையகம்இயேசு கோவில் (தாய்க்கோவில்),
அமைவிடம்
ஆள்கூறுகள்41°54′4.9″N 12°27′38.2″E
உயர் தலைவர்
அடால்ஃபோ நிக்கோலசு
முக்கிய நபர்கள்
லொயோலா இஞ்ஞாசியார் — நிறுவனர், பிரான்சிஸ் சவேரியார்
பணிக்குழாம்
19,216[1]
வலைத்தளம்sjweb.info

இயேசு சபையினர் ஆற்றும் பல்வேறு பணிகளுள் கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்: கல்வித் துறை (பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், இறையியல் கல்லூரிகள், மெய்யியல் துறைகள் போன்றவை நடத்தல்); அறிவாய்ந்த ஆய்வுகள் நிகழ்த்தல்; கலைகளை வளர்த்து, பண்பாட்டு ஆய்வை மேம்படுத்தல். அவர்கள் ஈடுபடுகின்ற வேறு முதன்மைப் பணிகள் கிறித்தவ மறைபரப்புப் பணி, தியான முயற்சிகள் நடத்துதல், பங்குப் பணி, மருத்துவப் பணி, சமூக நீதிப் பணி, தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுப் பணி, மனித உரிமைகள் காப்புப் பணி, கிறித்தவ ஒருமைப்பாட்டை வளர்க்கும் பணி, பல்சமய உரையாடல் பணி போன்றவை ஆகும்.

இயேசு சபையின் தோற்றம்

புனித இலயோலா இஞ்ஞாசியார்

இயேசு சபை புனித லொயோலா இஞ்ஞாசியார் (1491-1556) என்பவரால் நிறுவப்பட்டது. ஒரு போரில் படுகாயமடைந்து படுக்கையிலிருந்த இஞ்ஞாசியார் இறையருளால் ஆழ்ந்ததொரு மனமாற்றம் அடைந்தார். இயேசு கிறித்துவைத் தம் வாழ்வில் இன்னும் அதிக ஈடுபாட்டோடு பின்பற்றிட இஞ்ஞாசியார் துணிந்தார். ஆன்ம பயிற்சிகள் என்றழைக்கப்படும் சிறந்ததொரு கிறித்தவ ஆன்மிக நூலை இயற்றினார். 1534இல் இஞ்ஞாசியார் பாரிசு நகர் பல்கலைக் கழகத்தில் தம்மோடு கல்விபயின்ற ஆறு இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களோடு சேர்ந்து, வறுமை, தூய்மை மற்றும் பாப்பரசருக்கு (திருத்தந்தை) கீழ்ப்படிதல் என்ற உறுதிமொழிகளை எடுத்து, ஒரு குழு வாழ்வுக்கு வித்திட்டார். அதுவே நாளடைவில் இயேசு சபை என்னும் மரமாக வளர்ந்து தழைத்தோங்கியது.

கத்தோலிக்க திருச்சபையோடு இணைந்து, அதன் மேலாண்மைக்குப் பணிந்து செயல்பட வேண்டும் என்று இஞ்ஞாசியார் மிகவும் வலியுறுத்தினார். "திருச்சபைத் தலைமைப்பீடம் வரையறுத்தால், நன் காணும் வெள்ளையும் கருப்பே என்று நம்பத் தயங்கமாட்டேன்" என்னும் அவரது கூற்று இதை உறுதிப்படுத்துகிறது (காண்க: "திருச்சபையோடு இணைந்து சிந்திப்பதற்கான ஒழுங்குகள்", ஒழுங்கு 13)[3]. 1539ஆம் ஆண்டு இஞ்ஞாசியார் இயேசு சபை குறித்து வரைந்த திட்டத்திற்கு 1540ஆம் ஆண்டு திருத்தந்தை மூன்றாம் பவுல் (ஆட்சிக் காலம் 1534-1549) ஒப்புதல் அளித்தார். இந்த ஒப்புதல் "திருத்தந்தை ஆணையறிக்கை" (Papal Bull) என்றழைக்கப்படும் ஆவணத்தின் மூலம் வழங்கப்பட்டது.

பாப்பரசர் 3ஆம் பவுலிடமிருந்து இஞ்ஞாசியார் "திருதந்தை ஆணையறிக்கை" பெறுவதை சித்தரிக்கும் ஓவியம். இது யோவான் கிறிசுடோபர் ஹன்கேவினால் 1743க்குப் பிறகு வரையப்பட்டது.

கத்தோலிக்க திருச்சபையில் சீர்திருத்தம் கொணரவும் (Counter-Reformation) அதைக் காலத்தின் தேவைகளுக்கேற்ப புதுப்பிக்கவும் இயேசு சபையினர் ஊக்கத்தோடு ஒத்துழைத்தார்கள்.

