அலோர் காஜா

அலோர் காஜா (மலாய்: Alor Gajah, சீனம்: 亚罗牙也), மலேசியா, மலாக்கா மாநிலத்தின் அலோர் காஜா மாவட்டத்தின் தலை பட்டணம் ஆகும். மலாக்காவில் இருந்து 26 கி.மீ. தொலைவிலும், ஜாசின் நகரில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அதிகமான போக்குவரத்து நெரிசல் இல்லாத ஓர் அமைதியான நகரம்.

அலோர் காஜா
Alor Gajah
நாடு மலேசியா
மாநிலம் மலாக்கா
உருவாக்கம்1832
அரசு
  மாவட்ட அதிகாரிஹாஜி ஹாசிம் பின் இஸ்மாயில் (Haji Hassim bin Ismail)
பரப்பளவு
  மொத்தம்660
மக்கள்தொகை (2010)
  மொத்தம்1,66,600
நேர வலயம்MST (ஒசநே+8)
  கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
இணையதளம்http://www.mpag.gov.my/

மலாக்கா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் அலோர் காஜா மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தை அலோர் காஜா என்றே அழைக்கிறார்கள். மாவட்டத்திற்கும் அதன் தலைநகரத்திற்கும் ஒரே பெயர்தான். மலாக்கா மாநிலத்தின் வேறு மாவட்டங்கள்: மலாக்கா தெங்ஙா மாவட்டம், ஜாசின் மாவட்டம். அலோர் காஜா மாவட்டத்தின் நிர்வாக அலுவலகங்கள் அனைத்தும் அலோர் காஜா நகரில் உள்ளன.

Alor என்றால் நீர்ப்பாதை. Gajah என்றால் யானை. முன்பு காலத்தில் யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தன. அந்த யானைகளுக்கு ஒரு வெள்ளை யானை தலைமை யானையாக இருந்தது. அந்த யானைகள் ஒரே ஒரு பாதையைப் பயன்படுத்தின. அந்தப் பாதை சேறும் சகதியுமாக இருந்ததால், அந்த இடத்திற்கு அலோர் காஜா என்று பெயர் வைக்கப்பட்டது..[1]

வரலாறு

1400களில் மலாக்கா பேரரசு உருவாக்கப்பட்டத்தும், அங்கு வாழ்ந்த மினாங்கபாவ் மக்கள், தம்பின் பகுதிக்கு குடி பெயர்ந்தனர். அவர்களில் சிலர் அலோர் காஜாவில் தங்கி, அங்கு ஒரு புதிய நிர்வாகத்தைத் தோற்றுவித்தார்கள். இந்தப் பகுதியில், முன்பு காலத்தில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிந்தன. அலோ காஜாவில் இருந்த ஓர் ஆற்றுப் பாதையை அந்த யானைகள் அடிக்கடிப் பயன்படுத்தி வந்தன. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் அந்த இடத்திற்கு அலோ காஜா எனும் பெயர் சூட்டப்பட்டது.

நானிங் கிளர்ச்சி

1831இல் பிரித்தானியர்களின் ஆட்சியை எதிர்த்து டத்தோ டோல் சாயிட் என்பவர் கிளர்ச்சி செய்தார். அந்த நிகழ்ச்சிக்கு ’நானிங் கிளர்ச்சி’ என்று பெயர். [2] அப்போது அலோர் காஜாவில் இருந்த நானிங் கிராமத்தின் தலைவராக டோல் சாயிட் இருந்தார்.

1829ஆம் ஆண்டில் நானிங் பகுதியில் வாழ்ந்த கிராமவாசிகளிடம், அதிகமான வரியைப் பிரித்தானியர்கள் வசூல் செய்தனர். அவர்கள் உற்பத்தி செய்த விவசாயப் பொருட்களுக்கு 10 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது. அப்போது மலாக்காவின் ஆளுநராக புல்லர்டன் என்பவர் இருந்தார். ஏற்கனவே, உற்பத்தி வரிகள் அமலில் இருந்தாலும், புதிய வரிகள் மக்களிடையே பரவலான அதிருப்தியை ஏற்படுத்தின. அத்துடன் மலாய் அரசர்களையும் பிரித்தானியர்கள் ஒரு பொருட்டாகக் கருதவில்லை.[3].

பிரித்தானியர்களின் தோல்வி

இந்த இரு காரணங்கள்தான் நானிங் கிளர்ச்சிக்கு மூலகாரணங்களாய் அமைந்தன. 1770களில் நானிங் மக்கள் டச்சுக்காரர்களை எதிர்த்து ஆயுதங்களை ஏந்தியுள்ளனர். ஆகவே, நானிங் மக்களை எதிர்த்துப் போக வேண்டாம் என்று பிரித்தானியர்களுக்கு டச்சுக்காரர்கள் ஆலோசனையும் வழங்கியுள்ளனர்.[4] இருந்தாலும் நானிங் மக்களை எதிர்த்து பிரித்தானியர்கள் 150 வீரர்களை அனுப்பி வைத்தனர். கேப்டன் வில்லி என்பவர் தலைமை தாங்கினார்.[5]

நானிங் மக்கள் ஒன்றுகூடி சண்டை போட்டனர். அதில் அந்த 40 பிரித்தானியர்கள் இறந்து போயினர். சினம் அடைந்த மலாக்காவின் பிரித்தானிய அரசாங்கம் 1200 பேர் கொண்ட ஒரு பீரங்கிப்படையை அனுப்பி வைத்தது. ஐந்து மாதங்கள் கடுமையான சண்டை நடைபெற்றது. இறுதியில் நானிங் வீழ்ச்சி அடைந்தது. டத்தோ டோல் சாயிட் தப்பித்துச் சென்றார். 1849இல் வயது மூப்பின் காரணமாக டோல் சாயிட் இறந்து போனார். அவருடைய கல்லறை தாபோ நானிங் பள்ளிவாசலுக்கு அருகில் இருக்கிறது. பிரித்தானியர்களுக்கு ஏற்பட்ட இந்தத் தோல்வி, வர்களின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகக் கருதப் படுகிறது.[6]

மக்கள் தொகை

வருட வாரியாக

  • 1980 : 113,083 பேர்
  • 1991 : 116,653 பேர்
  • 2000 : 132,317 பேர்
  • 2010 : 166,600 பேர்

ஆண்கள் பெண்கள்

  • ஆண்கள் : 81,246
  • பெண்கள் : 85,454

இனவாரியாக

2000ஆம் ஆண்டு புள்ளி விவரங்கள்

  • மலாய்க்காரர்கள் : 95,451
  • மற்ற பூமிபுத்ராக்கள் : 902
  • சீனர்கள் : 20,758
  • இந்தியர்கள் : 11,389
  • பிற இனத்தவர்: 215
  • மலேசியர் அல்லாதவர்: 3,602

உயர்க்கல்வி

  1. மலேசிய மலாக்கா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
  2. மாரா அலோர் காஜா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
  3. மலாக்கா மெட்ரிகுலேசன் கல்லூரி
  4. மலாக்கா இஸ்லாமியப் பல்கலைக்கழகம்
  5. அலோர் காஜா சமூகக் கல்லூரி


மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.