சமாதி (பதஞ்சலி)

சமாதி (பதஞ்சலி) என்பது தியானிக்கப்படும் பொருளின் வடிவம் அல்லது புறப்பகுதியானது விடப்படும் பொழுது இந்த சமாதி நிலையானது ஏற்படுகிறது. அதாவது எந்த வடிவமும் இன்றி கருத்தை மட்டும் உணரும் நிலையை அடைந்து விட்டால் தியானத்தின் அந்த நிலையை சமாதி என்பார் பதஞ்சலி முனிவர். தியானதில் தன்னைப் பற்றிய, தியானிக்கப்படும் பொருள் பற்றிய மற்றும் தியானம் செய்யும் முறை பற்றிய கவனமானது இருக்கும்.

ஆனால் சமாதியில் தன்னைப் பற்றியும், தியானம் செய்யும் முறை பற்றிய அறிவானதும் அகன்று தியானிக்கப்படும் பொருள் ஒன்றுதான் மனதில் இருப்பதைப் போன்ற அனுபவமானது ஏற்படும். பதஞ்சலி முனிவர் சமாதியை சவிகல்ப சமாதி என்றும் நிர்விகல்ப சமாதி என்றும் இரண்டாக பிரித்து விளக்கியுள்ளார்.

சவிகல்ப சமாதி

சவிகல்ப சமாதி என்பது அறிபவன், அறிவு என்னும் வேறுபாடுகள் மறையாமலே, இரண்டற்ற பிரம்மத்தின் தன்மையை அடைந்த மனதின் ஒருமைபாடு நிலையே சவிகல்ப சமாதி என்பார் பதஞ்சலி முனிவர்.

விகல்பம் எனில் பகுத்துக் காணும் கற்பனையாகும். சவிகல்ப சமாதியில், சித்தமானது (அறிவானது) அறிபனான தன்னுடைய மற்றும் அறிவினுடைய எண்ணங்களுடனயே இரண்டற்ற பிரம்ம வஸ்துவின் மீது நிலைத்து நிற்கும். பிரம்ம வஸ்துதான் முதன்மையானதாகும். அறிந்து கொள்ளும் அறிவானது குறைந்து இருக்கும். அதனால் தற்காலிகமாக அந்த இரண்டும் மறக்கப்பட்டதைப் போல இருக்கும். ஆனால் உண்மையிலேயே ஒடுங்கி இருப்பதில்லை. இந்த சவிகல்ப சமாதியை சம்ப்ரஜ்ஞாத சமாதி என்றும் அழைப்பதுண்டு.

சவிகல்ப சமாதி நிலையில் களிமண்ணினால் செய்யப்பட்ட யாணை போன்றவை (பொம்மை யாணை) தோண்றிக் கொண்டிருந்தாலும், அத்துடன் களிமண்ணும் தோண்றிக் கொண்டிருப்பதைப் போல, பன்மையான இவ்வுலகமானது (துவைத பிரபஞ்சம்) தோண்றிக் கொண்டிருந்தாலும் இரண்டற்ற அத்வைத பிரம்ம வஸ்துவும்உணரப்படுகிறது.

களிமண்ணினால் செய்யப்பட்டுள்ள யாணையைக் காணும்பொழுது, அறிவுடைய எவருமே அதையே உண்மையான யாணை என்று எண்ண மாட்டார்கள். யாணை என்னும் பெயர் மற்றும் யாணை என்னும் விலங்கின் உருவமானது அதற்கு இருந்தாலும், இந்தப் பெயரும், உருவமும் வெறும் பேச்சளவு மட்டுமே ஆகும். அது உண்மையிலேயே களிமண் என்பதை உணர்ந்து கொள்ள இயலுகிறது. அதைப் போன்றே, பெயரையும், வடிவத்தையும், பெற்றுள்ள உலகமாக இருப்பினும், அறிபவன், அறிவு, அறியப்பட்ட வஸ்து (பிரம்மம்) என்னும் மூன்றும் கானப்பட்டாலும், அத்துடனேயே பிரம்ம வஸ்துவின் அனுபவமும் (பிரம்மானுபவம்) கூட சவிகல்ப சமாதியில் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

