ஈப்போ
ஈப்போ (Ipoh) மலேசிய மாநகரங்களில் ஒரு முக்கியமான நகரம். 'மலேசியாவில் மிகவும் சுத்தமான நகரம்' என்று போற்றப்படும் இந்நகரம் பேராக் மாநிலத்தின் தலைமைப் பட்டணமாகும்.[2] இதனைச் சீன மொழியில் ”பாலோ” (Paloh) என்று அழைக்கிறார்கள்.
ஈப்போ 怡保 Ipoh | ||
---|---|---|
![]() | ||
| ||
அடைபெயர்(கள்): 'கோடீசுவரர்களின் நகரம்' அல்லது 'போகன்விலா நகரம்'[1] | ||
நாடு | மலேசியா | |
மாநிலம் | பேராக் | |
நிறுவல் | 1880 வாக்கில் | |
அரசு | ||
• நகர முதல்வர் | டத்தோ ஆஜி ரோசிடி அசிம் | |
பரப்பளவு | ||
• மொத்தம் | [ | |
ஏற்றம் | 21.95 | |
மக்கள்தொகை (2010) | ||
• மொத்தம் | 6,57,892 | |
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒசநே+8) | |
இணையதளம் | http://www.mbi.gov.my |
'பாலோ' என்றால் ஈயத்தைத் தோண்டி எடுக்கப் பயன்படுத்தப்படும் ’எக்கி’ என்று பொருள். ”கோடீஸ்வரர்களின் சொர்க்க பூமி” எனும் அடைமொழியும் இந்த நகரத்திற்கு உண்டு.[3] இங்கே உணவுப் பொருட்களின் விலையும் குறைவு. மலிவான விலையில் பொருட்கள் கிடைக்கும் இடம் என்று பெருமையாகச் சொல்லப்படுவதும் உண்டு.
சொற்பிறப்பியல்
19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் ஈப்போ பெரும் வணிகத் தளமாகப் புகழ் பெற்று விளங்கியது என்பதற்குப் பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. ’இப்போ’ (Eppo) எனும் சொல் மலேசியப் பூர்வீகச் சொல் ஆகும். 'இப்போ' என்பதே மறுவி 'ஈப்போ' என்று வழங்கப்படுகிறது.
வரலாறு
19ம் நூற்றாண்டில் ஈப்போவில் வெள்ளீயம் பெரும் அளவில் தோண்டி எடுக்கப்பட்டது.[4] சீனாவில் இருந்து இலட்சக்கணக்கான சீனர்கள் ஈப்போவில் குடியேறினர். இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வாணிகம் செய்ய வந்தனர். குஜராத்தியர்கள் கம்பளம், பட்டுத் துணிகள், படுக்கை விரிப்புகள் போன்றவற்றை வியாபாரம் செய்ய ஈப்போவிற்கு வந்தனர்.
பர்மியர்கள் வைரம், மாணிக்கக் கற்களை விற்க வந்தனர். தாய்லாந்து மக்கள் பட்டுத் துணிகளை எடுத்து வந்தனர். அதன் காரணமாக மலேசியாவில் மிகவும் புகழ் பெற்ற நகரமாக ஈப்போ விளங்கியது. ஒரு கட்டத்தில் மலேசியாவின் இரண்டாவது பெரிய நகரமாகவும் ஆங்கிலேயர்களின் தலையாய நிர்வாகத் தலமாகவும் இருந்தது.
1820 ஆம் ஆண்டில் கிந்தா நதிக் கரையோரம் அமைந்திருந்த ஈப்போ ஒரு சிறிய கிராமமாக இருந்தது. அப்போது அது பெரும் புகழ் பெற்று இருக்கவில்லை. ஈப்போவிற்குத் தெற்கே 20 கி.மீ. தொலைவில் கோப்பேங் எனும் ஒரு நகரம் இருக்கிறது. இந்த நகரம்தான் அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்றதாக விளங்கியது.
ஆனால், இப்போது நிலைமை மாறி விட்டது. இப்போது இந்தக் கோப்பேங் நகரம் ஆள் ஆரவாரம், ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருக்கிறது. ஆனால், ஈப்போ தலைமைப்பட்டணமாக மாறி விட்டது. ஈப்போவைப் புகழ் பெறச் செய்தவர்களில் முக்கியமானவர் சர் பிராங்க் சுவெட்டன்ஹாம் என்பவர். இவர் மேற்கு மலேசியாவில் பெரிய மாற்றங்களைச் செய்தவர். மலேசியாவில் பல சாலைகளுக்கு இவருடைய பெயர் வைக்கப் பட்டுள்ளது. இவர்தான் ஈப்போவிற்கு ஒரு புதுப் பொலிவைக் கொடுத்தவர்.
