காசி நாடு
காசி நாடு என்பது 1194 வரை காணப்பட்ட ஒரு சுதந்திர பூமிஹார் பிராமண (நிலவுடைமையாளரான பிராமணர்) நாடாகும். 1775ல் இது ஒரு பிரித்தானியப் பகுதியாகவும், 1911ல் ஒரு மாநிலமாகவும் ஆகியது. இங்கு ராம்நகர் கோட்டையும் அதன் நூதன சாலையும் அமைந்துள்ளது. காசியின் மன்னர்களின் வரலாற்றைக் கூறும் எச்சங்களாக இவை உள்ளன. மேலும் 18ம் நூற்றாண்டிலிருந்து காசி மன்னர்களின் வதிவிடமாகவும் இதுவே திகழ்கிறது.[1] தற்காலத்திலும் காசியின் மன்னர், காசியின் மக்களால் மிகவும் மரியாதைக்குரியவராகக் கருதப்படுகிறார்.[1] இவர் ஒரு சமயத் தலைவராக உள்ளதோடு காசியின் மக்கள் இவரை சிவபெருமானின் மறுபிறவியாகவே கருதுகின்றனர்.[1] இவர் ஒரு கலாசாரத் தலைவராகவும் உள்ளதோடு, அனைத்து சமய விழாக்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறார்.[1] மன்னர் குடும்பத்தினர் தம்மைச் சிவனின் வழிவந்தவர்களாகக் குறிப்பிடுவதோடு காசிக்கு யாத்திரை வருவோரிடமிருந்து சிறந்த அனுகூலங்களைப் பெற்று வருகின்றனர்.

_-_1922.jpg)
மகாபாரதக் குறிப்புகள்
காசி நாட்டின் இளவரசிகளான அம்பா, அம்பிகா மற்றும் அம்பாலிகா ஆகியவர்களின் சுயம்வரத்தின் போது, அங்கிருந்த மன்னர்களையும், இளவரசர்களையும் தோற்கடித்து, இம்மூன்று பெண்களையும், பீஷ்மர், அவர்களது விருப்பத்துக்கு மாறாக, தனது தம்பியும், சத்தியவதியின் மகனுமான குரு நாட்டு மன்னரான விசித்திரவீரியனுக்கு திருமனம் செய்து வைக்கக் தேரில் அழைத்துச் சென்றார். [2]
வரலாறு
காசி ராச்சியம், பிரதிஸ்தனவின் சோமவன்ச குலத்தைச் சேர்ந்த அயுசின் மகனான சேத்திரவிரதனால் உருவாக்கப்பட்டது. 1194ல் இது அவுதின் நவாபினாலும், 1775ல் பிரித்தானியராலும் கைப்பற்றப்பட்டது. 1911ல் காசி ஒரு மாநிலமானது.[3]. இது 13-குண்டு மரியாதை தரும் ஒரு பகுதியாக்கப்பட்டது.
காசியின் ஆளுநர் காசியின் பெரும்பாலான பிரதேசங்களை, கங்கபூரின் கௌதம பூமிஹார் பிராமண ஜமீன்தார் ஒருவருக்கு அளித்து விட்டார். கங்கபூரின் ஆட்சியாளரான பல்வந்த் சிங், தில்லியின் முகலாயப் பேரரசர் முகமது ஷாவிடமிருந்து, 1737ல் ஜன்பூர்மற்றும் வாரணாசியையும் 1740ல் சூனாரையும் பெற்றார். இவ்வாறு முகலாயப் பேரரசில் காசி காணப்பட்டது. காசி மன்னரின் அதிகாரத்தின் கீழ் சந்தாலி, கியான்பூர், சாக்கியா, லதிஃப்ஷா, மிர்சபூர், நந்தேஷ்வர், மின்ட் ஹௌஸ் மற்றும் விந்தியாஞ்சல் ஆகியனவும் காணப்பட்டன.
