மலாக்கா மாநகரம்
மலாக்கா மாநகரம் (ஆங்கிலம்:Malacca Historical City;மலாய்: Bandaraya Melaka) என்பது மலாக்கா மாநிலத்தின் தலைநகரமாகும். ஸ்ரீ நெகிரி என அழைக்கப்படும் மலாக்கா மாநிலத்தின் நிர்வாக மேம்பாட்டு மையம்; முதலமைச்சரின் பணிமனை; மாநில அரசாங்கச் செயலாளரின் பணிமனை; மாநிலச் சட்டசபை போன்றவை இங்கு உள்ளன.
மலாக்கா மாநகரம் Bandaraya Melaka Malacca Historical City | ||
---|---|---|
மலாக்கா மாநகரம் | ||
| ||
நாடு | மலேசியா | |
மாநிலம் | மலாக்கா | |
அமைந்தது | 1396 | |
மாநகரத் தகுதி | 2003 | |
அரசு | ||
• மேயர் | யூசோப் பின் ஜந்தான் | |
பரப்பளவு[1] | ||
• மொத்தம் | 304 | |
மக்கள்தொகை (2010) | ||
• மொத்தம் | 4,84,885 | |
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒசநே+8) | |
• கோடை (பசேநே) | பகலொளி சேமிப்பு நேரம் பார்க்கப்படவில்லை (ஒசநே) | |
இணையதளம் | www.mbmb.gov.my |
யுனெஸ்கோ நிறுவனம், 2008 ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி மலாக்காவை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்தது.[2] அதே திகதியில், பினாங்கு மாநிலத்தின் ஜோர்ஜ் டவுன் மாநகரமும் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.[3]
வரலாறு
மலாக்கா - ஜோர்ஜ் டவுன், மலாயா தொடுவாய்ப் பகுதிகளின் வரலாற்று நகரங்கள் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
![]() | |
வகை | கலாசாரம் |
ஒப்பளவு | ii, iii, iv |
உசாத்துணை | 1223 |
UNESCO region | ஆசியா - பசிபிக் வட்டாரம் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 2008 (32-ஆவது தொடர்) |
இப்போது மலாக்கா மாநகரம் அமைந்து இருக்கும் இடம்தான், முன்பு காலத்தில் மலாக்கா வரலாற்றின் மையமாக இருந்தது. அங்குதான் மலாக்கா சுல்தானகத்தின் தலைநகரமும் இருந்தது. 1511-ஆம் ஆண்டு, அந்த நகரத்தைப் போர்த்துக்கீசியர்கள் கைப்பற்றும் வரையில், தென்கிழக்காசியாவில் நுழைமுகத் துறைமுகமாக இருந்தது.
மலாக்கா சுல்தானகம் வீழ்ச்சியுற்ற பின்னர், சில நூறு ஆண்டுகளாக, போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரித்தானியர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். அவர்களுடைய ஆளுமையின் தாக்கங்களை இன்றும் மலாக்காவில் காண முடியும். அவர்கள் விட்டுச் சென்ற கலாசார பின்னணிகள், கட்டிட வடிவமைப்புகள் இன்னும் மலாக்கா மாநகரில் பிரதிபலிக்கின்றன.
மலாக்கா சுல்தானகம்
14-ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கில், மஜாபாகித்[4] பேரரசின் தலைமைத்துவத்தில் போராட்டம் ஏற்பட்ட கால கட்டம். அந்தக் கட்டத்தில் இருந்துதான் மலாக்காவின் வரலாறும் தொடங்குகிறது. மஜாபாகித் பேரரசின் தலைமைத்துவத்திற்கு நடந்த போராட்டத்தில், சுமத்திரா, பலேம்பாங்கைச் சேர்ந்த இளவரசர் பரமேஸ்வராவுக்கும் பங்கு உண்டு.[5]
அந்தத் தலைமைத்துவப் போராட்டத்தில் பரமேஸ்வரா தோற்கடிக்கப்பட்டதும், பாதுகாப்பு கோரி துமாசிக்கிற்குத் தப்பிச் சென்றார். துமாசிக் என்பது இப்போதைய சிங்கப்பூர். அந்தச் சமயத்தில் துமாசிக் நிலப்பகுதி, சியாம் (தாய்லாந்து) நாட்டின் அதிகாரக் கீழ்மையில் இருந்தது. அந்தக் கட்டத்தில் துமாசிக்கை ஆட்சி செய்த உள்ளூர் தலைவர் கொல்லப்பட்டார்.[6] அதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட பரமேஸ்வரா, துமாசிக்கின் ஆளுநராகத் தம்மைப் பிரகடனப் படுத்திக் கொண்டார்.