ஆங்கிலேய நிறுவனங்கள்

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல ஆங்கிலேய நிறுவனங்கள் ஈப்போவில் வியாபார மையங்களை அமைத்தன. அதனால் ஈப்போ நகரம் புகழ் பெறத் தொடங்கியது. 1902ம் ஆண்டு இந்தியாவின் 'சார்ட்டர்ட் வங்கி', 'ஆத்திரேலியா-சீனா' நிறுவனம் போன்ற பிரபலமான வங்கிகள் ஈப்போவில் தங்கள் அலுவலகங்களைத் தொடங்கின.
அதற்கு அடுத்து 'ஈஸ்டர்ன் ஸ்மெல்ட்டிங்கு கம்பனி' தனது அலுவலகத்தைத் தொடங்கியது. இந்தக் கட்டத்தில் 'போட்லி அன் கோ.', 'ஏ.எச்.விட்டேக்கர் அன் கோ.', 'சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் எவட் அன் கோ.', Estate Visiting Agents Milne & Stevens போன்ற பங்கு வர்த்தக நிறுவனங்களும் செயல்படத் தொடங்கின.
உலகிலேயே மிகப் பெரிய ஈயப் பள்ளத்தாக்கு பேராக் மாநிலத்தில் உள்ள கிந்தா பள்ளத்தாக்கு ஆகும். இங்கு ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும் உலக மக்களின் பார்வை அங்கே திரும்பியது. ஆயிரக்கணக்கான மக்கள் செல்வந்தர்களாகும் நோக்கத்தில் அந்தப் பள்ளத்தாக்கில் குவியத் தொடங்கினர். சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு பலர் பெரும் பணக்காரர்கள் ஆனார்கள். ஈப்போ நகரமும் வளப்பம் அடைந்தது.
ஈப்போ நியூ டவுன்
1920 ஆம் ஆண்டுகளில் ஈப்போ ஒரு மாபெரும் ஈயப் பட்டணமாக உருவெடுத்தது. செல்வந்தர்களான சீனர்கள் சிலர் ஈப்போ நகரை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டினர். அவர்களில் ஒருவர்தான் 'யாவ்-தெட்-சின்' எனும் செல்வந்தர் ஆவார். இவர் நியூ டவுன் எனும் புதிய ஈப்போ நகரைத் தோற்றுவித்தார். ஈப்போ நகரை கிந்தா ஆறு இரண்டாகப் பிரிக்கின்றது. மேற்குப் பகுதியில் பழைய நகரமும் கிழக்குப் பகுதியில் புதிய நகரமும் இருக்கின்றது.
இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டுக் காரைக்குடியில் இருந்து பல தமிழர்கள் ஈப்போவிற்கு வந்தனர். அவர்கள் சீனர்களின் ஈய வாணிகத்திற்குப் பல வகைகளில் பண உதவிகள் செய்தனர். அதன் மூலம் அவர்கள் வட்டி வசூல் செய்தனர். பின் நாளில் இவர்கள் தான் நகரத்தார்கள் அல்லது செட்டியார்கள் என்று அழைக்கப்பட்டனர். உள்நாட்டு வங்கிகளுக்குப் பண உதவி செய்யும் அளவிற்கு இவர்கள் செல்வாக்குப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நகரத்தார் எனும் சமூகத்தவர் ஈப்போவில் வாழ்ந்தனர். பெரும் பணக்காரர்கள் என்று ஆங்கிலேயர்களே போற்றும் அளவுக்கு அவர்கள் சீரும் சிறப்பும் பெற்று வாழ்ந்தனர். ஒரு கட்டத்தில் கிந்தா பள்ளத்தாக்கின் பணச்சுழற்சியே இவர்களின் ஆதிக்கத்தின் கீழ்தான் இருந்தது. ஈப்போ நகரத்தார்கள் பற்றி ஒரு தனி வரலாறே இருக்கின்றது. இப்போது ‘லிட்டில் இந்தியா’ என்று அழைக்கப்படும் லகாட் சாலை, இரும்புச் சாமான்கள் விற்கப்படும் ஜாலான் பெண்டாஹாரா, புருவ்ஸ்டர் சாலை போன்றவை நகரத்தார்களின் ஆதிக்கத்தில் இருந்தவை. செட்டித் தெரு என்று ஒரு தனிச் சாலையே இருந்தது.
