கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் (കന്യാകുമാരി ജില്ല), (ஆங்கிலம்: Kanyakumari district) தமிழ் நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். மக்கள் தொகை அடர்த்தியில் தமிழகத்தில் இரண்டாம் இடம் (ச.கிமீக்கு 1111-பேர்) வகிக்கிறது. பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை என 3 நகராட்சிகள் உள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி ஆகும்.

கன்னியாகுமரி மாவட்டம்
"The Lands End"
கன்னியாகுமரி - சூரியோதயத்தின்போது விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை
  மாவட்டம்  
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் அகத்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் மற்றும் விளவங்கோடு
உருவாக்கம் 1956,1 நவம்பர்
தலைமையகம் நாகர்கோவில்
மிகப்பெரிய நகரம் நாகர்கோவில்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம். வாட்னிரே, இ. ஆ. ப.
சட்டமன்றம் (தொகுதிகள்) சட்டமன்றத் தொகுதிகள் (6)
மக்கள் தொகை

அடர்த்தி

18,70,374

1,111/km2 (2,877/sq mi)

பாலின விகிதம் M-1000/F-1019 /
கல்வியறிவு

• ஆண்
• பெண்

91.75% 

• 93.65%
• 89.90%

மொழிகள் தமிழ்,ஆங்கிலம் ,மலையாளம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

கடற்கரை

1,684 சதுர கிலோமீட்டர்கள் (650 sq mi)

72 கிலோமீட்டர்கள் (45 mi)

தட்பவெப்பம்

மழைவீழ்ச்சி
வெப்பநிலை
• கோடை
• குளிர்


     1,465 mm (57.7 in)

     27 °C (81 °F)
     16 °C (61 °F)

Central location: 8°03′N 77°15′E
இணையதளம் இணையதளம்

தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்குப்பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவர்க்கமாக திகழ்கிறது.

இம்மாவட்டத்தின் மேற்கில் கேரள மாநிலமும், வடக்கிலும், கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன.

2004 டிசம்பர் 26 அன்று தென் ஆசியாவையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கடற் பகுதிகளைக் கடுமையாகத் தாக்கிய சுனாமிப் பேரலை இம்மாவட்டத்தையும் பெரும் அழிவிற்கு உள்ளாக்கியது.

மாவட்ட நிர்வாகம்

வருவாய் நிர்வாகம்

இம்மாவட்டம் நாகர்கோயில் மற்றும் பத்மநாபபுரம் எனும் இரண்டு வருவாய் கோட்டங்களும், அகத்தீஸ்வரம் வட்டம், தோவாளை வட்டம், கல்குளம் வட்டம், விளவங்கோடு வட்டம் எனும் நான்கு வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்நான்கு வட்டங்கள் 18 வருவாய் பிர்காக்களும், 188 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.[3]

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்

கன்னியாகுமரி மாவட்டம் ஒரு மாநகராட்சி, மூன்று நகராட்சி மன்றங்களையும், 55 பேரூராட்சிகளையும்[4], 9 ஊராட்சி ஒன்றியங்களையும்[5], 90 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.[6]

மக்கள் தொகையியல்

1,684 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்கள் தொகை 18,70,374 ஆகும். அதில் ஆண்கள் 926,345; பெண்கள் 944,029 ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி (2001 – 2011) 11.60% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 1,111 நபர்கள் வீதம் உள்ளணர். பாலின விகிதம் 1000 ஆண்களுகு, 1019 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 91.75% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 93.65% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 89.90% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயத்திற்குட்பட்டவர்கள் 1,82,350 ஆக உள்ளனர்.[7]

இம்மாவட்டத்தில் இந்துக்கள் 9,09,872 (48.65%); கிறித்தவர்கள் 8,76,299 (46.85%); இசுலாமியர்கள் 78,590 (4.20%); மற்றவர்கள் 0.30% ஆக உள்ளனர்.

இம்மாவட்டத்தில் தமிழ், மலையாள மொழிகள் பேசப்படுகின்றன.

அரசியல்

இம்மாவட்டம் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு கிள்ளியூர் தமிழகச் சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.

