பகாங்

பகாங், (மலாய்:Pahang), மலேசியத் தீபகற்கத்தின் கிழக்கே உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். இந்த மாநிலத்தின் வடக்கே கிளாந்தான் மாநிலம் உள்ளது. பகாங் மாநிலத்திற்கு வட மேற்கே பேராக் மாநிலம் உள்ளது. மேற்கே சிலாங்கூர் மாநிலம் உள்ளது. தெற்கே ஜொகூர் மாநிலமும் மேற்கே தென் சீனக் கடலும் அமைந்து உள்ளன. பகாங் மாநிலம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றது.

பகாங்
Pahang

ڨهڠ دار المعمور
மாநிலம்
பகாங் டாருல் மக்மூர்
Perak Darul Makmur

கொடி

சின்னம்
பண்:
Allah Selamatkan Sultan Kami
எங்கள் மன்னருக்கு இறைவன் அருள்புரிவாராக

பகாங்கின் அமைவிடம்
தலைநகர்குவாந்தான்
அரசு
  ஆளும் கட்சிதேசிய முன்னணி
  சுல்தான்சுல்தான் அமாட் ஷா[1]
  மந்திரி பெசார்
(முதலமைச்சர்)
அட்னான் யாகோப்
பரப்பளவு
  மொத்தம்36,137
மக்கள்தொகை (2010 மதிப்பீடு[2])
  மொத்தம்15,74,259
  அடர்த்தி43.77
மனித வளர்ச்சிக் குறியீடு
  HDI (2010)0.790 (நடு)
அஞ்சல் குறியீடு25xxx to 28xxx
தொலைபேசிக் குறியீடு09 (பகாங் மாநிலம்)
05 (கேமரன் மலை)
03 (கெந்திங் மலை)[3]
வாகனப் பதிவுC
மலாயா கூட்டரசு1895
ஜப்பானியர் ஆட்சி1942
மலாயா கூட்டமைப்பு1948
இணையதளம்http://www.pahang.gov.my/

பகாங் மாநிலம் 11 மாவட்டங்களைக் கொண்டது. குவாந்தான் நகரைத் தலைநகராகவும் பெக்கான்னை அரச நகராகவும் கொண்டது. இந்த மாநிலம் மலேசியாவின் பல முக்கிய சுற்றுலாத் தளங்களை உள்ளடக்கி உள்ளது. அவற்றில் கேமரன் மலை, கெந்திங் மலை, பிரேசர் மலை, புக்கிட் திங்கி போன்றவை அடங்கும். பகாங் மாநிலத்தில் ரவுப் மாவட்டம் முன்பு தங்கத்திற்குப் பெயர் பெற்றது. இப்போது அங்கே தங்கம் தோண்டி எடுக்கப்படவில்லை.

சொல்லியல்

தெலுக் செம்பாடாக் கடல்கரை.
குவாந்தான் அரச பள்ளிவாசல்.
குவாந்தான் நகரின் பிரதான சாலை.
கெந்திங் மலை சுற்றுலா மையம்.
கெந்திங் மலை தொங்கூர்தி.
கேமரன்மலை தேயிலை தோட்டங்கள்.
பிரேசர்மலை மணிக்கூண்டு.
குனோங் தகான் மலை.
பகாங் சினி ஏரி.
அழகுமிக்க தியோமான் தீவு.

சீனர்கள் பகாங் எனும் சொல்லை Phang அல்லது Pahangh என்று அழைக்கின்றனர். அரபு வணிகர்களும் ஐரோப்பிய வணிகர்களும் பகாங்கை Paon, Phamm, Paham, Fanhan என்று பல்வேறான சொற்களில் அழைத்தனர். வரலாற்று நூல்களில் Panghang அல்லது Fanjab என்றும் அழைக்கப்பட்ட சான்றுகள் உள்ளன.[4]

