வ. உ. சிதம்பரனார் துறைமுகம்
வ. உ. சிதம்பரனார் துறைமுகம் (V.O.Chidambaram Port Trust) முன்னதாக தூத்துக்குடி துறைமுகம் இந்தியாவின் 12 முதன்மைத் துறைமுகங்களில் ஒன்றாகும். 2011 ஆம் வருடம் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது.[1]தமிழ்நாட்டின் தூத்துக்குடி நகரில் அமைந்துள்ள இந்தக் கடலோரச் செயற்கைத் துறைமுகம்[2]1974ஆம் ஆண்டு சூலை 11 இல் முதன்மைத் துறைமுகமாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரும் துறைமுகமாகவும் கொள்கலன் முனையங்களில் கொச்சி, சவகர்லால் நேரு துறைமுகம், மும்பை மற்றும் சென்னைத் துறைமுகங்களுக்கு அடுத்ததாக இந்தியாவின் நான்காவது மிகப்பெரும் துறைமுகமாகவும் விளங்குகிறது. 2008ஆம் ஆண்டில் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 13 வரை 10 மில்லியன் டன்களுக்கும் கூடுதலாக சரக்குகளை மேலாண்டுள்ளது.[3] இத்துறைமுகத்திலிருந்து ஐக்கிய அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, இலங்கை மற்றும் நடுநிலக் கடல் நாடுகளுக்கு ஏற்றுமதி/இறக்குமதி நடைபெறுகிறது.
வ.உ.சிதம்பரனார் துறைமுகம் | |
---|---|
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
இடம் | தூத்துக்குடி, தமிழ்நாடு |
ஆள்கூற்றுகள் | 8.4730°N 78.1215°E |
விவரங்கள் | |
உரிமையாளர் | வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம், இந்திய அரசு |
துறைமுகம் வகை | இடைநிலை கடலோரத் துறைமுகம் (செயற்கை) |
துறைமுகத்தின் அளவு | 960 ஏக்கர்கள் (388.8 எக்டேர்கள்) |
நிலப் பரப்பு | 2150 ஏக்கர்கள் (870.75 எக்டேர்கள்) |
ஊழியர்கள் | 1,162 (2009-10) |
முதன்மை வணிகம் | தொழில்துறை நிலக்கரி, செறிவூட்டிய செப்பு, உரம், வெட்டுமர கட்டைகள், இரும்புத் தாது முதன்மை இறக்குமதி: நிலக்கரி, சிமிட்டி, தயாரான உரம், கச்சா உரப் பொருள்கள், பாசுபேட்டுக் கற்கள், பெட்ரோலியப் பொருட்கள், பெட்ரோலியக் கோக் மற்றும் உணவு எண்ணெய்கள் முதன்மை ஏற்றுமதி: பொதுச் சரக்குகள், கட்டிடப் பொருட்கள், திரவநிலை சரக்குகள், சர்க்கரை, கிரானைட்டு, லிமோனைட்டு தாது |
UN/LOCODE | INTUT |
புள்ளிவிவரங்கள் | |
ஆண்டு சரக்கு டன்கள் | 23.787 மில்லியன் டன்கள் (2009-10) |
ஆண்டுக்கான சரக்குப் பெட்டக கொள்ளளவு | 4,67,752 (81,68,603 டன்கள்) (2010-2011) |
கி.பி. 7 - 9 மற்றும் கி.பி. 10 - 12 காலகட்டங்களில் பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் பயன்பாட்டில் இயற்கைத் துறைமுகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.[4]
வரலாறு

தூத்துக்குடி பல நூற்றாண்டுகளாகவே முத்து வளர்ப்பிற்கும் கடல்சார் வணிகத்திற்கும் பெயர்பெற்றிருந்தது. மிகுந்த வளமிக்க பின்னிலத்தையும் இயற்கைத் துறைமுகத்தையும் கொண்டிருந்த இங்கு துவக்கத்தில் மர தூண் துறைகளும் பின்னர் திருகாணி தூண் துறைகளும் கட்டப்பட்டன. தொடருந்து இணைப்பு ஏற்பட்டபின்னர் துறைமுக மேம்பாட்டுப் பணிகள் முனைப்பாகத் தொடங்கின. 1868ஆம் ஆண்டில் தூத்துக்குடி ஓர் நங்கூரம் பாய்ச்சி கப்பல்கள் நடுக்கடலில் இருக்க படகுகள் மூலம் நிலத்துடன் தொடர்பு கொண்ட நங்கூரத் துறைமுகமாக அறிவிக்கப்பட்டது. அன்று முதலே பல மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இங்கு பெருகி வரும் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு அனைத்து வானிலைகளிலும் இயங்கக்கூடியத் துறைமுகம் அமைக்கத் திட்டமிட்டது. புதியதாகக் கட்டப்பட்ட தூத்துக்குடித் துறைமுகம் 1974ஆம் ஆண்டு சூலை 11 அன்று இந்தியாவின் பத்தாவது முதன்மைத் துறைமுகமாக திறக்கப்பட்டது. 1979ஆம் ஆண்டில் அதுவரை இயங்கிய தூத்துக்குடி சிறு துறைமுகமும் புதியதாகக் கட்டப்பட்ட பெரிய துறைமுகமும் இணைக்கப்பட்டு தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத்தின் நிர்வாகத்தில் வந்தன.
சர்வதேச சேவை
- தென் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு நேரடி சேவை வழங்கும் ஒரே துறைமுகம் தூத்துக்குடி ஆகும் .போக்குவரத்து நேரம் 22 நாட்கள் .
- தூத்துக்குடி துறைமுகம் ஐரோப்பா (போக்குவரத்து நேரம் 17 நாட்கள் ) சீனா (போக்குவரத்து நேரம் 10 நாட்கள் ) மற்றும் செங்கடல் (போக்குவரத்து நேரம் 8 நாட்கள் ) ஆகியவற்றுக்கு நேரடி வாரந்திர போக்குவரத்து சேவை வழங்குகிறது .
சான்றுகோள்கள்
.