காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் (ஆங்கிலம்:Kancheepuram), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், சிறப்பு நிலை நகராட்சியும் ஆகும். இது பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது.

காஞ்சிபுரம்
KANCHIPURAM
காஞ்சி
நகராட்சி
அடைபெயர்(கள்): காஞ்சி, பட்டு நகரம், கோயில் நகரம்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
ஆள்கூறுகள்: 12.82°N 79.71°E / 12.82; 79.71
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பகுதிதொண்டை நாடு
மாவட்டம்காஞ்சிபுரம்
அரசு
  வகைநகராட்சி
  Bodyகாஞ்சிபுரம் நகராட்சி
  மக்களவை உறுப்பினர்க. செல்வம்
  சட்டமன்ற உறுப்பினர்சி. வி. எம். பி. எழிலரசன்
  மாவட்ட ஆட்சியர்பி. பொன்னையா இ. ஆ. ப.
மக்கள்தொகை (2011)
  மொத்தம்1,64,265
மொழிகள்
  அலுவல்தமிழ் மொழி
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு631501-631503
தொலைபேசி குறியீடு044
வாகனப் பதிவுTN-21
சென்னையிலிருந்து தொலைவு72 கி.மீ (45 மைல்)
திருச்சியிலிருந்து தொலைவு287 கி.மீ (179 மைல்)
மதுரையிலிருந்து தொலைவு410 கி.மீ (255 மைல்)
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு118 கி.மீ (73 மைல்)
இணையதளம்https://kancheepuram.nic.in/ta/

முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன. ஆயிரம் கோயில்களின் நகரமான காஞ்சியில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகிய கோயில்கள் முக்கியமானவை. இவ்வாலயங்கள், சாக்தர், சைவர் மற்றும் வைணவர்கள் என பலவேறு சமயப் பிரிவினரும் இங்கு வந்து தரிசித்திட வழிவகுத்து இந்து சமயத்திற்கு சிறப்பு சேர்க்கின்றது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த நகரமாகும்.

வரலாறு

காஞ்சிபுரம் கைலசநாதர் கோயிலுக்குள் உள்ள சிற்பங்கள் - இது நகரத்தின் மிகப் பழமையான கோயில்
காஞ்சிபுரம் வரலாறு
200 
400 
600 
800 
1000 
1200 
1400 
1600 
1800 
2000 
காஞ்சிபுரத்தை ஆட்சி செய்தவர்களின் வரலாறு, தோராயமாக கால அளவில் கொடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அரிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் தலைநகராக விளங்கியது. பல்லவர்கள் ஆட்சி காலத்தில் காஞ்சிபுரம் அதன் தலைநகராக உச்ச புகழினை அடைந்தது.

"நகரேஷூ காஞ்சி" - "நகரங்களுள் காஞ்சி" என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளாங்கிய நகரம் காஞ்சி. பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப் பட்டதாக குறிப்புகள் உள்ளன. சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்கு பயனம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்கு பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் காஞ்சி நகரத்திற்கு கௌதம புத்தர் வருகை புரிந்தார் என்று கூறியுள்ளார்.

புகழ் பெற்ற கைலாசநாதர் கோயிலை எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்மன் ஜெயசிம்மன் கட்டிடத் துவங்கிட, அவனது மகன் மகேந்திர வர்மனால் அப்பணி தொடரப்பட்டது. பின்னர், நந்திவர்மன் பல்லவமல்லன், பரமேஸ்வர விண்ணகரம் என்னும் விஷ்ணு ஆலயத்தைக் கட்டினான். அதே மன்னனே, தற்காலிகமாக சமண சமயத்தைச் சார்ந்திருந்தபோது, சமண பாரம்பரியம் காஞ்சியில் வளர பங்காற்றினான். சமண ஆலயங்களும் காஞ்சியில் செழித்தன.

பத்தாம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்களின் கட்டுப்பாட்டில் காஞ்சி வந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்த சோழர் காலத்திலும், இவர்களுக்குப்பின் ஆட்சி புரிந்த விஜயநகர ஆட்சியிலும் புதிய ஆலயங்களின் கட்டுதலும், ஆலயங்களின் விரிவு படுத்தலும் மேற்கொள்ளப்பட்டது. ஏகம்பரநாதர் கோயிலுக்கு, கிருஷ்ணதேவ ராயர் கோபுரம் கட்டித்தந்தார். விஜயநகர ஆட்சி வீழ்ந்தபின், காஞ்சியில் பெருங்குழப்பம் நிலவியது. பாரதநாடு முழுதும் இந்துக் கோயில்கள் சூரையாடப்பட்ட இருண்ட காலம் அது. காஞ்சியிலும் அதன் எதிரொலியினால், வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில் போன்ற கோயில்களில் உற்சவ மூர்த்திகள் மறைத்து வைக்கப்பட்டன.

