குருதேசம்

குரு தேசம் இமயமலையிலிருந்து தொடங்கி தெற்கு நோக்கி ஓடும் யமுனை நதியை அடுத்து சூரசேன தேசத்திற்கு வடக்கிலும், பாஹ்லிக தேசத்திற்கு தெற்கிலும், பாஞ்சலத்திற்கு மேற்கிலும் பரவி இருந்த தேசம்.[1] இதன் தலைநகரம் அஸ்தினாபுரம் ஆகும். குருச்சேத்திரப் போரின் முடிவில் பாண்டவர்கள், கௌரவர்களை வென்று குரு நாட்டை ஆண்டனர்.

குருதேசம்

அங்குத்தர நிக்காய எனும் பௌத்த நூல் குறிப்பிடும் பதினாறு மகா ஜனபதங்களில் குரு நாடும் ஒன்றாகும்.

இருப்பிடம்

இந்த குருதேசத்தின் பூமி அமைப்பானது மேடு பள்ளம் இல்லாமல் சமமாகவே இருக்கும். இந்த தேசத்தின் கிழக்கில் யமுனா நதியின் அருகில் உள்ள பூமிகள் மட்டும் கொஞ்சம் தாழ்ந்து செழித்து இருக்கும்.[2]

பருவ நிலை

இந்த தேசத்தில் குளிர், பனி அதிகமாக இருக்காது, மழை மாத்திரம் சித்திரை, வைகாசி மாதம் முதல் புரட்டாசி மாதம் முடிய விடாமல் பெய்துகொண்டே இருக்கும்.

மலை, காடு, மிருகங்கள்

இந்த தேசத்தின் வடக்கேயும், மேற்கேயும் பெரிய மலைகள் உண்டு, இம்மலைகளில் பனி பெய்துகொண்டும், மலையின் அடிவாரத்திலிருந்து பரந்து விரிந்த காடுகளும், அவைகளில் வெண்மையான எருமைகளும், பசுக்களும், வெண்மையான குதிரைகளும் ஏராளமாய் இருக்கும்.

நதிகள்

இந்த தேசத்தின் கிழக்கு பக்கத்தில் மிக ஆழமானதும், கருமையான நிறமுடைய நீர் நிறைந்து ஓடுகிற ஜீவ நதியான யமுனையும், இத்தேசத்தின் மேற்கிலிருந்து நீல நிறமுடைய நீர் நிறைந்து ஓடும் நீலா நதியும் முக்கியமானவை.

விளைபொருள்

இந்த தேசத்தில் நெல், கோதுமை, கரும்பு முதலியனவும், தாம்பரம், பித்தளை முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களை அம்மக்கள் பயன்படுத்தினர்.

நகரம்

அத்தினாபுரம் இத்தேசத்தின் முக்கிய நகராகும். இந்நகரத்தில் சிற்ப சாத்திர முறைப்படி கட்டிய கோட்டைகள், பெரிய, பெரிய அரண்மனைகள், இருந்துள்ளன.

இதனையும் காண்க

கருவி நூல்

சான்றடைவு

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 54 -
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.