அரியலூர் மாவட்டம்

அரியலூர் மாவட்டம் சனவரி 1, 2001-இல் பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் மார்ச் 31, 2002 ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பொருளாதாரத்தை காரணம் கூறி அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007 ல் உருவாக்கப்பட்டது.[1]

அரியலூர் மாவட்டம்

அரியலூர் மாவட்டம்:அமைந்த இடம்
தலைநகரம் அரியலூர்
ஆட்சியர்
திருமதி D. ரத்னா இஆப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

அபினவ் குமாா் இகப
பரப்பளவு 1934.01 ச.கி.மீ
மக்கள் தொகை
752481 (2011)
வட்டங்கள் 4
ஊராட்சி ஒன்றியங்கள் 6
நகராட்சிகள் 2
பேரூராட்சிகள் 2
ஊராட்சிகள் 171
வருவாய் கோட்டங்கள் 2
வருவாய் கிராமங்கள் 195
இணையதளம் https://ariyalur.nic.in

மாவட்ட நிர்வாகம்

மாவட்ட வருவாய் நிர்வாகம்

அரியலூர் மாவட்டம் அரியலூர், உடையார்பாளையம் ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களையும், அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய 4 வருவாய் வட்டங்களையும், 15 உள்வட்டங்களும், 195 வருவாய் கிராமங்களும் கொண்டது.[2][3]

உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்

இம்மாவட்டம் 12 உறுப்பினர்கள் கொண்ட ஒரு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும், 6 ஊராட்சி ஒன்றியங்களும்[4], 171 கிராம ஊராட்சிகளும்[5], அரியலூர் & ஜெயங்கொண்டம் என இரண்டு நகராட்சிகளும், வரதராஜன்பேட்டை & உடையார்பாளையம் என இரண்டு பேரூராட்சிகளும் கொண்டது.[6]

அரசியல்

இம்மாவட்டத்தில் அரியலூர், குன்னம், ஜெயங்கொண்டம் என மூன்று சட்டமன்றத் தொகுதிகளை கொண்டது.[7] இம்மாவட்டப் பகுதிகள் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் உள்ளது.

பொருளாதாரம்

இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு தமிழகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. இதனால் அரியலூர் சிமெண்ட் சிட்டி (Cement city) என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது.

சிமென்ட் தவிர நிலக்கரி அதிகளவில் கிடைக்கிறது. தமிழகத்தில் நெய்வேலிக்கு அடுத்தபடியாக ஜெயங்கொண்டம் பகுதியில் அதிகளவில் படிமங்களாக கிடைக்கிறது இதனையடுத்து தமிழக அரசும் ஜெயங்கொண்டம் அணல் மின்நிலைய திட்டம் என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்து அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இது தவிர இம்மாவட்டத்தில் செம்மண் மிகுந்து காணப்படுவதால் முந்திரி அதிகளவில் பயிரிடப்படுகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 1,940 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள அரியலூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 754,894 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 374,703 மற்றும் பெண்கள் 380,191 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1015 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 389 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 71.34 ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.23 ஆகவும், பெண்களின் படிப்பறிவு 61.74 ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 81,187 ஆக உள்ளது. மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 8.54% ஆக உள்ளது. [8][9]

சமயம்

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 708,397 (93.84 %) ஆகவும், இசுலாமிய மக்கள்தொகை 7,942 (1.05 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 37,403 (4.95 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 104 ஆகவும், சமண சமய மக்கள்தொகை 65 ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 88 ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 853 (0.11 %) ஆகவும் உள்ளது.

கல்லூரிகள்

கலை அறிவியல் கல்லூரிகள்

  • அரசு கலைக் கல்லூரி
  • மீனாட்சி இராமசாமி கலை அறிவியல் கல்லூரி
  • மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • மதர் ஞானம்மா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

பொறியியல் கல்லூரிகள்

  • மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி
  • அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - அரியலூர் வளாகம்
  • கே.கே.சி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி
  • அரியலூர் பொறியியல் கல்லூரி
  • நெல்லியாண்டவர் தொழில்நுட்ப கல்லூரி

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்

  • மீனாட்சி இராமசாமி கல்வியியல் கல்லூரி
  • எம்.கே.கல்வியியல் கல்லூரி
  • எஸ். ஆர்.எம். கல்வியியல் கல்லூரி
  • ஸ்ரீ லக்ஷ்மி கல்வியியல் கல்லூரி
  • ஸ்ரீ சரஸ்வதி கல்வியியல் கல்லூரி
  • மெரிட் கல்வியியல் கல்லூரி
  • கே. இந்திரா கல்வியியல் கல்லூரி
  • ஸ்ரீ சௌபாக்யா கல்வியியல் கல்லூரி

