இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்
இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர். 1857-ல் நடந்த சிப்பாய் கலகம் முதல் இந்திய விடுதலைப் போர் எனக் குறிப்பிடப்படுகிறது. எனினும் தென்னிந்தியாவில் அதற்கு முன்னரே பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராகப் பல போர்களும் கிளர்ச்சிகளும் நடைபெற்றன.
பாளையக்காரர்களின் எதிர்ப்பு
மதுரை நாயக்க மன்னர்களுக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர்களாக கப்பத்தொகையினை செலுத்திவந்த பாளையக்காரர்கள், மற்றும் மறவர்கள் மதுரை நாயக்க மன்னர்களின் மறைவிற்குப் பிறகு கப்பம் கட்ட மறுத்தனர். எனவே ஆற்காடு, மதுரை உள்ளிட்ட அரசுகள் நவாப்பின் ஆட்சிக்குட்பட்ட போது கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் தன்னாட்சி புரிந்து வந்த இவர்கள், கட்டுப்பட்டு கப்பம் செலுத்த மறுத்தனர். இதனால் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்க நவாப்புக்குப் படை உதவி செய்த ஆங்கிலேயர்களுக்கு நவாப், கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இது பெரும் கடன்தொகையாக மாறவே இப்பகுதிகளில் எல்லாம் வரி வசூல் செய்யும் உரிமையை கம்பனியார் பெற்றனர். இதனை அழகு முத்துக்கோன், பூலித்தேவன், கட்டபொம்மன் உள்ளிட்ட பலர் எதிர்த்தனர்.
அழகு முத்துக்கோன்
அழகு முத்துக்கோன் (1728-1757) கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னருக்கு சிறந்த நண்பராக விளங்கினார். இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் அழகு முத்துக்கோன் (1728-1757).
பூலித்தேவன்

நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட பூலித்தேவன் மற்றும் பூலித்தேவரின் சுற்று வட்டார பாளையங்களைச் சேர்ந்த வாண்டாயத்தேவன் போன்றவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராகச் செயல்பட்டனர்.
1750-ல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்று அறிவித்தார். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தார். இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றார் என 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது.[1] பூலித்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.[2]
பின்னர் 1755 -ல் கப்பம் வசூலிக்க வந்த ஆங்கிலத் தளபதி அலெக்சாண்டர் கெரான் என்பவரோடு போரிட்டு வெற்றி பெற்றார். இதுவே பாளையக்காரர்கள்-ஆங்கிலேயர் மோதல்களில் ஆங்கிலேயருக்கு ஏற்பட்ட முதல் தோல்வியாகும். மேலும் பூலித்தேவன் 1750 முதல் 1767 வரை சுமார் 17 ஆண்டு காலம் தொடர்ந்து பல போர்களை நடத்திவந்தார்.
சிவகங்கை இராமநாதபுரம் பகுதிகள்
1752ல் மதுரையை ஆண்ட விசயகுமார நாயக்கர் மீது பரங்கியர் கேப்டன் கோப் தலைமையில் போர் தொடுத்து கைப்பற்றினர். அதையறிந்த முத்துவடுகநாதர் மதுரை மீது போர் தொடுத்து அங்கிருந்த கேப்டன் கோப்பையும் அவர் படைகளையும் விரட்டியடித்து மீண்டும் விசயகுமார நாயக்கரையே மதுரை மன்னராக பதவி அமர்த்தினார். அவரின் இறப்புக்கு பின்னர் அவரின் மனைவி வேலுநாச்சியாரும் படைத்தளபதிகளான மருது சகோதரர்களும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
1780-இல் , தனது பிரதானி தாண்டவராயப் பிள்ளையின் ஆலோசனையின் படி மருது சகோதரர்களின் உதவியோடும் கும்பினி எதிர்ப்புப்படை ஒன்றை அமைத்து சிவகங்கையை மீட்டவர் வேலுநாச்சியார்.
முத்துராமலிங்க சேதுபதி
இருபது ஆண்டுகளுக்கு மேலாக கப்பத் தொகையினை யாருக்கும் கட்டாமல் தன்னிச்சையாக இயங்கி வந்த இராமநாதபுரம் சேதுபதியை ஆயுத வலிமை கொண்டு அடக்கிட நாவாப் விரும்பினார். 1772-ல் நவாப் முகமது அலியின் மகனான உம் தத்துல் உம்ரா, கம்பனித் தளபதி ஜோசப் ஸ்மித் ஆக்யோர் தலைமையில் பெரும்படை ஒன்று இராமநாதபுர கோட்டையைக் கைப்பற்றினர். அங்கிருந்த ராணி, அவரது இரு பெண்குழந்தைகள் இளவல் முத்துராமலிங்க சேதுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சிக் கோட்டையில் அடைக்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட கிளர்ச்சி காரணமாக 1781-ல் நாவாப் சிறையிலிருந்த இளம் சேதுபதி மன்னருடன் ஓர் உடன்பாடு செய்துகொண்டு இராமநாதபுரத்தில் சேதுபதி மன்னர் தமது ஆட்சியைத் தொடர வழி கோலினார். சேதுபதி திருவிதாங்கூர் மன்னர் மற்றும் திருநெல்வேலிப் பாளையக்காரர்களுடன் நட்புகொண்டார். மேலும் நவாபுக்கும் கிழக்கிந்திய நிறுவனத்துக்கும் எதிராக டச்சுக்காரர்களுடனும் உடன்பாடு செய்துகொண்டார்.
ஆற்காடு நவாப்பின் இறையாண்மைக்கு உட்பட்ட நிலையில் அவரது சலுகைகளை எதிர்பார்த்து தங்களது வணிகத்தைத் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர் சேது நாட்டின் வணிகத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயன்றனர். ஆனால் சேதுபதி மன்னர் மறுத்தார். எனவே பலவகையில் முயன்று ஆற்காட்டு நவாப்பிற்கும், ஆட்சியர் பவுனிக்கும் முறையிட்ட கம்பனியர் போர் தொடுக்க இரகசியத் திட்டம் தீட்டினர். மன்னருக்கு மிகவும் நம்பிக்கையான தளபதி மார்ட்டினிடம் கோட்டை வாசல் கதவுகளுக்கான சாவிகள் இருந்தன. எனவே 1795 பிப்ரவரி எட்டாம் நாள் கம்பெனியாரது படை இராமநாதபுரம் கோட்டை வாயிலைக் கடந்து அரண்மனையைச் சூழ்ந்து கொண்டது.