ஆனால், பகாங் எனும் சொல் ஒரு சயாமிய சொல்லில் இருந்து வந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சயாமிய மொழியில் பகாங் என்றால் ஈயக் கனிமம் என்று பொருள்படும். முன்பு காலத்தில் சயாமிய பூர்வீகக் குடியினர் இங்கு குடியேறி, சில கனிமப் பகுதிகளைத் திறந்தனர்.[5] பகாங் ஆற்றில் ஒரு பெரிய மகாங் மரம் விழுந்ததால், பகாங் எனும் பெயர் வந்திருக்கலாம் என்று ஒரு மலாய்ப் புரதானக் கதையும் புழக்கத்தில் உள்ளது.[6]

வரலாறு

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பகாங் காடுகளில் உள்ள குகைகளில், நாடோடி மக்கள் வாழ்ந்ததற்கான வரலாற்றுப் படிவங்கள் கிடைத்து உள்ளன. பகாங் மாநிலத்தில் தெம்பிலிங் (மலாய்:Tembeling) எனும் ஆறு இருக்கிறது. இந்த ஆற்றில் ஈயம், தங்க உலோகத் தாதுகள் கிடைத்தன. அந்த உலோகங்கள் வெளிநாட்டு வணிகர்களைக் கவர்ந்தன.[7]

கி.பி.8ஆம், 9ஆம் நூற்றாண்டுகளில் இந்தோனேசியாவை ஆண்டு வந்த ஸ்ரீவிஜயா பேரரசில் இருந்து வணிகர்கள் பகாங்கிற்கு வந்துள்ளனர். அந்த உலோகங்களை வாங்கிச் சென்று வியாபாரம் செய்து வந்தனர். ஒரு காலகட்டத்தில், தீபகற்ப மலேசியத் தென் பகுதியின் பாதி நிலப்பகுதி, பகாங் மாநிலத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது.

பகாங்கின் பழைய பெயர் இந்திராபுரம். அதன் தலைநகரமாகவும் அரச நகரமாகவும் பெக்கான் நகரம் விளங்கியது. இன்றும் பெக்கான் நகரம் பகாங் மாநிலத்தின் அரச நகரமாக விளங்கி வருகிறது.[8]

ஸ்ரீவிஜயா பேரரசு

கி.பி.1000 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீவிஜயா பேரரசு சிதைந்து போனதும், சுமத்திராவைச் சேர்ந்த மஜாபாகித் இந்து அரசு, பகாங் அரசை ஆட்சி செய்தது. அதன் பின்னர், சயாமிய அரசு, மலாக்கா அரசு போன்றவை பகாங்கை ஆட்சி செய்தன.

16 ஆம் நூற்றாண்டுகளில் பகாங்கைக் கைப்பற்ற ஜொகூர் அரசு, அச்சே அரசு போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள் போன்றவர்கள் கைகலப்பு அல்லது கடும் சண்டைகளில் இறங்கியுள்ளனர். அந்தக் காலகட்டங்களில் பகாங்கில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர் அல்லது அடிமைகளாக ஆக்கப்பட்டனர். அதனால், பகாங்கின் பொருளாதாரம் மோசமாகப் பாதிப்பு அடைந்தது.

அச்சே அரசு சிதைவு

17ஆம் நூற்றாண்டில் அச்சே அரசு சிதைவுற்றதும் பகாங் மாநிலம் ஜொகூர் ஆட்சியின் கீழ் வந்தது.[9] அதன் பின்னர், மலாக்கா அரசையும் ஜொகூர் அரசையும் சார்ந்த அரச பரம்பரையினர் பகாங்கை தொடர்ந்து ஆட்சி செய்து வந்துள்ளனர். 1887-இல் பிரித்தானியர்கள் பகாங்கின் ஆட்சியில் தலையிட்டு, அங்கே பிரித்தானிய ஆளுநரை நியமனம் செய்தனர்.[10]

1896-இல் மலாயா கூட்டமைப்பில் இணைந்தது. அந்த அமைப்பில், ஏற்கனவே சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான் மாநிலங்கள் இடம் பெற்று இருந்தன. பின்னர் 1948-இல் மலாயா கூட்டரசில் இணைந்து, 1957-இல் சுதந்திரம் அடைந்தது. 1963-இல் மலேசியாவில் உறுப்பியம் பெற்றது.

