ததாகதகர்ப தத்துவம்

ததாகதகர்ப(तथागतगर्भ) தத்துவம் என்பது பௌத்தத்தின் மிக முக்கியமான தத்துவங்களுள் ஒன்றாகும். ததாகதகர்ப தத்துவத்தின் படி, அனைவருள்ளும் புத்தநிலையை அடையக்கூடிய தன்மை உள்ளர்ந்த நிலையில் இயற்கையாக உள்ளது. ததாகதகர்பம் ஆத்மனின் உண்மையான சாரம் என புத்தர் மகாபரிநிர்வாண சூத்திரத்தில் கூறியுள்ளார். இது அனைத்து உயிர்களிலும் காணப்படுகிறது. ஆனால் உலகப்பற்றினாலும், தவறான கருத்துகள், பொருத்தமில்லாத மனநிலை முதலியவற்றின் காரணமாக இந்த ததாகதகர்பம் மனத்திரையால் மறைக்கப்பட்டு அணுக முடியாத நிலையில் உள்ளது.

சொற்பொருளாக்கம்

ததாகதகர்ப (तथागतगर्भ)என்பதை ததாகத(तथागत) மற்றும் கர்ப(गर्भ) என இருக்கூறுகளாக பிரிக்கலாம். ததாகத என்பது புத்தரைக்குறிக்கும் ஒரு சொல். கர்ப என்றால் "உட்கொண்டிருத்தல்" என பொருள் கொள்ளலாம். புத்தநிலையை உட்கொண்டிருத்தல் என குறிக்கும் வகையில் இது ததாகதகர்பம் என ஆனதாக கொள்ளலாம்.

முக்கியமான கருத்துகள்

ததாகதகர்ப சூத்திரங்களில் ததாகதகர்பம், "முழுமையான ஞானம் பெற்ற புத்தரைப்போல் கம்பீரத்துடன் பத்மாசனத்தின் எல்லா உயிர்களின் உடலுள் அமர்ந்த நிலையில்" உள்ள ஒன்றாக உருவகப்படுத்துகிறது. மேலும் இந்த ததாகதகர்பத்தை ஒரு புத்தர் மட்டுமே கான இயலும் எனவும் அந்த சூத்திரங்களில் கூறப்பட்டுள்ளது. எனினும் இது ஒரு உருவகமே என்பதை இங்கு நினைவுக்கூறுதல் வேண்டும். தத்துவ ரீதியான விளக்கங்கள் மகாபரிநிர்வாண சூத்திரம் போன்ற சூத்திரங்களில் காணப்படுகின்றன. இந்த சூத்திரங்களில் ததாகதகர்பம் என்பது உள்ளார்ந்த சாரமாகவும், அழிவற்றதாகவும், அனைத்து உயிரிகளினூடும் இருக்கும் ஒன்றாகவும் இந்த சூத்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

ததாகதகர்ப தத்துவம், சூன்யத்தனைமைக்கு மாறான தத்துவமாகவும் சித்தரிக்கப்படுகிறது. ஏனெனில் சூன்யத்தன்மை தத்துவத்தில் புத்தநிலையும் நிர்வாணமும் கூட ஒரு வக்கையில் நிலையற்றதாக கருதப்படுகிறது. ஆனால் ததாகதகர்பமோ புத்தநிலை என்று நிலையானதென விளம்புகிறது.

ததாகதகர்பத்தை விளக்க பல்வேறு முயற்சிகள் மகாயான சூத்திரங்களில் காணப்பட்டாலும், இந்த தத்துவம் சாமானிய மக்களுக்கு அப்பாற்பட்டதாக கருதப்படுகிறது. ஸ்ரீமாலா சூத்திரத்தில் இவ்வாறாக கூறுப்பட்டுள்ளது," ததாகதகர்பம் என்பது புத்தர்களின் அறிவுக்கு உட்பட்டது. இந்த தத்துவத்தை பத்தாவது பூமியை அடைந்து போதிசத்துவர்களாலும் தெளிவாக அறிந்து கொள்ள இயலாது. எப்போது ஒரு போதிசத்துவர் இந்த தத்துவத்தை முழுவதுமாக உணர்ந்துகொள்ளும் நிலையில் உள்ளாரோ அப்போது புத்தத்தன்மை அந்த போதிசத்துவருக்கு கிடைக்கிறது. "

ததாகதகர்ப தத்துவம் புத்தத்தன்மையுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு உடையது. குறிப்பாக பரிநிர்வாண சூத்திரத்தில் இவ்விரண்டு சொற்களும் ஏறெத்தாழ ஒரே பொருளைக்குறிக்கவே பயன்படுத்தப்பட்ட்டிருப்பது கவனிக்கத்தக்கது. ததாகதகர்ப தத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்தல் மிகவும் விரும்பத்தக்க செயலாக பல்வேறு சூத்திரங்களில் கூறப்பட்டுள்ளன.


சூத்திரங்கள்

இந்த தத்துவத்துடன் தொடர்புடைய சூத்திரங்களை ததாகதகர்ப சூத்திரம் என அழைக்கப்படுகின்றன. இந்த சூத்திரங்களில் ததாகதகர்பம் குறித்த மிக விரிவான கருத்துகள் காணக்கிடைக்கின்றன. உதாரணமாக மகாபரிநிர்வாண சூத்திரம் ததாகதகர்ப தத்துவம் "உத்தரோத்தர(उत्तरोत्तर)" அதாவது முதன்மயிலும் முதன்மையான கருத்து எனக்கூறுக்கிறது. இதே போல் ஸ்ரீமாலா சூத்திரம் இந்த தத்துவமே இறுதியான தத்துவம் என பறைசாற்றுகிறது.

மேற்கோள்கள்

  • The Mahayana Mahaparinirvana Sutra in 12 volumes (Nirvana Publications, London, 1999 - 2000), tr. by Kosho Yamamoto, edited by Dr. Tony Page.
  • The Shrimaladevi Sutra (Longchen Foundation, Oxford, 1998), translated by Dr. Shenpen Hookham.

இவற்றையும் பார்க்கவும்

  • ததாகதகர்ப சூத்திரம்
  • புத்தத்தன்மை
  • மகாபரிநிர்வாண சூத்திரம்
  • ஸ்ரீமாலா சூத்திரம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.