விவேகானந்த கேந்திரம்
விவேகானந்த கேந்திரம் என்பது ஒரு இந்து ஆன்மீக நிறுவனமாகும். சுவாமி விவேகானந்தரின் போதனைகளைப் பரப்ப, ஜனவரி 7 1972 ல் ஏக்நாத்ஜி ரானாடேவால் கன்னியாகுமரியில் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பின் மூலம் யோக வகுப்புகளும், பண்பாட்டு வகுப்புகளும், ஆன்மீகச் சொற்பொழிவுகளும், இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆளுமைதிறன் பயிற்சி முகாம்களும் தொடர்ந்து பல மாநிலங்களில் நடத்தப்படுகின்றன.
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. இதன் சார்பாக விவேகானந்த நினைவுக் கண்காட்சி, விவேகானந்தர் நினைவு மண்டபம் போன்றவை பராமரிக்கப்படுகிறது மேலும் பல்வேறு இடங்களில் கல்விக் கூடங்களும் நடத்தப்படுகிறது. இதன் இயற்கை வள அபிவிருத்தித் திட்டம், கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம் போன்றவை பல்நோக்குப் பார்வை கொண்ட திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அனுசரிக்கப்படும் முக்கிய நாட்கள்
- சமர்த்த பாரத பருவம்: சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரியில் தவம் மேற்கொண்ட டிசம்பர் 25,26,27 ஆகிய நாட்கள் நினைவாகக் கொண்டாடப்படுகிறது.
- குரு பூர்ணிமா: மூதாதையர்களின் நினைவாக கொண்டாடப்படுகிறது.
- சர்வதேச சகோதர தினம்: சுவாமி விவேகானந்தர் சிக்காகோ சமய மாநாட்டில் உரையாற்றிய செப்டம்பர் 11 ம் நாள் நினைவாகக் கொண்டாடப்படுகிறது.
- கீதை ஜெயந்தி: பகவத் கீதையின் சிறப்பைச் சொல்ல கொண்டாடப்படுகிறது.
- சாதனா தினம்: விவேகானந்த கேந்திர நிறுவனர் ஏக்நாத்ஜி ரானாடேவின் பிறந்த நாளான நவம்பர் 19ம் நாள் கொண்டாடப்படுகிறது.
விவேகானந்த கேந்திர பிரகாஷன் அறக்கட்டளை மூலம் பல்வேறு நூல்களும் பல சஞ்சிகைகளும் வெளியிடப்படுகின்றன.