வரலாறு

கன்னியாகுமரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ் பெற்ற குமரி அம்மன் என்னும் இந்து சமயக் கடவுளை மையப்படுத்தும் தல புராணத்திலிருந்து இம்மாவட்டத்துக்குக் கிடைத்திருக்கிறது. இது பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் 'குமரிப் பகவதி' என்னும் பெயருடன் சிவனை சேரும் பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்ததாகக் கூறுகிறது.

சங்க காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும் பகுதிகளை ஆய் என்னும் சிற்றரசனே ஆண்டதாகக் கூறப்படுகிறது. இப்பகுதியில் பொதுவாக அழைக்கப்படும் 'நாஞ்சில் நாடு', 'இடை நாடு' ஆகிய பகுதிகளை இம்மாவட்டம் உள்ளடக்குகிறது. இப்பகுதியில் வயல்கள் அதிக அளவில் இருந்ததால், நிலத்தை (வயலை) உழப் பயன்படும் நாஞ்சிலிலிருந்து (கலப்பை) இந்நிலப்பரப்புக்கு இப்பெயர் வந்தது என்பது பெயரியல் நிபுணர்களின் துணிபு. தற்போது அகத்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டங்களாக இருக்கும் நாஞ்சில் நாடு, பத்தாம் நூற்றாண்டின் முதற்பகுதி வரை பாண்டியர்களின் ஆட்சிப்பகுதியாக இருந்து பின் சேரர்கள் வசம் மாற்றமடைந்ததாகத் தெரிகிறது.

கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம்

தற்போது கல்குளம், விளவங்கோடு வட்டங்களாக இருக்கும் இடை நாடு(வேணாடு), சேரர்கள் ஆட்சிப்பகுதியாக இருந்தது. பின் ஓய்சலயர்கள் மற்றும் மேற்குச் சாளுக்கியர்களின் வளர்ச்சியினால் சேரர்கள் வலுவிழந்தனர். ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகள் வேணாட்டை ஆண்டு வந்த வீர மன்னர்கள், தொடர்ந்து பக்கத்துப் பாண்டிய மன்னர்களுடன் எல்லைத் தகராறில் ஈடுபட்டு வந்ததால் விஜயநகர மன்னர்கள் இவர்களுக்கு எதிராகப் படையெடுத்தனர். இதன் விளைவாக, கன்னியாகுமரி, 1609-ஆம் ஆண்டு மதுரை, விஸ்வநாத நாயக்கரின் வலுவான கரங்களுக்குள்ளானது. இதன் விளைவாக 1634 வரை நாஞ்சில் நாட்டுக்கு எந்த விதமான வலுவான அச்சுறுத்தல்களும் இல்லாமல் இருந்தது. பின்னர் ரவி வர்மா, மார்த்தாண்ட வர்மா, ஆகிய அரசர்களின் காலகட்டத்தில் வேணாடு கடும் உள்நாட்டுக் குழப்பங்களைச் சந்தித்தது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆற்காடு சந்தா சாகிபு நாஞ்சில் நாட்டைத் தாக்கினார். குளச்சல் போரில் மார்த்தாண்ட வர்மா டச்சு போர்வீரர்களை வெற்றி கொண்ட போதிலும், சந்தா சாகிபுவைச் சமாளிக்க முடியாததால், போர்க்களத்தை விட்டுப் பின்வாங்க வேண்டியிருந்தது. கி.பி. 1758ல் வேணாட்டின் கடைசி மன்னன் மார்த்தாண்ட வர்மா மர்மமான முறையில் மரணமடைந்த பின் மலபார் பகுதியை ஆண்டு வந்த நம்பூதிரி-நாயர் கூட்டணி ஆட்சி வேணாட்டு அரசைக் கைப்பற்றியது. வேணாடு நம்பூதிரி-நாயர் கூட்டணியின் மன்னன் கார்த்திகைத் திருநாள் ராமவர்மனால் திருவிதாங்கூர் அரசாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மார்த்தாண்ட வர்மாவுக்கு பிறகு வந்த மன்னர்கள் அனைவரும் வலுவற்றவர்களாக இருந்ததால் ஆங்கிலேயர்களின் தலையீடு இந்நாட்டின் மீது அவ்வப்போது இருந்து வந்து, பின் படிப்படியாக அவர்களின் முழுக் கட்டுப்பாட்டுக்கு வந்த வேணாட்டை 1947 வரை அவர்களே ஆண்டு வந்தனர்.

