காஞ்சிபுரம் உபமன்னீசுவரர் கோயில்

காஞ்சிபுரம் உபமன்னீசுவரர் கோயில் (தான்தோன்றீசம் (தான்தோன்றி என்பது சுயம்பு ஆகும்) என்று அறியப்படும் இக்கோயில், காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும், உபமன்யு முனிவர் வழிபட்டதால் இத்தலம் உபமன்னீசம் என்றும்; பெயர் பெற்ற, இத்தல குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1]

காஞ்சிபுரம் தான்தோன்றீசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் தான்தோன்றீசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:உபமன்னீசுவரர்.

இறைவர், வழிபட்டோர்

  • இறைவர்: உபமன்னீசுவரர்.
  • வழிபட்டோர்: உபமன்யு.

தல வரலாறு

வியாக்ரபாத முனிவரின் இளம் புதல்வரான உபமன்யு முனிவர் மிகுதியும் பாலுண்ண விருப்பங்கொண்டு, இத்தலத்து இறைவனை வழிபட்டார். பெருமான் உபமன்யு முன்பு தோன்றி, திருப்பாற்கடலையே அழைத்துதவி, சிறந்த ஞானமும், மூப்படையாத இளமையும் தந்தருளினார்.[2]

தல விளக்கம்

தான்தோன்றீச தல விளக்கமானது, உயிர்கள் மலக்கட்டினின்றும் நீங்கி முத்தியைப் பெறும்பொருட்டு இறைவன் சிவலிங்க வடிவமாகத்தானே தோன்றி யருளினமையால் தான்தோன்றீசன் என்னும் திருப்பெயருடைய அவ்விலிங்கத்தை, ஒரு சிறுவர் வழிபாடு செய்து, இனியபால் பெற்ற வரலாறிதுவாகும்.

வியாக்கிர பாதமுனிவர் வசிட்டர் தங்கையை மணந்தார். அவ்வம்மையிடமாகத் தோன்றிய உபமன்னியன் என்கின்ற சிறு குழவி, தனது மாமன் வீட்டில் காமதேனுவின் பாலைத் தேக்கெறிய உண்டு வருநாளில் தந்தை தாயார் தம்மில்லிற்குத் தம்மகவைக் கொண்டு சென்றனர். அங்கு மாவை நீரிற் குழைத்தூட்டப் பருகாது அழுதனர், முன்னைத் தவம் செய்யாதார் விரும்பிய போகங்களை இப்பொழுது. எங்ஙனம் பெற இயலும் என்னும் அன்னை சொற்கேட்டு வினவியறிந்து காஞ்சியை அடைந்து தான்தோன்றீசப் பெருமானைப் பூசனை புரிந்து பெருமான் திருப்பாற்கடலைக் கொண்டூட்ட உண்ட உபமன்னிய முனிவர் கண்ணபிரானுக்குத் திருவடி தீக்கை செய்து சிறந்தனர். தீக்கைபெற்ற கண்ணபிரானார் திருநீற்றுடன் உருத்திராக்க முதலிய பூண்டு ‘சிவநேசர்’ எனப் போற்றப்பெற்றனர். இத்தலம் ஏகாம்பரநாதர் சந்நிதி வீதியில் உள்ளது.[3]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் வடமேற்கு பகுதியான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவ காஞ்சியின் ஏகாம்பரநாதர் சந்நிதி தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து வடமேற்கில் ½ கிலோமீட்டர் தொலைவில் காஞ்சி சங்கர மடம் அருகில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.