இயேசு சபைத் தலைமையிடம்

இயேசு சபையின் தலைமையிடம் உரோமை நகரில் அமைந்துள்ளது. அதன் உயர் தலைவர் அருள்மிகு அடோல்ஃபோ நிக்கொலாசு ஆவார்.[4][5]

புனித இஞ்ஞாசியார் பணிபுரிந்த அலுவலகமும் அதோடு இணைந்த பயிற்சிக் கல்லூரி விடுதியும் இன்று இயேசு சபையினரின் முதன்மைக் கோவிலாகிய இயேசு கோவில் என்னும் பேராலயத்தின் பகுதியாக உள்ளன. இந்திய நாட்டில் மறைப்பணி ஆற்றி உயிர்நீத்த இயேசு சபை உறுப்பினரான புனித பிரான்சிஸ் சவேரியார் (1506-1552) என்பவரின் வலது கை இக்கோவிலில் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இயேசு கிறித்துவின் தாய் மரியா மீது இஞ்ஞாசியார் மிக்க பக்திகொண்டிருந்தார். அவர் தோற்றுவித்த இயேசு சபையும் "வழிகாட்டும் அன்னை" (Madonna Della Strada) என்னும் சிறப்புப் பெயர் பூண்ட அன்னை மரியாவின் பாதுகாவலில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இயேசு சபையினர்

அக்பரின் அரசவையில் இயேசு சபையினர்,~ 1605

இந்தியாவில் இயேசு சபை நடத்தும் கல்விக்கூடங்கள்

இந்திய நாட்டில், குறிப்பாகத் தமிழகத்தில் இயேசு சபையினர் பல கல்லூரிகளையும் பள்ளிகளையும் நடத்தி வருகின்றனர். அவற்றில் சில:

  • புனித யோசஃப் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, பெங்களூரு (முன்னாள் மாணவர்களாக ராகுல் திராவிட்,சபீர் பாடியா, நிகில் சின்னப்பா படித்துள்ளனர்)
  • புனித லாரன்சு உயர்நிலைப்பள்ளி, கொல்கத்தா
  • இலயோலாக் கல்லூரி, சென்னை
  • இலயோலாக் கல்லூரி, வேட்டவலம்
  • இலயோலாக் கல்லூரி, மெட்டாலா
  • புனித வளனார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
  • புனித சேவியர் கல்லூரி, மும்பை
  • புனித சேவியர் கல்லூரி, கொல்கத்தா
  • சேவியர் தொழிலாளர் தொடர்பு கழகம் (XLRI), ஜாம்ஷெட்பூர்
  • சேவியர் மேலாண்மைக் கழகம், புவனேசுவர் (XIMB)
  • காம்பியன் பள்ளி போபால்,
  • இலயோலாப் பள்ளி, ஜாம்ஷெட்பூர்
  • புனித சேவியர் உயர்நிலைப்பள்ளி இலயோலா கூடம், அகமதாபாத்
  • இலயோலா பள்ளி, திருவனந்தபுரம்
  • புனித அலோசியசு கல்லூரி, மங்களூரு
  • புனித சேவியர் கல்லூரி, திருவனந்தபுரம்
  • புனித சேவியர் கல்லூரி, பாளையம்கோட்டை
  • இலயோலா கல்லூரி, குன்கூரி
  • புனித சேவியர் கல்லூரி, பாலிபடா
  • புனித சேவியர் கல்லூரி, கோவா
  • ஆந்திரா இலயோலா கல்லூரி, விசயவாடா
  • இலயோலா அகாதெமி, செகந்திராபாத்
  • சேவியர் சமூக சேவைக் கழகம் (XISS) மற்றும் சேவியர் மேம்பாடு மற்றும் சேவைக் கழகம் (XIDAS)
  • புனித வின்சென்ட் உயர்நிலைப்பள்ளி, புணே
  • புனித சேவியர் கல்லூரி, ராஞ்சி
  • புனித சேவியர் கல்லூரி, அகமதாபாத்.
  • புனித மரியன்னை மேனிலைப் பள்ளி, திண்டுக்கல்
  • கார்மல் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்

கீழ்வரும் இறையியல் கல்லூரிகளையும் இயேசு சபையினர் நடத்துகின்றனர்:

  • ஞானதீப வித்யாபீட் (தெ நோபிலி கல்லூரி), புனே
  • வித்யஜ்யோதி இறையியல் கல்லூரி, தில்லி
  • அருட்கடல் மெய்யியல் கல்லூரி, அடையாறு, சென்னை
  • மாநில இறையியல் கல்லூரிகள் (அருட்கடல் உட்பட 9)

இயேசு சபையினர் நடத்துகின்ற கல்வி நிறுவனங்களிலிருந்து பல விளையாட்டு வீரர்கள் தோன்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது (புனித இஞ்ஞாசியார் உயர்நிலைப் பள்ளி, கும்லா; புனித மேரி உயர்நிலைப் பள்ளி, சம்தோலி; இலயோலா பள்ளி, ஜாக்மா, கொஹீமா).

ஊடகங்கள்

மேற்கோள்கள்

  1. Society of Jesus (7 May 2007). "News from the Curia (Vol. 11, N. 9)". The Jesuit Portal – Society of Jesus Homepage. Archived from the original on 18 March 2010. http://www.webcitation.org/5oK3zewfZ. "The annual statistics of the Society for 2006 have been compiled and will be mailed to the Provinces within a few days. As of January 1, 2007 the number of Jesuits in the world was 19,216 (364 fewer than in 2005)..."
  2. http://www.jesuits-chi.org/vocations/stories/knapp.htm
  3. Loyola, Ignatius; Rules for Thinking with the Church. Bettenson, Henry. ed. Documents of the Christian Church (3rd ). Oxford University Press, 1999. பக். 364–367. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0192880713. http://wps.ablongman.com/long_longman_lwcdemo_1/0,9493,1532993-,00.html. பார்த்த நாள்: 23 February 2010.
  4. News on the elections of the new Superior General
  5. africa.reuters.com, Spaniard becomes Jesuits' new "black pope"

வெளியிணைப்புகள்

கத்தோலிக்க திருச்சபை ஆவணங்கள்

இயேசு சபை ஆவணங்கள்

இயேசு சபை இணையதளங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.