புத்தகோசர்

புத்தகோசர் (ஆங்கிலம்: Buddhaghoṣa, தாய்: พระพุทธโฆษาจารย์, சீனம்: 覺音/佛音) ஒரு இந்திய பௌத்த அறிஞர். இவர் கி.பி 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அறிஞர். தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த பௌத்த ஞானிகளில் காஞ்சிபுரத்துப் பௌத்த பள்ளியைச் சேர்ந்த புத்தகோசர் குறிப்பிடத்தக்கவர். இளமையில் இவர் வடமொழி வேதங்களை நன்கு கற்று பிறகு பௌத்த மதத்திற்கு மாறினார். மகத நாட்டில் அக்காலத்தில் வழக்கிலிருந்த பாலி மொழியில் இவர் புலமை பெற்றிருந்தார். இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்றபின் இலங்கையில் உள்ள அநுராதபுரத்தில் தங்கியிருந்தார்.[1]

எழுத்துக்கள் மற்றும் மொழிபெயர்ப்பு

பௌத்த சமயத்தை நன்கு கற்ற புத்தகோசர் திரிபிடகம் என்ற நூலுக்கு விரிவுரை வழங்கினார். இலங்கையை மகாநாமன் (கி.பி.409-431) ஆட்சி புரிந்த காலப் பகுதியில் அநுராதபுரம் மகா விகாரையில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்த புத்தகோசர் “விசுத்தி மார்க்கம்” என்ற பௌத்தமத நூலை பாலிமொழியில் இயற்றினார். இலங்கையில் சிங்கள மொழிகளில் இருந்த பல பௌத்த நூல்களை இவர் பாலி மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இவருடைய நாவன்மையைக் கண்டு வியந்த இலங்கை மக்கள் இவரையும் புத்தரைப் போலவே கொண்டாடினர். புத்தகோசர் என்பதற்குப் “புத்தருடைய குரல்” என சிலரால் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள புத்தகோசுப் பதி என்ற நூலில் இவரைப் பற்றிய விளக்கத்தை காணலாம். பௌத்த வேதப் பிராமண நூல்களுக்கு புத்தகோசர் எழுதிய நூல்கள் பத்து பெருந்தொகுதிகளாக உள்ளன. இலங்கையில் இன்று நிலவும் பௌத்த மதத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தவர் புத்த கோசர் என்று கூட கூறலாம். மகாயான புத்த சமயம் வளர்ச்சியடைய உதவிய புத்தகோசர் தம் நூல்களில் பலவற்றை இந்தியாவிலேயே எழுதினார். அவர் பர்மாவுக்கு பயணம் செய்திருக்கிறார். பர்மா அரசன் தம்மபாலன் என்பவர் புத்தகோசரைத் தம் நாட்டில் வரவேற்று வழிபட்டார் என்பது பர்மிய இலக்கியங்களிலிருந்து தெரியவருகிறது.

இறப்பு

புத்தகோசர் தன் இறுதி காலத்தில் புத்தகயா நகர் வந்தடைந்து அங்கேயே காலமானார்.

வெளி இணைப்புகள்

புத்தகோசர்

மேற்கோள்கள்

  1. Buddhaghosa
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.