முகம்மது யூனுஸ்

பேராசிரியர். முகமது யூனுஸ் (ஆங்கிலம்:Muhammad Yunus,வங்காள மொழி: মুহাম্মদ ইউনুস Muhammod Iunus) (பிறப்பு - ஜூன் 28 1940 சிட்டகொங், வங்காளதேசம்), வங்காளதேசத்தினைச் சேர்ந்த வங்கி முதல்வரும், பொருளியலாளருமாவார். சிறுகடன் எனும் திட்டத்தை தோற்றுவித்தவரும், நடைமுறைப்படுத்தியவருமாவார். ஏழைத் தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் சிறு தொகைக்கடனே சிறுகடன் (microcredit) ஆகும். கிராமின் வங்கியின் தோற்றுவிப்பாளரும் 'Banker to the Poor' எனும் நூலின் ஆசிரியருமாவார். ஏழை மக்களின் பொருளியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டமைக்காக 2006 ஆம் ஆண்டிற்கான நோபெல் பரிசு இவருக்கும், இவரால் தோற்றுவிக்கப்பட்ட கிராமின் வங்கிக்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, உலக உணவு விருது உட்பட பல பன்னாட்டு, தேசிய விருதுகளையும் யூனுஸ் பெற்றுள்ளார்.


মুহাম্মদ ইউনুস
Muhammad Yunus
முகமது யூனுஸ்
பேராசிரியர்,வங்கியாளர் முஹம்மத் யூனுஸ்
பிறப்பு ஜூன் 28 1940
சிட்டக்கொங், வங்காளதேசம்
பணி கிராமின் வங்கியின் தாபகர்
துணை Afrozi Yunus
முகம்மது யூனுஸ் (2014)

இளமையும் குடும்பமும்

யூனுஸ் 1940 ம் ஆண்டில் சிட்டக்கொங் நகரில் உள்ள சிற்றூர் ஒன்றில் பிறந்தார். தந்தையின் பெயர் Hazi Dula Mia Shoudagar; இவர் ஒர் நகை வணிகர் ஆவார். தாயாரின் பெயர் Sufia Khatun ஆகும். 1947 ம் ஆண்டில் சிட்டக்கொங் நகருக்கு இடம்பெயரும் வரையில் தன் ஊரிலேயே வாழ்க்கையினைச் செலவிட்டார். Jahangirnagar பல்கலைக்கழகப் பேராசிரியரான Afroji Yunus என்பவரை மணமுடித்துள்ளார். இவருக்கு Dina Yunus, Monica Yunus என்று இரு மகள்கள் உண்டு.

கல்விசார் நடவடிக்கைகள்

யூனுஸ் சிட்டங்கொங் நகருக்கு இடம்பெயரும் வரையில் தனது தொடக்கக் கல்வியை கிராமப்பள்ளி ஒன்றினிலே கற்றார்.அதன்பின்னர் Lamabazar தொடக்கப் பள்ளியில் தொடக்கக் கல்வியையும் Chittagong Collegiate School இல் மேல் படிப்பையும் கற்று, பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றியும் பெற்றார். இக்காலகட்டத்திலே அவர் சாரணர் இயக்கம், கலை நிகழ்ச்சிகள் போன்ற பலவித கல்விசாரா நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.

1957 ஆம் ஆண்டில் டாக்கா பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தில் மாணவனாக சேர்ந்து 1960 ம் ஆண்டில் இளங்கைலைப் பட்டமும் 1961 ல் முதுகலைப் பட்டத்தினையும் பெற்றார். அதன்பிறகு 1969ம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள Vanderbilt University இல் பொருளியலில் முனைவர் பட்டமும் பெற்றார். அன்றிலிருந்து நாடு திரும்பும் வரையில் Middle Tennessee State University இல் பொருளியல்துறை உதவிப் போராசிரியராகப் பணியாற்றினார். நாடு திரும்பிய பின் சிட்டகொங் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறைப்போராசிரியராகக் கடமையாற்றினார்.