ஜப்பானியர் படையெடுப்பு

1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி ஜப்பானியர்கள் ஈப்போவின் மீது படை எடுத்தனர். ஜப்பானியர்களின் ஆட்சி காலத்தில் பேராக் மாநிலத்தின் தலைமைப் பட்டணமாக 'ஈப்போ' அறிவிக்கப்பட்டது.[5] அதற்கு முன்னர் தைப்பிங் எனும் நகரம் தான் பேராக் மாநிலத்தின் தலைமைப்பட்டணமாக இருந்தது. 1942 ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் தங்களின் Perak Shu Seicho எனும் ஜப்பானிய நிர்வாகத்தை ஈப்போவில் நிறுவினர். ஈப்போ ஜப்பானியர்களின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது அதன் தலைமை அலுவலகம் செயிண்ட் மைக்கல் பள்ளியில் இருந்தது. இந்தப் பள்ளியில் தான் ஜப்பானியர்கள் பல கொடுமைகளைச் செய்தனர். பல நூறு பேர் கொல்லப்பட்டனர்.
புவியியல்
இட விளக்கவியல்
இந்த நகரம் கோலாலம்பூரில் 200 கி.மீ. தொலைவில் வடக்கே உள்ளது. வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை வழியாகவும் ஈப்போ நகரத்தை அடைய முடியும். ஈப்போ மாநகரம் கிந்தா பள்ளத்தாக்கின் நடு மையத்தில் அமைந்து உள்ளது. நகரத்தைக் கிந்தா ஆறு இரண்டாகப் பிரிக்கின்றது. இந்தக் கிந்தா ஆற்றுடன் சுங்கை பிஞ்சி, சுங்கை பாரி எனும் இரு துணை ஆறுகளும் இணைந்து கொள்கின்றன.[6]
ஈப்போ நகரத்தைச் சுற்றிலும் சுண்ணாம்புக் குன்றுகளும் சுண்ணாம்பு மலைகளும் நிறைய உள்ளன.[7] சுண்ணாம்பு மலைகள் குடையப்பட்டு அங்கிருந்து சுண்ணாம்பு கற்கள் வெட்டி எடுக்கப் படுகின்றன. அவை சிமெண்ட் தயாரிக்க உதவுகின்றன.[8] ஈப்போவைச் சுற்றிலும் சிமெண்ட் ஆலைகள் உள்ளன.[9]
தட்பவெப்ப நிலை
ஈப்போவின் தட்ப வெப்ப நிலை வெப்பமண்டல மழைக்காடுகளால் தீர்மானிக்கப்படுகிறது. தட்ப வெப்ப நிலையில் அதிகமான மாற்றங்கள் இல்லை. அதன் சராசரி தட்ப வெப்ப நிலை 30° செல்சியசு ஆகும். ஓர் ஆண்டிற்கு 2340 மி,மீ மழை பொழிகிறது. நவம்பர் மாதத்தில் மிகையான மழை பொழிவும் பிப்ரவரி மாதத்தில் குறைவான மழை பொழிவும் காணப்படுகிறது.
