அகத்தி
அகத்தி என்னும் சிறுமரம் தாவரவியலில் (நிலைத்திணை இயலில்) செஸ்பேனியா (Sesbania) இனத்தைச் சேர்ந்ததாகும். இதன் தாவரவியல் பெயர் செஸ்பேனியா கிராண்டிஃவுளோரா (Sesbania grandiflora) என்பதாகும். இது கெட்டித்தன்மை இல்லாதது, சுமார் 6. மீட்டரிலிருந்து 10 மீட்டர் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் 15 முதல் 30 செ.மீ. வரை நீளமுடையவை.
அகத்தி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்குந்தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Rosids |
வரிசை: | Fabales |
குடும்பம்: | பபேசியே |
பேரினம்: | அவரையினம் |
இனம்: | S. grandiflora |
இருசொற் பெயரீடு | |
Sesbania grandiflora (லின்.) | |

தோற்றம், தட்பவெப்பநிலை
இம்மரம் இந்தியாவிலோ தென்ஆசியாவிலோ தோன்றியிருக்க வேண்டும் என்று துறையறிஞர்கள் கருதுகிறார்கள். அகத்தி மரம் பிற மரங்களைப் போல் அதிகம் கிளைகள் கிளைத்து வளருவதில்லை. அகத்தி இலைகள் கூட்டிலைகள் ஆகும். ஒவ்வொரு கூட்டிலையிலும் 40 முதல் 60 இலைகள் வரை இருக்கும். பொதுவாக வெப்பமானதும் அதிக ஈரப்பதம் நிறைந்த இடங்களிலும் வளர்கின்றது.
மூலிகை, உணவுப் பயன்பாடு
அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றது. குறிப்பாக தமிழ்நாடு உட்பட தென்னிந்திய சமையலில் அகத்திக்கீரை மற்றும் அகத்தியின் பூவும் சமைத்து உண்ணப்படுகிறது.
அகத்தியின் சிறப்பு:
- மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி - வாய்வாம்
- திருந்த அசனம் செரிக்கும் - வருந்தச்
- சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும்
- அகத்தியிலை தின்னு மவர்க்கு[1].
அகத்தியில் உள்ள சத்துகள்
அகத்திக் கீரையில் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக்கீரையில் மாவுச் சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் (உயிர்ச்சத்து) ஏ ஆகியவையும் உள்ளன.
பயன்பாடு
- அகத்தி கோழி, மாடு போன்ற கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.
- அகத்தி இலையிலிருந்து ஒரு வகைத் தைலம் தயாரிக்கப்படுகிறது.
- அகத்தியின் பட்டையும் வேரும் மருந்துப்பொருள்களாகப் பயன்படுகிறது.
- அகத்தி மரக்குச்சிகள் கூரை வேய்வதற்குப் பயன்படுகிறது.
- அகத்தியின் மிலாரிலிருந்தும் பட்டையிலிருந்தும் உரித்தெடுக்கப்படும் ஒரு வகை நார் மீன் பிடி வலைகளுக்குப் பயன்படுகிறது.
- அகத்திப்பட்டை தோல் தொழிலுக்குப் பயன்படுகிறது.
- அகத்திப் பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
- வேர், மூட்டுவலிக்கு மருந்தாக அரைத்துப் பயன்படுத்தப்படுகிறது
- வெண்மை நிற அகத்தி மரம் பொம்மை செய்யவும் வெடிமருந்து செய்யவும் பயன்படுகிறது.
- வெற்றிலைக் கொடிக்கால்களில் வெற்றிலைக் கொடி படரவும் மிளகுத்தோட்டத்தில் மிளகுக்கொடி படரவும் அகத்தி மரம் பயன்படுகிறது.
மற்ற நாடுகளில் அகத்தியின் பெயர்

அகத்தி மரப் பூவை (S. grandiflora ) தென்கிழக்கு ஆசிய நாடுகளான லாவோஸ், இந்தோனேசியாவைச் சேர்ந்த சாவா, வியட்நாம், பிலிப்பைன்ஸில் இல்லோக்காஸ் என்னும் இடம் ஆகிய பகுதிகளில் உணவாக உண்கிறார்கள். தாய்லாந்து மொழியில் இப் பூவை `தோக் கே (dok khae) என்றும், வியட்நாம் மொழியில் இதனை சோ தூவா(so đũa.) என்றும் அழைக்கின்றனர். இந்தோனேசிய மொழியில் இதனை '`புங்கா துரி (bunga turi) அல்லது கெம்பாங் துரி (kembang turi) என்றும் அழைக்கின்றனர்.
ஒப்பிட்டறிக
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- திருமலை நடராசன், மூலிகைக் களஞ்சியம், சென்னை.: பூங்கொடி பதிப்பகம், பக். 33
இளையோர் அறிவியல் களஞ்சியம்- மணவை பப்ளிகேஷன். -1995