கம்போடியாவில் பௌத்த மதத்தின் வரலாறு

கம்போடியாவில் பௌத்தமத வரலாறு (History of Buddhism in Cambodia) என்பது தேரவாத பௌத்தம் எவ்வாறு கம்போடியா தேச மதமானது என்பதை வரலாற்று ரீதியாக குறிப்பிடுவதாகும். இம்மதம் கம்போடியாவில் 5 ஆம் நூற்றாண்டு முதலே இருந்து வந்துள்ளது.

சுவண்ணபூம்

அசோகப் பேரரசர் சமயப்பரப்பு குழுவினரை சுவண்ணபூம் நாட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்நாடு தென்கிழக்கு ஆசியாவின் பெருநிலப்பகுதியான மோன் (தற்பொழுது மியான்மரின் ஒர் அலகு) மற்றும் கெமர் மக்கள் (தற்பொழுது கம்போடியா) என அடையாளம் காணப்பட்டது. சிங்களவர்களின் வரலாற்றை கால வரிசைப்படி தொடர்வரலாக பாளி மொழியில் எழுதப்பட்டுள்ள மகாவம்சம் சமயப்பரப்பு குழுவினர் தொடர்பான செய்திகளைக் குறிப்பிடுகிறது.[1]

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோக மன்னரால் தென்கிழக்கு ஆசியப்பகுதிகளான சுவண்ணபூம் அல்லது தங்க தீபகற்பம் என்றழைக்கப்படும் மலாய் நாட்டில் புத்தமதம் பரப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத சிங்கள ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாதாரங்களின்படி கி.மு. 274 இல் அசோகரின் தலைநகரான இந்தியாவில் உள்ள பாடலிபுத்திரத்தில் நடந்த புத்தமத மாநாட்டைத் தொடர்ந்து, புத்தமதக் கொள்கைகளைப் பரப்புவதற்காக இரண்டு புத்த பிக்குகள் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. புகழ்பெற்ற இந்த பணியின் காரணமாக தென்கிழக்கு ஆசியாவில் புத்தமதம் நீண்ட காலத்திற்கு நிலைத்து நின்றிருப்பதாக கூறப்படுகிறது. தாந்திரீகம் உள்ளிட்ட பல்வேறு பௌத்த பிரிவுகள் மற்றும் பள்ளிகள், மேலாதிக்கம் செலுத்தி வந்த பிராமணியத்துடன், மற்றும் 9 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்கிழக்கு ஆசியாவில் பேரரசுகள் தோன்றுவதற்கு முன்பிருந்த பழங்குடியின ஆன்மவாதம் சார்ந்த நம்பிக்கைகளோடும் மேம்பட்டு போட்டியிட்டன அல்லது ஒருங்கிணைந்தன. இந்திய வணிகர்கள், வியாபாரிகள் மூலமாகவும் இந்திய கலாசார செல்வாக்கு இப்பகுதியில் அக்காலத்தில் பரவலாக கலந்துள்ளது. பூனானில் முதலாம் நூற்றாண்டு தொடங்கி ஐந்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்திய கெமர் அரசாங்கத்தில், பிராமணியம் மற்றும் பௌத்தம் சார்ந்த கருத்துகளை மட்டுமின்றி இந்திய சமூக பழக்கவழக்கங்கள் மற்றும் நெறிமுறைகளையும் கெமர் மக்கள் ஏற்றுக் கொண்டனர்"[2].

பூனான் பேரரசு

கி.மு 100 கி.பி 500-க்கும் இடைப்பட்ட காலத்தில், பூனான் பேரரசு, இன்றைய மீகாங் ஆற்று வடிநிலத்தில் சீனா, இந்தோனேசியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் கடல்வழி வர்த்தகத்தைக் கொண்டிருந்தது. இப்பேரரசு இந்து மதத்தைத் தழுவியிருந்தது. இப்பேரரசின் மன்னர்கள் சிவன், திருமால் வழிபாட்டை ஊக்குவித்தனர். இப்பகுதியில் அந்நாளில் காணப்பட்ட பௌத்தம் இரண்டாம் நிலையில் இருந்தது.

பூனானில் பௌத்த மதம் இருந்ததை சமசுகிருத கல்வெட்டுகள் ஆவணப்படுத்தியுள்ளன. 478-514 ஆண்டுக்காலத்தில் இந்நாட்டில் கௌடின்ய செயவர்மன் புத்த மதத்தை வளர்த்துள்ளார். சீனப்பேரரசருக்கு பவளத்த்தில் வரையப்பட்ட புத்தர் படங்களை சமயத்தைப் பரப்பும் குழுவினர் வழியாக கொடுத்து அனுப்பியிருக்கிறார்[3].

586-664 காலத்தைச் சேர்ந்த மற்றொரு முந்தைய சமசுகிருத கல்வெட்டில், ரத்னபானு மற்றும் ரத்னசிம்மா என்ற இரண்டு சகோதர புத்தபிக்குகள் இதைக் குறிப்பிட்டுள்ளனர். ஐந்தாம் நூற்றாண்டின் பின்பாதியில் கம்போடியாவில் பௌத்த மதம் மலர்ந்தது என்று சீன இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கம்பீரமான சீன அரசவையில் நினைவுச் சின்னம் அமைக்க அரசன் செயவர்மன், நாகசேனா என்ற இந்திய புத்தபிக்குவை சீனாவுக்கு அனுப்பி வைத்தார். 450 ஆம் ஆண்டிற்குப் பிறகு பௌத்தம் தோன்றியது என்று தெளிவாக சீனப்பயனி ஏழாம் நூற்றாண்டில் தெரிவித்துள்ளார்.[4]

சென்லா பேரரசு

500 மற்றும் 700 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பூனான் அரசுக்குப் பதிலாக சென்லா பேரரசு உருவானது. மேக்கொங் ஆறு மற்றும் தொன்லே சாப் ஆறுகளைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள் மற்றும் மேக்கொங் வடிநிலப் பகுதி வரை சென்லா பேரரசு விரிவடைந்திருந்தது.

13 ஆம் நூற்றாண்டின் சீன காலவரிசை வரலாற்று ஆய்வாளரான மா தௌவான் கூற்றின்படி, 4 ஆம் மற்றும் 5 ஆம் நூற்றாண்டு காலத்தில் புத்தத் துறவிகள் மற்றும் பிக்குகள் 10 மடங்களில் புனித நூல்களைப் படித்துக் கொண்டிருந்தனர் என அறியப்படுகிறது. சீனப்பேரரசரின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு புத்தத் துறவிகள் சமசுகிருதத்தில் இருந்த திபிடிகாவை சீனமொழியில் மொழி பெயர்ப்பதற்காகச் சீனாவுக்குச் சென்றனர் என்று இவர் தெளிவாகக் கூறியுள்ளார்..

மேற்கோள்கள்

  1. The Mahavamsa, chapter 12, translated by Wilhelm Geiger
  2. Tully, John. France on the Mekong.
  3. Gyallay-Pap, Peter. "Notes of the Rebirth of Khmer Buddhism," Radical Conservativism.
  4. Dawson, Philip. The Art of Southeast Asia.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.