தட்பவெப்ப நிலைத் தகவல், ஈப்போ [10] | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 35 (95) |
36 (97) |
36 (97) |
36 (97) |
37 (99) |
36 (97) |
36 (97) |
36 (97) |
35 (95) |
35 (95) |
33 (91) |
35 (95) |
37 (99) |
உயர் சராசரி °C (°F) | 32 (90) |
33 (91) |
33 (91) |
33 (91) |
33 (91) |
33 (91) |
32 (90) |
32 (90) |
32 (90) |
31 (88) |
31 (88) |
31 (88) |
32 (90) |
தாழ் சராசரி °C (°F) | 22 (72) |
22 (72) |
22 (72) |
22 (72) |
22 (72) |
22 (72) |
22 (72) |
22 (72) |
22 (72) |
22 (72) |
22 (72) |
22 (72) |
22 (72) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 17 (63) |
17 (63) |
17 (63) |
20 (68) |
21 (70) |
21 (70) |
20 (68) |
20 (68) |
20 (68) |
20 (68) |
20 (68) |
18 (64) |
17 (63) |
பொழிவு cm (inches) | 20 (7.9) |
7 (2.8) |
19 (7.5) |
21 (8.3) |
15 (5.9) |
9 (3.5) |
18 (7.1) |
17 (6.7) |
22 (8.7) |
27 (10.6) |
32 (12.6) |
22 (8.7) |
234 (92.1) |
நிருவாகம்
பேராக் மாநிலத்தின் "மந்திரி பெசார்" அல்லது பேராக் மாநில முதல்வராக டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதீர் என்பவர் 12 மே 2009 லிருந்து பொறுப்பிலிருந்து வருகிறார். இவர் பங்கோர் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பேராக் மாநிலாத்தின் 11 ஆவது மந்திரி பெசார். இவருடைய வயது 49. இவருக்கு முன்னதாக முகமது நிஜார் ஜமாலுடின் என்பவர் மந்திரி பெசாராகப் பதவி வகித்தார். அப்துல் காதீர் 1995 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழகத்தில் அரசியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.
ஈப்போ மாநகரம் ஈப்போ மாநகர மன்றத்தினால் (மலாய்: Majlis Bandaraya Ipoh) ஆட்சி செய்யப்படுகிறது. டத்தோ ஹாஜி ரோசிடி ஹாசிம் என்பவர் மாநகர மன்றத்தின் மேயராகப் பதவி வகிக்கிறார். ஈப்போ மாநகரம் இரு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டது. ஈப்போ பாராட் எனும் 'மேற்கு ஈப்போ தொகுதி'. மற்றொன்று ஈப்போ தீமோர் எனும் 'கிழக்கு ஈப்போ தொகுதி'. ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதிக்கு எம். குலசேகரன் மக்களவை உறுப்பினராக இருக்கின்றார். குலசேகரன் ஒரு புகழ்பெற்ற வழக்குரைஞர். 2004 ஆம் ஆண்டு மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்தியர்களுக்குச் சரி சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார். இந்துக் கோயில்கள் உடைக்கப்படுவதையும் தடுத்து வருகிறார்.
ஈப்போ தீமோர் நாடாமன்றத் தொகுதிக்கு லிம் கிட் சியாங் மக்களவை உறுப்பினராக இருக்கின்றார். இவர்கள் இருவரும் ஜனநாயகச் செயல் கட்சி எனும் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்கள். இருவரும் மலேசிய மக்களிடம் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் ஆவர்.

ஈப்போ மாநகர மன்றம்
ஈப்போ முன்பு ஈப்போ நகர மன்றம் என்று அழைக்கப் பட்டது. 27 மே மாதம் 1988ல் அது மாநகர் தகுதியைப் பெற்றது. மாநகர் முதல்வர் அல்லது மேயர் அவர்களை டத்தோ பண்டார் என்று அழைக்கிறார்கள்.
மாநகர் மேயர்கள்
- டத்தோ ஹாஜி உமார் பின் ஹாஜி அபு (1988–1993)
- டத்தோ இஸ்மாயில் பின் ஷா புடின் (1993–1994)
- டத்தோ ஹாஜி அஹ்மட் சாலே பின் ஹாஜி ஷாரிப் (1995–1997)
- டத்தோ ஹாஜி தாலாட் பின் ஹாஜி ஹுசேன் (1998–2002)
- டத்தோ ஹாஜி சிராஜிடின் பின் ஹாஜி சாலே (2002–2004)
- டத்தோ ஹாசன் நவாவி பின் அப்துல் ரஹ்மான் (2004–2006)
- டத்தோ முகமது ராபியாய் பின் ஹாஜி மொக்தார் (2006–2008)
- டத்தோ ஹாஜி ரோசிடி பின் ஹாஜி ஹாசிம் (2008 - இந்நாள் வரை)
மாநகர்ப் பிரிவுகள்
- நிர்வாக மேம்பாட்டுப் பிரிவு (Jabatan Pentadbiran dan Pembangunan Organisasi)