சியாம் படையெடுப்பு
இறுதிக் கட்டமாக 1391-இல், துமாசிக்கின் மீது சியாம் படையெடுத்து வந்தது.[7] அந்தப் படையெடுப்பில் பரமேஸ்வரா தோற்கடிக்கப் பட்டார்.[6] 1396-இல், அவர் மூவார் பகுதிக்குப் பின்வாங்கிச் சென்றார். மூவார் பகுதியில் பியாவாக் பூசோக் (அழுகிப் போன உடும்பு) எனும் ஓர் இடம் இருக்கிறது.[8] அதற்கு அருகாமையில் கோத்தா பூரோக் எனும் மற்றோர் இடமும் இருக்கிறது. [9][10]
இந்த இரு இடங்களில் ஏதாவது ஓர் இடத்தில் தன்னுடைய புதிய அரசை உருவாக்கலாம் என்று பரமேஸ்வரா தீர்மானித்தார். நன்கு ஆராய்ந்து பார்த்ததில் அந்த இடங்கள் இரண்டுமே பரமேஸ்வராவுக்குப் பிடிக்கவில்லை. ஒரு புதிய அரசு அமைக்கப் பொருத்தமாகவும் அமையவில்லை. ஆகவே அவர் தொடர்ந்து வட திசையை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார்.
செனிங் ஊஜோங்
அப்படி போய்க் கொண்டிருக்கும் போது செனிங் ஊஜோங் எனும் இடத்தை அடைந்தார். இந்தச் செனிங் ஊஜோங் இப்போது சுங்கை ஊஜோங் என்று அழைக்கப் படுகிறது. இந்த இடத்திலிருந்து, சற்று தள்ளி ஒரு மீன்பிடி கிராமம் தென்பட்டது. அந்தக் கிராமம் பெர்த்தாம் ஆற்றின் துறைமுகத்தில் இருந்தது. பெர்த்தாம் ஆறு இப்போது மலாக்கா ஆறு என்று அழைக்கப் படுகின்றது.[11][12] அந்த மீன்பிடி கிராமம்தான் இப்போதைய மலாக்கா மாநகரம் உருவான இடம்.[6]
மலாக்காவிற்குப் பெயர் வந்த வரலாறு
பரமேஸ்வரா ஒரு நாள் ஒரு மரத்தின் அடியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி, அவரை அதிர்ச்சி அடையச் செய்தது. அவருடன் இருந்த வேட்டை நாய்களில் ஒன்றை ஒரு சருகு மான் எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது.[13] சருகுமானின் துணிச்சலைக் கண்டு பரமேஸ்வரா பிரமித்துப் போனார்.
பலவீனமான ஒன்று வலிமையான ஒன்றை எதிர்கொள்வது நல்ல ஒரு சகுனம் என்று கருதினார். எனவே, அவர் ஓய்வு எடுத்த இடத்திலேயே ஒரு அரசை உருவாக்கலாமே எனும் ஓர் எண்ணம் எழுந்தது. அதன்படி மலாக்கா எனும் பேரரசு அதே இடத்தில் உருவானது.[6]
பரமேஸ்வரா சாய்ந்து ஓய்வு எடுத்த மரத்தின் பெயரும் மலாக்கா. அந்த மரத்தின் பெயரையே பரமேஸ்வரா அந்த இடத்திற்கும் வைத்து விட்டார். இதுதான் இப்போதைய மலாக்காவிற்குப் பெயர் வந்த வரலாறு.[14]
பரமேஸ்வராவின் சரியான முடிவு
பின்னர், முன்னதாக அங்கு வாழ்ந்த மீனவர்களையும், உள்ளூர் மக்களையும் பரமேஸ்வரா ஒன்றிணைத்தார். ஓர் ஒன்றுபட்ட குடியிருப்புப் பகுதியைத் தோற்றுவித்தார். அந்தக் கால கட்டத்தில் இந்தியா, இலங்கை, பாரசீக நாடுகளுக்கு வாணிகம் செய்யப் போகும் சீனக் கப்பல்கள் மலாக்கா நீரிணையைப் பயன் படுத்தி வந்தன. அந்தக் கப்பல்கள் மலாக்கா துறைமுகத்தில் அணைந்து போகும் வகையில், சில சிறப்பான சலுகைகள் வழங்கப்பட்டன. அதனால் நிறைய வணிகக் கப்பல்கள் மலாக்காவிற்கு வரத் தொடங்கின.
