தூத்துக்குடி

தூத்துக்குடி (Thoothukudi அல்லது Tuticorin) இந்தியாவின் தென் மாநிலமான தமிழகத்திலுள்ள ஒரு மாநகரமும், அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது ஒரு துறைமுக நகரமாகும். இது தமிழகத்தின் 10ஆவது தூத்துக்குடி மாநகராட்சியாக ஆகஸ்ட் 5, 2008இல் அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.[3] இதன் மேற்கிலும், தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும் உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. தூத்துக்குடி வரலாற்று ரீதியில் வலையர் இன மக்கள் அதிகளவில் முத்து குளித்து வந்தனர். இன்றளவும் இம்மக்கள் சங்கு குளிக்கும் தொழில் செய்கின்றனர். இம்மாவட்டத்திற்கு முத்து நகர் பெயரும் உண்டு. தூத்துக்குடியில் அனல் மின் நிலையமும் ஸ்பிக் உரத்தொழிற்சாலையும் அமைந்துள்ளன.

தூத்துக்குடி
மாநகராட்சி
மேலிருந்து கடிகாரம் சுழலும் திசையில்
தூத்துக்குடி அனல்மின் நிலையம், தூத்துக்குடி வானூர்தி நிலையம், முத்து நகரத்தின் முத்து சிப்பி, பனிமய மாதா பேராலயம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், தூத்துக்குடியில் உப்புத் தொழில் மற்றும் வ. உ. சிதம்பரனார் துறைமுகம்
அடைபெயர்(கள்): முத்து நகர், தமிழகத்தின் உப்பு நகரம்

தமிழ்நாடு வரைபடத்தில் உள்ள இடம்.
தூத்துக்குடி
தூத்துக்குடி
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
ஆள்கூறுகள்: 8.81°N 78.14°E / 8.81; 78.14
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பகுதிபாண்டிய நாடு
மாவட்டம்தூத்துக்குடி
நிர்மாணித்தவர்ம. கோ. இராமச்சந்திரன்
அரசு
  வகைமாநகராட்சி
  Bodyதூத்துக்குடி மாநகராட்சி
  மக்களவை உறுப்பினர்கனிமொழி
  சட்டமன்ற உறுப்பினர்கீதா ஜீவன்
  மாநகர முதல்வர்காலியிடம்
  மாவட்ட ஆட்சியர்திரு சந்தீப் நந்தூரி, இ. ஆ. ப.
பரப்பளவு
  Metro90.663
பரப்பளவு தரவரிசை10
ஏற்றம்4
மக்கள்தொகை (2011)[1]
  மாநகராட்சி2,37,830
  தரவரிசை10
  பெருநகர்4,11,628[2]
இனங்கள்தூத்துக்குடிகாரன்
மொழிகள்
  அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு628 0xx
தொலைபேசி குறியீடு+91-461
வாகனப் பதிவுTN-69,TN-96
சென்னையிலிருந்து தொலைவு607 கி.மீ (377 மைல்)
திருச்சியிலிருந்து தொலைவு282 கி.மீ (175 மைல்)
மதுரையிலிருந்து தொலைவு150 கி.மீ (93 மைல்)
விருதுநகரிலிருந்து தொலைவு116 கி.மீ (72 மைல்)
தட்பவெப்ப நிலைகோப்பென்
இணையதளம்www.thoothukudi.nic.in www.thoothukudicorporation.com

சங்க காலம்

  • சங்க காலத்தைச் சேர்ந்த வேள்விக்குடி சாசனம் தூத்துக்குடியைப் பற்றி குறிப்பிடுகிறது.
  • இரும்பு, செம்பு காலங்களைச் சேர்ந்த நாகரிகங்களை வளர்த்தெடுத்த ஆதிச்சநல்லூர் ஒரு புராதன பண்பாட்டுச் சின்னமாகும்.

வரலாற்றுக் குறிப்புகள்

தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் சில உள்ளன.