- சுகாதாரப் பிரிவு (Jabatan Kesihatan)
- உரிமம், ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவு (Jabatan Perlesenan dan Penguatkuasaan)
- தகுதி நிர்ணயப் பிரிவு (Jabatan Penilaian)
- பொறியியல் பிரிவு (Jabatan Kejuruteraan)
- திட்டமிடல் பிரிவு (Jabatan Perancang)
- நிதிப் பிரிவு (Jabatan Kewangan)
- நிலக்காட்சிப் பிரிவு (Jabatan Landskap)
- சமூகப் பொதுநலப் பிரிவு (Jabatan Hal Ehwal Komuniti)
- கட்டிடங்கள் பிரிவு (Jabatan Bangunan)
மாநகர்க் கிளை அலுவலகங்கள்
- தஞ்சோங் ரம்புத்தான்
- பெர்ச்சாம்
- ஜெலாப்பாங்
- தம்பூன்
மக்கள்
ஈப்போ மாநகரம் மலேசியாவின் நான்காவது பெரிய நகரமாக உள்ளது. 2009 ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி ஈப்போவிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் 1,143,778 பேர் வசிக்கின்றனர்.[11]
இந்த நகரத்தில் சீனர்கள் ஆதிக்கம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தமிழர்களையும் இங்கே அதிகமாகக் காணலாம். மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ஈப்போவும் ஒன்று. ஈப்போவில் தமிழர்களும் சீனர்களும் மிகவும் நெருங்கிப் பழகி வாழ்கின்றனர். நூற்றுக்கணக்கான தமிழர்கள் சீனப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மலேசியாவில் அதிகமாகத் தமிழர்கள் வாழும் நகரங்களில் ஈப்போ இரண்டாவது இடம் வகிக்கிறது. புறநகர்ப் பகுதியான புந்தோங்கில் இனவாரியாகத் தமிழர்கள் தான் முன்னிலையில் இருக்கிறார்கள்.
மலேசியாவில் ஈப்போ புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் தான் இந்தியர்களின் வாக்கு எண்ணிக்கை 46 விழுக்காடாக இருக்கிறது. 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகை புள்ளி விவரங்களின் படி ஈப்போவில் 102,866 இந்தியர்கள் வாழ்கின்றனர் என்பது தெரிய வருகிறது. இவர்களில் கணிசமான அளவில் சீக்கியர்களும் இருக்கின்றனர். மலேசியாவில் அதிகமாகச் சீக்கியர்கள் வாழும் இடம் ஈப்போ புந்தோங் ஆகும். ஏறக்குறைய 4000 சீக்கியர்கள் இங்கு இருக்கிறார்கள்.
2008 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள்
ஈப்போ மக்கள் தொகை இன வாரியாக 2008 ஆம் ஆண்டு | ||
---|---|---|
இனங்கள் | மக்கள் தொகை | விழுக்காடு |
சீனர்கள் | 451,361 | 70.0% |
மலாய்க்காரர்கள் | 109,616 | 17.0% |
இந்தியர்கள் | 80,600 | 12.5% |
மற்றவர்கள் | 3,225 | 0.5% |
ஈப்போவில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அதிகமாக வேலை செய்ய வந்துள்ளனர். வங்காள தேசத் தொழிலாளர்கள் தான் மிகுதியாகத் தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். இவர்களில் சிலர் உள்நாட்டுப் பெண்களுடன் பழகி அவர்களைத் தங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்றனர். அது ஒரு சமூகப் பிரச்னையாக மாறியது. அரசாங்கம் தலையிட்டு வங்காள தேசத் தொழிலாளர்களை மலேசியாவிற்குள் கொண்டு வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
குறிப்பிடத்தக்க நபர்கள்
ஈப்போவில் பிறந்து உலக அரங்கில் பலர் அரசியல், சமூகம், கலை, விளையாட்டுத் துறைகளில் தடம் பதித்துள்ளனர். சில இந்தியர்கள் மக்கள் மனதில் அழியாத இடங்களையும் பிடித்துள்ளனர். அவர்களில் மிக முக்கியமானவர்கள் சீனிவாசகம் சகோதரர்கள். இவர்கள் ஈப்போவில் புகழ் பெற்ற தமிழர்கள். டி. ஆர். சீனிவாசகத்தின் முழுப் பெயர் சீனிவாசகம் தர்ம ராஜா. இவர் தன்னுடைய சகோதரர் எஸ்.பி.சீனிவாசகத்துடன் இணைந்து 1953ல் மக்கள் முன்னேற்றக் கட்சியை (People’s Progressive Party (PPP)) உருவாக்கினார். பின்னர் அக்கட்சியின் தலைவராகவும் பொறுப்பு ஏற்றார். எஸ்.பி.சீனிவாசகத்தின் முழுப் பெயர் சீனிவாசகம் ஸ்ரீ பத்மராஜா.
