கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில்

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [2]

தேவார வைப்புத் தலம்
கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):அறமலை, சதுரகிரி[1]
பெயர்:கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கொல்லிமலை
மாவட்டம்:நாமக்கல்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அறப்பளீஸ்வரர், அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர், திருவரப்பள்ளியுடையார், ஆருஷ லிங்கம்,
தாயார்:அறம் வளர்த்த நாயகி, தாயம்மை
தீர்த்தம்:பஞ்சநதி
சிறப்பு திருவிழாக்கள்:ஆடி 18ம் பெருக்கு, அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி, கார்த்திகை ஜோதி, ஆருத்ரா தரிசனம், நவராத்திரி உற்சவம்
பாடல்
பாடியவர்கள்:கம்பர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:அதிகம் உள்ளன. சோழர் காலக் கல்வெட்டுகள் முக்கியமானவை.
வரலாறு
தொன்மை:புராதன காலம்
தேவார வைப்புத் தலப்பாடல் பாடியவர்கள்:திருநாவுக்கரசர்

வரலாறு

சங்க காலத்தில் கொல்லிமலையானது சதுரகிரி என்றும், தர்மதேவதை கொல்லி மலையாக இருப்பதால் ’அறமலை’ என்றும் அழைக்கப்பட்டது. அம்பலவாண கவிராயர் இத்தலத்து இறைவன் மீது அறப்பளீஸ்வரர் சதகம் என்ற நூலை இயற்றியுள்ளார். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தமது தேவாரப் பாடல்களில் கொல்லிமலை பற்றி குறிப்பிட்டுள்ளனர். இத்தலத்து சிவபெருமான் சுயம்பு மூர்த்தி. இறைவன் அறப்பளீஸ்வரர், அன்னையின் பெயர் அறம்வளர்நாயகி என்பதாகும். அறை என்றால் மலை, பள்ளி என்றால் தங்கியிருப்பவர் என்று பொருள். மலையின்மீது ஆலயம் அமைந்துள்ளதால் அறைப்பள்ளீஸ்வரர் என்று இறைவன் அழைக்கப்பட்டார். ஆனால் காலப்போக்கில் இப்பெயர் மருவி அரப்பளீஸ்வரர் என்று தற்போது மக்களால் அழைக்கப்படுகிறார்.

வழிபட்ட மன்னர்கள்

தஞ்சை பெருவுடையார் கோயில் கட்டிய ராஜராஜ சோழனின் பெரிய பாட்டியும், சிவஞான கண்டராதித்த சோழ தேவரின் மனைவியுமான செம்பியன் மாதேவி, விஜயநகர அரசர் வேங்கடபதி, சோழ மன்னர்கள் பராகேசரிவர்மன், குலோத்துங்க சோழன், பராந்தக சோழன்.

மீன்

இத்தலத்தல தீர்த்தத்தில் உள்ள மீன்களைப் பக்தர்கள் ஒருமுறை சமைக்க, அவை உயிர்பெற்று நதியில் குதித்ததால் அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர் என்று இங்குள்ள சிவபெருமான் வழங்கப்படுகிறார்.[3]

ஆகாய கங்கை

கோவிலின் அருகில் ஆகாய கங்கை அருவி உள்ளது.கோரக்க சித்தர், காலாங்கிநாத சித்தர் ஆகியோர் தங்கியிருந்த குகைகள் அருவிக்கு சற்று தூரம் தள்ளி அமைந்துள்ளன.[3]

ஆகாயகங்கை அருவி

ஓரி

ஓரி மன்னர் அரசாண்ட பகுதியாதலால் கோவிலிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள செம்மேடு பகுதியில் அம்மன்னனுக்கு சிலை உள்ளது. ஆடிப்பெருக்கன்று விழா எடுக்கப்படும். மலைவாழ் மக்கள் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.[3]

மலைவாழ் மக்கள் பள்ளிகள்

இப்பகுதியைச் சுற்றி சத் தர்ம ஆசிரமம், ஞான தீப வித்யாலயம் போன்றவை மலைவாழ் மக்களுக்காகப் பள்ளிகள் நடத்துகின்றன. இந்த ஆசிரமங்களைச் சுற்றி புதிதாக ஏற்படுத்தப்படும் தேவாலயங்கள் மக்களை தீவிர மதமாற்றம் செய்வதாகப் புகார்கள் எழுந்தன.[4]

மேற்கோள்கள்

  1. குமுதம் ஜோதிடம்;22.08.2008;
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  3. http://temple.dinamalar.com/New.php?id=1023
  4. குமுதம் ஜோதிடம்;22.08.2008; (குமுதம் ரிப்போர்ட்டர்;31.07.2008; பக்கம் 20)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.