மிளகுச் சம்பா (நெல்)

மிளகு சம்பா பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, சற்றே வித்தியாசமான உருண்டை வடிவத்தில் காணப்படும் நெல் வகையாகும். பார்ப்பதற்கு மிளகுபோல இருப்பதால், மிளகு சம்பா என அழைக்கப்படும் இவ்வகை, வெண்ணிறமான சன்ன இரக அரிசியைக் கொண்டது. 130 நாள் வயதுடைய இந்த இரக நெல், உயரமான பகுதியில் விளையக்கூடியதும், நேரடி விதைப்புக்கும், மற்றும் நடவு முறைக்கும் ஏற்றதாகும். தமிழகத்தில் பரவலாகப் பயிர் செய்யப்பட்டுவரும் இவ்வகை நெல்லுக்கு, எந்த இரசாயன உரங்களும் தேவையற்றது. ஒற்றை நாற்று முறையில் (திருந்திய நெல் சாகுபடி முறையில்) நடவு செய்யும்போது, அதிகத் தூர் (கதிர்) வெளிவந்து அதிகபட்சம் ஏக்கருக்கு 28 மூட்டை வரையில் மகசூலாக கிடைக்கும் என கூறப்படுகிறது.[1]

மிளகுச் சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
120 – 130 நாட்கள்
மகசூல்
ஏக்கருக்கு சுமார் 2100 கிலோ
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

மருத்துவ குணம்

பண்டையக் காலத்தில் மற்போர் வீரர்கள் இதை உண்டு வலிமை பெற்றுள்ளதாக கருதப்படும் மிளகு சம்பா நெல்லின் அரிசி, அதிக மருத்துவக் குணம் கொண்டது அறியப்படுகிறது. இந்த நெல்லின் அரிசியில் வடித்த கஞ்சி, பசியைத் தூண்டவும், மற்றும் தலைவலியைப் போக்கும் தன்மையை கொண்டது. வாதம் போன்ற பலவிதமான நோயைப் போக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.[2]

அகத்தியர் குணபாடம்

மிளகுச்சம் பாவரிசி மென்சுகத்தைச் செய்யும்
அளவில்பல் நோயை அகற்றுங் – களகளெனத்
தீபனத்தைத் தூண்டிவிடுந் தீரா வளிதொலக்குஞ்
சோபனத்தைச் செய்நகையாய்! சொல்.

மேற்கூறிய பாடலின் பொருளானது, இது நன்மையைக் கொடுத்து, பசித்தீயை வளர்க்கும் எனவும், மற்றும் பெருவளி முதலிய பலவித நோய்களை அகற்றும் என்றும் கூறப்படுகிறது.[3]

இவற்றையும் காண்க

சான்றுகள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.