இந்திய அரசு

இந்திய அரசு (Government of India, இந்தி: भारत सरकार, பாரத் சர்க்கார்[1]), இந்திய நாட்டின் ஒன்றிய அரசு. இது இந்திய அரசியல் சட்டப்படி அமைக்கப்பெற்றது. அதுமட்டுமில்லாமல் கூட்டாட்சித் தத்துவத்தின்படி, குடியரசு இந்தியாவில் அடங்கிய 29 மாநிலங்களையும் மற்றும் 7 ஆட்சிநிலப் பகுதிகளையும் தன் ஆளுமையில் ஒன்றிணைக்கின்றது. இதன் செயல் மையமாக இந்தியத் தலைநகர் புது தில்லி விளங்குகின்றது.

இந்திய அரசு
உருவாக்கம்சனவரி 26, 1950 (1950-01-26)
நாடுஇந்தியக் குடியரசு
வலைத்தளம்india.gov.in
தலைவர்குடியரசுத் தலைவர் (ராம்நாத் கோவிந்த்)
இருப்பிடம்ராஷ்ட்ரபதி பவன்
சட்டம்
சட்டமன்றம்நாடாளுமன்றம்
மேலவைமாநிலங்களவை
தலைவர்அவைத்தலைவர் (வெங்கையா நாயுடு)
கீழவைமக்களவை
தலைவர்அவைத்தலைவர் (சுமித்ரா மகாஜன்)
கூடும் இடம்சன்சத் பவன்
செயல்
ஆட்சியாளர்இந்தியப் பிரதமர் (நரேந்திர மோடி)
முக்கிய உறுப்புஇந்திய அமைச்சரவை
குடிமைப் பணிகளின் தலைவர்அமைச்சரவை செயலாளர் (பிரதீப் குமார் சின்கா, IAS)
அமைச்சரவை துறைகள்57
பொறுப்புமக்களவை
நீதி
உச்ச நீதிமன்றம்இந்திய உச்ச நீதிமன்றம்
தலைமை நீதிபதிஇந்தியத் தலைமை நீதிபதி (ரஞ்சன் கோகோய்)

இந்தியக் குடிகளைக் காக்கும் அடிப்படைச் சட்டங்களான சமூக நலன் மற்றும் குற்றவியல் சட்ட வடிவுகள், அவற்றினை இயற்றிய நாடாளுமன்றம் போன்றவைகளை இந்திய குடிகளைக் காக்க அமைக்கப்பெற்றவைகளாகும். இதன் கூட்டாட்சி மற்றும் மாநில தன்னாட்சி கோட்பாட்டின்படி அதன் மாநில அரசுகள் இச்சட்டவடிவுகளை, ஆளுமைகளை, நீதிபரிபாலணைகள் செயற்படுத்துவதற்கான கிளை அமைப்புகளாக செயற்படுகின்றன.

இதன் சட்ட முறைகளான கூட்டாட்சி மற்றும் மாநில தன்னாட்சிக் கொள்கையை செயற்படுத்தும் விதமாக ஆங்கிலத்தை பொது மொழியாகக் கொண்டு செயற்படுகின்றது.

பன்னாட்டு நீதிமன்றத்தின் நீதிபரிபாலனத்தில் இந்தியா இணக்கம் கொண்டுள்ளதால் இந்தியா சில பல ஒதுக்கீடுகளையும் பெற்றுள்ளது. அதன் அதிகாரப் பரவலாக்கல், இந்தியாவின் ஊராட்சி மன்றம் என்ற உள்ளாட்சி அமைப்பின் மூலம் கடைக்கோடியில் உள்ள கிராமங்கள் வரை சென்றடைகிறது.

அரசியலமைப்பு

இந்தியாவின் முகவுரை மற்றும் முன்னுரையாக அதன் எற்றுக்கொண்ட அரசியலமைப்பிற்கான கொள்கைகள் விளங்குகின்றன - தன்னாட்சி, பொதுவுடைமை, சமயச்சார்பின்மை, மக்களாட்சி, குடியரசுக் கொள்கை.

தன்னாட்சி

தன்னாட்சி என்பது இந்தியாவின் மேலான அல்லது விடுதலைபெற்ற, தன்னாட்சியைக் குறிக்கும். இந்தியா தன் உள்ளமைப்பிலும், வெளியமைப்பிலும் விடுதலை பெற்ற நாடாக செயல்படுகின்றது. அதன் உள் அமைப்பில் மற்றும் வெளியமைப்பில் வேறு எவரும் அல்லது எந்நாட்டினரும் தலையிடுவதை விரும்புவதில்லை. இந்தியா அதன் மக்களால் நேரிடையாக அரசை தேர்ந்தெடுத்து மக்களே ஆட்சி புரியும் நாடு, மக்களாட்சித் தத்துவத்தைக் கடைப்பிடிக்கும் நாடு.

பொதுவுடைமை

பொதுவுடைமை இந்தியாவின் முன்னுரையாக 42 வது திருத்தச் சட்டமாக 1976 சேர்க்கப்பட்டது.இது சமுதாயம் மற்றும் பொருளாதாரத்தில் மக்கள் சமத்துவத்துடன் வாழ வலியுறுத்துகின்றது. இதன்படி சாதி வேற்றுமை, நிற வேற்றுமை, பாலியல் வேற்றுமை, சமய வேற்றுமை, மொழி வேற்றுமை இவைகளை தடை செய்கின்றது. எல்லோரும் சமம், எல்லோருக்கும் சம வாய்ப்பு, எல்லோரும் இந்நாட்டுமன்னர் என்பதை ஈடேற்ற அரசு முழுமுயற்சியுடன் செயல்பட வழிவகுக்கின்றது.