மிகக் குறுகிய காலத்தில், வணிகத் துறையில் மலாக்கா மேம்பாடு கண்டது. தென்கிழக்காசியாவில் ஒரு பிரசித்தி பெற்ற வணிக மையமாகவும் உருவெடுத்தது. பரமேஸ்வரா தன் உறைவிடமாக மலாக்காவைத் தேர்வு செய்தது மிகச் சரியான முடிவு என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.[15]
மலாக்கா சுல்தான்கள் | ஆட்சி காலம் |
---|---|
பரமேஸ்வரா எனும் இஸ்கந்தார் ஷா | |
சுல்தான் மேகாட் இஸ்கந்தார் ஷா | |
சுல்தான் முகமது ஷா | |
சுல்தான் அபு ஷாகித் | |
சுல்தான் முஷபர் ஷா | |
சுல்தான் மன்சூர் ஷா | |
சுல்தான் அலாவுடின் ரியாட் ஷா | |
சுல்தான் முகமட் ஷா |
ஐரோப்பியர்களின் வருகை
அல்பான்சோ டி அல்புகர்க் என்பவர், 1511 ஏப்ரல் மாதம், இந்தியா, கோவாவில் இருந்து மலாக்காவிற்கு வந்தார். 18 கப்பல்களில் 1200 போர் வீரர்களையும் கொண்டு வந்தார்.[16] மலாக்கா பேரரசின் மீது போர் புரிவதற்காக வந்தார். அவர் வந்ததற்கும் காரணங்கள் உள்ளன.
அல்பான்சோ டி அல்புகர்க் வருவதற்கு முன்னர், 1509-இல், லோபெஸ் டி செக்குயிரா எனும் போர்த்துகீசிய மாலுமி, மலாக்காவிற்கு வந்து இருந்தார். மலாக்காவிலும் மடகஸ்கார் தீவிலும் வணிகம் செய்யும் வாய்ப்புகளைத் தேடி டி செக்குயிரா மலாக்காவிற்கு வந்தார்.[17] போர்த்துகீசியர்கள் வியாபாரம் செய்யும் எண்ணத்துடன் தான் முதலில் மலாக்கா வந்தனர்.[17]
மலாக்கா மீது அல்புகர்க் படையெடுப்பு
அப்போது மலாக்காவின் சுல்தானாக மகமுட் ஷா இருந்தார். சுல்தானிடம் லோபெஸ் டி செக்குயிராவின் அணுகு முறை சரியாக அமையவில்லை. சுல்தான் மகமுட் ஷா கோபம் அடைந்தார். அதனால் லோபெஸ் டி செக்குயிராவைக் கொலை செய்ய சுல்தான் மகமுட் ஷா சூழ்ச்சி செய்தார். இதை லோபெஸ் டி செக்குயிரா ஒற்றர்கள் மூலமாகத் தெரிந்து கொண்டார்.
அதனால் இரவோடு இரவாக இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார். அந்தச் சூழ்ச்சியில் லோபெஸ் டி செக்குயிராவின் உதவியாளர்கள் சிலர் கொல்லப் பட்டனர். ஆகவே, பழி வாங்கும் திட்டத்துடன் தான் அல்பான்சோ டி அல்புகர்க்கு, மலாக்காவின் மீது படை எடுத்தார்.[18]
மலாக்கா கடல்கரையில் ஒரு பெரிய போர் நடந்தது. போர்த்துக்கீசியர்கள் துப்பாக்கி, பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். சுல்தான் மகமுட் ஷாவிடம் அத்தகைய ஆயுதங்கள் எதுவும் இல்லை. அந்தப் போரில் சுல்தான் மகமுட் ஷா தோல்வி அடைந்தார். பின்னர் அவர் தன்னுடைய விசுவாசிகளுடன் பகாங் காட்டிற்குள் சென்று மறைந்து கொண்டார்.[17]
மலாக்காவைக் கைப்பற்றிய போர்த்துகீசியர்கள் தங்கள் கவனத்தை வியாபாரத்தில் செலுத்தினர். மலாக்கா மக்களின் உள் விவகாரங்களில் போர்த்துகீசியர்கள் அதிகமாகத் தலையிடவில்லை.