பின் அது 1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர்கள் மலையாள மொழிப் பகுதியாகிய கேரளத்தோடு இணைந்திருக்க விரும்பவில்லை. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ஷல் நேசமணி தலைமையில் விடுதலைப் போராட்டம் தொடங்கியது. 1956 நவம்பர் முதல் நாள் குமரி மாவட்டம் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறியது.

இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக திருமலை என்பவர் நவம்பர் 1, 1956 அன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகை

புவியியல்

இம்மாவட்டம், முன்பு நூற்றுக்கணக்கான நீர்நிலைகளையும், வாய்க்கால்களையும் பெற்றிருந்ததன் மூலம் திருவிதாங்கூரின் களஞ்சியம் என அறியப்பட்டது. ரப்பர் மற்றும் நறுமணப்பொருள்கள் மலைச்சரிவுகளிலும் நெல், வாழை, தென்னை ஆகியன கடற்கரையை ஒட்டிய சமபூமிகளிலும் பெருமளவில் காணப்படுகின்றன. இம்மாவட்டம் பொதுவாக மலை சார்ந்த பகுதிகளாகவும், கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சமபூமியாகவும் காட்சியளிக்கிறது. நிலப்பரப்பின் உயரம் கடற்கரையிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளை நோக்கி மெதுவாக உயர்கிறது. இம்மாவட்டதிற்கு 62 கி.மீ மேற்குக் கடற்கரையும், 6 கி.மீ கிழக்கு கடற்கரையும் உள்ளன. இம்மாவட்டத்தின் நிலப்பகுதியில் 48.9% விவசாய நிலமாகவும், 32.5% அடர்ந்த காட்டுப் பகுதியாகவும் இருக்கிறது.

மாவட்டத்தின் கடற்கரைகள் பல பாறை மயமாகவும் மற்றவிடங்கள் வெள்ளை மணற்பகுதியாகவும் காணப்படுகின்றன. கிழக்கு கடற்கரைகளில் பவளப்பாறையின் அம்சங்கள் (பெரும்பாலும் அழிந்திருந்தாலும்) பல காணப்படுகின்றன. பல வகையான வண்ண சங்கு வகைகளும் காணப்படுகின்றன. மேலும் சில கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் மணல் தாது வளம் நிறைந்ததாக இருக்கிறது.

தட்பவெப்ப நிலை

கடந்த ஐம்பது ஆண்டு கால ஆய்வில், வடகிழக்கு பருவக்காற்று வீசும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, 24 மழை நாட்களில் 549 மி.மீ மழையும், தென்மேற்கு பருவக்காற்று வீசும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 27 மழை நாட்களில் 537 மி.மீ. மழை பெய்திருக்கிறது. இதுவே மார்ச் முதல் மே மாதம் வரையிலான வேனிற் காலத்தில் 11 மழை நாட்களில் 332 மி.மீ மழையும் பதிவாகி இருக்கிறது. மாவட்டத்தின் ஒரு ஆண்டு சராசரி மழை 1465 மி,மீ. இதில் அக்டோபர் மாத அளவான 247 மி.மீ அதிகபட்சமாகவும், பெப்ரவரி மாத அளவான 21 மி.மீ குறைந்தபட்சமாகவும் இருக்கிறது. மாவட்டத்தின் ஈரப்பதம் 60 முதல் 100 சதவிகிதமாக இருக்கிறது.

கோடைகாலங்களில் கூட வெப்பம் அதிகமாக இருக்காது. தமிழகத்திலேயே அதிக மழை பெறும் ஒரே மாவட்டம்..ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு அடுத்தப்படியாக அதிக மலைகளை கொண்ட ஒரே மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் ஆகும்.மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் இயற்கையால் நிறைந்து காணப்படுகிறது. சிறிய கேரளா போன்று காணப்படும்..

