முகம்மது அல்-பராதிய்

முனைவர் முகமது முசுதபா எல்பரதேய் (Mohamed ElBaradei, அரபு மொழி: محمد البرادعي, எழுத்துப்பெயர்ப்பு: Muḥammad al-Barādaʿī) (பிறப்பு சூன் 17, 1942, கெய்ரோ, எகிப்து) பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் (IAEA) நான்காவது தலைமை இயக்குநர் ஆவார். 2005-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எகிப்தியரான [1] இவருக்கும் பன்னாட்டு அணுசக்தி முகமையகத்திற்கும் கூட்டாக வழங்கப்பட்டது.

முகமது எல்பரதேய்
محمد البرادعي
4வது பன்னாட்டு அணுசக்தி முகமையகம் தலைமை இயக்குனர்
பதவியில்
திசம்பர் 1, 1997  நவம்பர் 30, 2009
முன்னவர் ஹான் பிலிக்ஸ்
பின்வந்தவர் யுகியா அமனோ (தேர்வு)
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 17, 1942 (1942-06-17)
கெய்ரோ, எகிப்து
தேசியம் எகிப்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள் கெய்ரோ பல்கலைக்கழகம்
நியூ யார்க் பல்கலைக்கழகம் சட்டக் கல்லூரி
சமயம் இசுலாம்

பன்னாட்டு அணுசக்தி முகமையுடன் இந்தியா அணு சக்தி பாதுகாப்பு ஒப்பந்தத்தை 2008ஆம் ஆண்டு மேற்கொண்டபோது எல்பராதே மிக முக்கியப் பங்காற்றினார். இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த அணுத் தனிமையிலிருந்து இந்தியா விடுபட்டது.அணுசக்தியை ஆக்கப்பூர்வமான வழிகளில் உலக நாடுகள் பயன்படுத்துவதற்காக அயராமல் உழைத்து வருபவர் என எல்பரதேயுக்கு பாராட்டு தெரிவித்து இந்தியா 2008ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதிப் பரிசை அவருக்கு அளித்தது.[2]

அரசுத்தலைவர் ஆகும் வாய்ப்பு

2009ஆம் ஆண்டிலிருந்தே ஹொஸ்னி முபாரக்கிற்கு மாற்றாக எகிப்தின் ஆட்சித்தலைவர் பதவிக்கு எல்பரதேயின் பெயர் எதிர்க்கட்சிகளால் பேசப்பட்டது.[3][4][5]

எல்பரதேய் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடாவிட்டாலும், நியாயமான முறையில் தேர்தல்கள் நடந்தேற சில விதிமுறைகளும் அரசியல் சட்டத்திருத்தங்களும் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சுயேட்சை வேட்பாளர்கள் சுதந்திரமாகப் போட்டியிடும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டாலே தாம் வேட்பாளராக நிற்பது குறித்து சிந்திக்க முடியும் எனவும் கூறினார். பல எதிர்கட்சிகளும் அமைப்புகளும் நடுநிலையான எல்பரதேய் மக்களாட்சிக்கு வழியமைக்கும் ஓர் இடைக்கால அரசிற்கு தலைமை ஏற்கக்கூடியவராக ஏற்றுக்கொண்டுள்ளன.

24 பிப்ரவரி 2010 அன்று எல்பரதேய் கெய்ரோவில் உள்ள தம் வீட்டில் பல அரசியல் கட்சித்தலைவர்களையும் குறிப்பிடதக்க அறிவுசீவிகளையும் அழைத்து உரையாடினார். இதன் முடிவில் புதிய கட்சியமைப்பில்லாத அரசியல் இயக்கமாக மாற்றத்திற்கான தேசிய சங்கம் அறிவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முதன்மை குறிக்கோளாக அரசியல் நிலையில் பொது சீர்திருத்தங்களையும் குறிப்பாக குடியரசுத் தலைவர் தேர்தல் உண்மையான, சுதந்தரமான முறையில் நடைபெறுவதை தடுக்கும் எகிப்து அரசியல்சட்டத்தின் 76வது பிரிவை நீக்குவதையும் கொண்டுள்ளது. தடை செய்யப்பட்டுள்ள முசுலிம் சகோதரத்துவம் (Muslim Brotherhood) கட்சி சார்பாக முக்கியப் புள்ளிகள் கலந்து கொண்டனர்; இருப்பினும் தங்கள் கட்சி உறுப்பினரல்லாத ஒருவரை வேட்பாளராக அக்கட்சி ஏற்றுக்கொள்ளுமா என்பதில் தெளிவில்லை. மேலும் இந்தச் சந்திப்பிற்கு முதல்நாள் எல் பரதேயைச் சந்தித்த அராபிய அணி (அரப் லீக்)கின் தலைவர் அமர் மௌசாவின் ஆதரவும் இந்த இயக்கத்திற்கு உள்ளதா எனத் தெரியவில்லை.[6]

ஆர்வர்டில் கென்னடி அரசாளுமைப் பள்ளியில் 27 ஏப்ரல் 2010 அன்று பேசும்போது தான் "ஓர் வேலையைத் தேடு"வதாகவும், எகிப்திய அரசியலில் "மக்களாட்சிக்கான வழக்கறிஞராகவும் மாற்றத்திற்கான முகவராகவும்" இருக்க முற்படுவதாகவும் நகைச்சுவையாகக் கூறினார். அதேநேரம் தமது மனைவிக்கு தாம் எந்தத் தேர்தலிலும் போட்டியிடுவதில் விருப்பமில்லையென்றும் விளக்கினார்.[7]

முப்பதாண்டுகளில் கண்டிராத வண்ணம் எகிப்து போராட்டம் உச்சமடைந்த நேரத்தில் 27 சனவரி 2011 அன்று தாய்நாடு திரும்பினார். மக்களின் விருப்பம் ஓர் இடைக்கால அரசு அமைய வேண்டுமென்றால் தாம் அதனை முன்னின்று நடத்தத் தயங்கவில்லை எனக் கூறினார்.[8] வெள்ளி தொழுகையில் போராட்டக்காரர்களுடன் அவர் இணைந்திருந்தபோது அவர்மீது தண்ணீர் பீரங்கி செலுத்தப்பட்டது. அவரைக் காக்கும்விதமாக சுற்றியிருந்த ஆதரவாளர்களின் மேல் தடியடி நடத்தப்பட்டது.[9] 28 சனவரி 2011 அன்று எல்பரதேய் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்தி பரவியது.[10] ஆயினும் அடுத்தநாள், அல் ஜசீராவிற்கு கொடுத்த நேர்முகத்தில் தாம் கைது செய்யப்படவில்லை எனக் கூறினார்.[11]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.