கிராமின் வங்கி

வறிய பங்களாதேசத்தவர்களுக்கு கடன் வழங்கும் எண்ணத்துடன் 1976 ம் ஆண்டில் யூனுஸ் கிராமின் வங்கியினை (Grameen Bank,தமிழில் கிராம வங்கி) ஆரம்பித்தார்.இவ் வங்கி இன்றளவும் US$ 5.1பில்லியன் தொகையினை 5.3 மில்லியனுக்கு அதிகமான மக்களுக்கு கடனாக வழங்கியுள்ளது.பணத்தினை மீளச்செலுத்துவதை உறுதிப்படுத்த "solidarity groups" எனும் முறைமையினை வங்கி கையாளுகின்றது.இந்த ஒருங்கிணைக்கப்பட்ட குழுவானது சேர்ந்து வங்கிக்கடனை பெற விண்ணப்பிப்பதுடன் ,ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கான கடனுக்கு கூட்டு உத்தரவாதத்தினை அளித்தல்,பொருளியல் ரீதியான முன்னேற ஆதரவு வழங்குதல் போன்றவற்றியும் மேற்கொள்ளவேண்டும்.சிறுகடன் வழங்குதல் தவிர கிராமின் வங்கி பல மேலதிக தேவைக்காகவும் கடனை வழங்குகின்றது. கல்விசார்கடன்கள்,வீடமைப்புக்கடன்,மீன்பிடி,விவசாய,கைத்தறி போன்ற கைத்தொழில்களுக்கான கடன்கள் போன்றவை சிலஎடுத்துக்காட்டாகும்.சிறுகடன் பெறுபவர்களில் 96% மானோர் பெண்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயங்களுள் ஒன்றாகும்.

நோபெல் பரிசு

வறிய மக்களின் சமூக,பொருளியல் முன்னேற்றத்திற்காக முன்னிற்று பாடுபட்டமைக்காக முகமது யூனுஸ்க்கும் அவரால் தோற்றுவிக்கப்பட்ட கிராமின் வங்கிக்கும் சேர்த்து 2006 ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது பற்றிய நோபெல் பரிசு குழுவின் அறிவிப்பு:

The Norwegian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2006, divided into two equal parts, to Muhammad Yunus and Grameen Bank for their efforts to create economic and social development from below. Lasting peace cannot be achieved unless large population groups find ways in which to break out of poverty. Micro-credit is one such means. Development from below also serves to advance democracy and human rights.

இவ் அறிவிப்பின் பின் யூனுஸ் தனக்கான பரிசின் பங்கான $1.4 மில்லியன் டொலரினை கொண்டு வறிய மக்களுக்கு குறைந்த விலையினில் நிறைபோசாக்கு உணவினை வழங்கும் திட்டமொன்றிக்கு செலவிடப்போவதாகவும் எஞ்சிய தொகையினை கண் மருத்துவமனை அமைப்பதற்கு செலவிடப்போவதாகவும் தன் கருத்தினை வெளியீட்டார்.

விருதுகள்

  • 1978 — வங்காளதேசக் குடியரசுத் தலைவர் விருது.
  • 1984 — ரமன் மக்சேசே(Ramon Magsaysay) விருது, பிலிப்பைன்ஸ்.
  • 1985 — வங்காளதேச வங்கி விருது.
  • 1987 — Shwadhinota Dibosh Puroshkar (விடுதலை நாள் விருது), வங்காளதேசம்.
  • 1989 — கட்டடக்கலைக்கான Aga Khan விருது, சுவிட்சர்லாந்து.
  • 1993 — CARE, மனிதாபிமானச் சேவைப் பதக்கம்.
  • 1994 — உலக உணவுப் பரிசு
  • 1996 — UNESCO Simón Bolívar பரிசு.
  • 1997 — Strømme Foundation, நார்வே வழங்கும் Help for SelfHelp விருது
  • 1998 — Prince of Asturias விருது.
  • 1998 — சிட்னி அமைதிப் பரிசு.
  • 2000 – காந்தி அமைதிப் பரிசு, இந்தியா
  • 2004 — The Economist செய்தித்தாள் வழங்கும் சமூக மற்றும் பொருளாதாரப் புத்தாக்கத்துக்கான விருது.
  • 2006 — அன்னை தெரசா விருது.
  • 2006 — எட்டாவது சியோல் அமைதிப் பரிசு.
  • 2006 — அமைதிக்கான நோபெல் பரிசு (கிராமீன் வங்கியுடன் பகிர்ந்துக்கொள்ளப்பட்டது).
  • மேலும், 47 விருதுகள்.

இவற்றையும் பார்க்கவும்

  • நோபெல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.