ஆங்கிலேயர்களின் வருகைக்குப்பின் ஏற்பட்ட போரில் இராபர்ட் கிளைவ், ஏகாம்பரநாதர் கோயிலை தனது கோட்டையாகவே பயன்படுத்திக் கொண்டான். இராபர்ட் கிளைவ், வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு ஆபரண நகைகள் பலவும் வழங்கி இருக்கிறான்.

பொருளாதாரம்

காஞ்சிப்பட்டு

காஞ்சிபுரத்தில் நெசவு செய்யப்படுகிற பட்டு சேலை
காஞ்சிபுரம் பட்டு புடவைகள் தொங்குகின்றன.

காஞ்சிபுரம் நெசவுத் தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை. பரம்பரை பரம்பரையாகப் பட்டுப்புடைவைகளை நெய்யும் நெசவாளிகள் இங்கு வாழ்கிறார்கள்.

அறிஞர் அண்ணா நினைவுப் புற்றுநோய் மருத்துவமனை

அறிஞர் அண்ணாவின் நினைவாக அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியால் 1969இல் காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. பின்னர் 1974இல் காஞ்சிபுரத்தினை அடுத்துள்ள காரப்பேட்டை என்ற இடத்தில் 43 ஏக்கர் பரப்பளவில் தமிழக முதல்வர் கருணாநிதியால் அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனை என்ற பெயரில் அடிக்கல் நாட்டப்பட்டு, 1981 ஆம் ஆண்டு புற்று நோயாளிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இம்மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறிதல், அந்நோய்க்குச் சிகிச்சை அளித்தல், நோய் குறித்த ஆராய்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் மட்டுமன்றி அண்மை மாநிலங்களான ஆந்திரா,கருநாடகம் மற்றும் கேரளாவிலுருந்தும் நோயாளிகள் பயன்பெறுகின்றனர். இந்தியாவிலேயே முதன் முறையாக இம்மருத்துவமனையில் எம். எஸ்.சி. மருத்துவ இயற்பியல் படிப்பு வழங்கப்படுகிறது.சனவரி 20,2010 அன்று அன்றைய துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் ரூ.10 கோடி மதிப்பிலான அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்தார்.

மக்கள் வகைப்பாடு

மதவாரியான கணக்கீடு
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
 
93.38%
முஸ்லிம்கள்
 
5.24%
கிறிஸ்தவர்கள்
 
0.83%
சைனர்கள்
 
0.4%
சீக்கியர்கள்
 
0.01%
பௌத்தர்கள்
 
0.01%
மற்றவை
 
0.11%
சமயமில்லாதவர்கள்
 
0.01%

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 45 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 41,807 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 164,384 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 88.1% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,005 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 15955 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,833 மற்றும் 151 ஆகவுள்ளனர். 2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி,காஞ்சிபுரத்தில் இந்துக்கள் 93.38%, முஸ்லிம்கள் 5.24%, கிறிஸ்தவர்கள் 0.83%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01%, சைனர்கள் 0.4%, 0.11% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.01% பேர்களும் உள்ளனர்.[5]

பாடற்றலம்

நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடற்பெற்ற தலங்களில் காஞ்சிபுரமும் முக்கியமானதாகும். அப்பர், சுந்தரர் மற்றும் சம்பந்தரால் ஏகாம்பரநாதர் மீது திருமுறைகளை புனைந்துள்ளார்கள். சுந்தரர், தனது இடது கண்ணில் பார்வையினை இழந்தபின், இத்தலத்திற்கு வந்து பாடிப்பின் மீண்டும் அப்பார்வையினைப் பெற்றாராம். மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் இத்தலத்தைப் பாடியுள்ளார். சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார் மற்றும் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஆகிய நாயன்மார்கள் இத்தலத்திலேயே வாழ்ந்துள்ளார்கள்.

