காஞ்சிபுரம் காமேசுவரர் கோயில்
காஞ்சிபுரம் வராகீசுவரர் கோயில் (காமேசுவரம்) என விளங்கும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். மற்றும், மன்மதன் வழிபட்டு, எண்ணிய வரங்களைப் பெற்றமையால் இவ்விறைவர்க்கு மன்மதேசுவரர் எனும் பெயரும் உண்டு . மேலும், இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராணப் படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]
காஞ்சிபுரம் காமேசுவரம். | |
---|---|
பெயர் | |
பெயர்: | காஞ்சிபுரம் காமேசுவரம். |
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | காமேஸ்வரர். |
தல வரலாறு
இத்தல இறைவன் மனத்தில் தோன்றிய மன்மதன் இறைவனை வணங்கி, நான் உயிர்கள் பிறப்பிற்கு காரணமான ஆண், பெண் சேர்க்கையை உண்டாக்கி. இரதி தேவிக்கு இனியவனாய் ஈவோர் ஏற்போர்களுடைய உள்ளத்திலிருந்து அவற்றைச் (இச்சையைச்) செய்வித்து மூன்று உலகத்திலும் என் ஆணையைச் செலுத்தும் வரத்தை கொடுத்தருள வேண்டுமென்று வேண்டினான். இறைவனார் "இதனை நீ காஞ்சியை அடைந்து, எம்மை வழிபட்டுப் பெறுவாயாக" என்றுரைக்க, மன்மதன் அங்ஙனமே காஞ்சியை அடைந்து, சர்வ தீர்த்தக் கரையில் காமேசுவரன் என்னும் பெயரால் ஓர் [இலிங்கம்]] தாபித்து பூசித்து கேட்ட வரங்களைப்பெற்றான் என்பது வரலாறு. மேலும், இங்கு தானம் வாங்குவோர், காமனை நினைந்து வாங்கினால், ஆசையால் வாங்கும் குற்றத்தினின்றும் நீங்கப் பெறுவர் என்பது ஐதீகம்.[2]
அமைவிடம்
தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் காமேஸ்வரம், சர்வ தீர்த்தக் கரையில் இக்கோவில் தாபிக்கப்பட்டள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் தென்மேற்கு திசையில், 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. மற்றும் காஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து, காஞ்சி கச்சபேசுவரர் கோயிலின் வழியாக காஞ்சி சங்கர மடத்தைக் கடந்து சற்று தொலைவு சென்றால் இக்கோயிலை அடையலாம்.[3]