ஆயுதக் கிடங்கு, வெடிமருந்து இருப்பு, போர்வீரர் எண்ணிக்கை மற்றும் நாட்டுப்புறங்களில் பயிற்சிபெற்ற நாலாயிரம் போர்வீரகள், ஆயுதம் ஏந்தக் கூடிய ஆறாயிரம் குடிமக்கள் ஆகியோர் இருந்தும் மன்னர் வஞ்சகமாக கைது செய்யப்பட்டு திருச்சி சிறைக்கு அனுப்பப்பட்டார். மன்னரது தளபதி மயிலப்பன் சேர்வைக்காரன் என்பவர் மன்னரைத் தப்புவிக்கும் முயற்சியில் தோல்வியடைந்தபின் மக்களைத் திரட்டி ஆயுதக் கிளர்ச்சியொன்றைத் தொடங்கினார். முதுகுளத்தூர், அபிராமபுரம், கமுதி ஆகிய ஊர்களிலுள்ள கம்பெனியாரது தானியக் களஞ்சியம், கிடங்குகள் ஆகியன சூறையாடப்பட்டன இப்புரட்சியில், குளத்தூர், காடல்குடி, நாகலாபுரம், பாஞ்சலங்குறிச்சி மக்களும் கலந்துகொண்டனர். நாற்பத்து இரண்டு நாட்கள் நீடித்த இப்புரட்சி கம்பெனியாரது ஆயுத பலத்தினால் ஒடுக்கப்பட்டது. மன்னர் சேதுபதி திருச்சி சிறையிலிருந்து நெல்லூர் சிறைக்கு மாற்றப்பட்டர். அங்கு கொடுமைதாளாது, இரவுபகல் தெரியாமல் பதினான்கு ஆண்டுகள் கழித்தார். குற்றாச்சாட்டுகள், விசாரணைகள் என எதுவுமே இல்லாமல் தமது வாழ்நாளைச் சிறையில் கழித்த சேதுபதி மன்னர் 1809-ல் இறந்தார்.
கட்டபொம்மன்

தமிழ்நாட்டின் புரட்சிக் குழுக்கள்
சிற்றூர்களில் வாழும் மக்கள் தங்களுக்குள் அரிகாரன் எனப்படும் ஒற்றர்கள் மூலம் செய்தி பரப்பினர். கூட்டங்கள் கூடி புரட்சி குறித்து முடிவெடுத்தனர். தமிழகத்தில் அமைதியின்மை உருவாகிவிட்டதை அறிந்த மைசூரின் திப்பு சுல்தானும் பிரான்சு நாட்டு நிர்வாகக் குழுவினரும் இரகசியமாகத் தூதர்களை அனுப்பிவைத்தனர். இதன் விளைவாக விருப்பாச்சி கோபால நாயக்கர் தலைமையில் பழனியிலும், மருதுபாண்டியர் தலைமையில் சிவகங்கையிலும். மயிலப்பன் தலைமையில் இராமநாதபுரத்திலும், சிவகிரியின் மாப்பிள்ளை வன்னியத்தேவர் மற்றும் பாஞ்சாலங்குறிச்சியின் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் தலைமையில் திருநெல்வேலியிலும் குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டன. இதே நேரம் தென்னிந்தியாவின் பிற பகுதிகளிலும் இத்தகைய புரட்சிக் குழுக்கள் தோன்றின. குறிப்பாக மலபாரில் கேரள வர்மா, கன்னட தேசத்தில் விட்டலஹெக்டே, அரிசிக்கரையில் கிருஷ்ணப்ப நாயக்கர், பெல்ஹாமில் தூந்தாஜி வாக் ஆகியோர் தலைமையில் குழுக்கள் உருவாயின.
படை உதவிகள்
இப்புரட்சியாளர்கள் மைசூர் அரசு, நிசாம் அரசு, குவாலியர் அரசு, மொகலாயர், சீக்கியர் போன்ற வட இந்திய ஆட்சிக்குடியினர் ஆகியோரிடம் ஆதரவு தேடினர். இவர்களுள் மைசூரின் திப்புவும், குவாலியரின் சிந்தியாவும் புரட்சியாளர்களின் நடவடிக்கைக்குத் தமது ஆதரவைத் தெரிவித்தனர். 1799-ல் திப்புசுல்தான், உரிய வெகுமதிகளுடனும் கடிதங்களுடனும் தம்முடைய பிரதி நிதிகளைப் பழனிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் மார்ச் 5, 1799-ல் நடந்த ஆங்கிலேயர்களுக்கெதிரான போரில் திப்பு கொல்லப்பட்டார். வெற்றிக்குப்பின் மதராஸ் (இன்றைய சென்னை) ஆளுநர் எட்வர்டு கிளைவ் பாஞ்சாலங்குறிச்சியை வென்று அடிமைப்படுத்த தமது இராணுவத்தை அனுப்பினார். இப்படையினர் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றி கட்டபொம்மனைத் தேடிக் கண்டுபிடித்து தூக்கிலிட்டனர். கீழைப் பாளையக்க்காரர்களையும் ஒடுக்கினார்கள்.
இந்தியாவிற்கு வந்து திப்புவின் படைகளுடன் சேர்ந்து போரில் பங்கேற்கும் எண்ணத்தில் எகிப்து, சிரியா வரை படை நடத்தி வந்த நெப்போலியன் போனபார்ட் தமது கிழக்கிந்தியப் போர் நடவடிக்கையைக் கைவிட்டுப் பிரன்சுக்குத் திரும்பினார். எனவே, பிரெஞ்சு உதவியாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பொய்த்தது.