எஸ்.பி.சீனிவாசகம்
ஈப்போவின் வரலாற்றை மாற்றி அமைத்த தலைவர்களில் டத்தோஸ்ரீ எஸ்.பி.சீனிவாசகம் ஒருவராகக் கருதப்படுகிறார். எஸ்.பி என்று மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட இவர் டி.ஆர். சீனிவாசகத்தின் சகோதரர் ஆவார். மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற அரசியல் தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் இவர் வாதாடி உள்ளார். அந்த வகையில் 1964 ஆம் ஆண்டு நடைபெற்ற அமைச்சர் ரஹ்மான் தாலிப் லஞ்ச ஊழல் வழக்கு மிக முக்கியமானதாகும். ரஹ்மான் தாலிப் அப்போதைய கல்வி அமைச்சராக இருந்தார். இந்த வழக்கில் ரஹ்மான் தாலிப் தோல்வி கண்டார். அது மட்டும் அல்ல. அவருடைய அமைச்சர் பதவியும் பறி போனது. அந்த வேதனையில் ரஹ்மான் தாலிப் நோயுற்று இறந்து போனார். சீனிவாசகம் ஈப்போ மெங்லம்பு நாடாளுமன்றத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகச் சேவை செய்தவர். சுங்கை பாரி சட்டமன்றத் தொகுதியின் பிரதிநிதியாகவும் சேவை ஆற்றியவர்.
எஸ்.பி. சீனிவாசகம் ஒரு மிகச் சிறந்த வழக்குரைஞர். ஒரு கட்டத்தில் இவருக்கு நீதிபதி பணியும் வழங்கப்பட்டது. ஆனால், அதை அவர் மறுத்து விட்டார். பின்னர் ஆளும் பாரிசான் கட்சியுடன் இணைந்தார். அதனால் ஈப்போ மக்களிடையே மனக் கசப்புகள் உருவாகின. அதன் பின்னர் ஈப்போ அரசியலில் பற்பல மாற்றங்களும் ஏற்பட்டன. இவருக்கு 1964 ஆம் ஆண்டு டத்தோ விருதும் 1972 ஆம் ஆண்டு டத்தோ ஸ்ரீ விருதும் வழங்கப் பட்டது. 1975 ஜூலை 4 ஆம் தேதி மாரடைப்பினால் காலமானார். அவரது சேவையைப் பாராட்டி ஈப்போவில் ஒரு சாலைக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சிபில் கார்த்திகேசு
புகழ்பெற்ற சிபில் கார்த்திகேசு எனும் தமிழ்ப் பெண் போராளி ஜப்பானிய ஆட்சி காலத்தில் அவர்களுக்கு எதிராகப் போராடினார். ஜப்பானியர்களுக்கு எதிராக ஓர் இயக்கம் ஈப்போ, பாப்பான் போன்ற இடங்களில் 1943–1944 களில் இயங்கி வந்தது. அந்த இயக்கத்தில் காயம் பட்டவர்களுக்குச் சிபில் கார்த்திகேசுவும் அவருடைய கணவரும் உதவிகளைச் செய்து வந்தனர். இதை அறிந்த ஜப்பானியர்கள் அவர்களைக் கைது செய்தனர். மிருகத்தனமாகச் சித்ரவதைகள் செய்தனர். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் ஆங்கிலேயர்கள் அவரை இங்கிலாந்திற்கு கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு வாழ்நாள் மருத்துவம் செய்யப்பட்டது. ஐக்கிய் இராச்சியத்தின் குடிமக்களின் வீரத்துக்கு அளிக்கப்படும் விருதுகளில் இரண்டாம் உயரிய விருதான 'ஜார்ஜ் பதக்கம்' அவருக்கு வழங்கப்பட்டது.
டத்தோ மிச்சல் இயோ

ஈப்போவில் பிறந்து உலக அரங்கில் பலர் அரசியல், சமூகம், கலை, விளையாட்டு என்று பல துறைகளில் தடம் பதித்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர் டத்தோ மிச்சல் இயோ (Dato Michelle Yeoh). இவர் 1962 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6 ஆம் தேதி ஈப்போவில் பிறந்தார். ஜேம்ஸ் பாண்ட் படமான Tomorrow Never Dies; Memoirs of a Geisha, The Mummy: Tomb of the Dragon Emperor போன்ற படங்களில் நடித்து உலகளாவியப் புகழ் பெற்றவராவார்.