ஆறுகள்

இம்மாவட்டத்தின் முக்கிய நதிகள் தாமிரபரணி, வள்ளியாறு, பழையாறு ஆகியன.

தாமிரபரணி

இந்நதி குழித்துறையாறு என பரவலாக அறியப்படுகிறது. இதற்கு இரண்டு துணை ஆறுகள் உள்ளன. அவை கோதையாறு மற்றும் பறளியாறு ஆகியன. இவைகள் முறையே பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைக்கட்டுகளிலிருந்து வருகின்றன. மேலும் கோதையாறு ஆற்றுக்கும் இரண்டு துணை ஆறுகள் உள்ளன. இவை சிற்றாறு - 1, மற்றும் சிற்றாறு - 2 ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் இந்தத் தாமிரபரணி கன்னியாகுமரிக்கு 56 கி.மீ மேற்காக அமைந்திருக்கும் தேங்காய்ப்பட்டணம் என்னும் சிற்றூரில் அரபிக் கடலில் கலக்கிறது.

வள்ளியாறு

இவ்வாறும் இதன் ஒரு துணை ஆறாகிய தூவலாறும், வேளிமலை மலையில் உற்பத்தியாகி, பி.பி.கால்வாய், மற்றும் அதன் பிரிவுக் கால்வாய்களிலிருந்தும் வரும் ஓடைகளின் நீரையும் வாங்கிக்கொண்டு, கடியப்பட்டணம் அரபிக்கடலில் கலக்கிறது.

பழையாறு

இவ்வாறு நாகர்கோவிலுக்கு 18 கி.மீ வடமேற்காக அமைந்திருக்கும் சுருளகோடு என்னும் சிற்றூரில் தொடங்குகிறது. இது தோவாளை, அனந்தன் நகர், மற்றும் என்.பி. கால்வாய்களின் ஓடைகளின் நீர்களை வாங்கும் ஒரு ஓடையாறாகவே இருக்கிறது. மணக்குடியில் கடலில் கலக்கிறது.

அணைகள்

பேச்சுப்பாறை அணை

முதன்மைக்கட்டுரை:பேச்சிப்பாறை அணை
இவ் அணை கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1897–1906 காலகட்டத்தில் ஐரோப்பிய பொறியாளர் திரு மிஞ்சின் அவர்களால் அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் மூலம் திருநாள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணையின் உயரம் முதலில் 42 அடியாக இருந்தது. பின்பு 1964-ஆம் ஆண்டு மேலும் 6 அடிகள் கூட்ட முடிவு செய்து 1969 ஆம் ஆண்டு அணையின் உயரம் 48 அடியாக கட்டிமுடிக்கப்பட்டது.

பெருஞ்சாணி அணை

1958இல் கட்டி முடிக்கப்பட்ட இவ்வணையின் கொள்ளவு 72 அடியாகும்.

முக்கடல் அணை

முக்கடல் அணை வேம்பாறு குறுக்கே கட்டப்படுள்ளது. நாகர்கோவில் மாநகரின் முக்கிய குடிநீர் ஆதரமாக விளங்குகிறது.

சிற்றாறு அணை

சிற்றாறு 1 மற்றும் சிற்றாறு 2 அணைகள் சிற்றாறின் குறுக்கே 1970-ல் கட்டி முடிக்கப் பட்டது.[8]

மாம்பழத்துறையாறு அணை

இது வில்லுக்குறியிலிருந்து சுமார் 3 கட்டைத் (கிலோமீட்டர்) தொலைவில் ஆனைக்கிடங்கு என்னுமிடத்தில் மாம்பழத்துறையாற்றின் குறுக்கே கடந்த 2010-ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இந்த அணை 44.54 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.80 அடி உயரமுள்ள இவ்வணையின் மூலம் 25 குளங்களும் 905.76 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதிப் பெறுகின்றது.