தூந்தாஜி வாக்கின் ஆதரவு நடவடிக்கைகள்
சூழ்நிலை பாதகமாக இருந்தாலும் திருநெல்வேலியிலும், மைசூரிலும் எஞ்சியிருந்த புரட்சியணியினர் சிவகங்கைக் காடுகளுக்கும் பழனிக்காடுகளுக்கும் வந்து சேர்ந்தனர். அடர்ந்த காடுகள் தந்த பாதுகாப்பின் காரணமாக புரட்சிக்கான சூழ்நிலை மீண்டும் உருவாகத் தொடங்கியது. விருப்பாச்சி கோபால நாயக்கர், மருது பாண்டியன் ஆகியோரின் ஊக்கத்தால் புரட்சியாளர்கள் விடுதலை பெறவேண்டுமென்ற தங்களது தீர்மானத்தினை செயல்படுத்துவதற்காக மீண்டும் இயக்கத்தினைக் கட்டமைத்தனர். கூட்டாளிகளின் ஆதரவின்றி இந்நோக்கம் எளிதில் நிறைவேற்ற இயலாது. எனவே தக்காணத்தில் தனக்கென ஒர் அரசை உருவாக்கிக்கொண்டு, இரு பேருலகுகளின் சக்கரவர்த்தி எனத் தம்மை அறிவித்துக் கொண்டு, பிரித்தானியர்களுடன் தொடர்ந்து போரிட்டு வந்த மராட்டியத் தலைவர் தூந்தாஜி வாக்கின் ஆதரவைப் பெற புரட்சியாளர்கள் முயன்றனர். ஈரோடு சின்னணகவுண்டர், வெங்கடரமணய்யா, பரமத்தி அப்பாஜிக்கவுண்டர் ஆகியோர் தலைமையில் இரகசியமாக மூன்று தூதுக்குழுக்களைத் தனித்தனியாக அனுப்பினர். இவர்கள் காட்டுவழிகளில் பயணம் செய்து தூந்தாஜி வாக்கின் முகாமை அடைந்தனர். தமிழர்கள் புரட்சிக்கு ஆயத்தமாக உள்ளனர் எனப் பலவிதங்களிலும் வலியுறுத்திக்கூறிய பின்னரே தூந்தாஜிவாக்கின் ஆதரவு குறித்த உறுதிமொழியைத் தூதுக்குழுவினரால் பெற முடிந்தது. அதன் பின்னர் தூந்தாஜி வாக், பெருந்துறை, கரூர், அரவக்குறிச்சி, காங்கேயம், மதுரை முதலிய பல ஊர்களின் மணியக்காரர்களுக்கு(நாட்டாண்மை) ஏராளமான கடிதங்களை எழுதி தூதுவர்களிடம் கொடுத்தார். புரட்சி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தனது பிரதிநிதியாக தும்பிச்சி முதலி என்பவரை நிர்ணயித்தார். நிஜாம் பகுதியைச் சேர்ந்த சர்தார்கள், விஜயநகர வம்சத்தவரான ஆனகுந்தி அரசர், ஷோலாப்பூர், ராயதுர்க்கம் ஆகியவற்றின் ஆட்சியாளர்கள் ஆகியோர் புரட்சியாளர்களுக்கு ஆதரவு அளித்தனர்.
கூட்டணி

1800- ஆண்டு ஜூன் மாதம் சிவகங்கை மருது, மராட்டியப் புரட்சியாளர்களுடன் உறுதியான பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு விட்டார் எனவும், தூந்தாஜி வாக் படையில் ஆயுதம் தரித்த ஆடவர் குழுக்கள் அணியணியாகச் சென்று சேர்வதாகவும் பிரித்தானிய நிர்வாகத்தினருக்கு அரிக்காரர்கள் மூலம் தகவல் கிடைத்தது. ஆங்கிலேய எதிர்ப்புக் குழுக்கள் ஒன்றுடனொன்று கூட்டணியமைத்து திட்டமிட்ட ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டதன் விளைவாக கிளர்ச்சியின் தாக்கம் திருநெல்வேலியிலிருந்து மலபாருக்கும், மலப்பாரிலிருந்து குவாலியருக்கும் விரவிப் பரவியது.
பழனிச் சதித்திட்டம்
1800-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் நாள் எதிர்ப்புப் படையினர் தமது செயல்திட்டத்தை வகுப்பதற்காகக் கூடினர். பழனி சதித்திட்டம் எனப்படும் இக்கூட்டத்தில் புரட்சியணியின் தலைவர்களும் அவர்களது உதவியாளர்களும் கலந்து கொண்டனர். இக்கால கட்டத்தைச் சேர்ந்த ஆங்கிலேயரின் குறிப்பேடுகளின், மராட்டியப் புரட்சியாளர்களின் பிரதிநிதிகள் ஏப்ரல் 28-ஆம் நாளன்று விருப்பாச்சியை அடைந்தனரென்றும், பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்டு 30 ஆம் தேதியன்று திரும்பினர் என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.[3] இக்கூட்டத்திற்கு கோபால நாயக்கர் தலைமை வகித்தார். 1800 ஜூன் 3 ஆம் நாள் கோயமுத்த்தூர் கோட்டையைத் தாக்குவதென்றும் பிரித்தானிய குதிரைப்படையின் ஐந்தாவது படை வகுப்பினை முற்றிலும் அழிப்பதென்றும்,. நாடுமுழுவதும் பிரித்தானியருக்கு எதிரான கிளர்ச்சியை வெடிக்கச் செய்வதற்கு இதுவே குறியீடாக இருக்கும் என்றும் இக்கூட்டம் முடிவு செய்தது.
கோயமுத்தூர் கோட்டை
புரட்சிப்பேரணியின் இரு பிரிவுகளான தென்னக மற்றும் வட இந்திய அணிகளுக்கிடையே கோயமுத்தூர் ஒரு பாலமாக விளங்கியதால், கோயமுத்தூர் கோட்டையைத் தேர்ந்தெடுத்தனர். 1800- ஜூன் 3 ஆம் நாளைத் தேர்ந்தெடுக்கக் காரணம் அந்நாள் முகர்ரம் விழாவின் இறுதிநாள் ஆகும். கோயமுத்தூர் கோட்டையைக் காக்கும் பொறுப்பு பெரும்பாலும் முகமதிய சிப்பாய்களையே கொண்டிருந்த ஐந்தாவது படை வகுப்பிடம் இருந்தது. எனவே முகமதிய வீரர்கள் பல இரவுகளாகத் தொடர்ந்து கண்விழித்து முகர்ரம் விழாவினைக் கொண்டாடி களைத்து ஓய்ந்திருப்பர் என புரட்சியாளர்கள் எதிர்பார்த்தனர்.
போராளிகள் ஷேக் ஹுசைன் தலைமையில் அருகிலிருந்த மலைகளின் ஒளிந்துகொண்டு காத்திருக்கவும், திண்டுக்கல்லைச் சேர்ந்த புரட்சியாளர்கள் ஷேக் ஹுசைனுக்கு ஆதரவாக உரிய வேளையில் வந்து சேர்ந்துகொள்ளவும் தீர்மானித்தனர். தூந்தாஜி வாக் தமது குதிரைப்படையை கோயமுத்தூருக்கு அனுப்புவதென்றும் அக்குதிரைப்படைத் தொகுதி வந்து சேர்ந்ததும் மருது பாண்டியனும் அவருடைய கூட்டாளிகளும் ஒரே நேரத்தில் கலகத்தில் இறங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இக்கலகத்தில் சிற்றூர்களும் கலந்துகொண்டன. அவர்கள் படை உதவிக்கு விரைந்து வந்து சேர கிள்ளு என்ற அடையாள முறை பின்பற்றப்பட்டது. எதிரியின் ஆயுதப்படை பற்றி அறிந்திருந்ததால் கொரில்லாப்போர் முறையைப் பின்பற்றுவதென தேசபக்தர்கள் முடிவு செய்தனர்.