புவியியல்

இயற்கைப் புவியியலின்படி பகாங் மாநிலத்தை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

அவை:

  • உயர்நிலங்கள்
  • மழைக்காடுகள்
  • கடல்கரைப் பகுதிகள்

உயர்நிலங்கள்

தீபகற்ப மலேசியாவை மத்திய மலைத் தொடர் இரு பிரிவுகளாகப் பிரிக்கின்றது. பெரும்பாலான நிலப்பகுதிகள் மழைக்காடுகளால் ஆனவை. இந்தக் காடுகளில் பெரும்பகுதியான மரங்கள் இலையுதிர்க்கும் தன்மை கொண்டவை. பெரணிகளையும் (Ferns) அதிகமாகக் காண முடியும். மழைக்காடுகளில் நீர் நயப்பும் மூடுபனியும் அதிகமாக இருக்கும்.

கேமரன் மலை

பகாங் மாநிலத்தின் மேற்கு எல்லையில் கேமரன் மலை உள்ளது. இது ஒரு சுகமான சுற்றுலாத் தளம் ஆகும். வருடம் முழுமையும் குளிராகவே இருக்கும். இங்கே நிறைய தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான காய்கறித் தோட்டங்களும் உள்ளன. தமிழர்களும் கணிசமான அளவிற்கு விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கு பயிர் செய்யப்படும் அவரையின காய்கறிகள், பட்டாணி வகைகள், மொச்சை வகைகள் மலேசியாவின் பிறபகுதிகளுக்கும் சிங்கப்பூருக்கும் ஏற்றுமதி செய்யப் படுகின்றன.

கேமரன் மலையின் நாடாளுமன்ற உறுப்பினராக, டத்தோ எஸ்.கே.தேவமணி[11] எனும் ஒரு தமிழர், மலேசிய மக்களவையில் இடம் பெற்றுள்ளார். இவர் பிரதமர் துறையில் ஒரு துணையமைச்சராகவும் சேவை செய்து வருகின்றார். கேமரன் மலையை, “மேல் காடு” என்றும் கோலாலம்பூர், ஈப்போ போன்ற தாழ்நிலை பகுதிகளைக் “கீழ்காடு” என்றும் இங்குள்ள மக்கள் வழக்கமாக அழைக்கின்றனர்.

1500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த மலைக்கு, 1885 ஆம் ஆண்டு வில்லியம் கேமரன் என்ற பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரியின் நினைவாக “கேமரன் மலை” அல்லது “கேமரன் ஹைலண்ஸ்” பெயர் சூட்டப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், அவர்களின் ஓய்வுத்தலமாக அமைந்த இந்த கேமரன் மலை 1925-ஆண்டுக்குப் பிறகே இந்த விவசாயத்தில் பிரசித்தி பெற தொடங்கியது. விவசாயம், சேவைத் துறை போன்ற துறைகளை மையமாகக் கொண்டு செயல்படும் மக்கள் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளையே பெரும்பாலும் எதிர்பார்த்து வியாபாரம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு விவசாயம் செய்வோர் விளைச்சலை அன்றாட சந்தையில் விற்கின்றனர். இங்குள்ள காய்கறிகளை வாங்க பெரும்பாலும் பேராக், ஈப்போவிலிருந்து வாரத்திற்கு ஒருமுறை வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.

சுற்றுலாப்பயணிகள் வரவு அதிகமாக இருந்தாலும் பெரும்பாலும் அன்றாட வேலைகளுக்குச் செல்லும் மக்களை எதிர்ப்பார்த்து இங்கு வியாபாரம் நடக்கின்றது.

ஜூன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையில் மேல் நாட்டு சுற்றுபயணிகள் அதிகம் இங்கு வருவதோடு ஆண்டு இறுதியில், உள்ளூர் சுற்றுப்பயணிகளின் விருப்பமான இடமாகவும் கேமரன் மலை திகழ்கின்றது.

