மஞ்சுசிறீ

'மஞ்சுஸ்ரீ (சீனம்: 文殊 Wénshū or 文殊師利菩薩 Wénshūshili Púsà; ஜப்.: மோன்ஜு; திபெ.: ஜம்பெல்யாங்;), அறிவாற்றலின் (பிரக்ஞை) போதிசத்துவர் ஆவார். சாக்கியமுனி புத்தரின் சீடரான இவர், அறிவு, அறிவுக்கூர்மை மற்றும் மனத்தெளிவு முதலியவற்றின் வெளிப்பாடாக உள்ளார். அவலோகிதருக்கு அடுத்து மிகவும் புகழ் பெற்ற போதிசத்துவர் மஞ்சுஸ்ரீ ஆவார். இவருடையாக இணையாக சரசுவதி கருதப்படுகிறார்.

ஜப்பானில் மஞ்சுஸ்ரீ, சாக்கியமுனி மற்றும் சமந்தபத்திரர் ஸான்ஃஸோன் ஷாகா என்ற மும்மூர்த்தியாக உள்ளனர். மஞ்சுஸ்ரீ, எட்டு அறிவாற்றலின்(பிரக்ஞை) போதிசத்துவர்களுள் ஒருவர் ஆவார். மேலும் ஜப்பானில் வணங்கப்படும் 13 புத்தர்களுள் ஒருவர். திபெத்திய பௌத்தத்தில் இவர், அவலோகிதர் மற்றும் வச்சிரபாணியுடன் மும்மூர்த்தியாக சித்தரிக்கப்படுகிறார்.

மஞ்சுஸ்ரீ பல மஹாயான சூத்திரங்களில் குறிப்பிடப்படுகிறார். அவற்றில் முக்கியமனது பிரக்ஞாபாரமித சூத்திரம். தாமரை சூத்திரத்தின் படி இவருடைய உலகம் 'விமலம்' என்று அழைக்கப்படுகிறது. அவதாம்சக சூத்திரத்தின் படி இவ்வுலகம் கிழக்கு திசையில் அமைந்துள்ளது. இவரை மஞ்சுகோசர் எனவும் அழைப்பர்

இவர் திபெத்திய பௌத்தத்தில் யிதம் ஆக கருதப்படுகிறார். இவர் ஒரு பரிபூர்ண புத்தராகவும் கருதப்படுகிறார்

மஞ்சுஸ்ரீ மந்திரம்

ஓம் அரபசன தீஹி ॐ अरपचन धी: என்பது இவருடைய மந்திரமாகும். இந்த மந்திரத்தை ஒருவருடைய அறிவாற்றல், நினைவாற்றல், எழுதும் திறன் முதலியன மேம்படுவதாக நம்பப்படுகிறது.

தீஹி धी: என்பது இவருடைய பீஜாக்ஷரம் ஆகும். இது மிகுந்த முக்கியத்துவத்துடன் உச்சாடனம் செய்யப்படுகிறது.

இவருடன் தொடர்புடைய இன்னொரு முக்கியமான மந்திரம் கீழ்வருமாறு

நமோ மஞ்சுஸ்ரீயே நமோ சுஸ்ரீயே நமோ உத்தமஸ்ரீயே ஸ்வாஹா

சித்தரிக்கப்படும் விதம்

மஞ்சுஸ்ரீயின் சிலை

பொதுவாக மஞ்சுஸ்ரீ, வலது கையில் தீப்பிழம்புடன் கூடிய வாளை ஏந்தியவராக சித்தரிக்கப்படுகிறார். இந்த வாள் அனைவருடைய அறிவின்மையையும், தீய கருத்துகளையும் அகற்ற வல்லது. அவருடைய இடது கையில் பிரக்ஞாபாரமித சூத்திரம் உள்ளது. பிரக்ஞபராமித சூத்திரம் அவருடை போதிநிலையையும் அவருடை மனத்தெளிவையும் காட்டுகிறது. அவருடை தந்திர வடிவங்களாவன, குஹ்ய-மஞ்சுஸ்ரீ, குஹ்ய-மஞ்சுவஜ்ரா மற்றும் மஞ்சூஷ்வரி ஆகும். இவை பெருபாலும் திபெத்திய பௌத்தத்திலேயே காணப்படுகின்றன.

மஞ்சு

சீன புராணங்களின் படி, சீனாவை ஆண்ட மன்சு இனத்தவர் தங்களை 'மஞ்சுஸ்ரீ' போதிசத்துவரின் வழித்தோன்றலாகக் கருதிக்கொண்டனர். எனவே தான் தனது இனத்து 'மன்சு' (சீனத்தில் மஞ்சுஸ்ரீயின் இன்னொரு பெயர்) என அழைத்ததாக கருதப்படுகிறது.

யாமாந்தகர்

யமாந்தக வஜ்ரபைரவர்

யமாந்தகர் (யமா-இறப்பு அந்தம்-முடிவு, இறப்பை அழிப்பவர்) மஞ்சுஸ்ரீயின் ஒரு உக்கிர வடிவாகும். இவர் திபெத்திய பௌத்தத்தின் ஒரு முக்கிய தந்திர தேவதாமூர்த்தியாகவும் மற்றும் யிதம் ஆகவும் திகழ்கிறார்.

நேபாள கதை

சுயம்பு புராணத்தின் படி, காத்மாண்டு பள்ளத்தாக்கு ஒரு காலத்தில் ஏரியாக இருந்தது. மஞ்சுஸ்ரீ அதன் நடுவில் ஒரு அழகிய தாமரைப்பூவைக் கண்டான், அதன் பிறகு ஏரியின் அனைத்து தண்ணீரை வெளியேற்றினார். அதன் பிறகு அந்த இடம் மக்கள் வசிக்கக்கூடிய ஒரு இடமாக மாறியது. காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள நேவர் இனத்தவர் அவரை வழிபடுகின்றனர்.

இதையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.