தௌலி

தௌலி அல்லது தௌலி மலை (Dhauli), இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்திலிற்கு தெற்கில் 8 கிமீ தொலைவில் பாயும் தயா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மலைப்பாங்கான தௌலி பகுதியில் அசோகரின் கல்வெட்டுகள் உள்ளது. இவ்விடத்தில் கலிங்கப் போர் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது.[1]

தௌலி மலையில் பௌத்த விகாரை
தௌலி மலையில் யானையின் புடைப்புச் சிற்பம்
பிராமி எழுத்தில் அசோகரின் தௌலி கல்வெட்டுக்கள்
சாந்தி தூபி, தௌலி மலை, ஒடிசா

தௌலி மலையில் அசோகரின் I-X மற்றும் XIV கலிங்க கல்வெட்டுக்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது. கலிங்கக் கல்வெட்டு எண் ஆறில், அசோகரின் உலக நன்மைக்கான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள கல் யானை சிற்பத்தின் வடிவம் மற்றும் இயக்கம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.[2] தௌலியின் உலக அமைதிக்கான தூபியின் ஐந்து குடைகள் போன்ற அமைப்பு, பௌத்த சமயத்தின் ஐம்பெருங் கொள்கைகளை விளக்குகிறது.

போரினால் விளைந்த இன்னல்களைக் இவ்விடத்தில் கண்ட அசோகர் மனம் மாறி, இனி போர் புரிவதில்லை என உறுதியேற்று, தன்னை பௌத்தத்தில் இணைத்துக் கொண்டார். இவ்விடம் பௌத்தர்களுக்கு புனிதத் தலமாக விளங்குகிறது. அசோகர் தௌலியில் பௌத்த விகாரைகள், தூபிகள், தூண் வரிசைகள் நிறுவினார். பௌத்த பிக்குகள் மற்றும் பிக்குணிகளின் துறவ நெறிகள், அரசு அதிகாரிகளின் நடத்தை விதிகள் குறித்து தூண்களில் செதுக்கி வைத்தார்.[3]

தௌலி மலையுச்சியில், 1970ல் ஜப்பான் பௌத்த சங்கத்தினர், வெள்ளை நிற விகாரை ஒன்றை நிறுவியுள்ளனர். தௌலி மலையில் பண்டைய சிவன் கோயிலும் உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.