மாறன், பௌத்தம்

மாறன் அல்லது மாரன் (Mara) (சமக்கிருதம்: मार, பௌத்த சாத்திரங்களில் கூறப்படும் அசுரர் ஆவான். தனது அழகிய பெண்களை அனுப்பி முனிவர்கள், தேவர்கள், அரக்கர்கள் மற்றும் மனிதர்களின் கடுமையான தவத்தை கலைக்கும் ஆற்றல் படைத்தவன் மாரன். [1] புத்தரின் தவத்தை கலைக்க முயன்று, மாறன் தோற்ற கதைகள் பௌத்த சாத்திரங்களில் விரிவாக உள்ளது. [2][3] [4] இந்து சமயத்தில் கூறப்படும் மன்மதனுக்கு நிகரானவன் மாறன்.

மாறனின் சிற்பம், சுவத் மாவட்டம், பாகிஸ்தான்
புத்தரின் தவத்தை கெடுக்க வந்த மாறன், பர்மிய ஓவியம்
யானை மீது அமர்ந்து புத்தரின் தவத்தை கலைக்கும் மாறன், அமராவதி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா

மாறனை வென்ற கௌதம புத்தர்

சுஜாதை படைத்த பால் அன்னம் உண்ட போதிசத்துவரான கௌதம முனிவர், வைகாசி மாதம் பௌர்ணமி அன்று கயையின் உருவேலா சமவெளியில் அரச மரத்தின் கீழ் கிழக்கு முகமாக பத்மாசனத்தில் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார்.

கௌதமரின் தவத்தை கலைக்க அங்கு வந்த மாரன், வெடிப்பான குரலில் அச்சமுண்டாகும்படி பேசினான். போதிசத்துவராகிய கௌதமர் அஞ்சாமல் வீற்றிருந்தார். எனவே மாரன் கௌதமர் மீது பெருமழை பொழியச் செய்தான். இவைகளினாலே போதிசத்துவருக்கு எவ்விதமான துன்பமும் உண்டாகவில்லை. பின்னர் மாறன், கிரிமேகலை என்னும் யானையைப் போதிசத்துவர் மேல் ஏவினான். கௌதமரை நோக்கித் தவத்தை கலைத்து விட்டு இருந்து எழுந்து ஓடிப்போ என்று அதட்டிக் கூவினான். கௌதமர், மாரனைப் பார்த்து, இவ்விடத்தை விட்டு நான் போகமாட்டேன் என்று உறுதியாகக் கூறினார்.

ரிஷிகள் மற்றும் தேவர்கள்களின் தவ ஆற்றலை கெடுத்த எனக்கு மனிதனாகிய நீ ஏன் என்னிடம் அச்சமின்றி உள்ளாய் என மாரன், கௌதமரைக் கேட்க, அதற்கு கௌதமராகிய போதிசத்துவர், நான் தானம், சீலம், (ஒழுக்கம்), நியமம், (ஆசைகளை அகற்றிப் பிறர் நலத்துக்காக வாழ்தல்), பஞ்ஞா (ஞானம்), வீரியம் (ஆற்றல்), கந்தி (பொறுமை), வாய்மை ( பத்தியம்), அதிட்டானம் (ஒழுக்கம் நேர்மை இவற்றிலிருந்து பிறழாமல் இருத்தல்), மேத்தை (அன்பும் அருளும் உடைமை), உபேட்சை (விருப்பு வெறுப்பு இல்லாதிருத்தல் என பத்து தருமங்களை நிறைவேற்றியவன் ஆகையால் உன்னிடம் எனக்கு அச்சமில்லை என்றார்.

இத்தருமங்களை நிறைவேற்றியதற்கு சான்று உண்டா? என மாரன் கேட்டதற்கு, கௌதமர், துவராடையிலிருந்து கையை வெளியே நீட்டி, பூமியைச் சுட்டிக்காட்டினார். அப்போது கதிரவன் மறையும் வேளையில் பூமியானது ஆறு முறை குலுங்கியதை கண்ட மாரன் தனது படைகளுடன் அவ்விடத்தை விட்டு அகன்றான்.

போதி ஞானம் அடைதல்

வைசாசி மாத பௌர்ணமி அன்று மாலை வசவர்த்தி மாரனை வென்ற போதிசத்துவர், இரவு முழுவதும் யோகத்திலிருந்து கிலேசங்களையெல்லாம் வென்று மிகவுயர்ந்த மேலான சம்போதி ஞானம் அடைந்தார்.

அடிக்குறிப்புகள்

  1. See, for instance, SN 4.25, entitled, "Māra's Daughters" (Bodhi, 2000, pp. 217-20), as well as Sn 835 (Saddhatissa, 1998, page 98). In each of these texts, Mara's daughters (Māradhītā) are personified by sensual Craving (taṇhā), Aversion (arati) and Passion (rāga).
  2. மாரன் போர்
  3. மாரன் அச்சுறுத்தல்
  4. மாரன் போர்

ஆதாரங்கள்

  • Bodhi, Bhikkhu (trans.) (2000). The Connected Discourses of the Buddha: A Translation of the Samyutta Nikaya. Boston: Wisdom Pubs. ISBN 0-86171-331-1.
  • Saddhatissa, H. (translator) (1998). The Sutta-Nipāta. London: RoutledgeCurzon Press. ISBN 0-7007-0181-8.

வெளி இணைப்புகள்

மேலும் படிக்க


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.