  • கி.மு.123இல் தாலமி என்ற கிரேக்க பயணி தனது பயண நூலில் "சோஷிக் குரி'(சிறு குடி) சோதிக்குரை என்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான் தூத்துக்குடி என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்.
  • அகஸ்டஸ் சீசரின் பியூட்டிஸ்கர் அட்டவணை ரோமானியரின் வர்த்தகம் நடைபெற்ற இடம் என்று தூத்துக்குடியைக் குறிப்பிடுகின்றது. "சோல்சியம் இண்டோரம்' என்ற பெயரில் குறிப்பிடப்படுவது தூத்துக்குடியாகும்.
  • கிபி.80இல் ஒரு அறிமுகமற்ற அடுக்கியந்திரியின், கிரேக்கர்கள் எரித்திரிரேயன் கடல் பெரிப்லஸ், என்ற நூலில் தூத்துக்குடி என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மார்க்கோ போலோ எனும் இத்தாலியப் பயணி முத்துக்குளித்தல் மற்றும் இப்பகுதி மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
  • ஜேம்ஸ் கர்னல் மன்னார் வளைகுடாவில் முத்துக்குளித்துறையை பற்றி சென்னை அரசாங்கத்திற்கு தான் சமர்ப்பித்த அறிக்கையில் தோத்துக்குரையாக மாறி இறுதியில் தூத்துக்குடி என்ற பெயர் பிறந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.
  • தூத்துக்குடி என்ற பெயர் ஐரோப்பியர்களின் உச்சரிப்பில் மாற்றம் பெற்று தூட்டிகொரின் ("Tuticorin") என்று வந்துள்ளதென்று கால்டுவெல் விளக்கம் அளித்துள்ளார்.

போர்ச்சுக்கீசியர்களும், டச்சுக்காரர்களும்

கி.பி. 1532-இல் முதன் முதலாக போர்ச்சுக்கீசியர்கள் இம்மாவட்டத்தில் கால் வைத்தனர். 1658-இல் டச்சுக்காரர்கள் வந்ததனால் போர்ச்சுகல் ஆதிக்கம் அகன்றது. பாளையக்காரர்களின் அழைப்பின் பேரிலும், திருவாங்கூர் மன்னரின் படை உதவியுடனும், டச்சுக்காரர்கள் முன்னேறத் தொடங்கினர். முகம்மது யூசுப் படைதிரட்டுவதை கேள்விப்பட்டதும் டச்சுக்காரர்கள் மணப்பாட்டை காலி செய்து விட்டு, தூத்துக்குடி வழியாக தாய்நாடு சென்று விட்டனர். நாயக்கர் ஆட்சி சந்தாசாகிப்பினால் முடிவுற்றது. கருநாடகம் ஆற்காடு நவாப் கையில் விழுந்தது. முகம்மதலி திருநெல்வேலியைக் கைப்பற்ற ஒரு படையை அனுப்பினார். 1755இல் ஹெரான் தலைமையில் ஆங்கிலேயர் படை கிளம்பியது. பாளையக்காரர்கள் கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் இரண்டையும் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் ஒப்படைத்தனர். இக்காலத்தில் நவாப்பிற்குக் கப்பங்கட்ட மறுத்தவர்களில் தலையானவர் பூலித்தேவர் ஆவார்.

இப்பகுதியில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் தொடர்ந்து கலகம் செய்து வந்தனர். பாளையக்காரர்களுக்கு ஆதரவாக சந்தாசாகிப், பிரஞ்சு படைகள் இருந்தன. 1761-இல் புதுச்சேரியை ஆங்கிலேயர் கைப்பற்றியதால் பிரஞ்சுகாரர்கள் பாளையக்காரர்களுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டனர். 1764 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை ஆங்கிலேயர் வசம் வந்தது. காளக்காடு, பணகுடி பகுதிகள் நவாப்பிற்கும், செங்கோட்டை திருவாங்கூர் அரசருக்கும் விட்டுக் கொடுக்கப்பட்டன. 1767 மேஜர் பிளிண்ட் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தான். 1783 ஆம் வருடம் புல்லர்டன் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி சூறையாடப்பட்டது. அங்கிருந்த 40,000 பொன் நாணயங்களை ஆங்கிலேயர்கள் பங்கு போட்டுகொண்டனர்.

