மகாதேவ தேசாய்

மகாதேவ தேசாய் (Mahadev Desai) (பிறப்பு: 1 சனவரி 1892: இறப்பு: 15 ஆகத்து 1942) இந்திய விடுதலை போராட்டவீரரும், மகாத்மா காந்தியின் நேர்முகச் செயலாளரும் ஆவார்.[1][2]

மகாதேவ தேசாய் (இடது) மகாத்மா காந்தி வலது, பிர்லா மாளிகை, மும்பை, 7 ஏப்ரல் 1939

இளமை வாழ்க்கை

மகாதேவ தேசாய், குசராத்து மாநிலத்தின் சூரத் மாவட்டத்தின் சரஸ் எனும் கிராமத்தில் பள்ளி ஆசிரியரான அரிபாய் தேசாய்ஜம்னாபென் இணையருக்கு 1 சனவரி 1982இல் பிறந்தவர். தனது 13ஆவது அகவையில் துர்காபென் என்பவரை மணந்தவர். பள்ளிக் கல்வியை சூரத்திலும்; கல்லூரிக் கல்வியை மும்பை மாகாணத்தின் எல்பின்ஸ்டோன் கல்லூரியிலும் பயின்றவர். சட்டப்படிப்பை 1913இல் முடித்த மகாதேவ தேசாய், மும்பை மத்திய கூட்டுறவு வங்கியில் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார்.

மகாத்மா காந்தியுடன்

1917இல் மகாத்மா காந்தியின் பால் ஈர்க்கப்பட்ட மகாதேவ தேசாய், தனது மனைவியுடன், காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் சேர்ந்து, சம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகப் போராட்டங்களில் கலந்து கொண்டார். 13 நவம்பர் 1917 முதல் 14 ஆகத்து 1942 முடிய, தான் இறக்கும் வரை மகாத்மா காந்தியுடனான தனது வாழ்க்கையை நாட்குறிப்பாக எழுதி வந்தார். 1919இல் காந்தி பிரித்தானிய இந்திய அரசால் கைது செய்யப்பட்டு, பஞ்சாப் சிறையில் அடைத்தபோது, மகாதேவ தேசாயை தனது வாரிசாகக் குறித்திருந்தார். காந்தியின் நேர்முகச் செயலாராக 25 ஆண்டுகள் வரை, தம் மரணம் வரை பணியாற்றிவர் மகாதேவ தேசாய்.

இந்திய விடுதலை இயக்கத்தில்

காந்தியின் ஹரிஜன் நாளிதழில் மகாதேவ தேசாய் மறைவுக்கான இரங்கல் செய்தி
ஆகா கான் அரண்மனையில் கஸ்தூரிபாய் காந்தி மற்றும் மகாதேவ தேசாயின் நினைவிடங்கள், புனே

1921இல் பிரித்தானியப் பொருள்களை, குறிப்பாகத் துணிகளை, இந்திய மக்கள் வாங்கக் கூடாது என செய்தித்தாள்களில் எழுதியமைக்காக, மகாதேவ தேசாய் கைது செய்யப்பட்டு, ஒராண்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.[3] பர்தோலி சத்தியாகிரகப் போராட்டத்தில், சர்தார் வல்லபாய் படேலுடன் கலந்து கொண்டார்.[4] உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் காந்தியுடன் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். 7 செப்டம்பர் 1931இல் தொடங்கிய காந்தி-இர்வின் உடன்படிக்கையின் படி, இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில், காந்தியுடன், மகாதேவ தேசாயும் கலந்து கொண்டார்.

இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில், பிரித்தானியர்கள் நல்ல முடிவு எடுக்காத காரணத்தால், எழுச்சியுற்ற குடியியற் சட்டமறுப்பு இயக்கத்தின் விளைவாக இந்திய தேசிய காங்கிரசு கட்சி மற்றும் அதன் தொண்டர்கள் அடக்கப்பட்டனர்.

1932இல் சர்தார் வல்லபாய் படேலுடன் சிறையில் இருந்தபோது, காந்தியின் பார்வையில் பகவத் கீதை எனும் நூலை எழுதியினார். தேசாய் இறந்த பின் 1946இல் அந்நூல் வெளியிடப்பட்டது.[4] 1939இல் ராஜ்கோட் அரசு மற்றும் மைசூர் அரசு போன்ற சுதேச சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்கப் பாடுபட்டார். தேசாயின் தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தால், 1940 கைது செய்யப்பட்டார்.[5] 8 ஆகத்து 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டு சிறை சென்றார். 15 ஆகத்து 1942 அன்று தமது 51 அகவையில் மாரடைப்பால் ஆகா கான் அரண்மனையில் மறைந்தார்.[3][6]

மேற்கோள்கள்

  1. "Price of Freedom". Outlook. 15 August 2008. http://www.outlookindia.com/article.aspx?238154. பார்த்த நாள்: 30 November 2012.
  2. Guha, Ramachandra (23 October 2005). "Mahadev ..". The Hindu. http://www.hindu.com/mag/2005/10/23/stories/2005102300210300.htm. பார்த்த நாள்: 30 November 2012.
  3. "Associates of Mahatma Gandhi – Mahadev Desai". பார்த்த நாள் 30 November 2012.
  4. Brown, Judith M (2011). The Cambridge Companion to Gandhi. New York: Cambridge University Press. பக். 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521116701. https://books.google.com/?id=KLM8kMZZu-IC&pg=PA89&dq=mahadev+desai#v=onepage&q=mahadev%20desai&f=false.
  5. "Mahadev Desai – Timeline". பார்த்த நாள் 30 November 2012.
  6. "Who is Mahadev Desai ?". பார்த்த நாள் 30 November 2012.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.