கு. ஞானசம்பந்தன்
கு. ஞானசம்பந்தன். இவர் தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர். இருப்பினும் இவர் தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டிமன்ற நடுவராகவே அதிகம் தெரிந்தவராக இருக்கிறார். மதுரை மாவட்டம் சோழவந்தான் எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது மதுரை நகரில் வசித்து வருகிறார். மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி தற்போது அக்கல்லூரியின் தகைசால் பேராசிரியாக உள்ளார். நகைச்சுவையில் ஈடுபாடுடைய இவர், 25 ஆண்டுகாலமாக இயங்கிவருகின்ற மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவராக உள்ளார். மேலும் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாகர்கோவில், திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை உட்பட 15 மாவட்டங்களில் நகைச்சுவை மன்றங்களை நிறுவி அதன் நிறுவனராக இருந்து வருகிறார்.
கு. ஞானசம்பந்தன் | |
---|---|
![]() | |
பிறப்பு | குருநாதன் ஞானசம்பந்தன் 19 அக்டோபர் 1956 சோழவந்தான், மதுரை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. |
இருப்பிடம் | மதுரை |
தேசியம் | இந்தியர் |
கல்வி | தமிழில் முனைவர் பட்டம் |
பணி | தமிழ்ப் பேராசிரியர் |
அறியப்படுவது | 1. பட்டிமன்ற நடுவர், 2. நகைச்சுவைப் பேச்சாளர் 3. எழுத்தாளர் |
சமயம் | இந்து |
பிள்ளைகள் | 2 |
தமிழ்த்துறை வழிகாட்டுநர்
- தமிழ்த்துறைப் பேராசிரியராக இருக்கும் இவரது வழிகாட்டலில் இதுவரை 35 மாணவர்கள் “இளநிலை ஆய்வாளர்” பட்டங்களையும், 12 மாணவர்கள் "முனைவர்" பட்டங்களையும் பெற்றுள்ளனர்.
எழுதியுள்ள நூல்கள்
பல்வேறு அச்சிதழ்களில் பல முக்கியக் கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் கீழ்க்காணும் நூல்களையும் எழுதியிருக்கிறார்.
- வாங்க சிரிக்கலாம்.
- பரபரப்பு - சிரிப்பு.
- பேசும் கலை (பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் இந்நூல் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது).
- உலகம் உங்கள் கையில்.
- இன்றைய சிந்தனை.
- வாழ்வியல் நகைச்சுவை.
- சினிமாவுக்குப் போகலாம் வாங்க!
- கல்லூரி அதிசயங்கள்.
- இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும்.
- இலக்கியச் சாரல்
- சந்தித்ததும் சிந்தித்ததும்
- மேடைப் பயணங்கள்
- ஜெயிக்கப்போவது நீதான்
- சிரித்துக்கொண்டே ஜெயிப்போம்
இவற்றோடு, இவர் எழுதிய "கலகல கடைசிப் பக்கம்", "கேள்வி - பதில்" எனும் இரண்டு புத்தகங்களும் விரைவில் வெளிவரவிருக்கிறது.
ஒலிநாடாக்கள் மற்றும் குறுந்தகடுகள்
இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கள் ஒலிநாடாக்களாகவும் குறுந்தகடுகளாகவும் கீழ்காணும் தலைப்புகளில் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
- வாங்க சிரிக்கலாம்
- சிரிக்கலாம் வாங்க
- இலக்கியமும் நகைச்சுவையும்
- சிரிப்பும் சிந்தனையும்
- வெற்றி நம் பக்கம்
தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்வுகள்
- பல்வேறு தமிழ்த் தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் பல பங்களிப்புகளைச் செய்துவருகிறார். குறிப்பாக தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பட்டிமன்ற நடுவராகப் பங்கேற்று சிறப்பித்துவருபவர்.
- ஜெயா தொலைக்காட்சியில் தினமும் காலை மலர் நிகழ்வில் “இன்றைய சிந்தனை” எனும் தலைப்பில் ஜூன் 12, 2006 முதல் தொடர்ந்து சிறப்புத் தகவல்களை வழங்கி வருகிறார்.
தமிழ்ச் சொற்பொழிவுகள்
தமிழ்நாடு தவிர தில்லி, மும்பை, கல்கத்தா, திருவனந்தபுரம், ஹைதராபாத், அந்தமான் என இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் உள்ள தமிழ்ச்சங்கங்களில் சிறப்புச்சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்.
மேலும் சிறப்புச் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதற்காக சிங்கப்பூர், மலேசியாத் தலைநகர் கோலாலம்பூர், அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன் அரபு நாடுகளில் சவூதி அரேபியா, குவைத், ஜெத்தா என அயல்நாட்டுத் தமிழ்ச் சங்கங்களுக்குச் சென்று வந்துள்ளார்.
நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள்
- இவர் “விருமாண்டி”, “இதயத் திருடன்”, “கைவந்த கலை”, “ஆயுதம் செய்வோம்”, “சிவா மனசுல சக்தி” "ரஜினி முருகன்" "பசங்க 2" "உத்தம வில்லன் (2015 திரைப்படம்)" "கேரளநாட்டிளம் பெண்களுடனே" "பிரம்மன் (திரைபடம்)" "நிமிர்ந்து நில் (2014 திரைப்படம்)" "கொம்பன்" "மருது" போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
விருது மற்றும் சிறப்புக்கள்
- தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வழங்கிய 2005 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது.
- 1995ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி வழங்கிய “தமிழ் இயக்கத்தின் சிற்றரசு” பட்டம்.
- 2014 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வழங்கிய மகாகவி பாரதியார் விருது.
- பல்வேறு தமிழ்ச்சங்கங்கள் வழங்கிய “உவகைப்புலவர்”, “தமிழறிஞர்”, “நகைச்சுவை அரசர்”, “நகைச்சுவைத்தென்றல்”, “இளைய கலைவாணர்”, “சித்த பத்மஸ்ரீ” போன்ற பட்டங்கள்.