சேதி நாடு

சேதி நாடு அல்லது சேதி தேசம் (Chedi Kingdom), பரத கண்டத்து நாடுகளில் ஒன்றாகும். இது விந்திய மலையின் வடகிழக்குப் பாகத்தில் உற்பத்தியாகும், சோணாநதியின் கரைவரையில் விசாலமாகப் பரவி இருந்த தேசம்.[1]

சேதி நாட்டை பேரரசன் யயாதியின் மகன் புருவின் வழித்தோன்றல்களான பௌரவர்கள் ஆண்டனர். பௌரவர்கள் பிற்காலத்தில் யது குலத்தின் ஒரு பிரிவாக கருதப்பட்டனர். சேதி நாட்டின் தலைநகரம் சுக்திமதி நகராகும். சேதி நாடு, பதினாறு மகாஜனபத நாடுகளில் ஒன்றாகும்.

அமைவிடம்

மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் புந்தேல்கண்ட் பகுதியே சேதி நாடு ஆகும். வத்ச நாட்டிற்கு தெற்கிலும், அவந்தி நாட்டிற்கு கிழக்கிலும் சேதி நாடு அமைந்துள்ளது.

சேதி நாட்டு மன்னர்கள்

சேதி நாட்டை ஆண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் சிசுபாலன் ஆவார். இவர் கம்சனின் மருமகனும், ஜராசந்தன் மற்றும் துரியோதனனின் கூட்டாளியும் ஆவார். மேலும் இவர் கிருட்டிணின் பிறவிப் பகையாளியும் ஆவார்.

மகாபாரதத்தில்

மகாபாரத சபா பருவத்தில், தருமன் இராஜசூய வேள்வி செய்கையில், முதல் மரியாதை கிருஷ்ணனுக்கு அளிக்கக் கூடாது என சிசுபாலன் கூறினார். கிருஷ்ணரை தொடர்ந்து நூறு முறை வசை பாடியதால், கிருஷ்ணர் சக்கராயுதத்தை ஏவி சிசுபாலனை கொன்றார்.

குருச்சேத்திரப் போரில், சிசுபாலனின் மகன் திருஷ்டகேது, பாண்டவர் அணி சார்பாக நின்று கௌரவர் அணிக்கு எதிராக போரிட்டான்.

மேற்கோள்கள்

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  • "The Mahabharata".
  • Kisari Mohan Ganguli, The Mahabharata of Krishna-Dwaipayana Vyasa Translated into English Prose, 1883-1896.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.