1785 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நவாப்பின் அமில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1797 ஆம் ஆண்டு கலெக்டர் ஜாக்சனை கட்டபொம்மன் பேட்டி காண்பதற்கு, இராமநாதபுரத்திலுள்ள இராமலிங்க விலாசத்திற்கு சென்ற போது குழப்பம் வரவே, ஆங்கிலத் தளபதி கிளார்க் கொலை செய்யப்பட்டான். இதன் பின்னர் சிலகாலம் கழித்து பாஞ்சாலங்குறிச்சி பானர்மேனால் வெற்றிகொள்ளப்பட்டது. படிப்படியாக எதிர்த்த பாளையக்காரர்கள் அனைவரையும் ஒடுக்கி, நவாப்பையும் செல்லாக்காசாக்கி விட்டு ஆங்கிலேயர் 1801-ஆம் வருடம் திருநெல்வேலியை எடுத்துக் கொண்டனர். 1910 ஆம் ஆண்டிற்கு பிறகு, இராமநாதபுர மாவட்டத்தை உண்டாக்கினர். 1986 ஆம் ஆண்டு நிர்வாக வசதி கருதி கடற்கரையோரப் பகுதிகளை பிரித்து தூத்துக்குடி மாவட்டம் உண்டாக்கப்பட்டது.

சிறப்புப் பெயர்கள்

தூத்துக்குடி நகருக்கு திருமந்திர நகர் என்றும் முத்துநகர் என்றும் வேறு சிறப்புப் பெயர்களும் இருக்கின்றன.

திருமந்திர நகர்

தூத்துக்குடிக்கு திருமந்திர நகர் என்ற பெயர் வந்ததற்கு ஒரு தனிக் கதை உண்டு. இந்தக் கடற்கரை, மிகப்பெரும் காடாக இருந்ததாம். இராவணன் சீதையைக் கடத்திச் சென்ற பின்பு அவளைத் தேடி வர அனுமனை அனுப்பி விட்டு ராமன் இந்தப் பகுதியில் மந்திரங்களை உச்சரித்தபடி தவம் செய்யத் துவங்கினாராம். அவருடைய தவத்திற்குக் கடலலைகளின் பேரிரைச்சல் இடையூறாக இருக்க ராமன் கடலலைகளைச் சப்தமெழுப்பாமல் இருக்க சபித்து விட்டாராம். அன்றிலிருந்து இப்பகுதியில் கடலலைகள் அடங்கி சப்தமில்லாமல் போய்விட்டது. இன்றும் கடலலைகளோ, சப்தமோ இங்கிருப்பதில்லை. ராமன் திருமந்திரங்களை உச்சரித்த இடம் என்பதால் திருமந்திர நகர் என்று பெயர் வந்துவிட்டது என்று ஒரு சிலர் கருத்து சொல்கின்றனர்.

முத்துநகர்

ஆதிகுடியான வலையர் இன மக்கள் தூத்துக்குடியில் அதிகளவில் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் குல தொழில் கடலுக்கு அடியில் சென்று முத்து எடுப்பது தான் தொழில். இவர்கள் தொழில் செய்வதை வைத்து முத்துக்கள் அதிகம் கிடைத்த நகரம் என்பதால் முத்து நகர் என்று பெயர் ஏற்பட்டது. பாண்டிய நாட்டின் துறைமுக நகரமாக விளங்கிய நகரம். வலையர் மக்கள் நேரிடையாக முத்துக்குளித்தலில் ஈடுபட்ட துறைமுக நகரம் ஆதலால், இது முத்துக்குளித்துறை என்று பெயர் பெற்றது. பின்னாட்களில் முத்து நகர் என்று அழைக்கப்படுகிறது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் இரயிலுக்கு, முத்துநகர் விரைவு இரயில் என்று பெயர்.