மருதுபாண்டியனின் நடவடிக்கைகள்
புரட்சி குறித்த கைப்பிரதிகள், குறிப்பாக திருச்சி மலைக்கோட்டையின் நுழைவாயிலிலும், திருவரங்கம் கோயில் கோபுரத்திலும் மருதுபாண்டியனின் பிரகடனங்கள் ஒட்டப்பட்டன. அவை பிரித்தானியரின் நம்பிக்கைத் துரோகத்தினையும், மக்களின் நிலை மற்றும் ஒற்றுமையின்மையையும், புரட்சியின் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் வரையறுத்துக் கூறின. எதிரியுடன் நாம் நேருக்கு நேர் மொதுதலை விட கொரில்லாப்போர் முறையைப் பின்பற்றலாம் என திட்டம் தீட்டப்பட்டது. காட்டுச்சூழலைத் துணைகொண்டு எதிரியை அலைக்கழிக்க வேண்டுமென்பதில் மருதுபாண்டியன், செவத்தையா ஆகியோர் உறுதியுடன் இருந்ததனர்.
கோயமுத்தூர்க் கோட்டை மோதல்
1800-ஆம் ஆண்டு மே மாதம் புரட்சியணி ஐந்து பகுதிகளாகப் பிரிந்து பழனி-திண்டுக்கல் பகுதிக்க்காடுகளிலிருந்து தாராபுரம் நோக்கி முன்னேறியது. இப்படை ஈட்டிகளையும் நெருப்புப்பற்றவைத்துச் சுடும் துப்பாக்கிகளையும் ஏந்தியிருந்தன. சின்னண கவுண்டர் இவ்வைந்து பிரிவுகளுக்கும் தலைமை வகித்தார். ஜூன் 3 ஆம் நாள் 600 பேர் கொண்ட புரட்சியாளர் படை கோயம்புத்தூர்க் கோட்டை கண்ணுக்குத் தென்படும் ஓர் இடத்தை அடைந்து முகமது ஹாஷமின் படைத் தொகுதியும் தூந்தாஜி வாக்கின் குதிரைப்படையும் வந்து சேரும் வரை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் காத்திருந்தது.
கம்பெனியார் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக வடக்கிலிருந்து வந்து சேரவேண்டிய படைகள் வந்து சேரவில்லை.. மேலும் புரட்சியாளர்கள் பற்றி கோயமுத்தூர் வட்டாட்சியரின் மூலமாக செய்தி அறிந்த ஆங்கிலேயர்கள், கோட்டையில் ஐரோப்பிய மற்றும் இராஜபுத்திர வீரர்களைக் காவலுக்கு நிறுத்தினர். இஸ்லாமிய வீரர்களை வெளியே அனுப்பிப் போரிடவும் ஒளிந்துகொண்டிருக்கும் பிற புரட்சியாளர்களை வேட்டையாடவும் பணித்தனர். தலைமலையில் ஏற்பட்ட பின்னடைவால் புரட்சியாளர்கள் பலர் சிறைசெய்யப்பட்டனர். புரட்சியணித்தலைவர்களின் கடிதங்களை வைத்திருந்த முகமது ஹாஷம் சிறைபிடிக்கப்பட்டார். ஆனால் கடிதங்களை அழித்துவிட்ட ஹாஷம் 1800 ஜூன் 8-ஆம் நாள் தன் குரல்வளையை தாமே அறுத்துக்கொண்ட்டு தற்கொலை செய்துகொண்டு புரட்சியணியின் முதல் தியாகியானார்.
அப்பாஜிக்கவுண்டர் மற்றும் 42 புரட்சியாளர்களுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கப்பட்டது. கலகம் நிகழ்ந்த இடங்களான கோயம்புத்தூர், தாராபுரம், சத்தியமங்கலம் முதலிய இடங்களில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. மக்கள் முன் அச்ச உணர்வைப் பரப்புவதற்காக அரங்கேறிய இக்காட்டுமிராண்டித்தனம் நேர்மாறான விளைவை ஏற்படுத்தியது. இக்கொடுமையறிந்த பிற பகுதிகளிலிருந்த புரட்சியாளர்களும் உடனடியாக போரிலிறங்கக் களம் புகுந்தனர்.
கிளர்ச்சி பரவுதல்
புரட்சியாளர்கள் ஒன்றுபட்டு தக்காணத்தில் குந்தா, கன்னடப்பகுதி, பெல்காம், மைசூர் இராச்சியத்தின் மேற்குப்பகுதி ஆகியவற்றைக் கைப்பற்றினர். ஜமலாபாத், வனவாசி, கோண்டா ஆகிய ஊர்களில் இருந்த பிரித்தானிய இராணுவ நிலைகளைத் தாக்கி, அவற்றையும் கைக்கொண்டனர். மலபாரின் கேரள வர்மாவும், பழனியின் கோபால நாயக்கரும் மலைக்கோட்டைகளிலிருந்த பிரித்தானிய சிப்பாய்களை விரட்டிவிட்டு இராணுவப் பண்டகசாலைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
மருது பாண்டியன் பாளையங்கோட்டையில் இருந்த புரட்சியாளர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கினார். 1799-ல் கட்டபொம்மன் உள்ளிட்ட பாளையக்காரரை அடக்கிய பின் பிரித்தானியர் அவரது தம்பிகளான செவத்தையா, ஊமைத்துரை உட்பட 17 புரட்சித் தலைவர்களை பாளையங்கோட்டையில் சிறை வைத்திருந்ததனர். 1801- ஆம் ஜனவரி மாதம் 200 புரட்சியாளர்கள், திருச்செந்தூருக்குத் திருத்தலப்பயணம் மேற்கொள்ளும் பரதேசிகள் போல வேடமிட்டு கோட்டைக்குள் நுழைந்து கைதிகளை விடுவித்துக் கொண்டு தப்பினர். துணிச்சலான இந்தச் செயல் தென்கோடிவரை புரட்சி பரவியதற்கு அடையாளமாக விளங்கியது.
கைப்பற்றிய பகுதிகள்
பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தூத்துக்குடி கடற்கரைப் பகுதிவரை புரட்சியாளர்கள் கைப்பற்றினர். 1801-ஆம் ஆண்டு மே மாதத்தில் கலகக்காரர்கள் இராமநாதபுரத்தையும் தஞ்சையின் சில பகுதிகளிலும் ஊடுருவினர். இதனிடையில் திண்டுக்கல்லிலும் பழனியிலும் புரட்சியணியின் அதிகாரத்தைக் கோபால நாயக்கர் நிலைநாட்டினார். மதுரை இராச்சியத்தின் மேற்குப்பகுதியைக் கள்ளர் குலத்தவர் கைப்பற்றினர். கடற்கரைப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் கொணர்ந்த தேசப்பற்றாளர்கள் பெரிய தோணிகள் மூலமாகப் பண்டங்களையும் மளிகைப் பொருட்களையும் போர்த்தளவாடங்களையும் கொண்டுவந்து சேர்த்தனர்.