முகலாயப் பேரரசின் வீழ்ச்சியுடன் பூமிகார் பிராமணர்கள் தமது ஆட்சிப்பரப்பை தெற்கில் அவாத் வரையிலும் மேலும், அரிசி விளையும் செழிப்பான பகுதிகளான பனாரஸ், கோரக்பூர், டெயோரியா, காசிபூர், பல்லியா மற்றூம் பீகார் வரையிலும் வங்காளத்தின் சில பகுதிகளிலும் விஸ்தரித்துக் கொண்டனர்.[4] பரம்பரை ஆட்சியுரிமை என்பது சில இந்து இளவரசர்களுக்கு வெற்றி தேடித் தந்தது.[4] கிட்டத்தட்ட ஒரு லட்சம் பூமிஹார் பிராமணர்கள் காசியின் மன்னர் பதவிக்குத் தகுதியுடையோராய் இருந்தனர். இந்தப் பகுதிகள் பின்பு பெனாரஸ், கோரக்பூர் மற்றும் அசம்கர் போன்ற மாவட்டங்களாயின.[4] இதன் காரணமாக, 1750கள் மற்றும் 1760களில் அவுதின் நவாபினால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட போது தம்மைப் பலப்படுத்திக்கொள்ள அவர்களால் முடியுமாயிருந்தது.[4] அவுது நவாபினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு படை நடவடிக்கையின் போது பனாரசின் ஆட்சியாளரால் தனது பிராமணப் படை வீரர்களைக் கொண்டு ஒரு கெரில்லாப் போர் தொடங்கப்பட்டது. இதனால் நவாப் தனது படையுடன் பின்வாங்க வேண்டியிருந்தது.[4]
பண்டைய பிராமண வழக்கப்படி காசியின் மன்னர் உணவருந்துவதை எவரும் பார்த்ததில்லை. மேலும் எந்தவொரு மன்னரும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவில்லை. இவ்வாறு தமது பிராமணச் சட்டங்களை அம்மன்னர்கள் பேணி வந்தனர்.[5] காசியின் மன்னரின் விருந்தினராக பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலா, பண்டித ஜவகர்லால் நேரு, ராஜேந்திரப் பிரசாத், இந்திரா காந்தி, இரண்டாம் எலிசபெத், நெல்சன் மண்டேலா, தலாய் லாமா, கோச்செரில் ராமன் நாராயணன் மற்றும் அவரது பர்மிய மனைவி போன்றோர் சென்றுள்ளனர்.[5]
காசியின் மன்னர்
காசியின் மன்னர் சிவபெருமானின் வழிவந்தவராகக் கருதப் படுகிறார். சிவராத்திரியின் போது காசியின் மன்னரே பிரதம பூசகராக இருப்பார். மேலும் ஏனைய பூசகர்கள் கருவறையினுள் நுழைய அனுமதிக்கப் படுவதில்லை. மன்னர் தனது சமயக் கருமங்களை நிறைவேற்றிய பின்னரே ஏனையோர் அனுமதிகப் படுவர்.
மன்னரின் இருப்பிடம் காசிக்கு அருகில், கங்கை நதியை அடுத்துள்ள ராம்நகரில் அமைந்துள்ள ராம்நகர் கோட்டையாகும்.[6] காசியின் மன்னர், வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியை ஏற்றுள்ளார்.[7] வேந்தருக்கு எந்த அதிகாரங்களும் இல்லை. எல்லா முடிவுகளையும் அதன் உபவேந்தரே எடுக்கிறார்.
சனவரி 28, 1983 அன்று, காசி விசுவநாதர் கோவில் உத்திரப் பிரதேச அரசினால் பொறுப்பேற்கப்பட்டது. அதன் முகாமைத்துவம், அன்றைய காசி மன்னரான, கலாநிதி.விபூதி நாராயண் சிங்கை தலைவராகக் கொண்ட அறக்கட்டளையிடம் கையளிக்கப்பட்டது. மேலும் அந்தப் பிரதேச ஆணையாளரை தலைவராகக் கொண்ட நிறைவேற்றுக் குழுவொன்றும் அமைக்கப் பட்டது.[8]
கலாநிதி. விபூதி நாராயண் சிங்கே காசியின் இறுதி மன்னராவார். அக்டோபர் 15, 1948ல் காசி இந்திய ஒன்றியத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. 2000ம் ஆண்டில் அவரது மரணத்தின் பின் அவரது மகனான ஆனந்த் நாராயண் சிங் பாரம்பரியக் கடமைகளை நிறைவேற்றும், அடுத்த காசி மன்னராக பதவியேற்றார்.