பெயர்க் காரணம்

நீர் நிறைந்த நிலத்தைத் தூத்துத் துறைமுகமும் குடியிருப்பும் தோன்றிய ஊர் என்பதால் தூத்துக்குடி என்றாயிற்று. வாகைக்குளம், கங்கைக்கொண்டான் கல்வெட்டுக்களில் இவ்வூர் 'தூற்றிக்குடி' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

மதவாரியான கணக்கீடு
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
 
64.97%
முஸ்லிம்கள்
 
4.74%
கிறிஸ்தவர்கள்
 
30.14%
சைனர்கள்
 
0.01%
சீக்கியர்கள்
 
0.01%
பௌத்தர்கள்
 
0.03%
மற்றவை
 
0.00%
சமயமில்லாதவர்கள்
 
0.10%
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டு ம.தொ.
1961 1,24,230     
1971 1,59,506 +28.4%
1981 1,80,832 +13.4%
1991 1,99,654 +10.4%
2001 3,20,270 +60.4%
2011 4,10,760 +28.3%
சான்றுகள்:

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகை 237,830 ஆகும். அதில் 118,298 ஆண்களும், 119,532 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.57 % மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 970 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.[5]

2011இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 237,830 ஆகவும், கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 410,760 ஆகவும் உள்ளது.

2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, தூத்துக்குடியில் இந்துக்கள் 64.97%, முஸ்லிம்கள் 4.74%, கிறிஸ்தவர்கள் 30.14%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.03%, சைனர்கள் 0.01% மற்றும் 0.10% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர்.

துறைமுகம்

டச்சுக்காரர்களின் காலத்தில் தூத்துக்குடி துறைமுகம்- வரைபடம், 1752இல்
தூத்துக்குடியின் பண்டைய துறைமுகம்- வரைபடம்
ஆங்கிலேயர் ஆட்சியில் தூத்துக்குடி துறைமுகம், 1913இல்

மன்னார் வளைகுடா அருகே அமைந்துள்ள தூத்துக்குடி துறைமுகம் ஒரு இயற்கைத் துறைமுகம். இப்பகுதி புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது.தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு ஆண்ட பரதவர்களின் ஜாதி தலைவருக்கு சொந்தமான பாண்டியன் தீவில் இந்த துறைமுகம் அமைந்துள்ளது. இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வரக்கூடிய கப்பல்களுக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்குகிறது. 600 அடி முகத்துவாரத்தோடும், ஆறு பக்கவாட்டுத் தளங்களோடும் திகழும் இத்துறைமுகம் சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி வசதிக்காக 23 கிரேன்களும், 18 போர்க்லிப்ட் கருவிகளும், 4 பிரம்மாண்டமான சரக்கு லாரிகளும், 4 ரயில் என்ஜின்களும், சுமார் 50 ஆயிரம் டன்கள் சரக்குகள் வைப்பதற்குரிய பாதுகாப்புக் கிட்டங்கிகளும் கொண்டுள்ளது.

1974 ஆம் ஆண்டு இந்நகரிலுள்ள ஸ்பிக் உரத் தொழிற்சாலையின் அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்ய 125 இலட்ச ரூபாய் செலவில் எண்ணெய்த் துறை ஒன்று தனியாக இங்கே ஏற்படுத்தப்பட்டது. இங்கு 6 கப்பல்கள் தங்குவதற்கான தளங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கென்று தனியாக நிலக்கரி துறையும், மணிக்கு 2000 டன் நிலக்கரி இறக்கும் வசதியுடைய தானியங்கியும் 1983 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. மணிக்கு 700 லிட்டர் பெட்ரோலிய எண்ணெப் பொருள்களை இறக்குமதி செய்யத் தேவையான சிறப்புக் கருவிகள் இத்துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

வர்த்தகம்

  • ஏற்றுமதி/இறக்குமதி கையாளும் நிறுவனங்கள்.
  • உப்பளங்கள்.
  • ஸ்பிக் உரத்தொழிற்சாலை.
  • ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை.
  • தூத்துக்குடி அல்காலி இரசாயன நிறுவனம்.
  • தேங்காய் எண்ணெய் ஆலைகள்.
  • கடல் சார் உணவு தயாரிப்பு நிறுவனங்கள்.

