காஞ்சிபுரம் அமரேசுவரர் கோயில்
காஞ்சிபுரம் அமரேசுவரர் கோயில் (அமரேஸ்வரம்) என்று அறியப்படும் இக்கோயில் காஞ்சிபுரத்திலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். அக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகின்றன[1].
காஞ்சிபுரம் அமரேஸ்வரம். | |
---|---|
பெயர் | |
பெயர்: | காஞ்சிபுரம் அமரேஸ்வரம். |
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | ![]() |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அமரேசுஸ்ரர். |
இறைவர், வழிபட்டோர்
- இறைவர் திருப்பெயர்: அமரேசுவரர்.
- வழிபட்டோர்: தேவர்கள்
தல வரலாறு
அசுரர்களை வென்ற தேவர்கள், தங்களால்தான் அசுரர்களை வெல்ல முடிந்தது என்றெண்ணி ஒவ்வொருவரும் செருக்குற்றிருந்தனர். அச்செருக்கினை ஒடுக்க எண்ணிய இறைவனார், அவ்வேளையில் யட்சனாக வந்து தேவசபையில் துரும்பு ஒன்றை நிறுத்தி "இதை வெட்டுபவனே அசுரர்களை வென்ற வீரனாவான்" என்றுரைத்தார் இந்திரன், திருமால், பிரமன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் அத்துரும்பினை வெட்ட முயன்று முடியாமல் சோர்வுற்று ஓய்ந்தனர், அப்போது அச்சபையில் அவர்கள் முன் உமாதேவியார் தோன்றி, இங்கு வந்து இத்துரும்பினை நட்டவர் இறைவரே என்றுணர்த்தி செருக்கு நீங்கிச் சிவபெருமானை வழிபடுமாறு கூறி மறைந்தார் அவ்வாறே தேவர்கள் அனைவரும் காஞ்சிக்கு வந்து சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றனர். அவ்வாறான வரலாறுடைய தேவர்கள் வழிப்பட்ட தலமே அமரேஸ்வரம் ஆகும்.[2]
தல விளக்கம்
அமரேசம் (அமரேசுவரர்) தல விளக்கமாவது, தேவரும் அசுரரும் பலயுகம் பொருது வெற்றி தோல்வி காணாராயினர். போர் முற்றுப்பெற உமையம்மையார் விரும்பச் சிவபிரானார் சிறிது ஆற்றலை அசுரரிடத்து வைத்துத் திருமால் முதலியோரைத் தோல்வியுறச் செய்தனர். பின்பு அம்மையார் கருத்தாகத் தேவரை வெற்றிகொளச் செய்தனர். வெற்றிக்குக் காரணம் தான் தாமென மயங்கிச் செருக்கிய திருமால், பிரமன், இந்திரன், முதலானோர் முன்பு யட்சனாக வந்தபெருமானார், துரும்பை நிறுத்தி இதனை எறிய வல்லவர் வென்றவர் ஆவர் எனத் தனித்தனி முயன்று இயலாமையின் நாணிய அத்தேவர் முன்னின்றும் மறைந்தனர். திகைக்கும் தேவர்முன் உமையம்மையார் தோன்ற யாவரும் துதி செய்தனர்.
‘சிவனருளின்றித் துரும்பையும் அசைக்கமுடியாத நீவிர் தற்போகத்தினால் எழுந்தருளியிருந்த பெருமானைக் காணீர் ஆயினீர். எப்பொருளின் கண்ணும் விளங்கும் எவ்வகை ஆற்றலும் அவனருளிய ஆற்றலே என்னும் உண்மையை மறந்து தருக்கிய நீங்கள் பிழைதீரக் காஞ்சியிற் சிவபூசனை புரிமின்’ என அருளி மறைந்தனர். அம்மையார் அருளியவாறு காஞ்சியில் திரிதசர் ஆயதேவர் ‘திரிதசேச’ரைத் தாபித்துப் பூசித்துப் பெருவலி பெற்றனர். இக்கோயில் பெரிய காஞ்சிபுரம் அமரேசர் கோயில் தெருவில் உள்ளது.[3]
அமைவிடம்
இந்தியாவின் தென்கடை மாநிலமான தமிழ்நாட்டின் வடக்கோடி மாவட்டங்களில் ஒன்றான மாவட்டத்தின் தலைநகரம் காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியான, சிவகாஞ்சி என்றழைக்கப்படும் பெரிய காஞ்சிபுரத்தின் மேலாண்ட இராசவீதி எனும், மேற்கு இராஜவீதியில் கொல்லாசத்திரம் தெருவிற்கு எதிர்புறத்தில் உள்ள ஒத்தவாடை தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது. இது, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து வடமேற்கே ½ கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.[4]
மேற்கோள்கள்
- 26. அமேரசப்படலம் (971 -991), சிவஞானசுவாமிகள் அருளிய காஞ்சிப்புராணம்- பகுதி2 படலம் 7 - 29 (445-1056)
- Shaivam.org | காஞ்சி சிவத்தலங்கள் |அமரேஸ்வரம் (அமரேஸ்வரர் திருக்கோயில்)
- tamilvu.org | காஞ்சிப் புராணம் | திருத்தல விளக்கம் | அமரேசம்|பக்கம்: 819
- நவபழனிக்கோ அறக்கட்டளை | KANCHI-SIVAN/பெரியகாஞ்சி#சிவன்/அமரேசுவரர்