தாவரங்களும் விலங்குகளும்

கீரிப்பாறை பகுதிகளில் பல வகைப்பட்ட பேரணிச் செடிகளையும் பல வெப்பமண்டல தாவர வகைகளையும் பார்க்க முடியும். பேச்சிப்பாறை பகுதிகளில் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு இலைகளியும் பூக்களையும் உடைய மரங்கள், பச்சை படர்ந்த காட்டுப்பகுதிகளுக்கு மத்தியில் ஜொலிப்பதை பார்க்க முடியும்.

இம்மாவட்டத்தில் காணப்படும் விலங்குகளில் முள்ளம் பன்றி, காட்டுப் பன்றி,பல்லி வகைகள், பல இன கொக்கு, நாரை, நீர்க்கோழி, மலைப் பாம்பு, பல வகைப் பாம்புகள் உட்பட பல வகைப்பட்ட ஊர்வன ஆகியவை அடங்கும்.மேலும் மகேந்திரகிரி மலையில் (கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்துக்கு மேல்) முயல்கள், மான்கள், சிறுத்தை ஆகியவற்றை காண முடியும். அதன் அருகாமையிலுள்ள நெடுஞ்சாலையில் சிறுத்தை குட்டிகள் சாதாரணமாக வந்து போவதை பார்க்க முடியும். கீரிப்பாறை சார்ந்த பகுதிகள் யானைகள், காட்டு எருமை, கரடி போன்ற விலங்கினங்களின் உறைவிடமாகத் திகழ்கிறது. தேரூர் பகுதியில் பல வகையான கொக்குகளை சில குறிப்பிட்ட காலச் சூழல்களில் பார்க்க முடியும்.

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்:அமைந்த இடம்
தலைநகரம் [[நாகர்கோவில்]]
மிகப்பெரிய நகரம் நாகர்கோவில்
ஆட்சியர்
{{{ஆட்சியர்}}}
காவல்துறைக்
கண்காணிப்பாளர்


ஆக்கப்பட்ட நாள் 1956
பரப்பளவு 1,684 சகிமீ கி.மீ² (?வது)
மக்கள் தொகை
(2001
வருடம்
அடர்த்தி
18,70,374 (?வது)
1,111/கி.மீ²
வட்டங்கள் 4
ஊராட்சி ஒன்றியங்கள் {{{ஊராட்சி ஒன்றியங்கள்}}}
நகராட்சிகள் 3
பேரூராட்சிகள் 55
ஊராட்சிகள் 90
வருவாய் கோட்டங்கள் 2

மருத்துவ வரலாறு

இம்மாவட்டம் பல அரிய மூலிகை வகைகளையும் தாது வளங்களையும் தாங்கும் மலைகளையும் கொண்டுள்ளது. கன்னியாகுமரிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மருந்துவாழ் மலை அசோகர் காலகட்டத்தில் வாழ்ந்த புத்த பிக்குக்களால் மருத்துவ மற்றும் ஆன்மீக பாரம்பரியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இம்மலை இராமருக்கும் இராவணனுக்கும் இடையில் நடந்த காப்பிய யுத்தத்தின் போது, அனுமன் சுமந்து சென்ற Gandha Madhana மலையின் உடைந்து விழுந்த பகுதியாக இதன் புராணாக் குறிப்பு கூறுகிறது. இம்மலையில் பல அரிய வகை மூலிகைகள் அதிக அளவில் உள்ளன.

மேலும் செந்தமிழின் முதல் இலக்கண ஆசிரியரும், முதல் சித்தருமான அகத்தியர் இந்நிலப்பரப்பின் எல்லையில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இப்பகுதியில் அகத்தீஸ்வரம் என்னும் ஊரும் உள்ளது. இவ்வூருக்கும் இப்பெயர் ஒரு குறு முனிவரிடமிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவ்வூரில் அகஸ்தீஸ்வரால், அகஸ்தீஸ்வரமுடையாருக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு கோயிலுமுள்ளது. மருத்துவம், இலக்கணம் மட்டுமல்லாமல் வர்மக்கலையிலும் அகத்தியர் திறம்படைத்தவராவார். பிரபல பனை ஓலை எழுத்தாக்கங்களான வர்மாணி, வர்மக்கலை ஆகியன அவரால் இயற்றப்பட்டவைகளாகும். இன்றும் இந்த வர்ம வைத்திய முறைகள் கன்னியாகுமரிப் பகுதிகளில் குரு-சிஷ்ய முறை|குரு-சிஷ்ய முறையில்]] கற்பிக்கப்படுகிறது. மேலும் இந்த தமிழ் வைத்திய முறையை பயன்படுத்தி இத்துறையில் வல்லுனர்களால் மருத்துவம் செய்யப்படுகிறது.

