செய்யாறு
திருவத்திபுரம் (Thiruvathipuram) அல்லது செய்யாறு (Cheyyaru) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யார் வட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றியம், செய்யாறு வருவாய் கோட்டம், செய்யார் (சட்டமன்றத் தொகுதி) ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் 27 நகராட்சி உறுப்பினர்களுடன் கூடிய இரண்டாம் நிலை நகராட்சியாகவும் அமைந்துள்ளது. இது ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். செய்யாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருவத்திபுரம் நகரம் இங்கு அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் ஆலயம் மற்றும் செய்யாறு ஆற்றின் மூலம் நன்கு அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் திருவத்திபுரம் நகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
திருவத்திபுரம் TIRUVATHIPURAM செய்யாறு | |
---|---|
இரண்டாம் நிலை நகராட்சி | |
அடைபெயர்(கள்): செய்யாறு, திருவோத்தூர் | |
![]() ![]() திருவத்திபுரம் ![]() ![]() திருவத்திபுரம் | |
ஆள்கூறுகள்: 12.6667164°N 79.5399414°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மாகாணம் | தொண்டை நாடு |
வருவாய் கோட்டம் | செய்யாறு |
சட்டமன்றத் தொகுதி | செய்யார் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி | ஆரணி மக்களவைத் தொகுதி |
நிர்மாணித்தவர் | தமிழ்நாடு அரசு |
அரசு | |
• வகை | இரண்டாம் நிலை நகராட்சி |
• Body | திருவத்திபுரம் நகராட்சி |
• தலைமை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO) | ஆரணி (TN97) |
• மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்(MTO) | செய்யாறு |
• மக்களவை உறுப்பினர் | திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத் |
• சட்டமன்ற உறுப்பினர் | திரு. தூசி.மோகன் |
• மாவட்ட ஆட்சியர் | திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப. |
பரப்பளவு[1] | |
• இரண்டாம் நிலை நகராட்சி | 72 |
பரப்பளவு தரவரிசை | மீட்டர்கள் |
மக்கள்தொகை (2011) | |
• இரண்டாம் நிலை நகராட்சி | 37,802 |
• பெருநகர் | 53,802 |
இனங்கள் | செய்யார்காரன் |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
இந்தியாவில் தொலைபேசி எண்கள் | 91-4182 |
வாகனப் பதிவு | TN 97 |
அருகிலுள்ள இரயில் நிலையம் | காஞ்சிபுரம் இரயில் நிலையம் 30KM |
சென்னையிலிருந்து தொலைவு | 110 கி.மீ (68மைல்) |
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 93 கி.மீ (58மைல்) |
ஆற்காடிலிருந்து தொலைவு | 41 கி.மீ (25மைல்) |
ஆரணியிலிருந்து தொலைவு | 33 கிமீ (21மைல்) |
காஞ்சிபுரத்திலிருந்து தொலைவு | 30 கிமீ (19மைல்) |
வந்தவாசியிலிருந்து தொலைவு | 21 கிமீ (13மைல்) |
இணையதளம் | திருவத்திபுரம் நகராட்சி |
இது திருவண்ணாமலை மாவட்டத்தின் வடமேற்கு மூலையில் செய்யாறு நதிக்கரையில் மற்றும் ஆற்காடு- செய்யாறு - திண்டிவனம் மாநில நெடுஞ்சாலை மற்றும் திருவண்ணாமலை - ஆரணி - காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலை ஆகிய சாலைகளை இணைக்கும் இடத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இங்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், செய்யாறு சிப்காட், நீதிமன்ற வளாகம், நெடுஞ்சாலை கோட்ட அலுவலகம், கல்வி மாவட்ட அலுவலகம், சுகாதார அலுவலகம், தபால் நிலைய அலுவலகம் ஆகியவை உள்ளன. இந்நகரம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கும் மற்றும் பட்டு நகரான ஆரணிக்கும் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் மிக அருகாமையில் உள்ளது.
வரலாறு
பல்லவர்கள், சோழர்கள் ஆட்சிப்பகுதியின் முக்கிய இடமாக இந்த திருவோத்தூர் பகுதி இருந்து வருகிறது[] இத்திருத்தலம் திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட சிவத்தலமாகும்.