இதனை நிரூபிக்கும் விதமாக இந்தியா கலப்பு பொருளாதாரக்கொள்கை ஏற்படுத்தியும் மற்றும் தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஜமீன்தாரி முறை ஒழிப்பு , ஒரே ஊதியக் கொள்கை மற்றும் குழந்தைத் தொழிலாளர் தடை போன்ற சட்டங்களை அமல் படுத்தியது.

சமயச் சார்பின்மை

இந்தியாவின் முன்னுரையாக 42 வது திருத்தச் சட்டம் 1976 சேர்க்கப்பட்டது. இது எல்லா சமயத்தினரும் சமமாக வாழ வலியுறுத்துகின்றது. மேலும் அவரவர் நம்பிக்கையை உறுதி செய்கின்றது. இந்தியாவிற்கென்று தனியான அல்லது வலியுறுத்தும் சமயமோ அல்லது மொழியோ இல்லை. சமயம் என்பது அரசிற்கோ, அரசு சார்ந்த நிறுவனம் மற்றும் பள்ளிகளுக்கோ கிடையாது. அனைவரது சமயமும் நம்பிக்கையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் செயல்படுகின்றது.

மக்களாட்சி

இந்தியா ஒரு விடுதலை பெற்ற நாடு. ஒருவர் எந்த இடத்திலும் இருந்து எவராயிருந்தாலும் வாக்களிக்கமுடியும், இது இந்திய மக்களின் வாக்குரிமையை வலியுறுத்துகின்றது.

அனைவரும் பங்குபெற வாய்ப்பளிக்கும் விதமாக அட்டவணைப்படுத்தப்பட்டப் பிரிவினரான பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியின மக்களுக்கு 22 சதவீதம் இட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு சமவுரிமை நிலைநாட்டப்படுகின்றது.

பெண்களும் சமுதாயத்தில் சமநிலையடையும் விதமாக 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வரைவு மசோதா, நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த வழிசெய்கின்றது.

குடியரசு

முடியாட்சி இந்தியாவால் எதிர்க்கப்படும் ஒன்று, வாரிசுரிமை ஆட்சியையும் இந்தியா எதிர்க்கின்றது. இவையெல்லாம் குடியரசுக்கு எதிரான ஆட்சிகளாகக் கருதப்படுகின்றது. குடியரசுத் தலைவரால் ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை அரசு ஆட்சியாளர் பொதுத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவரே குடியரசுத் தலைவரால் பிரதமராக நியமிக்கப்படுகின்றார்.

நாடாளுமன்ற அரசு

நாடாளுமன்ற அரசு இந்தியாவில் ஐக்கிய இராச்சிய அரசு முறையை பின்பற்றி செயற்படுகின்றது, (வெஸ்ட் மினிஸ்டர் முறை). சட்டமியற்றும் இடமாக நாடாளுமன்றம் செயல்படுகின்றது. இது இரண்டு அவைகளை கொண்டுள்ளது. நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களான 545 உறுப்பினர்கள் மக்களவையில் (கீழவை) செயல்படுகின்றனர். மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படும் 250 உறுப்பினர்கள் மாநிலங்களவையில் (மேல் சபை) செயல்படுகின்றனர். அரசியலைமைப்பின் தலைவராக குடியரசுத் தலைவர் செயல்படுகின்றார். அரசின் தலைவாராக பிரதமர் மற்றும் அவர் அமைச்சரவையும் செயல்படுகின்றனர்.

நீதிபரிபாலனம்

இந்தியாவின் நீதிபரிபாலனம் பிரித்தானிய காலத்திலிருந்து தொடரப்பட்டு வருகின்றது.இந்தியாவின் உச்ச நீதிமன்றம் , அதன் தலைமை நீதிபதி மற்றும் 25 துணை நீதீபதிகளின் உதவியுடன் நீதிபரிபாலனம் புரிகின்றது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்.

நிதி

வரிவிதிப்பு

இந்தியாவில் மூன்றடுக்கு முறையில் வரிவிதிப்புகள் நடைபெறுகின்றது. அதன் படி வருமான வரி, மூலவரி (செல்வ வள வரி, மரபுரிமை வரி), விற்பனை வரி, சேவை வரி, சுங்கத் தீர்வை மற்றும் ஆயத் தீர்வை போன்ற வரிகள் வசூலிக்கப்படுகின்றன.

மாநில அரசுகள் மூலம் உள்மாநில மதிப்புக் கூட்டு வரி, கேளிக்கை வரி மற்றும் தொழில் முனைவோர் வரி, மதுபானத் தாயாரிப்புகளுக்கான ஆயத் தீர்வை , சொத்து பரிமாற்றங்களுக்கான மற்றும் நிலவரி வசூலிப்புக்காக, பயன்படுத்தப்படும் முத்திரைத் தாள்களுக்கான முத்திரைத் தீர்வை ஆகியவைகள் மாநில அரசுகளால் வசூலிக்கப்படுகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.