பாலிடெக்னிக் கல்லூரிகள்

  • அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரியலூர்
  • மீனாட்சி இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரி
  • மாடர்ன் பாலிடெக்னிக் கல்லூரி
  • நேஷனல் பாலிடெக்னிக் கல்லூரி

செவிலியர் பயிற்சி கல்லூரிகள்

  • அன்னை தெரசா மருந்தியல் மற்றும் செவிலியர் கல்லூரி

சுற்றுலா தளங்கள்

கங்கைகொண்ட சோழபுரம்

சோழர்களின் பெருமரசை நிறுவிய முதலாம் இராஜராஜ சோழன் மகனான இராசேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு பிற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது.இங்கு இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவாலயம் இன்றும் உள்ளது.அதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது

வேட்டக்குடி ‍ கரைவெட்டி பறவைகள் சரணாலயம்

தமிழ்நாட்டிலுள்ள மிக முக்கியமான நன்னீர் ஏரிகளுள் ஒன்றாக விளங்குகிறது. மாநிலத்தின் பெரிய ஏரிகளுள் இதுவும் ஒன்று. இந்த ஏரி, மாநிலத்தின் மிக அதிக அளவிலான நீர்ப்பறவைகள் வந்து கூடும் இடமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இச்சரணாலயத்தில் உள்ள 188 பறவை இனங்களில் 82 இனங்கள் நீர்ப்பறவைகளாகும். அருகிவரும் பட்டைதலை வாத்து, இந்த ஏரியின் முக்கிய வருகையாளர்களுள் ஒன்றாகும். [10]

புவியியல்

1.இம்மாவட்டத்தின் மூன்று முக்கிய நதிகளாவன‌ : கொள்ளிடம், மருதையாறு, வெள்ளாறு.

2.இம்மாவட்டத்தின் மூன்று முக்கிய நகரங்கள் : அரியலூர், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம்.

போக்குவரத்து வசதிகள்

தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சாலை மூலம் சென்று வர அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய நகரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் தொடர் வண்டி மூலம் சென்று வர அரியலூர் புகைவண்டி நிலையம் முக்கிய சந்திப்பாக இருக்கிறது, மேலும் சில தொடர்வண்டி சந்திப்புகள் சில்லக்குடி, செந்துறை, ஒட்டக்கோவில், ஈச்சங்காடு, ஆர்.எஸ்.மாத்தூர், வெல்லூர்.

வேளாண்மை

இம்மாவட்டத்தினுடைய பொருளாதாரத்தில் வேளாண்மைத் தொழில், முக்கிய பங்காக தொடர்ந்து இருந்து வருகிறது. இம்மாவட்டத்தின் எழுபது சதவிகித மக்கள் வேளாண்மை அல்லது அது சார்ந்தத் தொழில்களைச் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில்ஏழு பெரிய வேளாண் காலநிலை மண்டலங்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. இம்மாவட்டம் மண்டல எண் -V எனக் குறியீடு தரப்பட்டுள்ளது. அதாவது காவிரி டெல்டா மண்டலம் (CDZ). வெப்பநிலை அதிகபட்சமாக 38℃-லிருந்து குறைந்தபட்சமாக 24℃ வரை நிலவி வருகிறது.

பரப்பளவு

இம்மாவட்டத்தின் மொத்த பரப்பு, 1933.38 சதுர கிலோ மீட்டராகும். அதில் மொத்த பயிர் பரப்பானது 1.118 இலட்சம் எக்டேராகும். சராசரி வருடாந்திர மழை அளவானது 954 மி.மீஆகும். இந்நிலப்பரப்பில் 45136 எக்டேர் நீர் பாசன வசதிப் பெறுகிறது. காவிரியின் கிளைகள் வழியாக 10389 எக்டேர் திருமானூர், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாரம் பாசனம் பெறுகின்றது. மீதமுள்ள 66738 எக்டேர், மழை நீரை சார்ந்த மானாவாரி(மழை நீரை மட்டுமே சார்ந்த வேளாண்மை) பகுதிகளாகும்.