அமைவிடம்
செய்யாறு நகரம் திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை - ஆரணி - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையிலும் ஆற்காடு - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கும் இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. மாவட்ட தலைமையிடம் மற்றும் ஆண்மீக நகரான திருவண்ணாமலையிலிருந்து 94 கிமீ தொலைவிலும், பட்டு மற்றும் அரிசி நகரான ஆரணியிலிருந்து 33 கிமீ தொலைவிலும், ஆற்காடிலிருந்து 41 கிமீ தொலைவிலும், வேலூரிலிருந்து 65 கிமீ தொலைவிலும், பட்டு நகரான காஞ்சிபுரத்திலிருந்து 30 கிமீ தொலைவிலும், வந்தவாசியிலிருந்து 21 கிமீ தொலைவிலும் பெரணமல்லூரிலிருந்து 21 கிமீ தொலைவிலும் மற்றும் மாநில தலைமையிடமான சென்னையிலிருந்து 110 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
பெயர் காரணம்
செய்யாறு என்ற பெயர் செய்யாறு என்ற நதி இங்கு ஓடுவதால்தான் தோன்றியது. 'சேய்' என்ற வார்த்தை பிள்ளை என்பதயும், 'ஆறு' என்ற வார்த்தை நதி என்பதயும் குறிக்கிறது. வரலாற்றில் பார்வதி (சிவன் மனைவி) அவரது மகன் முருகன் விளையாட தனது திரிசூலம் மூலம் உருவாக்கிய ஆறுதான் �'சேயாறு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊரின் பழைய பெயர் சேயாறு. இதுதான் று மருவி செய்யாறு என்றழைக்கப்படுகிறது. அதேபோல, திருவத்திபுரம் என்ற பெயர் இங்குள்ள இறைவன் உயர்த்த மந்திரமான வேதத்தை ரிஷிகளுக்கு உரைத்ததால் வந்தது. 'திரு' என்ற சொல் இறைவனையும் 'ஓதுதல்' என்ற சொல் உரைத்தல் என்பதையும் குறிக்கிறது. இதன் பழைய பெயர் திருவோத்தூர் என்பதாகும். இதுதான் இன்று மருவி திருவத்திபுரம் என்று அழைக்கப்படுகிறது.[].
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 37,802 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். திருவத்திபுரம் மக்களிள் கல்வியறிவு பெற்றோர் 76.59% ஆகும்.[2]
மக்கள்தொகை வளர்ச்சி | ||
---|---|---|
ஆண்டு | ம.தொ. | %± |
1951 | 14,451 | — |
1961 | 15,386 | +6.5% |
1981 | 19,274 | +25.3% |
1991 | 25,067 | +30.1% |
2001 | 35,201 | +40.4% |
2011 | 37,802 | +7.4% |
Sources: |
நிர்வாகம் மற்றும் அரசியல்
நகராட்சி
- பேரூராட்சியாக இருந்த திருவத்திபுரம் நகரம் 1978 ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
- அதன்பின்னர் 1993 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. திருவத்திபுரம் நகரம்,தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இரண்டாம் நிலை நகராட்சியாகும். இந்த நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த நகரை திருவத்திபுரம் நகராட்சி நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது.[]
நகராட்சி அதிகாரிகள் | |
---|---|
தலைவர் | |
ஆணையர் | |
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் | |
சட்டமன்றத் தொகுதி | செய்யார் (சட்டமன்றத் தொகுதி) |
சட்டமன்ற உறுப்பினர் | திரு.தூசி.மோகன் |
மக்களவைத் தொகுதி | ஆரணி மக்களவைத் தொகுதி |
மக்களவை உறுப்பினர் | திரு.எம்.கே. விஷ்ணு பிரசாத் |
சட்டமன்றத் தொகுதி
- தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் செய்யாறு தொகுதி ஒன்றாகும். திருவத்திபுரம் நகராட்சியானது, செய்யார் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
- 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) சேர்ந்த திரு. தூசி.மோகன் வென்றார்.
வருவாய் வட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் செய்யார் வட்டமும் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக செய்யாறு உள்ளது. இந்த வட்டத்தில் 131 வருவாய் கிராமங்களும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த வட்டத்தில் மக்கள் தொகை 2,18,188 ஆகும். இந்த வட்டத்தில் செய்யாறு ஊராட்சி ஒன்றியம் மற்றும் அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம் ஆகிய ஒன்றியங்கள் இந்த வட்டத்தில் அமைந்துள்ளது []. அதுமட்டுமில்லாமல் இந்த வட்டத்தில் திருவத்திபுரம் நகராட்சி அமைந்துள்ளது.
வருவாய் கோட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 3 வருவாய் கோட்டங்களில் இதுவும் ஒன்றாகும். செய்யாறு வருவாய் கோட்டம் 01.04.1959 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வருவாய் கோட்டத்தின் கீழ் செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டுஆகிய தாலுகாக்கள் அடங்கியுள்ளது. இந்த வருவாய் கோட்டத்தின் தலைமையகம் செய்யாறு நகரில் அமைந்துள்ளது.

போக்குவரத்து
சாலை வசதிகள்
செய்யாறு நகரத்தை இணைக்கும் வகையில் சாலை வசதிகள் வலைப்பின்னலாக அமைக்கப்பட்டுள்ளது.
1. திண்டிவனம் - வந்தவாசி - செய்யாறு - ஆற்காடு சாலை
2. ஆரணி - செய்யாறு - காஞ்சிபுரம் - தாம்பரம் சாலை
3. செய்யாறு - வாழைப்பந்தல் - ஆரணி சாலை
4. செய்யாறு - பெரணமல்லூர் சாலை
5. செய்யாறு - அனக்காவூர் - உத்திரமேரூர் சாலை
6. செய்யாறு - வெம்பாக்கம் - பிரம்மதேசம் சாலை
ஆகிய சாலைகள் செய்யாறு நகரத்தை இணைக்கிறது.
பேருந்து வசதிகள்
இதனையும் காண்க: திருவத்திபுரம் பேருந்து நிலையம்
செய்யாறு நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- சென்னை, காஞ்சிபுரம், ஆரணி, வந்தவாசி, பெரணமல்லூர், திருவண்ணாமலை ஆகிய நகரங்களுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது.
- காஞ்சிபுரத்திலிருந்து, ஆரணி, போளூர், கலசப்பாக்கம் வழியாக திருவண்ணாமலை மற்றும் சேலம் செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கு நின்று செல்லும்.
- மேல்மருவத்தூர் மற்றும் திண்டிவனம் நகரங்களிலிருந்து வந்தவாசி, ஆற்காடு வழியாக வேலூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கு நின்று செல்லும்.
- சேத்துப்பட்டு, போளூர், பிரம்மதேசம், வெம்பாக்கம், திருத்தணி,தாம்பரம் திருப்பதி, உத்திரமேரூர், திண்டிவனம், புதுச்சேரி, செங்கம், பெங்களூரு, திருச்சி, ஓசூர், படவேடு , சிதம்பரம், பாண்டிச்சேரி ஆகிய நகரங்களுக்கு இரண்டு அல்லது மூன்று பேருந்து சேவைகள் உள்ளது.
இரயில் போக்குவரத்து
செய்யாறு நகரில் இரயில் போக்குவரத்து தற்போது வசதிகள் ஏதுமில்லை. இருந்தாலும் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது திண்டிவனம்-நகரி இரயில் பாதை ஆகும். இந்த இரயில் பாதை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து, ஆந்திர மாநிலம், நகரி வரை அதாவது வந்தவாசி - செய்யாறு - ஆரணி - ஆற்காடு - இராணிப்பேட்டை வழியாக இரயில் போக்குவரத்து இணைக்கும் வகையில் திட்டம் தீட்டப்பட்டு அதற்கான இரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றது. [].
செய்யாறுக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம் இரயில் நிலையத்தில் 30KM இருந்து சென்னை, திருப்பதி, மும்பை, புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் இரயில் வசதி உள்ளது. செய்யாறிலிருந்து 67KM தொலைவு உள்ள காட்பாடி இரயில் நிலையத்தில் இருந்து வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு இரயில் வசதி உள்ளது.