புரட்சியரசு ஆட்சி முறை
ஆங்கிலேயரிமிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களை நல்ல முறையில் நிர்வகிக்கவும், அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படாமலிருக்க, விழிப்புடன் கண்காணிக்கவும் புரட்சியணித்தலைவர்கள் முயன்றனர். நிலவருவாய் நிர்ணயம் செய்து, வரிவசூல் செய்வதற்கு அமுல்தார்கள் எனப்படும் அதிகாரிகளை நியமித்தனர். தாணியமோ, விறகோ, வைக்கோலாகவோ புரட்சி நடவடிக்கையை ஊக்குவிக்க தம்மால் முடிந்தட ஏதாவது ஒரு பொருளை கொடுத்தால் போதும் என்பது மட்டும் குடிமக்களிடம் எதிர்பார்க்கப்பட்டது. புரட்சியரசிடம் பணிபுரியும் பொதுத்துறை ஊழியர்கள், மக்களுக்கு எதிராக முறையற்ற செயலில் ஈடுபட்டால் அதுபற்றியோ, ஐயத்துக்கிடமான நபர்களின் தவறான நடவடிக்கை பற்றியோ புரட்சியரசுக்குத் தெரிவிக்க அரிக்காரர்கள் நியமிக்கப்பட்டனர். புரட்சியின் அவசியத்தை அனைவரும் உணரவும், புரட்சியின் குறிக்கோள்கள் ஈடேறச்செய்யவும் அரசாங்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். கிராம சமுதாயம் மீண்டும் தனது பணியினைத் தொடங்கிச் செயல்பட உதவிக்கரம் நீட்டப்பட்டது. அதே வேளையில் படைக்கலன்கள் உருவாக்குவதற்கும் அவற்றை மாற்றார்க்குக் கிட்டாத இடங்களில் சேகரித்து வைப்பதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
கொரில்லாப்போர் முறை
புரட்சி அதி வேகத்தில் பரவியதும், அதனால் விளைந்த நன்மைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சியும் ஆங்கிலேயரை வியக்க வைத்தன. தமது பொது எதிரியான ஆங்கிலேயரை எதிர்க்க அனைத்துப் புரட்சியாளர்களும் ஒன்றுபட்டனர். எனவே எதிர்ப்பும் உறுதியாக இருந்தது. தாம் தாக்கப்படும்போது தகவல் தொடர்புகளைத் துண்டித்தும், எதிரி எதிர்பாராத வகையில் தங்களுடைய நிலைகளைத் தாங்களே தீயிட்டு அழித்துவிட்டு அடர்ந்த காடுகளில் ஓடி ஒளிந்துகொண்டும் கொரில்லாப் போர்முறையைப் பின்பற்றி பிரித்தானியப் படையினரை அலைகழித்துச் சோர்வுறச் செய்தனர். இந்த கொரில்லாப் போர்முறையை வேலு நாச்சியார் பெண்கள் படைப்பிரிவில் இருந்த குயிலி என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயப் பெண் பின்பற்றி உயிர் துறந்தது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியருக்கு சாதகமான சூழல்கள்
புரட்சியாளர்களுடைய போர் நடவடிக்கைகளால் எளிதில் இராணுவத்தின் கைகளில் பிடிபடாமல் தப்பினர். எனினும், பிரித்தானியருக்கு பல விதங்களில் நிலைமை சாதகமானதாக இருந்தது.
- பிரித்தானியர் தம்முடைய அனுபவமிக்க படைத்தளபதிகள் மற்றும் தேர்ந்த பயிற்சியும் போர்க்கருவிகளும் உபகரணங்களும் பெற்றிருந்த படைகளைக் கொண்டு ஆங்கிலேயர் மைசூர், மராட்டியப் படைகளின் புரட்சிப்படையை முறியடித்தனர்.
- கடற்படை வல்லமையால், புரட்சியணியினர்க்குரிய கடல்வழித் தகவல் தொடர்புகளைத் துண்டித்து விடவும், வங்காளம், மலேசியா, இலங்கை முதலிய இடங்களிலிருந்து படைகளைக் கொண்டுவந்து குவிக்கவும் இயன்றது.
- இந்தியாவில் உள்ள அரசுகளான கர்நாடக அரசு, மைசூர் அரசு, தஞ்சாவூர் அரசு, திருவிதாங்கூர் அரசு, புனே அரசு, ஹைதராபாத் நிசாம் அரசுகள் ஆங்கிலேயருக்கு ஆதரவாக படைகளை அனுப்பியும், மளிகைச் சரக்குகள் முதலிய பண்டங்களை அனுப்பியும், உளவு செய்திகள் சொல்லியும் உதவின.
- ஆங்கிலேயர் இராணுவத் தளங்களைத் தமது கட்டுப்பாட்டில் உறுதியாக வைத்துக் காத்துவந்தனர்.
- புரட்சியாளர்கள் வசதி குறைந்த கிராமப்புறப்பகுதிகளை மட்டுமே ஆங்கிலேய அதிகாரத்திலிருந்து மீட்டனர். அங்கிருந்து எதிர்த்தாக்குதல் தொடுப்பதற்கு மட்டுமே அவர்களால் இயன்றது.
புரட்சியாளர்களின் தோல்விகள்
தமிழகப் புரட்சியாளர்களை அவர்களது வட இந்தியக் கூட்டாளிகளிடமிருந்து பிரித்துத் தனிமைப்படுத்தும் முயற்சியில் ஆங்கிலேயர் ஈடுபட்டனர். தொடக்கத்தில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்த பிரித்தானியர் பேஷ்வா, நிசாம் முதலிய அச்சு அரசுகளின் உதவி கொண்டு மராட்டிய கர்நாடக, மலபார்ப் பகுதிகளைச் சேர்ந்த கலகக் காரர்களை ஒடுக்கியது. கர்னல் வெல்லெஸ்லி படை நடவடிக்கைக்குத் தலைமையேற்றார். தூந்தாஜி வாக் , ராணாபெத்னூர், சாவனூர் ஆகிய இடங்களில் தோவியைச் சந்தித்தார். எனவே புரட்சிப்படை ராய்ச்சூருக்குப் பின்வாங்கியது. இச்சண்டையில் 1800, செப்டம்பர் 10 ஆம் நாள் தூந்தாஜி வாக் கொல்லப்பட்டார். மலபாரில் செயல்திறம் மிக்க கேரள வர்மாவுக்குத் துணை நின்ற ஏமன் நாயர் தமது அணியின் இரகசியங்களை ஆங்கிலேயரிடம் தெரிவித்ததார், எனினும் தமது தொண்டர் படையின் நீண்ட நாட்கள் போராடிய கேரள வர்மா 1805, நவம்பர் 30 ஆம் நாள் கம்பெனியாரின் துருப்புப்பிரிவு ஒன்றினால் கொல்லப்பட்டார்.