இவருடைய தந்தை ஒரு வழக்குரைஞர். பின்னர் அரசியல்வாதியாக மாறினார். மிச்சல் இயோ தன்னுடைய பள்ளி வாழ்க்கையை ஈப்போ கான்வெண்ட் பள்ளியில் தொடங்கினார். 15 ஆவது வயதில் இங்கிலாந்திற்குச் சென்று அங்கு தொடர்ந்து படித்தார். 1983 ல் அவருடைய 21 ஆவது வயதில் மலேசிய அழகு ராணியாகத் தெரிவு செய்யப் பட்டார். அவருக்குப் பேராக் சுல்தான் 'டத்தோ விருது' கொடுத்துக் கௌரவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு பிரான்சு அரசாங்கம் செவாலியர் விருது வழங்கியது.
தன்னுடைய கணவர் டிக்சன் பூன் என்பவரிடமிருந்து விவாகரத்து பெற்று இப்போது ஹாங்காங்கில் வாழ்ந்து வருகிறார்.
எம். எஸ். மெய்யப்பச் செட்டியார்கள்
1940 ஆம் ஆண்டுகளில் ஈப்போவில் எம்.எஸ்.எம்.எம் எனும் பெயரில் ஒரு வங்கி செயல் பட்டு வந்தது. அதை எம். எஸ். மெய்யப்பச் செட்டியார்கள் என்றழைக்கப்படும் சகோதரர்கள் இருவர் நடத்தி வந்தனர். அந்த வங்கியின் தலைமையகம் அப்போது காரைக்குடியில் இருந்தது.
இரண்டாம் உலகப் போர் நிதிக்கு எம்.எஸ்.எம். குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 10,000 ரூபாய் நன்கொடை வழங்கினர். அக்காலத்தில் அது பெரும் தொகையாகும். மலாயாவுக்குச் வந்த நகரத்தார்கள் பொதுவாகத் தங்களுடைய மனைவிமார்களை அழைத்து வருவதில்லை. அந்தப் பாரம்பரிய வழக்க முறையை மாற்றி அமைத்தவர் திருமதி. சொக்கலிங்கம் செட்டியார். 1933 ஆம் ஆண்டு தன் கணவருடன் ஈப்போ வந்தார். அதன் பின்னர் நகரத்தார் தம் மனைவி பிள்ளைகளை அழைத்து வரத் தொடங்கினர். அவ்வாறு வந்த அவர்களுடைய பேரப் பிள்ளைகள் பலர் தமிழகத்திற்குத் திரும்பிச் செல்லவில்லை. ஈப்போவிலேயே தங்கிவிட்டனர். வங்கி மேலாளர்கள், வழக்குரைஞர்கள, மருத்துவர்கள், ஆசிரியர்கள், மற்றும் கட்டடக்கலை வல்லுநர்களாகப் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் இங்கு சமயத் தொண்டுகளும் நிறைய செய்து வருகின்றனர்.
பண்பாடு
காரைக்குடி மாளிகைகள்
செட்டித் தெருவில் தமிழகத்தின் காரைக்குடி பகுதியில் உள்ள மாளிகைகளைப் போன்ற பல வீட்டு மனைகள் இன்றும் உள்ளன. அவை செட்டித் தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்தக் கட்டிடங்களில் பலவற்றைச் சீனர்கள் விலை கொடுத்து வாங்கி விட்டனர். வரிசை வரிசையாக இருந்த காரைக்குடி மனைகள் இப்போது சீனர்களின் வியாபார வணிகத் தளங்களாக மாற்றம் கண்டுள்ளன. 1969 ஆம் ஆண்டு மலேசியாவில் ஓர் இனக் கலவரம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காரைக்குடித் தமிழர்கள் பலர் தத்தம் வீடுகளை விற்று விட்டுத் தமிழகம் திரும்பினர். சீனர்கள் மிகக் குறைந்த விலையில் அந்த வீடுகளை வாங்கிக் கொண்டனர்.