ராம்நகரின் வரலாறு
ராம்நகர் கோட்டை காசி மன்னர் பல்வந்த் சிங்கினால், 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது வெள்ளை சூனார் மணற்கல்லால் கட்டப்பட்டது.[9] இது மாடங்கள், திறந்தவெளி அரங்குகள் கொண்ட முகலாயப் பாணியிலமைந்த கட்டடமாகும்.[9]
ராம் நகரில் ராம் லீலா
விஜயதசமி அன்று ராம்லீலா விழா வண்ணமயமான அலங்காரங்களுடன் ஆரம்பமாகும் போது காசி நாட்டு மன்னர் ஊர்வலத்துக்குத் தலைமையேற்று யானையில் வலம் வருவார்.[10] பின்பு, பளபளக்கும் பட்டுப் பீதாம்பரங்களை அணிந்த அவர், ராம்நகரில் ஒரு மாத காலம் நடக்கும் ராம்லீலா நாடகத்தை ஆரம்பித்து வைப்பார்.[10]
ராம்லீலா என்பது, துளசிதாசர் எழுதிய ராமாயணமான ராமசரித மானசில் கூறப்பட்டுள்ள ராமபிரானின் கதையை நடித்துக் காட்டும் நாடகமாகும்.[10] இந்நாடகம் மன்னரின் அனுசரணையோடு ராம்நகரில் மாலை நேரத்தில், தொடர்ந்து 31 நாட்களுக்கு நடைபெறும்.[10] விழாவின் இறுதிநாளில் இது உச்சகட்டத்தை அடையும். இதன்போது ராமர், அரக்க அரசனான ராவணனை அழிப்பார்.[10] 19ம் நூற்றாண்டில், மகாராஜா உதித் நாராயண் சிங் என்பவரே ராம்நகரில் ராம்லீலாவை அரங்கேற்றும் வழக்கத்தை ஆரம்பித்தார்.[10]
காசி மன்னரால் நடாத்தப்படும் விழாவைக் காண ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவர்.[11]
அகில இந்திய காசி ராச்சிய நம்பிக்கை நிதியம்
காசியின் மன்னர் கலாநிதி.விபூதி நாராயண் சிங்கின் வழிகாட்டலின் கீழ் அமைக்கப்பட்ட அகில இந்திய காசி ராச்சிய நம்பிக்கை நிதியத்தின் மூலம் புராணங்களின் மீதான ஆராய்ச்சி ஆரம்பித்தது. இவ்வமைப்பு, புராணங்களைப் பதிப்பித்து வெளியிட்டதோடு, புராணம் எனும் பெயரில் சஞ்சிகை ஒன்றையும் வெளியிட்டது.[12]
ராம் நகர் கோட்டையில் சரஸ்வதி பவன்
மிகவும் அரிய ஓலைச்சுவடிகள், விசேடமாக சமயம் தொடர்பான ஆக்கங்கள் சரஸ்வதி பவனில் வைக்கப்பட்டுள்ளன. இதில் துளசிதாசர் எழுதிய அரிய ஓலைச்சுவடிகளும் காணப்படுகின்றன.[13] மேலும் முகலாயப் பாணியிலமந்த, அழகிய முகப்பு அட்டைகளையுடைய நூல்களும் இங்கு உள்ளன.[13]
ராம் நகரிலுள்ள வியாசர் கோவில்
பிரபலமான புராணக் கதையொன்றின்படி, வியாசர் காசியில் பிச்சை பெற்றுக்கொள்ள முடியாததால் அவர் அந்நகருக்குச் சாபமிட்டார்.[13] எனினும், பார்வதியும் சிவனும் மனிதத் தம்பதியினராய் உருவெடுத்து வியாசரை உணவருந்த அழைத்தனர். வியாசரும் அதனை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு தனது சாபத்தை மறந்துவிட்டார்.[13] எவ்வாறாயினும், வியாசரின் முன்கோப குணத்தால் சிவன் வியாசரை காசியினுள் நுழைவதற்குத் தடை விதித்தார்.[13]. எனினும் காசிக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என்ற ஆவலினால் கங்கை நதியின் மறுகரையில் வியாசர் தமது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார். ராம்நகரில் அவரது கோவிலை அவ்விடத்தில் இன்றும் காணலாம்.[13]
இதனையும் காண்க
குறிப்புகள்
- Mitra, Swati (2002). Good Earth Varanasi city guide. Eicher Goodearth Limited. பக். 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-87780-04-5.
- காசியில் நடந்த சுயம்வரம் | ஆதிபர்வம் - பகுதி 102
- Benares (Princely State) - A Document about Maharajas of Varanasi
- Christopher Alan Bayly (1983). Rulers, Townsmen, and Bazaars: North Indian Society in the Age of British Expansion, 1770-1870. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 489 (at p 18). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-31054-3.
- Mark Manuel. "Nobody's Seen The Gourmet Maharaja Eating!". Upper Crust. Archived from the original on 2007-11-10. http://web.archive.org/web/20071110180121/http://www.uppercrustindia.com/6crust/six/banaras3.htm. பார்த்த நாள்: 2008-04-08.
- A review of Varanasi
- Short biography of Pandit Madan Mohan Malaviya. Look under the heading Important Dates.
- Official website of Varanasi
- Mitra, Swati (2002). Good Earth Varanasi city guide. Eicher Goodearth Limited. பக். 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-87780-04-5.
- Mitra, Swati (2002). Good Earth Varanasi city guide. Eicher Goodearth Limited. பக். 216 (at p 126). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-87780-04-5.
- Banham, Martin (second edition, 1995). The Cambridge Guide to Theatre. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 1247. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-43437-9.
- Mittal, Sushil (2004). The Hindu World. Routledge. பக். 657. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-21527-5.
- Mitra, Swati (2002). Good Earth Varanasi city guide. Eicher Goodearth Limited. பக். 216 (at p 129). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-87780-04-5.
மேற்கோள்கள்
- Diana L. Eck, Banāras, City of Light, Knopf, 1982.
- Swati Mitra, Good Earth Varanasi city guide, Eicher Goodearth Limited, 2002, isbn = 978-81-87780-04-5.
- Christopher Alan Bayly, Rulers, Townsmen and Bazaars. North Indian Society in the Age of British Expansion, 1780-1870, கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம், 1983.