சென்னைத் துறைமுகம்
சென்னைத் துறைமுகம் இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களுள் ஒன்றாகும். அண்மைக் காலங்களில் முக்கியமான கொள்கலன் துறைமுகமாக மாறியுள்ள இது முன்னர் போக்குவரத்துக்கு உரிய முக்கிய துறைமுகமாகவே விளங்கியது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சிறப்பாக உற்பத்தித் தொழில் வளர்ச்சிக்கான முக்கிய காரணிகளுள் இதுவும் ஒன்று. தற்போது, சிங்கப்பூர், ஹாங்காங், ஷங்காய், ஷென்ஸென் ஆகிய துறைமுகங்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சிறிய துறைமுகமாக இருப்பினும் வரும் ஆண்டுகளில் இது விரிவாக்கப்பட உள்ளது.
சென்னைத் துறைமுகம் | |
---|---|
சென்னைத் துறைமுகம் | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
இடம் | சென்னை (Madras) |
ஆள்கூற்றுகள் | 13.08441°N 80.2899°E |
விவரங்கள் | |
திறப்பு | 1881 |
நிறுத்தற் தளங்கள் | 26 |
ஊழியர்கள் | 8,000 (2004) |
புள்ளிவிவரங்கள் | |
ஆண்டுக்கான சரக்குப் பெட்டக கொள்ளளவு | 1 மில்லியன் TEU (2008) |
இணையத்தளம் | www.chennaiport.gov.in |
வரலாறு
தென்னிந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள சென்னைத் துறைமுகம், நூறாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஒரு செயற்கைத் துறைமுகம் ஆகும். இது கோரமண்டல் கரை எனப்படும் கிழக்குக் கரையோரப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தொடக்கப் பகுதிகள், 1861 ஆம் ஆண்டில் கட்டப்படவை ஆகும். ஆனால் 1868 ஆம் ஆண்டிலும், 1872 ஆம் ஆண்டிலும் ஏற்பட்ட சூறாவளியினால் இது பயன்படுத்தப்பட முடியாததாயிற்று. 1876 ஆம் ஆண்டில் "ட" வடிவத் தடைச் சுவருக்கான கட்டுமான வேலைகள் தொடங்கப்பட்டன. ஆனால் 1881 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சூறாவளி, பெரும்பாலும் நிறைவடைந்த நிலையில் இருந்த துறைமுகத்தை அடித்துச் சென்று விட்டது. இத் துறைமுகம் புதிதாக அமைக்கத்தொடங்கிய 1881 ஆம் ஆண்டையே தொடக்கமாகக் கொண்டு 2007 ஆம் ஆண்டில் சென்னைத் துறை முகத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது.