பிரகாச மாதா ஆலயம்

பிரகாச மாதா ஆலயம் (ஆங்கிலம்:Church of Our Lady of Light) சென்னையிலுள்ள ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இது பொதுவாக உள்ளூர் வட்டத்தில் போர்த்துக்கீசியத்தில் உள்ள பெயரான நோசா சென்ஹோரா டா லஸ் (Nossa Senhora da Luz) என்பதை ஒட்டி லஸ் சர்ச் என்று அழைக்கப்படுகிறது. 1516ஆம் ஆண்டு போர்த்துக்கீசர்களால் கட்டப்பட்ட இந்த தேவாலயம் சென்னையின் மிகப்பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும். இதன் அடித்தளம் இந்தியாவில் ஐரோப்பிய கட்டிடங்களில் மிகப் பழமையான ஒன்றாக குறிக்கப்படுகின்றது. இது பதினாறாம் நூற்றாண்டில் தரைவழி மார்கமாக கிறித்தவ சமயத்துறவிகள் வந்தடைந்ததையும் குறிக்கிறது. திருத்தூதர் தோமா அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் சாந்தோம் தேவாலயத்திற்கு மிக அண்மையில் உள்ளது.

மயிலாப்பூரில் உள்ள லஸ் சர்ச்

இந்தத் தேவாலயம் கட்டப்பட்டக் காலத்தில் இப்பகுதி வனப்பகுதியாக இருந்திருந்தபோதும் தற்காலத்தில் செயலாக்கம் மிகுந்த பெருநகரப் பகுதியாக விளங்குகிறது. இந்த பதினாறாம் நூற்றாண்டு ஐரோப்பியக் கட்டிடத்தில் கோதிக் வளைவுகளும் பரோக்கிய அலங்காரங்களும் காணப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 15 அன்று பிரகாச மாதா விருந்து கொண்டாடப்படுகிறது. ஆகத்து 15,2010 அன்று சென்னை-மயிலாப்பூர் பேராயர் ஏ.எம். சின்னப்பா அவர்களால் பிரகாச மாதா தேவாலயம் பிரகாச மாதா ஆலயம் என அறிவிக்கப்பட்டது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.