நிர்விகல்ப சமாதி

நிர்விகல்ப சமாதி என்பது அறிபவன் (பிரம்மம்) மற்றும் அறியப்படும் பொருள் (சீவன்) போன்ற வேறுபாடுகள் அகன்று இரண்டாவதற்ற பிரம்ம வடிவாகவே ஆகி பிரம்மத்துடன் ஒன்றி, ஒடுங்கியுள்ள மனநிலைதான் நிர்விகல்ப சமாதி என்று பதஞ்சலி முனிவர் விளக்கியுள்ளார். இந்த நிர்விகல்ப சமாதி நிலையை அசம்ப்ரஜ்ஞாத சமாதி என்றும் அழைக்கிறார் பதஞ்சலி முனிவர். இதில அறிபவன் (திருக்), அறியப்படும் பொருள் (திருஷ்யம்) போன்ற வேறுபாடுகள் அனைத்தும் கரைந்து போயிருக்கும். பிரம்மவஸ்து ஒன்று மட்டுமே அனுபவத்தில் இருக்கும்.

எவ்வாறு உப்பானது தண்ணீரில் கரைந்து தன் வடிவத்தை இழந்து தண்ணீரின் வடிவத்தை ஏற்று தன் வடிவத்தை இழப்பது போல, இரண்டற்ற பிரம்மவஸ்துவின் (மெய்ப்பொருளின்) வடிவத்தை அடைந்த சீவனின் மனதின் வடிவமானது (எண்ணங்கள்/விருத்தி) காணப்படுவது இல்லை. இரண்டற்ற பரபிரம்மம் மட்டுமே உணரப்படுகிறது.

நிர்விகல்ப சமாதியில் மட்டுமே பிரம்ம தரிசனம் ஆகும் வரையிலும் சீவனிடனிருந்த சித்தவிருத்தியானது தானே மறைந்து, பிரம்மம் மட்டுமே எஞ்சி நிற்கிறது.

எனவே அயர்ந்த உறக்க நிலையும் சமாதியும் ஒன்றுதானா எனும் ஐயத்திற்கு இடமில்லை. இந்த இரு நிலைகளுமே மனதின் எண்ணங்கள் தென்படுவதில்லை என்பது பொதுவாக இருப்பினும், நிர்விகல்ப சமாதியில் மனதின் எண்ணங்களானது உள்ளது. உறக்கநிலையில் மனதில் எண்ணங்கள் இல்லை என்ப்தால் உறக்க நிலையை சமாதி நிலைக்கு ஒப்பிடக்கூடாது.

அயர்ந்த உறக்க நிலையிலும் அறிபவன் (பிரம்மம்), அறிவு, அறியப்படும் பொருள் என்னும் பகுப்புக்கள் இருப்பதில்லை. எண்ணங்கள் இருப்பதில்லை. எனவேதான் உறக்கநிலைக்கும், நிர்விகல்ப சமாதிக்கும் உள்ள வேறுபாடுகள் விளக்கப்படுகிறது.

நிர்விகல்ப சமாதியில் சித்தவிருத்தி ஏற்படாமல் இருப்பதற்கு அது பிரம்மனின் வடிவத்தைப் பெற்றிருப்பதே காரணமாகும். உப்பு, நீரில் கரைந்து இருப்பதால் அது தென்படாமல் இருப்பினும் உப்பின் தன்மை நீரில் இருக்கதான் செய்கிறது. ஆனால், அயர்ந்த உறக்கநிலையில் மனதில் எண்ணங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு அது இல்லாமல் இருப்பதுதான் காரணமாகும். கிரகிக்கத் தக்க எந்தப் பொருளுமே அந்த நிலையில் இல்லாமலிருப்பதால் மனமானது தன்னுடைய காரணமான அறியாமை எனும் அஞ்ஞானத்தில் தற்காலிகமாக ஒடுங்கியிருக்கிறது.

பதஞ்சலி முனிவர் தன்னுடைய யோக சூத்திரத்தில் (1. 10) அயர்ந்த உறக்கநிலையிலும் தமோ குணத்தைச் சார்ந்துள்ள எண்ணங்கள் காணப்படும் என்று கூறியுள்ளார்.

உசாத் துணை

  • பதஞ்சலி யோசூத்திரம்
  • வேதாந்த சாரம், நூலாசிரியர், சதானந்த யோகீஸ்வரர்.

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.