கெந்திங் மலை

கெந்திங் மலை என்பது ஒரு பொழுது போக்கு மையம். மலேசியாவின் ஒரே ஒரு சூதாட்டக் கேளிக்கை விடுதி இங்குதான் உள்ளது. கெந்திங் மலையில் பல தங்கும் விடுதிகள் உள்ளன. பல கேளிக்கை விடுதிகள் உள்ளன. பல வணிக நோக்குடைய பூங்காக்களும் உள்ளன.

கெந்திங் மலை பொழுது போக்கு மையத்தை உருவாக்கியவர் லிம் கோ தோங் (Lim Goh Tong) [12] என்பவர். இவர் சீனா நாட்டில் 1918ஆம் ஆண்டு பிறந்தவர். தன்னுடைய 19ஆவது வயதில் பிழைப்பதற்காக மலாயா (மலேசியா) வந்தார். தொடக்கக் காலங்களில் பல கடினமான வேலைகளைச் செய்தார். வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட்டு, படிப்படியாக முன்னேறினார். சிக்கனம் சேமிப்பு எனும் வாசகத்தை மந்திரக் கோலாகப் பயன்படுத்தினார்.

மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரர்

இறுதியில், மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக வாழ்க்கையில் உயர்ந்தார். ஒரு கட்டத்தில் இவர் மலேசியாவில் இரண்டாவது பெரிய பணக்காரராகவும் வாகை சூடினார்.[13] இவர் 2007ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.

கெந்திங் மலை பொழுது போக்கு மையத்தை உருவாக்கிய இவர், பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளார். இங்குள்ள சூதாட்டக் கேளிக்கை விடுதியில் 110 தமிழர்கள் உயர்மட்ட சேவைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பிரேசர் மலை

பிரேசர் மலை (மலாய்: Bukit Fraser) என்பது ஓர் உல்லாச பொழுது போக்கு இடம். தித்திவாங்சா மலைத் தொடரில் அமைந்து உள்ளது. இந்த இடம் ஒரு மாசற்ற, தூய்மையான காட்டுப் பகுதி ஆகும். லூயிஸ் ஜேம்ஸ் பிரேசர் (Louis James Fraser) எனும் ஸ்காட்லாந்துகாரர் 1890ஆம் ஆண்டுகளில் கண்டுபிடித்தார்.[14]

பிரித்தானியர்கள் கோடை கால வெப்பத்தைத் தவிர்க்க இங்கு வந்து தங்கினர். நாளடைவில் இந்த இடம் ஓர் உல்லாச மையமாக மாறியது. 1951 ஆம் ஆண்டு மலாயா அவசரகாலத்தின் போது, சர் ஹென்றி கர்னி எனும் மலாயா உயர் ஆணையர், கம்யூனிஸ்டு பயங்கரவாதிகளால் இங்கு சுட்டுக் கொல்லப்பட்டார்.[15]

1970ஆம் ஆண்டுகளில் பல குழிப்பந்தாட்டத் திடல்கள் உருவாக்கப்பட்டன. புதுக் கட்டடங்கள் கட்டப்பட்டன. பிரேசர் மலையின் இயற்கை அழகு சிதையத் தொடங்கியது. இதை அறிந்த பகாங் மாநில அரசு, 2010ஆம் ஆண்டில் பிரேசர் மலையில் இனி எதிர்காலத்தில் எந்த ஒரு நிலையான கட்டடமும் உருவாக்கப்படக் கூடாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மழைக்காடுகள்

பகாங் மாநிலத்தின் வடக்கே மலேசியாவின் மிகப்பெரிய தேசியப் பூங்காவான தாமான் நெகாரா உள்ளது (Taman Negara National Park). அழிந்து போகும் கட்டத்தில் இருக்கும் பல அரிய வனவிலங்குகள் இங்கு பாதுகாக்கப் படுகின்றன. தாப்பிர், சருகு மான், புலிகள், சிறுத்தைப் புலிகள் போன்ற விலங்குகளுக்கு இந்தத் தேசியப் பூங்கா ஒரு காப்பகமாக விளங்கி வருகிறது.