டச்சுக்காரர்கள் ஆட்சி
1641-ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் மலாக்காவின் மீது படை எடுத்தனர். 130 ஆண்டுகள் போர்த்துகீசியர்களின் வசம் இருந்த மலாக்கா வீழ்ந்தது. இந்தத் தாக்குதலில் டச்சுக்காரர்களுக்கு ஜொகூர் சுல்தான் பெரிதும் உதவினார்.[19] 1798-ஆம் ஆண்டு வரை மலாக்காவின் வாணிகம் டச்சுக்காரர்களின் கைவசம் இருந்தது.
மலாக்காவை ஒரு வாணிக மையமாக உருவாக்க வேண்டும் என்பது டச்சுக்காரர்களின் நோக்கம் அல்ல. அவர்களுடைய பிரதான வாணிப இலக்குகள் இந்தோனேசியா பத்தேவியாவில் இருந்தன.1795 வரையில் டச்சுக்காரர்கள் மலாக்காவை ஆட்சி செய்தனர். ஐரோப்பாவில் பிரெஞ்சு புரட்சி நடைபெற்றது. அதனால் சில ஆண்டுகள் மலாக்கா ஆங்கிலேயர்களின் கைவசம் இருந்தது.
ஆங்கிலோ-டச்சு உடன்படிக்கை
டச்சுக்காரர்கள் மலாக்காவில் பல ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், பொது மண்டபங்களைக் கட்டி உள்ளனர். மலாக்காவின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்தாடைஸ் (Stadthuys) எனும் சிகப்புக் கட்டிடத்தைக் கட்டியவர்களும் டச்சுக்காரர்கள். மலாக்காவின் பிரதான சுற்றுலா மையமாக விளங்கும் மணிக்கூண்டு வளாகத்தில் சிகப்பு நிறக் கட்டிடங்கள் நிறைய உள்ளன. இவற்றைக் கட்டியவர்களும் டச்சுக்காரர்கள் தான்.[20]
1824-ஆம் ஆண்டு ஆங்கிலோ-டச்சு உடன்படிக்கை கையெழுத்தானது.[21] அந்த உடன்படிக்கையின் படி சுமத்திராவில் இருந்த பென்கூலன் டச்சுக்காரர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. மலாக்கா நகரம் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. ஆங்கிலேய வணிக நிறுவனமான பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி மலாக்காவை 1826 லிருந்து 1946 வரை நிர்வாகம் செய்தது.
அதன் பின்னர் மலாக்காவின் நிர்வாகம் ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியின் கீழ் வந்தது. 1946ல் தொடுவாய்க் குடியேற்றப் பகுதிகள் (Straits Settlements) உருவாகின.[22] இதில் சிங்கப்பூர், பினாங்கு பிரதேசங்களுடன் மலாக்காவும் இணைக்கப் பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மலாயன் யூனியன் எனும் ஐக்கிய மலாயா அமைப்பின் கீழ் மலாக்கா இணைக்கப் பட்டது.