பண்பாடு

இம்மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களின் முதன்மை மொழி தமிழ் ஆகும். மலையாளம் பேசுகின்ற சிறுபான்மையோரும் உள்ளனர். இந்த மாவட்டத்தில் பேசப்பட்டு வரும் வட்டாரத் தமிழ் சிறிது மலையாளம் கலந்து தனித்தன்மை கொண்டுள்ளது

சமயம்

இம்மாவட்டத்தில் இந்துக்கள் 9,09,872 (48.65%); கிறித்தவர்கள் 8,76,299 (46.85%); இசுலாமியர்கள் 78,590 (4.20%); மற்றவர்கள் 0.30% ஆக உள்ளனர்.[7]

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சமயமான அய்யாவழியின் பிறப்பிடமும் கன்னியாகுமரி மாவட்டமாகும். மேலும் இச்சமயத்தினரால் மொத்த குமரி மாவட்டமே புனிதமாக கருதப்படுகிறது. மேலும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், குறிப்பாக தற்போது குமரி மாவட்டமாக உள்ள தென் திருவிதாங்கூரில் கிறிஸ்தவ மறை பரப்பாளர்கள் ஆங்கில கல்வியின் முன்னோடிகளாக திகழ்ந்தனர். இங்கு ஏற்பட்ட கல்வியறிவின் வளர்ச்சியாலும் இதர காரணங்களாலும் சாதி முறை பெருமளவில் வலுவிழந்து காணப்படுகிறது.

இம்மாவட்டத்தில் 1980 களில் இங்கு பெரிய அளவில் மதக்கலவரம் வெடித்தது. மண்டைக்காடு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவின் போது இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் வெடித்த மண்டைக்காடு கலவரம், பல்வேறு விதங்களில் பரவிய வதந்திகளின் காரணமாக தெரிகிறது. மண்டைக்காடு கலவரத்தில் ராஜாக்கமங்கலம, ஈத்தாமொழி, பிள்ளைத்தோப்பு, நாகர்கோவில் ஆகிய இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கலவரத்தை அடக்கும் விதத்தில் நடந்த இந்தத் துப்பக்கிசூட்டில் பல பொது மக்களும் கொல்லப்பட்டனர்.

பொதுத்துறை நிர்வாகங்கள்

காவல்துறை

குமரிமாவட்ட காவல்துறை, காவல்துறை கண்காணிப்பாளரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்குகிறது. இவரின் கீழ் இரண்டு கூடுதல்-காவல்துறை கண்காணிப்பாளர்கள் இயங்குகின்றனர். குமரிமாவட்ட காவல்துறை நிர்வாகம், நான்கு துணைப்பிரிவுகளாக இயங்குகிறது[9].

தீயணைப்புத்துறை

குமரிமாவட்டதில் கீழ்க்கண்ட ஏழு தீயணைப்பு நிலையங்கள் உள்ளன.[10]

பொருளாதாரம்

தமிழ் நாட்டின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 95% கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. காற்றாலைகளுக்கு மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு உண்டு. ஆரல்வாய்மொழி பகுதியில் இவை அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.