தமிழகத்தில் அடக்குமுறைப்போர்
தமிழகப் புரட்சியாளர்களுக்கு எதிராக புனித ஜார்ஜ் கோட்டை, புனித தாமஸ் மலை (பரங்கிமலை), ஆற்காடு, மலபார் ஆகிய இடங்களில் இருந்து துருப்புகள் கொணர்ந்து இறக்கப்பட்டது. அக்னியூ என்பவரின் தலைமையில் புறப்பட்ட இப்படை 1801, மே 24 ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியைத் தாக்கி 1050 பேரைக் கொன்றது. செவத்தையா, ஊமைத்துரை உட்பட உயிர்பிழைத்தவர்கள் மருது சகோதரர்களின் உதவியை நாடினர். பிரித்தானியப் படை மானாமதுரை, பார்த்திபனூர் வழியாகப் பரமக்குடியைக் கைப்பற்றி மதுரையையும் புரட்சியாளர்கள் பிடியிலிருந்து விடுவித்தது. தொண்டி துறைமுகத்தை அடைந்த ஆங்கிலேயப் போர்க்கப்பல் ஒன்று புரட்சியாளர்களுக்கு சரக்குகள் இறக்குமதி செய்வதற்காக வந்த பெரிய தோணிகளைத் தாக்கி அழித்தது.
இறுதித் தோல்வி
1801, செப்டம்பரில் மருது பாண்டியர்களின் வலிமையான தளமாக விளங்கிய காளையார் கோவில் நடை ஆங்கிலேயப் படையின் மூன்று பிரிவுகள் ஒரே நேரத்தில் அதிரடியாகத் தாக்கிக் கைப்பற்றினர். ஆயினும் மருது சகோதரர்கள் தப்பித்து சிங்கம்புணரிக் காடுகளுக்குள் புகுந்து கொண்டனர். தப்பியோடிய பிற புரட்சியாளர்கள் ஊமைத்துரையின் தலைமையில் கோபால நாயக்கரின் அணியினருக்குப் பக்க பலமாகச் சென்று சேர்ந்தனர். 4000 பேருடன் பழனிமலைத் தொடரைப் பிடித்துகொண்ட ஊமைத்துரை எதிரி முன்னேறி வருவதைத் தடுக்க தடுப்புச் சுவர் எழுப்பினர். இருப்பினும் இன்னஸ் தலைமையில் வந்த படைகள் அதனைக் கைப்பற்றி, பிரித்தானியரின் அதிகாரத்தை நிலைநாட்டி புரட்சியாளர்களை விரட்டிச் சென்றது. திண்டுக்கல்லில் இருந்து வெற்றிலைக் குண்டு (வத்தலகுண்டு) வரை 51 மைல் தொலைவுக்கு மூன்று நாட்கள் உணவோ தண்ணீரோ இன்றிப் புரட்சியாளர்கள் போரிட்டுக்கொண்டே பின்வாங்கினர். தம் சக்தியை இழந்து சோர்ந்து போன புரட்சியாளர்கள் இறுதியில் முறியடிக்கப்பட்டனர்.
தண்டனைகள்
தூக்கிலிடுதல்
துரோகிகள் சிலரின் உதவியோடு 1801 ஆம் ஆண்டு இறுதிக்குள் காடுகளில் ஒளிந்திருந்த மற்ற புரட்சியணித் தலைவர்களையும் ஆங்கிலேயர்கள் கண்டு பிடித்து சிறை செய்தனர். உடனடியாக விசாரனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
1801, அக்டோபர் 24 ஆம் நாள் வெள்ளை மருது, அவர்களுடைய மகன்கள் கருத்ததம்பி, முள்ளிக்குட்டித் தம்பி ஆகியோரும், மருது பாண்டியன் அவருடைய மகன் செவத்த தம்பி, சிறுவயதேயான பேரன் முத்துசாமி, இராமநாதபுரம் ராஜா என்றழைக்கப்பட்ட முத்துகருப்பத்தேவர், காடல்குடிப்பாளையக்காரர் ஆகியோர் உட்பட்ட பெரும் எண்ணிக்கையிலானோர் சிவகங்கைச் சீமையிலுள்ள திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.
செவத்தையாவும் ஊமைத்துரையும் அவர்களுடைய நெருங்கிய சகாக்களும் பாஞ்சாலங்குறிச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒரே மரத்தில் அனைவரும் ஒன்றாகத் தூக்கிலிடப்பட்டனர்.[4]
நாடு கடத்துதல்
புரட்சியணித்தலைவர்கள் 73 பேருக்கு நாடு கடத்தப்படும் தண்டனை(தீவாந்தர சிட்சை) வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் 1802 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் அட்மிரல் நெல்சன் என்ற கப்பலில் ஏற்றப்பட்டு பினாங்கைச் சேர்ந்த பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு அனுப்பப்பட்டனர். இருவர் இருவராகச் சேர்த்துக் கைவிலங்கிடப்பட்டிருந்த இவர்கள் எழுபத்தாறு நாள்கள் நீடித்த இக்கடற்பயணத்த்தின் போது அடைந்த துயர் அவலமானது. இவர்களுல் ஒருவர் வழியிலேயே கடலில் விழுந்து இறந்தார். ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார். பினாங்கைச் சென்றடைந்த பின்னர் தண்டனைக் காலம் ஐந்து மாதங்கல் கழிவதற்குள் 24 பேர் இறந்து போயினர்.