தாமான் நெகாரா தேசியப் பூங்கா

தீபகற்ப மலேசியாவின் மிக உயர்ந்த மலையான குனோங் தகான் இங்குதான் உள்ளது. தவிர, உலகிலேயே மிகப் பழமையான காடுகளில் ஒன்றாகத் தாமான் நெகாரா தேசியப் பூங்கா திகழ்கின்றது. ஏறக்குறைய 130 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றும் சொல்லப்படுகிறது.

ஏரிகள்

பகாங்கில் இரு புகழ்பெற்ற ஏரிகள் உள்ளன. அவை பெரா ஏரி. இது ஆகப் பெரிய ஏரி. பெரா ஏரி (Tasik Bera) 35 கி.மீ. நீளம், 20 கி.மீ. அகலம் கொண்டது. இது ஒரு நன்னீர் ஏரி. செமாலாய் எனும் மலேசியப் பூர்வீகக் குடிமக்கள் இந்த ஏரியைச் சுற்றிலும் குடில்களை அமைத்து வாழ்கின்றனர்.

இயற்கைப் பின்னணியைத் தங்களின் பாரம்பரிய வாழ்க்கை முறைக்கு ஏற்ப அமைத்துக் கொள்கின்றனர். இவர்கள் வேட்டையாடுதல், மீன்பிடித்தல் போன்ற சுய தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சினி ஏரி

சினி ஏரி (Tasik Cini) மலேசியாவில் இரண்டாவது பெரிய ஏரி. 5026 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு மொத்தம் 12 துணை ஏரிகள் உள்ளன. இந்த ஏரியில் இருந்து பிரியும் சினி ஆறு, ஏரியின் நீரை பகாங் ஆற்றுக்குக் கொண்டு செல்கிறது.

அதனால் கோடை காலங்களில் நீர் வற்றிப் போகும் சூழ்நிலைகளும் ஏற்படுகின்றன. ஏரியின் கரையோரங்களில் உள்ள மரங்கள் அழிந்து வருகின்றன. அத்துடன் இ-கோலி எனும் நுண்கிருமிகள் இந்த ஏரியின் நீருக்கு தூய்மைக்கேட்டை உண்டாக்கி வருகின்றன.

சினி ஏரியின் சுற்று மருங்கில் ‘சக்காய்’ எனும் பூர்வீகக் குடிமக்களில் 400 பேர் வாழ்ந்து வருகின்றனர். ஏரியின் நீரைப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர்களுக்கு அரசாங்கம் அறிவுரை சொல்லி வருகிறது.[16]

கடல்கரைப் பகுதிகள்

பெரும்பாலும் மலைகள், குன்றுகளால் சூழப்பட்ட பகாங் மாநிலத்தில் கடல்கரை ஓரங்களில் பச்சை பசேல் சமவெளிகளைக் காண முடியும். பகாங் மாநிலத்தின் தலைநகரான குவாந்தான், கடல்கரையோரத்தில் தான் அமைந்துள்ளது. கடல்கரைக்கு அப்பால் சில பவளத் தீவுகளும் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது புலாவ் தியோமான் (Pulau Tioman) எனும் தீவாகும்.[17]

கடல்கரை ஓரங்களில் வாழ்பவர்கள் பெரும்பாலும் மீனவர்களாக இருக்கின்றனர். இவர்கள் மீன்களைக் காய வைத்து கருவாடு செய்து வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இங்கு கிடைக்கும் keropok lekor எனும் ஒரு வகையான கருவாட்டு அடை மலேசியாவில் மிகவும் புகழ்பெற்றதாகும்

அரசியல்

1959 பிப்ரவரி மாதம் 26-இல் பகாங் மாநில அரசியலமைப்பு அமலுக்கு வந்தது. பகாங் அரசமைப்புக்குட்பட்ட முடியரசு என பிரகடனம் செய்யப்பட்டது. பகாங் சுல்தான் அரசமைப்புக்குட்பட்ட ஆளுநர் என்றும் அவர் இயற்கை எய்தும் வரை பதவியில் இருப்பார் என்றும் உறுதிபடுத்தப்பட்டது. அவர் நீதித்துறைக்கு தலைவராகவும் அரசு நிர்வாகத்தின் தலைவராகவும் இருப்பார்.

