அத்தி (தாவரம்)

அத்தி (pronunciation ) (fig; Ficus carica) மர வகையைச் சேர்ந்தது. நாட்டு அத்தி, வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உதிர்ந்து விழுந்து விடும். அத்திப் பழம் நல்ல மணத்துடன் இருந்தாலும், அறுத்துப் பார்த்தால் உள்ளே மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். பொதுவாக பதப்படுத்தாமல் உண்ண முடியாது. திருவொற்றியூர், திருக்கானாட்டுமுள்ளூர் முதலிய திருக்கோயில்களில் இரண்டாவது தலமரமாக விளங்குவது அத்தியாகும்.

அத்தி
அத்தி மரம் மற்றும் பழம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு: இருவித்திலைத் தாவரங்கள்
வரிசை: Rosales
குடும்பம்: மோராசியே
சிற்றினம்: அத்தி மரம் (பைகஸ்)
பேரினம்: அத்தி மரம் (பைகஸ்)
துணைப்பேரினம்: Ficus
இனம்: F. carica
இருசொற் பெயரீடு
Ficus carica
L.
காய்திருக்கும் அத்தி

அதவம்

சங்ககாலத்தில் இந்த மரத்தின் பெயர் அதவம். ஆற்றங்கரையில் இருந்த அதவ மரத்தின் பழம் ஒன்று விழுந்ததாம். ஆற்றுநீரில் வாழ்ந்த ஏழு நண்டுகள் அதனை ஏறி மிதித்தனவாம். காதலன் தன்னுடன் இல்லாதபோது தன் காதலனைப் பற்றி அலர் தூற்றுவோர் நாக்கு ஏழு நண்டு மிதித்த ஒரு அத்திப்பழத்தைப் போலத் துன்புறட்டும் எனக் காதலி ஒருத்தி சாபம் இடுகிறாள்.[1]

விஞ்ஞான ஆராய்ச்சி

அத்திப்பழத்தை ஆராய்ச்சி செய்த அறிவியலாளர்கள் இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீமை அத்திப்பழம்

பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள்.

அடிக்குறிப்பு

  1. ஆற்றயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து
    எழு குளிறு மிதித்த ஒருபழம் போலக்
    குழைய கொடியோர் நாவே - குறுந்தொகை 24

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.