மண் வகைமை

மண்ணின் இயல்பு பெரும்பாலும் களிமண் பாங்காகவும், சிவப்பு நிறமானை மேற்பகுதியும்,, மஞ்சள் நிறமான அடிப்பகுதியும் காணப்படுகின்றன. இதன் வேதியியல் தன்மைகளான இரும்புச் சத்து அதிகமும், சுண்ணாம்புக்கல்லும் கலந்துள்ள, செந்நிற களிமண் (Ferruginous red loam) உள்ள நிலத்தின் தன்மை காணப்படுகின்றன. மண்ணின் நடு ஆழத்தில், சிறந்த வடிகால் வசதியும், உப்பும், காரத் தன்மையும் இல்லாமல், PH 6.5-லிருந்து 8 வரை காணப் படுகின்றன. அங்ககத் தன்மைகளான, தழைச்சத்துக்களும், மணிச்சத்துக்களும் அளவு குறைந்து இருக்கின்றன. ஆனால், சாம்பல் சத்தும், சுண்ணாம்பும் அளவு அதிகமாகவே காணப்படுகின்றன. செந்துறை, தா.பழூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் வட்டாரங்களில் செம்மையான சரளைமண் காணப்படுகிறது. திருமானூரிலும், அரியலூர் வட்டாரங்களிலும், கரிசல் மண் அதிகமாகக் காணப்படுகின்றன.

மண் வளத்தை உயிர் உரங்கள் கொண்டு மேம்படுத்துதல், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, விதை கிராமத் திட்டம், மண் வள அட்டை இயக்கம், தேசிய எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய் பனை இயக்கம், பசுந்தாள் உரம், தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு பருத்திச் சாகுபடி இயக்கம், தேசிய நீடித்த வேளாண்மை இயக்கம், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைத் தொழில் நுட்பங்கள் போன்றத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மாநில அரசின் பங்கு

அரியலூர் மாவட்டத்தில் பலவகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுவதால் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் தேவையைப் பூர்த்தி செய்தல், ஊரக மக்கள் தொகைக்கு வேலை வாய்ப்பினை அளித்தல் ஆகியவையே வேளாண்மைத் துறையின் முக்கிய கொள்கையாகவும், கோட்பாடுகளாகவும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன. வேளாண் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துதல், அதற்குரியத் தொழில் நுட்பங்களை கண்டறிதல், அதனை பரப்புதல் ஆகிய செயல் திட்டங்களினால் வேளாண்மை துறை செயற்திட்டத்துடன் செயற்படுகிறது.

நடுவண் அரசின் பங்கு

இருப்பினும், நடுவண் அரசின் திட்டங்களான, பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டம் வழியே சொந்த கிராமத்தில் வசிக்காத விவசாயிகளின் பட்டியல்களை காணும் போது, அரியலூர் உள்வட்டம், ஏலாக்குறிச்சி உள்வட்டம், கீழப்பழூர் உள்வட்டம், நாகமங்கலம் உள்வட்டம், திருமானூர் உள்வட்டம், செந்துறை உள்வட்டம், பொன்பரப்பி உள்வட்டம் R.S.மாத்தூர் உள்வட்டம் உடையார்பாளையம் உள்வட்டம், ஜெயங்கொண்டம் உள்வட்டம், குண்டவெளி உள்வட்டம், சுத்தமல்லி உள்வட்டம், தா.பழூர் உள்வட்டம், ஆண்டிமடம் உள்வட்டம், குவாகம் உள்வட்டம், பல்வேறு வட்டங்களில் குடிபெயர்வு நடைபெற்றுள்ளதை அறிய இயலும் [11]

மேலும், பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட தகுதியற்றோர் பட்டியல் உருவாக்கப் பட்டுள்ளது. அரியலூர் உள்வட்டம்,[12] ஏலாக்குறிச்சி உள்வட்டம், கீழப்பழூர் உள்வட்டம், நாகமங்கலம் உள்வட்டம்,திருமானூர் உள்வட்டம், செந்துறை உள்வட்டம், பொன்பரப்பி உள்வட்டம், R.S.மாத்தூர் உள்வட்டம், உடையார்பாளையம் உள்வட்டம், ஜெயங்கொண்டம் உள்வட்டம், குண்டவெளி உள்வட்டம், சுத்தமல்லி உள்வட்டம், தா.பழூர் உள்வட்டம், ஆண்டிமடம் உள்வட்டம், குவாகம் உள்வட்டம் ஆகிய அரியலூர் உள்வட்டங்களுக்கான தனித்தனி பட்டியல்கள் உருவாக்கப் பட்டுள்ளன.

மேற்கோள்கள்

  1. "Official Website of Ariyalur District".
  2. "Revenue Administration".
  3. https://ariyalur.nic.in/ta/மாவட்டம்-பற்றி/
  4. "அரியலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்".
  5. "Rural Development".
  6. "Local Bodies Administration".
  7. "Elected Representatives".
  8. "Ariyalur District Population Census 2011-2019, Tamil Nadu literacy sex ratio and density". www.census2011.co.in.
  9. "Ariyalur District Census Hand Book".
  10. https://ariyalur.nic.in/ta/tourist-place/கரையவெட்டி-பறவைகள்-சரணால/
  11. https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2019/07/2019073023.pdf
  12. https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2019/07/2019071247.pdf

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.