வேலூர் கலகம்

புரட்சியணியில் எஞ்சியிருந்த வீரர்களை, அவர்களது பின்னனியைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாமலேயே ஆங்கிலேயர்கள் வேலூர்க்கோட்டையில் பணியமர்த்தினர். ஐரோப்பியத் துருப்புகள் தவிர, 23-ஆம் படைவகுப்பின் இரன்டவது பட்டாளப்பிரிவும் வேலூர் கோட்டையில் இருந்தது. இந்த இரண்டாவது பட்டாளப்பிரிவு முழுவதும், புரட்சி ஒடுக்கப்பட்ட பின்னர், திருநெல்வேலியிலிருந்து தேர்ந்தெடுத்து நியமிக்கப்பட்ட வீரர்களைக் கொண்டதாகும். மேலும் வேலுர்க்கோட்டையில் திப்பு சுலதான்களின் மகன்கள் குறிப்பாக மூத்த மகன் பத்தே ஹைதர் இருப்பதை அவர்கள் கண்டனர். பத்தே ஹைதர் சிறையிருந்த போதும் பல்வேறு குறுநிலத் தலைவர்களுடன் கடிதத் தொடர்பு கொன்டு புரட்சியை மீண்டும் வடிவமைக்கும் துடிப்புடன் செயல்பட்டார். மேலும் புரட்சியாளர்களுக்கு மரணதண்டனை விதித்து அதனைத் தாமே தலைதாங்கி நடத்திய அக்னியூ வேலூர்க்கோட்டைத் தலைமையதிகாரி. எனவே புரட்சியாளர்கள் வேலூரை தமது நடவடிக்கைக்கான ஒரு மையமாக மாற்றினர்.
இதே சமயத்தில் இராணுவ வீரர்கள், நெற்றியில் சமய வழிபாட்டுச் சின்னங்கள் எவையும் அணியக் கூடாதென்றும், காதணி போன்ற அணிகலன்கள் அணியக் கூடாதென்றும் அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. புதிய வடிவிலமைந்த தலைப்பாகையினை அணிய வேண்டுமென அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்ட்னர். இது வீரர்களிடையே கொதிப்பினை ஏற்படுத்தின. எனவே பிரித்தானியரின் அதிகாரத்தை வீழ்த்த வேண்டுமென புரட்சியாளர்கள் தீர்மானித்தனர். பள்ளிகொண்டா, வாலாஜாபாத், சித்தூர், ஆற்காடு, ஸ்ரீகாகுளம், ஐதராபாத் ஆகிய இடங்களில் தமக்கு ஆதரவு தேடினர். எனினும் மற்ற பகுதிகளின் புரட்சியணியினர் வேலூரில் நடக்கப்போகும் புரட்சியின் சாதக பாதகங்களை அறியக் காத்திருந்தன்ர்.
1806-ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் நாள் பொது எழுச்சியொன்றை நிகழ்த்தத் தீர்மானிக்கப்பட்டது, ஐதரபாத்திலும் வேலூரிலும் இருந்த இராணுவ முகாம்களில் இத்தேதி குறித்த செய்தி மறைமுகமாகப் பேசிக்கொள்ளப்பட்டது. ஆயினும் வேலூரில் ஜூலை, 10-ஆம் நாள் அதிகாலையிலேயே கலகம் வெடித்தது. புரட்சியாளர்கள், ஐரோப்பியப்படை வீரர் குழுவொன்றினைக் கொன்றொழித்து விட்டுக் கோட்டையைத் தங்கள் ஆதிக்கத்தில் கொணர்ந்தனர். திப்புவின் கொடியை கொடிமரத்தில் ஏற்றினர். இதைத் தொடர்ந்து வாலாஜாபாத்திலும், ஐதராபாத்திலும் 13 ஆம் தேதியன்று சிறுகலகம் ஏற்பட்டது. கர்னல் கில்லிஸ்பி வேலூர்க்கோட்டையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தான் 113 ஐரோப்பிய இராணுவ வீரர்களை இழந்த பிரித்தானியப்படை புரட்சியாளர்கள் 350 பேரை கொன்று 500 பேரைச் சிறை செய்து, கோட்டையைத் தனது கட்டுப்பட்டுக்குள் கொண்டுவந்தது.
தமிழகத்தில் புரட்சி கால வரிசை முறை
- அழகு முத்துக்கோன், பூலித்தேவனும் அவரின் நண்பர்கள் மற்றும் தளபதிகளும், முத்து வடுகநாதர் – 1750ல் இருந்து 1770 வரை
- வேலுநாச்சியார், மருதுபான்டியர் - 1770 முதல் 1790 வரை
- வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை - 1790களுக்குப் பிறகு
- வேலூர்ப்புரட்சி 1806
வேலூர் கலகத்துக்குப் பின்
இதன் பின்னர் 1857 இல் நடைபெற்ற சிப்பாய் கலகம் வட இந்தியாவில் வெகுவாகப் பரவினாலும், தென்னிந்தியாவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை
அறவழிப் போராட்டத்தில்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தோன்றிய இந்திய தேசிய காங்கிரசு இந்திய விடுதலை இயக்கத்துக்குத் தலைமை ஏற்று வன்முறை தவிர்த்த முறைகளில் ஈடுபட்டது. இந்த நடவடிக்கைகளில் தமிழக செயற்பாட்டாளர்கள் குறிபிடத்தக்க பங்கு வகித்தனர்.
மதேவன் மகன் வைதிலிங்கம் -வடசேரி.நாகர்கோவில்.விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்று சிறை சென்றவர்.தாமரைப் பட்டயம் பெற்றவர்.மண்டைக்காடு கலவரத்தின் போது, அமைதி ஏற்பட தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் பெருமுயற்சி எடுத்துக் கொண்டவர்.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விடுதலை வீரர்கள்
- கல்கி தி. சதாசிவம்
- கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
- வெ. அ. சுந்தரம்
- காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்
- குமராண்டிபாளையம் ஏ. நாச்சியப்பன்
- கோடை எஸ். பி. வி. அழகர்சாமி
- கோவை என். ஜி. ராமசாமி
- கோவை சுப்ரி என்கிற சுப்ரமணியம்
- சாவடி அருணாச்சலம் பிள்ளை
- சீர்காழி சுப்பராயன்
- சேலம் ஏ. சுப்பிரமணியம்
- டாக்டர் பெ. வரதராஜுலு நாயுடு
- டாக்டர் ருக்மிணி லக்ஷ்மிபதி
- தஞ்சை ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார்
- தர்மபுரி குமாரசாமி
- திண்டுக்கல் மணிபாரதி
- தியாகி வைரப்பன் வேதாரண்யம்
- திருக்கருகாவூர் பந்துலு ஐயர்
- திருச்சி வக்கீல்ரா. நாராயண ஐயங்கார்
- திருச்சி டி. எஸ். அருணாசலம்
- திருச்சி டி. வி. சுவாமிநாத சாஸ்திரி
- திருச்சி பி. ரத்னவேல் தேவர்
- திருப்பூர் பி. எஸ். சுந்தரம்