1974ஆம் ஆண்டில் இருந்து சுல்தான் ஹாஜி அகமட் ஷாவின் வழிமுறையில் வந்தவர்கள் ஆட்சி பீடத்தில் இருக்கின்றனர். 1959ஆம் ஆண்டு செயலாட்சி மன்றம் அமைக்கப்பட்டது. அந்த மன்றத்தின் தலைவராக முதலமைச்சர் இருக்கிறார்.

மேலும் பதின்மர் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக உள்ளனர். இப்போதைய முதலமைச்சராக டத்தோ ஸ்ரீ அட்னான் யாக்கோப் இருக்கிறார்.

பகாங் மாநிலத்தின் மாவட்டங்கள்

பகாங் மாநிலத்தில் மொத்தம் 11 மாவட்டங்கள் உள்ளன. அவை கீழ் வருமாறு:-

குவாந்தான்

தெமர்லோ

பெக்கான்

ரொம்பின்

பெந்தோங்

மாரான்

ரவுப்

ஜெராண்டுட்

லிப்பீஸ்

கேமரன் மலை

பெரா

மேற்கோள்கள்

  1. His Royal Highness the Sultan of Pahang is endowed with traits of a loving father and head of the family.
  2. "Laporan Kiraan Permulaan 2010". Jabatan Perangkaan Malaysia - மலேசிய புள்ளிவிவர மையம் - மக்கள்தொகை. பார்த்த நாள் 2012-01-01.
  3. "Laporan Kiraan Permulaan 2010". Jabatan Perangkaan Malaysia மலேசிய புள்ளிவிவர மையம் - இடக் குறியீடுகள். பார்த்த நாள் 2012-01-01.
  4. The ancient Arabs and the Europeans also called it in various names such as Pam, Pan, Phang, Paan, Pao, Paon, Phaan, Paham, Fanhan, Phang and Pahagh.
  5. There are also others who strongly suggested that the word Pahang originated from a Siamese word, meaning tin ore. The traditional Siamese used to live here and opened up a lot of tin mines especially around the Lembing River area.
  6. According to the ancient Malays, once upon a time in a place by the Pahang River which was directly located opposite Kamebahang village, a huge Mahang tree fell across the river. The legends have it that the fallen mahang tree had been the source of the name Pahang Darul Makmur state is today.
  7. The proto-malays occupied the Peninsular including Pahang and the Asian islands between 3,000 or 2,000 B.C.
  8. Kuantan is the administrative capital of the state of Pahang. Pekan is its royal capital. .
  9. With the collapse of Srivijaya around 1000, Pahang was claimed first by the Siamese and then, in the late fifteenth century, by Melaka. After Melaka fell to the Portuguese in 1511, Pahang became a key part of the territorial struggles between Acheh, Johor, the Portuguese, and the Dutch.
  10. The English came over and established their hegemony over Pahang in the late 19th century. J.P.Rodger was appointed as the first Resident in October 1888.
  11. YB Dato' Devamany A/L S. Krishnasamy.
  12. Lim Goh Tong was a prominent wealthy Malaysian Chinese businessman. He was renowned for his vision and courage in transforming Genting Highlands from an unexplored hilltop into one of the world's most successful casino resorts.
  13. Net worth from Forbes: The World's Richest People, dated March 6, 2007. He died on 23rd of October 2007.
  14. The location is one of Malaysia's few pristine forests, with a high level of biodiversity, first recognised by the botanist H. N. Ridley in 1897.
  15. In 1951, during the Malayan Emergency, the popular British official Sir Henry Gurney was killed near Fraser's Hill in a random assassination by Communist guerillas.
  16. Lake Chini Resort is a favourite haunt for fishing enthusiasts and at times, corporate team building trips.
  17. Tioman Island beaches were depicted in the 1958 movie, South Pacific as Bali Hai. In the 1970s, TIME Magazine selected Tioman as one of the world's most beautiful islands.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.