தட்பபெப்ப நிலை
தட்பவெப்ப நிலைத் தகவல், மலாக்கா (1961–1990) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 31.4 (88.5) |
32.6 (90.7) |
32.6 (90.7) |
32.4 (90.3) |
31.8 (89.2) |
31.4 (88.5) |
31.0 (87.8) |
30.9 (87.6) |
31.0 (87.8) |
31.3 (88.3) |
31.0 (87.8) |
30.9 (87.6) |
31.5 (88.7) |
தாழ் சராசரி °C (°F) | 22.5 (72.5) |
22.9 (73.2) |
23.1 (73.6) |
23.4 (74.1) |
23.4 (74.1) |
23.0 (73.4) |
22.7 (72.9) |
22.7 (72.9) |
22.7 (72.9) |
22.9 (73.2) |
22.9 (73.2) |
22.6 (72.7) |
22.9 (73.2) |
மழைப்பொழிவுmm (inches) | 73.3 (2.886) |
90.9 (3.579) |
144.1 (5.673) |
197.5 (7.776) |
172.0 (6.772) |
165.8 (6.528) |
164.2 (6.465) |
164.1 (6.461) |
210.2 (8.276) |
212.9 (8.382) |
231.5 (9.114) |
123.8 (4.874) |
1,950.3 (76.783) |
சராசரி மழை நாட்கள் (≥ 1.0 mm) | 7 | 7 | 10 | 13 | 12 | 10 | 12 | 12 | 13 | 14 | 17 | 11 | 138 |
சூரியஒளி நேரம் | 193.0 | 202.5 | 214.8 | 207.5 | 210.5 | 193.9 | 201.3 | 191.2 | 171.5 | 179.6 | 156.9 | 166.8 | 2,289.5 |
ஆதாரம்: NOAA[23] |
படத்தொகுப்பு
- வரலாற்று மலாக்கா மாநகராண்மைக் கழகம்
- மலாக்கா கடற்கரை பள்ளிவாசல்
- ஜோங்கர் சாலை
- இப்போதைய மலாக்கா
- மலாக்கா கடல்சார் காட்சியகம்
- ஸ்ரீ பொய்யாத விநாயகர் ஆலயம்
- மலாக்கா ஆறு
- மலாக்கா ஆற்றோர நடைபாதை
- மலாக்கா ஆற்றோர இரவுக் காட்சி
- சீன இளவரசி ஹங் லீ போ கிணறு
- மலாக்கா நகரத்தார் தெரு
- மலாக்கா போர்வீரர்கள் கோபுரம்
- மலாக்கா பா ஆன் கோங் சீனர் ஆலயம்
- மலாக்கா டச்சுகாரர்கள் கல்லறை
மேற்கோள்கள்
- Melaka State Government – About Melaka: Melaka Basic Data
- On 7 July 2008, Melaka was declared a World Heritage City by UNESCO.
- Eight new sites, from the Straits of Malacca, to Papua New Guinea and San Marino, added to UNESCO’s World Heritage List. Retrieved 15 January 2015.
- Majapahit was also the last of the great Hindu empires of the Malay archipelago. It was preceded by the Malay Sri Wijaya Empire, based in Palembang on the island of Sumatra.
- Trowulan - Former Capital City of Majapahit Kingdom.
- Parameswara was out hunting at a place called Bertam.
- Parameswara was forced to flee Palembang in either 1390 or 1391 and then usurped control of Singapura before being forced out again around 1395 or 1396.
- At Muar, Parameswara considered siting his new kingdom at either Biawak Busuk or at Kota Buruk.
- Parameswara was out hunting at a place called Bertam.
- During a hunt near the mouth of a river called Bertam, he saw a white mouse-deer kick one of his hunting dogs.
- Parameswara was out hunting at a place called Bertam.
- During a hunt near the mouth of a river called Bertam, he saw a white mouse-deer kick one of his hunting dogs.
- Origin of Malacca
- Parameswara named his stopover place as Melaka, named after a tree at the bank of the river estuary which was shelter for Parameswara.
- Parameswara consciously selected his site with great care. After a time of searching, he finally found an ideal harbour.
- Ricklefs, M.C. (1991). A History of Modern Indonesia Since c.1300, 2nd Edition. London: MacMillan. பக். 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-333-57689-6.
- Ricklefs, M.C. (1991). A History of Modern Indonesia Since c.1300, 2nd Edition. London: MacMillan. பக். 23–24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-333-57689-6.
- Power Over Peoples: Technology, Environments, and Western Imperialism, 1400 to the present, Daniel R. Headrick, page 63, 2010
- Borschberg, P. (2010). The Singapore and Melaka Straits. Violence, Security and Diplomacy in the 17th century. Singapore: NUS Press. பக். 157–158. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9971-69-464-7.
- Dutch Square Malacca is the most picturesque along Jalan Kota. It's also a colourfull trishaw pickup point, it is distinguished by a group of bright, terracotta-red colonial Dutch buildings.
- The Dutch traded Malacca with the British for Bencoolen, Sumatra. In 1824, the Dutch signed a treaty which surrendered to the British their possessions on the Malay Peninsula.
- The Straits Settlement, "a British colony which comprises Singapore, Penang, and Malacca, on the Strait of Malacca.
- "Malacca Climate Normals 1961–1990". National Oceanic and Atmospheric Administration. பார்த்த நாள் 15 ஜனவரி 2015.
வெளி இணைப்புகள்
- De Witt, Dennis (2010). Melaka from the Top. Malaysia: Nutmeg Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-983-43519-2-2.
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Malacca- Malacca Tourist Attraction