தொழில்வளம்
2008 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை தொன்றுதொட்டு செய்யாறு மக்களுக்கு வேளாண்மை சார்ந்த தொழிலும் நெசவுத் தொழிலும் மட்டுமே முக்கிய தொழில்களாக இருந்தன. செழிப்பான கிராமங்களால் சூழப்பட்டதால், செய்யாறு முக்கிய வேளாண் நகரமாக விளங்குகிறது. நகருக்கு வெளியே ஆற்காடு - வந்தவாசி - திண்டிவனம் சாலையில் 5 கி. மீ தொலைவில் தமிழ்நாட்டின் முக்கிய சர்க்கரை ஆலைகளுள் ஒன்றான செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையும், ஆவின் பால் பதனிடு நிலையமும் அமைந்துள்ளது. சுற்றுப்புற கிராமங்களிருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் பால் குளிரூட்டப்பட்டு சென்னைக்கு செல்கிறது. இவை தவிர தனியாருக்கு சொந்தமான பெரிய பால்கோவா செய்யாறு பால்கோவா தயாரிப்பகமும் உள்ளது. இங்கு நாள்தோறும் தயாராகும் பால்கோவா சென்னை, ஓசூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களுக்கு தினமும் அனுப்பப்படுகிறது. அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையமும் உழவர்சந்தையும் சுற்றுப்புற கிராமங்களிருந்து வரும் விவசாயிகளுக்கு பலன் அளிக்கின்றன. நெசவு இங்கு பாரம்பரிய தொழிலாக உள்ளது. கைத்தறி மற்றும் விசைத்தறிகளின் மூலம் பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் நெய்யப்படுகின்றன.
செய்யாறு ஐந்து கிலோ மிட்டர் அருகில் உள்ள ஜடேரி என்னும் கிராமத்தில் இருந்து வைணவர் நெற்றிகளில் இடும் திருமண் என்னும் நாம கட்டி இந்த கிராம மண்ணில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.
செய்யாறு சிப்காட்
2008 ஆம் ஆண்டிற்குப் பின்னர் செய்யாறு பெரிய தொழில் வளர்ச்சி கண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற கழகத்தின் சார்பில் செய்யாறுக்கு அருகில், திருவண்ணாமலை - ஆரணி - காஞ்சிபுரம் சாலையில் மாங்கால் கூட்டு சாலை அருகே செய்யாறு தொழிற்பேட்டை (Cheyyaru SIPCOT) மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலமும் (SEZ) அமைக்கப்பெற்று வருகின்றன. இந்த சிப்காட் நிறுவனம் செய்யாறு நகரிலிருந்து 17 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது சென்னைக்கு அருகில் உள்ளதாலும் திருப்பெரும்புதூர் மற்றும் ஒரகடம் தொழிற்பேட்டைகளின் இடப்பற்றாக் குறையை நீக்க மாற்று இடம் தேவைப்படுவதாலும் செய்யாறு தேர்ந்தெடுக்கப்படுள்ளது. ஆரம்பிக்கப்பெற்று இரு ஆண்டுகளில் தைவான் நாட்டின் Nike & Lotus காலணி தயாரிப்பகம், அசோக் லே-லாண்டின் அலுமினிய வார்ப்பகம், Llyods ஆகிய நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கிவிட்டன. செய்யாறு சிப்காட்டில் மஹேந்திரா மற்றும் ஸ்விங்ஷட்டர் ஆகிய பெருங் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை தொடங்கிவிட்டனர்.மற்றும் இருமந்தாங்கள் அருகே Voltas switch நிறுவனம் தங்களின் உற்பத்தியை தொடங்கிவிட்டனர். நிறுவனத்தின் மூலம் ஏராளமான இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.
கல்வி
செய்யாறு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு தனி கல்வி மாவட்டமாகும். அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளிக் கட்டிடம் ஆகஸ்ட் 31, 1931 இல் திறக்கப்பட்டது. அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி புலவர் கா.கோவிந்தன் அவர்களின் முயற்சியால் 1967 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரி 69 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. இந்த கல்லூரி முதலில் சென்னை பல்கலைக்கழகத்தில் இணைந்தது. 2002 ஆம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட பின்னர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இணைந்தது. இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகரிப்பு சபையினால் மூன்று நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளளது. இது பி.ஏ., எம்.ஏ., பி.எஸ்ஸி, எம்.எஸ்ஸி. மற்றும் பிஎச்டி படிப்புகளை வழங்குகிறது. சமீபத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியும் இங்கு தொடங்கப்பட்டுள்ளது[].