துறைமுக வணிகம்

பிப்ரவரி 1996 ஆம் ஆண்டில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஐஎஸ்ஓ 9002 என்னும் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கிழக்குக் கடற்கரையோரத்தில் சென்னைக்கு அடுத்த தூத்துக்குடியில், இங்கு ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் நடைபெறுகிறது. இங்கு முக்கிய அமைப்புகள் பெரும்பங்காற்றி வருகின்றன.

  1. ஐரோப்பிய வணிகர்களின்-தூத்துக்குடி சேம்பர் ஆப் காமர்ஸ்.
  2. இந்திய வணிகர்களின் - இந்தியன் சேம்பர் ஆவ் காமர்ஸ்.
  3. தூத்துக்குடி தொழிற்சங்கம்.
  4. தூத்துக்குடி - இலங்கை ஏற்றுமதி இறக்குமதியாளர் வணிகச்சபை.
  5. தன்பாது உப்பு வியாபாரிகள் சங்கம்.
  6. உப்பு உற்பத்தியாளர் சங்கம்.
  7. தூத்துக்குடி நாட்டுப் படகு உரிமையாளர் சங்கம்.
  8. தூத்துக்குடி கப்பல் பிரதிநிதிகள் சங்கம்.
  9. தூத்துக்குடி இரும்பு தளவாட வணிகர் சங்கம்.
  10. தூத்துக்குடி நார்ப்பொருள் வணிகர் சங்கம்.
  11. சுங்க வேலைகளை முடித்துக் கொடுக்கும்-வணிக ஏஜெண்டுகளின் சங்கம்.
  12. கால்நடை ஏற்றுமதியாளர் சங்கம்.
  13. மதுரை சேம்பர் ஆப் காமர்ஸ்.
  14. விருதுநகர் சேம்பர் ஆப் காமர்ஸ்.
  15. இராமநாதபுரம் சேம்பர் ஆப் காமர்ஸ்

ஆகிய அமைப்புகள் பங்காற்றி வருகின்றனர்.

போக்குவரத்து

தூத்துக்குடி நகரமானது சாலை, இரயில் மற்றும் விமானப் போக்குவரத்து மூலம் மற்ற முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

சாலைப் போக்குவரத்து

பாளையங்கோட்டையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 7எ, எட்டயபுரம் சாலை (மதுரை சாலை என்றும் அழைக்கப்படுகிறது) தேசிய நெடுஞ்சாலை 45பி (இந்தியா), இராமநாதபுரம் சாலை அல்லது கிழக்கு கடற்கரை சாலை, திருச்செந்தூர் சாலை அல்லது மாநில நெடுஞ்சாலை -176, மேற்கு காட்டன் சாலை மற்றும் விக்டோரியா விரிவாக்க சாலை ஆகியவை இந்நகரத்தின் வழியாக செல்லும் முக்கிய சாலைகள் ஆகும். இந்நகரத்திற்கு வெளியே அமைந்துள்ள ஒரு பை பாஸ் சாலை, துறைமுகம், அனல் மின் நிலையம், SPIC தொழிற்சாலை மற்றும் மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கிறது. இந்நகரில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் பாளையங்கோட்டை சாலையிலும், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் எட்டையபுரம் சாலையிலும் அமைந்துள்ளது. இந்த இரண்டு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 700 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தூத்துக்குடியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு தினசரி பேருந்து சேவைகளை இயக்குகிறது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் பெங்களூர், சென்னை, வேலூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற முக்கியமான நீண்ட தொலைவிலுள்ள நகரங்களுக்கு பேருந்துகளை இயக்குகிறது. தூத்துக்குடி ஒரு துறைமுக நகரமாக இருப்பதால் நிறைய கொள்கலன் லாரிகள், இந்நகரத்திற்கு வந்து, செல்கிறது. 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, நகரத்திற்குள் நுழையும் கொள்கலன் லாரிகளின் எண்ணிக்கை 1000 ஆகும்.