- தீரர் சத்தியமூர்த்தி
- தியாகி த.தங்கவேல் நாடார் ஆறுமுகனேரி
- தூக்குமேடை ராஜகோபால்
- தூத்துக்குடி பால்பாண்டியன்
- தேனி என். ஆர். தியாகராஜன்
- தோழர் கே. டி. கே. தங்கமணி
- நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை
- பழனி கே. ஆர். செல்லம்
- பழனி பி. எஸ். கே. லக்ஷ்மிபதிராஜு
- புலி மீனாட்சி சுந்தரம்
- பெரியகுளம் இராம. சதாசிவம்
- மட்டப்பாறை வெங்கட்டராமையர்
- மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி
- மதுரை பழனிகுமாரு பிள்ளை
- மதுரை ஜார்ஜ் ஜோசப்
- மதுரை ஸ்ரீநிவாச ஐயங்கார்
- முனகல பட்டாபிராமையா
- மேயர் டி. செங்கல்வராயன்
- வத்தலகுண்டுபி. எஸ். சங்கரன்
- வீரன் சுந்தரலிங்கம்
- வீரன் வாஞ்சிநாதன்
- ஸ்ரீமதி செளந்தரம் ராமச்சந்திரன்
- அகினி திராவக அபிஷேகம்
- அசலாம்பிகை அம்மையார்
- அம்புஜம்மாள்,
- மாவீரன் அழகுமுத்து கோன் (1728–1757)
- அ. வைத்தியநாதய்யர் மதுரை
- ஆர். வி. சுவாமிநாதன்
- ஆ. நா. சிவராமன்
- இராசம்மா பூபாலன்
- இராமு தேவர்
- இலட்சுமி சாகல்
- எம். சங்கையா
- எம். பக்தவத்சலம்
- எம். பி. டி. ஆச்சார்யா
- எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி
- என். எம். ஆர். சுப்பராமன்
- எஸ். என். சுந்தராம்பாள்
- எஸ். என். சோமையாஜுலு
- ஏ. பி. சி. வீரபாகு
- ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
- கட்டபொம்மன் (1760–1799)
- கடலூர் அஞ்சலையம்மாள்
- கண்ணம்மையார்
- க. சந்தானம்
- ப. ராமமூர்த்தி
- கு. காமராசர்
- கு. ராஜவேலு
- கே.கே.எஸ். காளியம்மாள்
- கே. பி. சுந்தராம்பாள்
- கே. பி. ஜானகியம்மாள்
- கே. வி. ராமசாமி கோவை
- கோவிந்தம்மாள்
- கோவை அய்யாமுத்து
- கோ. வேங்கடாசலபதி
- சர்தார் வேதரத்தினம் பிள்ளை
- ச. அ. சாமிநாத ஐயர்
- சின்ன மருது மகன் துரைச்சாமி
- சி. பி. சுப்பையான் கோவை
- சுத்தானந்த பாரதி
- சுப்பிரமணிய சிவா
- செங்காளியப்பன்
- செண்பகராமன் பிள்ளை
- செல்லம்மா பாரதி
- சேலம் சி. விஜயராகாவாச்சாரியார்
- டி. என். தீர்த்தகிரி
- டி. கே. மாதவன்
- தியாகி விஸ்வநாததாஸ்
- திருப்பூர் குமரன்
- திரு. வி. கலியாணசுந்தரனார்
- தி. சே. செள. ராஜன்
- தீரன் சின்னமலை
- கருப்ப சேர்வை
- நாகம்மையார்
- நீலாவதி இராம. சுப்பிரமணியம்
- பங்கஜத்தம்மாள்
- ப. ஜீவானந்தம்
- பாஷ்யம் என்கிற ஆர்யா
- பி. எஸ். சின்னதுரை
- பி. கக்கன்
- பி. சீனிவாச ராவ்
- பி. வேலுச்சாமி
- புதுச்சேரி சுப்பையா
- பூமேடை ராமையா
- பூலித்தேவன் (1715–1767)
- பெரிய காலாடி
- மகாகவி பாரதியார்
- மணலூர் மணியம்மா
- மயிலப்பன் சேர்வைகாரர்
- மருதநாயகம் (1725–1764)
- மருது பாண்டியர்
- ம. சிங்காரவேலர்
- ம. பொ. சிவஞானம் கிராமணியார்
- மீனாம்பாள்
- முத்துலட்சுமி ரெட்டி
- முத்துவிநாயகம்
- முஹம்மது இஸ்மாயில்
- மூவலூர் இராமாமிர்தம்
- மோகன் குமாரமங்கலம்
- ராமச்சந்திர நாயக்கர்
- ராஜாஜி
- பெரியார்
- ரா. கிருஷ்ணசாமி நாயுடு
- வடிவு
- வ. உ. சிதம்பரனார்
- வ. வே. சுப்பிரமணியம்
- வாண்டாயத் தேவன்
- விருப்பாச்சி கோபால நாயக்கர்
- வெ. துரையனார்
- வேலு நாச்சியார் – முத்து வடுகநாதர்
- வை. மு. கோதைநாயகி
- ஜானகி ஆதி நாகப்பன்
- ஜி. சுப்பிரமணிய ஐயர்
- ஸ்ரீநிவாச ஆழ்வார்
- ஹாஜி முகமது மெளலானா சாகிப்
- நீலகண்ட பிரம்மச்சாரி
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
- ஐ. மாயாண்டி பாரதி
- என்.சங்கரய்யா
- நீலமேகம் பிள்ளை
- காமராசர்
மேற்கோள்கள்
- விடுதலை வேள்வியில் தமிழகம். பக். 40.
- "Work to restore 17th century palace begins". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: சனவரி 02, 2013.
- விடுதலை வேள்வியில் தமிழகம். பக்.18
- http://www.kalachuvadu.com/issue-128/page52.asp
உசாத்துணை
- கே. ராஜய்யன் தமிழாக்கம் எஸ். ஆர். சந்திரன், விடுதலை வேள்வியில் தமிழகம் (நூல்) - தென்னிந்தியப் புரட்சி", மனிதம் பதிப்பகம். பக். 15-27
- தமிழ்நாட்டுத் தியாகிகள்
- Major James Welsh (1830). Military reminiscences : extracted from a journal of nearly forty years' active service in the East Indies. London : Smith, Elder, and Co.. http://www.archive.org/details/militaryreminisc01wels.
- Robert Caldwell (1881). A Political and General History of the District of Tinnevelly, in the Presidency of Madras. E. Keys, at the Government Press. பக். 195–222. http://www.archive.org/details/apoliticalandge00caldgoog.
- a b c [1]
- "Imbibe patriotic spirit of Marudhu brothers". The Hindu (India). 5 November 2008.
- "Marudhu brothers". Sivaganga district, State government of Tamilnadu. Retrieved 4 January 2012.
- "Stamp on Marudhu Pandiar brothers released". The Hindu (Madurai, India). 25 October 2004.
- "Stamps 2004". Indian Postal department. Retrieved 4 January 2012.
- "Thousands pay homage to Marudhu Brothers". The Hindu (Madurai, India). 28 October 2010.