திவ்யதேசங்கள்

ஆழ்வார்களான திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் நம்மாழ்வார் மற்றும் திருமழிசை ஆழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பதின்மூன்று திவ்யதேசங்களான வரதராஜப் பெருமாள் கோயில், திருவெஃகா (சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில்) , அஷ்டபுஜகரம், ஊரகம்-நீரகம்-காரகம் அடங்கிய உலகளந்த பெருமாள் கோயில், திருக்கார்வண்ணப் பெருமாள் கோயில், வைகுந்தநாத பெருமாள் கோயில், பச்சைவண்ண-பவளவண்ண பெருமாள் கோயில், பாண்டவதூதர் பெருமாள் கோயில், நிலாத்திங்கள் துண்ட பெருமாள் கோயில், திருக்கள்வனூர், திருவேளுக்கை மற்றும் திருத்தண்கா ஆகியன விஷ்ணுக்காஞ்சியிலேயே அமைந்துள்ளன. பொய்கையாழ்வார், எம்பெருமானார் இராமனுஜர், திருக்கச்சி நம்பிகள், வேதாந்ததேசிகர், பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியர் ஆகிய வைணவப் பெரியோர்கள் இத்தலத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்கள்.

அருணகிரிநாதர் தமது திருப்புகழ் பாடலில்கள் காஞ்சியின் குமரக்கோட்டத்தில் உறையும் குமரப் பெருமானைப் பாடியுள்ளார். கந்தபுராணம் இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியர் குமரக்கோட்டத்தினைச் சேர்ந்தவர்.

கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற தலம் காஞ்சியாகும். தமிழ்த் தியாகராஜர் எனப்போற்றப்படும் பாபநாசம் சிவன் அவர்களும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.

போக்குவரத்து

சாலைப் போக்குவரத்து

காஞ்சிபுரம் வழியாக, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, என்.எச் 48 நகரின் புறநகர்ப் பகுதியைக் கடந்து செல்கிறது. சென்னை, பெங்களூர், விழுப்புரம், திருப்பதி, திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, வேலூர், சேலம், கோயம்புத்தூர், திண்டிவனம், மதுரை, திருச்சி, புதுச்சேரி, தஞ்சாவூர், பழனி, வந்தவாசி, செங்கல்பட்டு, தாம்பரம், மேல்மருவத்தூர், கல்பாக்கம், நெய்வேலி, கடலூர், புதுக்கோட்டை மற்றும் கும்பகோணம் ஆகிய நகரங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தினசரி பேருந்து சேவைகளை வழங்குகிறது. இங்கிருந்து சென்னை செல்வதற்க்கு, இரண்டு பெரிய பேருந்து வழித்தடங்கள் உள்ளன, ஒன்று பூந்தமல்லி வழியாகவும், மற்றொன்று தாம்பரம் வழியாகவும் செல்லலாம். உள்ளூர் பேருந்து சேவைகளை, தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் பிரிவு வழங்குகிறது. 2006 ஆம் ஆண்டு நிலவரப்படி, 191 வழித்தடங்களுக்கு மொத்தம் 403 பேருந்துகள் நகரத்திலிருந்து இயக்கப்பட்டன.

தொடருந்துப் போக்குவரத்து

காஞ்சிபுரத்தில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. செங்கல்பட்டு - அரக்கோணம் ரயில் பாதையானது, காஞ்சிபுரம் வழியாக செல்கிறது. புதுச்சேரி மற்றும் திருப்பதிக்கு தினசரி ரயில்கள் இயக்கப்படுகின்றன, மேலும் மதுரைக்கு வாரத்திற்கு ஒரு நாள் விரைவு ரயிலும் மற்றும் நாகர்கோயிலுக்கு இரண்டு வாரத்திற்கு ஒரு நாள் விரைவு ரயிலும் இயக்கப்படுகின்றன.

வானூர்தி நிலையம்

இந்நகரிலிருந்து 72 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆனது, அருகிலுள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையமாகும்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்

நகராட்சி அதிகாரிகள்
தலைவர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்ற உறுப்பினர்சி. வி. எம். பி. எழிலரசன்
மக்களவை உறுப்பினர்க. செல்வம்

காஞ்சிபுரம் நகராட்சியானது காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த சி. வி. எம். பி. எழிலரசன் வென்றார்.

2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த க. செல்வம் வென்றார்.

படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.