அருள்மிகு வேதபுரீஸ்வரர் ஆலயம்
அருள்மிகு பாலகுஜாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் ஆலயம் தொண்டை மண்டலத்தின் 32 பாடல்பெற்ற தலங்களுள் எட்டாவது தலமாகும். இங்கு சிவன் வேதங்களை புரிபவனாக மேற்கு நோக்கி அமைந்துள்ளார். சிவனடியார் ஒருவர் நதிக்கரையில் பனை மரங்களை நட்டு சிவனை வணங்கி வந்தார். அப்பனை மரங்கள் அனைத்தும் கனி தராத ஆண் பனைகளாகின. இதனை கண்டு, சமணர், அச்சிவனடியாரை ஏளனம் செய்தனர். இதனைச் செவியுற்ற திருஞானசம்பந்தர் சமணர்களோடு சொற்போரில் ஈடுபட்டார். இருவரும் தத்தம் இறைவனை வேண்டி தமிழ் செய்யுள் ஏற்றி செய்யாற்றில் விட்டனர். திருஞானசம்பந்தரின் செய்யுள் எதிர் நீந்தி செய்யாறைவென்றான் என்னும் ஊரில் கரை ஒதுங்கியது. சமணர்களின் செய்யுள் ஆற்றின் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு அனகப்பதூர் எனுமிடத்தில் ஒதுங்கியது. திருஞானசம்பந்தர் சிவனை வேண்டி பத்து பதிகங்களைப் பாடி ஆண் பனைகளை பெண் பனைகளாக மாற்றினார். இன்றும் இத்தல விருட்சமான பனை மரங்கள் கார்த்திகை மாதத்தில் ஆண் பனைகளாக பனை பூக்களையும், சித்திரை மாதத்தில் பெண் பனைகளாக பனை கனிகளையும் ஒரே மரத்தில் விளைவிக்கின்றன. இது வேறு எங்கும் இல்லாத தாவரவியல் விந்தை ஆகும். சிவனை நோக்காது வாயிலை நோக்கி அமர்ந்துள்ள நந்தி இக்கோவிலின் இன்னொரு சிறப்பாகும். வேதங்களை புரியும் இறைவனுக்கு இடையூறுகள் வராமலிருக்க நந்தி சிவனை நோக்காமல் வாயிலை நோக்கி காவல்காப்பதாக நம்பப்படுகிறது. ஒரு சமயம் சிவபக்தரான தொண்டை மன்னனை எதிரிகளிடமிருந்து காப்பதற்காக வாயிலை நோக்கி நந்தி திரும்பியது எனும் செவி வழி கதையும் வழக்கில் உண்டு.
ஒரே இடத்தில ஐம்பூத(பஞ்ச)தலங்கள், ஆறடி உயரத்தில் தென்முகக் கடவுள் ஆகியவையும் இத்தலத்தின் சிறப்புகளாகும். தொண்டை மன்னர்கள், பல்லவர்கள், விஜய நகர மன்னர்கள் மற்றும் சோழர்கள் இத்தலத்திற்கு திருப்பணிகள் செய்தனர். கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள கன்னட, தெலுங்கு மொழி கல்வெட்டுகள் விஜயநகர மன்னர்களின் பங்களிப்பையும், 11 ஆம் மற்றும் 13 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த சோழர்களின் குறிப்புகளும் இக்கோவிலின் வரலாற்றை பறைசாற்றுகின்றன. சித்திரை மாதத்தில் நடைபெறும் ஆற்றுத்திருவிழா, தெப்பல்-தோப்பு திருவிழா மற்றும் பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் ஆகியவை சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறும் கோலாகலங்களாகும். தினமும் முக்கால பூஜைகள், பிரதோச சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
- "District Census Handbook : Tiruvannamalai" (PDF). பார்த்த நாள் 21 June 2017.
- திருவத்திபுரம் நகராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- "Population Details". thiruvathipuram municipality (2011). பார்த்த நாள் 2012-12-29.
- "Census Info 2011 Final population totals – arani". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India (2013). பார்த்த நாள் 26 January 2014.