விவசாயம்

முக்கிய பயிர்வகைகள்

  1. அரிசி – 400 ச.கி.மீ
  2. தென்னை – 210 ச.கி.மீ
  3. ரப்பர் – 194.78 ச.கி.மீ
  4. மரவள்ளிக்கிழங்கு – 123.50 ச.கி.மீ
  5. வாழை – 50 ச.கி.மீ
  6. பருப்பு – 30 ச.கி.மீ
  7. முந்திரி – 20 ச.கி.மீ
  8. பனை – 16.31 ச.கி.மீ
  9. மாம்பழம் – 17.70 ச.கி.மீ
  10. புளி – 13.33 ச.கி.மீ
  11. கமுகு – 9.80 ச.கி.மீ
  12. பலா – 7.65 ச.கி.மீ
  13. கிராம்பு – 5.18 ச.கி.மீ

கைவினைப் பொருட்களும் குடிசைத் தொழில்களும்

குமரி மாவட்டம் கைவினைப் பொருட்களுக்கு பெயர் போன மாவட்டமாகும். குறிப்பாக தோல் நீக்கப்படாத தேங்காயில் செய்யப்படும் குரங்கு பொம்மைகள், தேங்காய் ஓடு மற்றும் மரத்தால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் ஆகியன முக்கியமானவை. மேலும் சங்கினாலான கைவினைப்பொருட்களும் சிறப்பு வாய்ந்தவை. தமிழகத்தின் மொத்த கயிறு உற்பத்தியில் 28.4 சதவிகிதமும் பாய் உற்பத்தியில் 61.5 சதவிகிதமும் இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ரப்பர்

ரப்பர் உற்பத்தி இம்மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவாட்டத்தின் மேற்குப்பகுதியில் கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன.

பழங்கள்

நேந்திரம் பழம்,செந்துளுவன், ரசகதளி, பாளயம்கொட்டான், துளுவம், மட்டி, உட்பட பல வகையான வாழைப்பழங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல், பலாப்பழம் (வரிக்கில மற்றும் கூளன்), மாம்பழம் (அல்போன்சா, பங்களோரா, நீலம், மற்றும் ஒட்டு) தேங்காய் ஆகியன இம்மாவட்டத்தின் விவசாய வளத்துக்கு பெருமை சேர்க்கின்றன. இவை தவிர ரோஜா, செவ்வந்தி, உட்பட பல மலர்களும் இங்கே பயிரிடப்படுகின்றன.

மீன் பிடிப்பு

கன்னியாகுமரி கடல் பகுதிகளில் இருநூறுக்கும் மேற்பட்ட இன மீன்கள் கிடைக்கின்றன.

கல்வி

கல்வியறிவு விகிதத்தில் (91.75 %) குமரி மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது. மேலும் கல்வித்தரத்திலும் முதலிடம் வகிக்கிறது.

பள்ளிகள்

  1. மழலையர் பள்ளிகள் - 83
  2. தொடக்கப் பள்ளிகள் - 413
  3. நடுநிலைப் பள்ளிகள் - 147
  4. உயர் நிலைப் பள்ளிகள் - 121
  5. மேல் நிலைப் பள்ளிகள் - 120
  6. மொத்தம் 884

கல்லூரிகள்

  1. அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் - 12
  2. சுயநிதிக் கல்லூரிகள் - 4
  3. கல்வியியல் கல்லூரிகள் -8
  4. தொழில் கல்லூரிகள் - 20
  5. கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி
  6. அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி
  7. பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி

சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்

குறிப்பிடத்தக்கவர்கள்

  1. அய்யா வைகுண்டர்
  2. அதங்கோட்டாசான்
  3. மார்ஷல் நேசமணி
  4. ஏ.கே. செல்லையா
  5. தோவாளைசுந்தரம்பிள்ளை
  6. என். எஸ். கிருஷ்ணன்
  7. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
  8. ப. ஜீவானந்தம்
  9. சதாவதானி செய்கு தம்பி பாவலர்
  10. தாணுலிங்க நாடார்

இதனையும் காண்க

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. கன்னியாகுமரி மாவட்ட வருவாய் நிர்வாகம்
  4. Local Bodies of Kanyakumari District
  5. கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்
  6. Rural Bodies of Kanyakumari District
  7. Kanniyakumari District : Census 2011 data
  8. http://india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Dams_in_Tamil_Nadu
  9. "Kanniyakumari District Extract of Rule 4(1)(b) of the Right to Information Act 2005" (PDF). பார்த்த நாள் 2015-07-26.
  10. "List of Fire Stations (Southern Region)". பார்த்த நாள் 2015-07-25.

வெளி இணைப்புகள்



This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.