ஆனாபானாசதி
ஆனாபானாசதி (Mindfulness of Breathing) புத்தபகவானால் அருளப்பட்ட தியானமுறைகளுள் ஒன்றாகும். ஆனாபானசதி என்பது விழிப்புடன் மூச்சினை அவதானித்தல் எனப் பொருள்படும். புத்தபகவானால் அருளப்பட்ட சத்திபாதன சூத்திரத்தில் ஆனாபானாசதி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாபானாசதி (சமஸ்கிரதத்தில் ஆனாபானா ஸ்மிருதி) “ஆனா“, ”ஆபானா“, ”சதி” என்னும் சொற்களின் கூட்டாகும். ஆனா என்பது உட்சுவாசத்தினையும், ஆபானா என்பது வெளிச் சுவாசத்தினையும், சதி என்பது விழிப்புடனவதானித்தலையும் குறிக்கும்.
தியானமுறை
இப்பயிற்சியை மேற்கொள்வதற்குச் சாதகன் வனத்திற்கோ, மரத்தின் அடிக்கோ, அல்லது வெறுமையான இடத்திற்கோ சென்று பத்மாசனமிட்டு அமர்ந்து தனது கண்களை மூடிக் கைகளை மடியில் வைத்து மனத்தை உடல் உணர்வுகளிற் செலுத்தி தனது உடல் தளர்வாயிருத்தலை உறுதி செய்யவேண்டும். இது மனத்தினை ஓரளவு அமைதியுறச் செய்வதற்கேயாம்.
பின் மனத்தைச் சுவாசத்திற் திருப்பவேண்டும். உள்மூச்சு, வெளிமூச்சு என்பன மூக்கு நுனியில் அல்லது மேலுதட்டில் செல்வதை விழிப்புடன் அவதானித்தல் வேண்டும். மூச்சை வலிந்து உள்ளிளுக்கவோ வெளியேற்றவோ கூடாது. மாறாக இயற்கையான மூச்சினை விழிப்புடன் அவதானிக்க வேண்டும்.