தொடருந்து போக்குவரத்து

தூத்துக்குடி இரயில் நிலையமானது, இந்தியாவின் பழமையான மற்றும் பிரபலமான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். தூத்துக்குடியில் இருந்து நீண்ட தூர ரயில்கள் இயக்கப்படுகிறது. அவ்வாறு இயக்கப்படும் ரயில்களை சுத்தம் செய்வதற்கும், பராமரிப்பு செய்வதற்கு போதிய வசதிகள் இருக்கும், தென்தமிழ்நாட்டில் உள்ள சில இரயில் நிலையங்களில், இதுவும் ஒன்றாகும். மதுரைக்கும் - தூத்துக்குடிக்கும் இடையிலான பாதை 1874இல் திறக்கப்பட்டது. தூத்துக்குடியை இணைக்கும் இரயில் பாதைகள் சமீபத்தில் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடியிலிருந்து சென்னை, மைசூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகியவற்றுக்கு, தினசரி இரயில்கள் இயக்கப்படுகிறது. விவேக் விரைவு இரயிலானது தூத்துக்குடி - ஓகாவை(குசராத்து) இணைக்கின்றது. தூத்துக்குடி - சென்னை எழும்பூர் இரயில் நிலையத்துடன் இணைக்கும், முத்து நகர் அதிவிரைவுத் தொடர்வண்டியானது, தெற்கு ரயில்வேயின் முக்கிய ரயில்களில் ஒன்றாகும். குருவாயூர் இரயிலானது, குருவாயூரியிலிருந்து - சென்னைக்கு, தூத்துக்குடி வழியாக பகல் நேர பயணத்தில் செல்லும் இரயிலாகும்.

வானூர்தி நிலையம்

தூத்துக்குடி வானூர்தி நிலையமானது நகரின் மையப்பகுதியிலிருந்து 14 கி.மீ (9 மைல்) தொலைவிலுள்ள வாகைகுளத்தில் உள்ளது. இந்நிலையத்தில் 10/28க்கு நெறிப்படுத்தும் 1351 மீட்டர்கள் நீளமும், 30 மீட்டர்கள் அகலமும் உடைய தாரிடப்பட்ட ஒரு ஓடுதளம் உள்ளது. 100 மீட்டர்களுக்கு, 60 மீட்டர்கள் அளவுள்ள முகப்புத் தளத்தில் ஒரே நேரத்தில் ஏடிஆர் 72 இரகம் அல்லது அதை ஒத்த இரண்டு வானூர்திகள் நிறுத்த வசதி உள்ளது. இதன் நிலைய வளாகத்தில் உச்சநிலையில் 72 பயணிகளை மேலாளுமாறு வசதிகள் உள்ளன. இங்கிருந்து இன்டிகோ விமானம் சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களுக்கு, ஸ்பைஸ் ஜெட் விமானம் சென்னைக்கும் இயக்கப்படுகிறது.

துறைமுகம்

இங்குள்ள வ. உ. சிதம்பரனார் துறைமுகம் இந்தியாவின் 12 முதன்மைத் துறைமுகங்களில் ஒன்றாகும். இத்துறைமுகத்திலிருந்து ஐக்கிய அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, இலங்கை மற்றும் நடுநிலக் கடல் நாடுகளுக்கு ஏற்றுமதி/இறக்குமதி நடைபெறுகிறது.

மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்

மாநகராட்சி அதிகாரிகள்
மாநகர முதல்வர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்ற உறுப்பினர்கீதா ஜீவன்
மக்களவை உறுப்பினர்கனிமொழி

தூத்துக்குடி மாநகராட்சியானது தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த கீதா ஜீவன் வென்றார்.

2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த கனிமொழி வென்றார்.

சுற்றுலா தலங்கள்

தூத்துக்குடியில் காயல்பட்டினம், திருச்செந்தூர், மணப்பாடு, கழுகுமலை, ஒட்டப்பிடாரம், எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறு, நவதிருப்பதி ஆகிய ஊர்கள் சுற்றுலா தலங்களாக விளங்குகிறது.

வழிபாட்டு தலங்கள்

சங்கர ராமேஸ்வரர் கோயில்

தூத்துக்குடி நகரில் உள்ள முக்கியமான கோயில்களில் சங்கர ராமேஸ்வரர் கோயிலும் ஒன்று. இந்தக் கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் ஒன்றாகும்.