பட மேடைகள்
ஈயம் மிகுதியாகத் தோண்டி எடுக்கப் பட்ட காலத்தில் 'ஈப்போ' நகரத்தில் அதிகமான எண்ணிக்கையில் படமேடைகள் திரையரங்குகள் உருவாகின. தமிழ்ப் படங்களுக்கென்று ஓடியன், கிரேண்ட் போன்ற திரை அரங்குகள் கட்டப்பட்டன. "தி லைப் ஒப் மகாத்மா காந்தி" எனும் படம் ஈப்போ ஓடியன் படமேடையில் 31 மே 1941 ஆம் தேதியில் திரையிடப் பட்டது. அதைக் காண ஈப்போ மக்கள் திரண்டு நின்றனர். அதைப் பற்றி ’தி ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் ஒரு நீண்ட செய்தி வெளியிட்டது.
புந்தோங் வாழ் தமிழர்களுக்குக் குளோரி படமேடையும் கட்டப்பட்டது. இப்போது அந்தக் குளோரி படமேடை இல்லை. அந்த இடத்தில் புந்தோங் மக்கள் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. தமிழர்களின் திருமண நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறுகின்றன.
கேளிக்கை அரங்குகள்
ஈப்போ நகரில் பணம் புரண்ட காலத்தில் நூற்றுக்கணக்கான கேளிக்கை அரங்குகள் இருந்தன. அவற்றுக்கு மலேசியாவின் பல பகுதிகளிலிருந்து மக்கள் வந்தனர். 1970 களில் உலகச் சந்தையில் ஈய விலை அடி மட்டத்திற்குச் சரிந்து போனது. ஈப்போவிற்கு பயங்கரமான அடி விழுந்தது. அதனால் பெரும்பாலான ஈப்போ வாழ் மக்கள் வாழ வழி தேடி வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்தனர். சில வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை அண்டை நாடுகளுக்கு மாற்றிக் கொண்டன. அதனால் வேலை வாய்ப்புகளும் பாதிக்கப்பட்டன. இதனால் பெரும்பாலான ஈப்போ இளைஞர்கள் வெளி மாநிலங்களுக்குச் செல்கின்றனர்.
கோலாலம்பூர், சிங்கப்பூர் போன்ற மாநகரங்களுடன் ஈப்போவினால் போட்டிப் போட முடியவில்லை. இருப்பினும் மலேசியாவிலேயே ”மிகவும் சுத்தமான நகரம்” எனும் அடைமொழியுடன் ஈப்போ சிறப்பிடம் பெறுகிறது.
கல்வி
ஈப்போவில் தமிழில் பயிற்றுவிக்கும் பள்ளிகள் பெருமளவில் உள்ளன.
தமிழ்ப் பள்ளிக்கூடங்கள்
- ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி
- சங்கீத சபா தமிழ்ப்பள்ளி
- மெதடிஸ்ட் தமிழ்பள்ளி
- பிலோமினா தமிழ்ப்பள்ளி
- லகாட் சாலை செட்டியார் தமிழ்ப்பள்ளி
- கம்போங் சிமி தமிழ்ப்பள்ளி
- குனோங் ராபாட் தமிழ்ப்பள்ளி
- சத்தியசாலா தமிழ்ப்பள்ளி
- கிளேபாங் தமிழ்ப்பள்ளி
- மகிழம்பூ தமிழ்ப்பள்ளி
மேற்கோள்கள்
- The Bougainvillea City referring to Bougainvillea as the symbol flower of the city.
- Ipoh is a city in Malaysia and is the capital of the state of Perak.
- The Town Built on Tin and City of Millionaires referring to the vast fortunes made during the boom of the tin-mining industries.
- Ipoh cities into the turn of 19th century to developed the booming tin-mining industry propelled the sleepy town into the height of its glory peaked in the 1950s.
- Khoo Salma Nasution & Abdur-Razzaq Lubis, Kinta Valley: Pioneering Malaysia's Modern Development, Ipoh: Perak Academy, 2005. pp. 273–292
- "Limestone Hills (Bukit Batu Kapur), Ipoh, PERAK - Malaysia Travel Review". Malaysiahotelreview.com. பார்த்த நாள் 10 December 2015.
- "Home". Cavesofmalaysia.com. பார்த்த நாள் 10 December 2015.
- Jacq-Hergoualc'h, Michel; Victoria Hobson (September 2002). The Malay Peninsula: Crossroads of the Maritime Silk Road (100 BC - 1300 AD). BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-11973-6.
- Ipohworld’s World » Yau Tet Shin’s New Town Under Construction 1908. Ipohworld.org. Retrieved on 10 December 2015.
- June 2010 வானிலைத்தகவல்கள்