தூய பனிமயமாதா பேராலயம்

இந்த பேராலயம் ஆனது ஏழு ஊரில்வாழும் பரதவர் குலமக்களுக்கும் (தூத்துக்குடி, புன்னைக்காயல், வேம்பார், வைப்பாறு, வீரபாண்டியபட்டினம், மணப்பாடு மற்றும் ஆலந்தலை) மற்றும் அனைத்து ஊரில் வாழும் பரதகுல மக்களுக்கும் பதியப்பட்டது. தூத்துக்குடியில் வாழும் பரதர் குல மக்களும், இங்கு வாழும் பிற சமூக மக்களும் பனிமய மாதா ஆலயத்திற்கு வந்து வேண்டிச் செல்கின்றனர். 425 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் பனிமயமாதா தங்கத் தேர் விழா மிகச் சிறப்பான ஒரு விழாவாகும்.[6]

சிறப்புகள்

  • இங்கு தயாராகும் உப்பு ஆசியாக் கண்டத்திலேயே மிகச் சிறந்த உப்பாகும்.[7]
  • இங்கு சுடுமனைகள் (பேக்கரிகள்) அதிக அளவில் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் மெக்ரூன் எனப்படும் இனிப்பு மிகவும் சுவையானது.
  • புரோட்டாவிற்கு பெயர் பெற்ற விருதுநகருக்கு அடுத்து தூத்துக்குடி இரண்டாமிடத்தில் இருக்கிறது.
  • இங்குள்ள பனிமயமாதா பேராலயத் தங்கத்தேர் திருவிழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சிறப்பு பெற்ற ஒரு விழாவாகும்.

பள்ளிகள்

எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி

இங்கு பல ஆண்டுகள் பழைமை வாய்ந்த பள்ளிக்கூடங்கள் பல இருக்கின்றன.

  • பிஎம்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
  • பிஎம்சி மேல்நிலைப்பள்ளி
  • பிஎம்சி தொடக்கப்பள்ளி
  • சக்தி விநாயகர் சிபிஎஸ்சி இந்து வித்யாலயா மேல்நிலை பள்ளி
  • எஸ். ஏ. வி. மேல்நிலைப் பள்ளி
  • கமாக் மேல்நிலைப் பள்ளி
  • கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி
  • புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி
  • புனித இன்னாசியஸ் மேல்நிலைப்பள்ளி
  • ஸ்டார் மேல்நிலைப் பள்ளி
  • விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி
  • சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி
  • புனித மேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
  • புனித லசாலி மேல்நிலைப்பள்ளி
  • தஸ்நெவிஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி.
  • சி.எம். மேல்நிலைப்பள்ளி
  • ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி
  • விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி
  • காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி
  • கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • ஏ. எம். எம். சின்னமணி நாடார் உயர்நிலைப் பள்ளி
  • புனித தோமையார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • ஏ. பி. சி. வீரபாகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

கல்லூரிகள்

  • வ.உ.சி. கல்லூரி
  • வ.உ. சி. பொறியியல் கல்லூரி (அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி)
  • காமராசர் கல்லூரி
  • புனித மேரி கல்லூரி
  • அரசு பாலிடெக்னிக் கல்லூரி(118)
  • அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி (மகளிர்)[8]
  • ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி
  • சாமுவேல் பாலிடெக்னிக் கல்லூரி
  • நாசரேத் மார்கோசியஸ் கல்லூரி
  • பிஷெப் கால்டுவெல் கல்லூரி

பொழுதுபோக்கு இடங்கள்

  • ரோச் பூங்கா.
  • துறைமுக கடற்கரை.
  • நேரு பூங்கா - முத்து நகர் கடற்கரை
  • ராஜாஜி பூங்கா
  • பாரத் ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பூங்கா
  • கக்கன் பூங்கா
  • எம்.ஜி.ஆர் பூங்கா
  • முயல் தீவு (முத்தரையர் கோவில்)
  • தெப்பக்குளம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.