துருக்கி

துருக்கி என்பது ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் தலைநகரம் அங்காரா ஆகும். இஸ்தான்புல் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். இங்கு துருக்கி மொழி பேசப்படுகிறது. துருக்கியின் மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த நகரமான இஸ்தான்புல், பொஸ்போருஸ் கடலால் இரண்டாகப் பிரிக்கப் படுகின்றது. மேற்குப் பகுதி, ஐரோப்பிய நிலமாகவும், கிழக்குப் பகுதி ஆசிய நிலமாகவும், புவியியல் ரீதியாக அல்ல, அரசியல் ரீதியாகக் கருதப்படுகின்றது. இரண்டு பகுதிகளையும் இணைக்கும் பிரமாண்டமான பாலம், மனிதனால் கட்டப்பட்ட அதிசயங்களில் ஒன்று.இது இன்னொரு பக்கம், துருக்கியின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது எனலாம். மேலைத்தேயக் கலாச்சாரமும், கிழக்கத்தியக் கலாச்சாரமும், லிபரல் சித்தாந்தமும், இஸ்லாமிய மதமும், என்று நாடு முழுக்க இரு வேறு பட்ட உலகங்களைக் காணலாம்.

துருக்கி குடியரசு
Türkiye Cumhuriyeti
தூர்க்கியெ ஜும்ஹுரியெடி
கொடி சின்னம்
குறிக்கோள்: Yurtta Sulh, Cihanda Sulh
வீட்டில் அமைதி, உலகில் அமைதி
நாட்டுப்பண்: İstiklâl Marşı
சுதந்திரத்தின் கீதம்
Location of துருக்கி
தலைநகரம்அங்காரா
பெரிய நகர் இஸ்தான்புல்
ஆட்சி மொழி(கள்) துருக்கி மொழி
மக்கள் துருக்கியர்
அரசாங்கம் நாடாளுமன்றக் குடியரசு
   குடியரசுத் தலைவர் அப்துல்லா குல்
   முதலமைச்சர் ரெஜெப் தய்யிப் எர்தொகன்
ஒட்டோமான் பேரரசின் பிரிவு
   விடுதலைப் போர் மே 19 1919 
   துருக்கியின் தேசிய இயக்கம் ஏப்ரல் 23 1920 
   குடியரசின் கூற்றம் அக்டோபர் 29 1923 
பரப்பு
   மொத்தம் 7,83,562 கிமீ2 (37வது)
3,02,535 சதுர மைல்
   நீர் (%) 1.3
மக்கள் தொகை
   2007 கணக்கெடுப்பு 70,586,256[1] (17வது³)
   அடர்த்தி 93/km2 (102வது³)
240/sq mi
மொ.உ.உ (கொஆச) 2008 IMF கணக்கெடுப்பு
   மொத்தம் $941.6 பில்லியன்[2] (15வது)
   தலைவிகிதம் $13,511[3]
மொ.உ.உ (பெயரளவு) 2008 IMF கணக்கெடுப்பு
   மொத்தம் $748.3 பில்லியன்[4] (17வது)
   தலைவிகிதம் $10,738 [5]
ஜினி (2005)38
மத்திமம்
மமேசு (2007) 0.775
Error: Invalid HDI value · 84வது
நாணயம் புது துருக்கிய லிரா (TRY)
நேர வலயம் FET (ஒ.அ.நே+3)
திகதி அமைப்பு dd/mm/yyyy (AD)
வாகனம் செலுத்தல் right
அழைப்புக்குறி 90
இணையக் குறி .tr
2. லோசான் ஒப்பந்தம் (1923).
3. 2005 மதிப்பீட்டின் படி

வரலாறு

பழங்காலம்

இன்றைய துருக்கியின் பெரும் பகுதியை உள்ளடக்கிய, ஆசியா மைனர் என்றும் அழைக்கப்பட்ட, அனத்தோலியக் குடாநாடு தொல்பழங் காலத்திலிருந்தே தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்த பகுதிகளுள் ஒன்று. இங்குள்ள புதிய கற்காலக் குடியேற்றங்களான சட்டல்ஹோயுக், சயோனு, நெவாலி கோரி, ஹசிலர், கோபெக்லி தெபே, மேர்சின் என்பன உலகின் மிகப் பழைய குடியேற்றங்களுள் அடங்குவன. திராய் குடியேற்றம் புதிய கற்காலத்தில் தொடங்கி இரும்புக்காலம் வரை தொடர்ந்துள்ளது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலத்தில், அனத்தோலியர்கள் இந்திய-ஐரோப்பிய, செமிட்டிய, கார்ட்வெலிய மொழிகளையும், எக்குழுவைச் சேர்ந்தவை என்று தெரியாத வேறு பல மொழிகளையும் பேசி வந்துள்ளனர். அனத்தோலியாவில் இருந்தே இந்திய-ஐரோப்பிய மொழிகள் உலகம் முழுதும் பரவியதாகச் சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இப்பகுதியில் உருவான மிகப் பழைய பேரரசு ஹிட்டைட் பேரரசு ஆகும். இது கி.மு. 18 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை நிலைத்திருந்தது. பின்னர் இந்திய-ஐரோப்பிய மொழி பேசிய பிரிஜியர்கள் உயர்நிலை அடைந்தனர். இவர்களது அரசு கிமு ஏழாம் நூற்றாண்டளவில் சிமேரியர்களால் அழிக்கப்பட்டது. பிரிஜியர்களுக்குப் பின்னர் பலம் வாய்ந்த அரசுகளை நிறுவியவர்கள் லிடியர்களும், காரியர்களும், லிசியர்களும் ஆவர். லிடியர்களும், லிசியர்களும் பேசிய மொழிகள் அடிப்படையில் இந்திய-ஐரோப்பிய மொழிகளே ஆயினும், ஹிட்டைட் மற்றும் ஹெலெனியக் காலங்களுக்கு முன்னரே இம்மொழிகள் பெருமளவு பிற மொழிக் கூறுகளைப் பெற்றுக்கொண்டன.

கிமு 1200 அளவில் தொடங்கி அனத்தோலியாவின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் எயோலியக் கிரேக்கர்களும், அயோனியக் கிரேக்கர்களும் குடியேற்றங்களை அமைத்தனர். கி.மு. ஆறு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் இப்பகுதி முழுவதையும் பாரசீக ஆக்கிமெனிட் பேரரசு கைப்பற்றி வைத்திருந்தது. பின்னர் கிமு 334ல் அலெக்சாண்டரிடம் வீழ்ச்சியடைந்தது. இதன் பின்னர் அனத்தோலியா பல சிறிய அரசுகளாகப் பிரிவடைந்தது. பித்தினியா (Bithynia), கப்பாடோசியா (Cappadocia), பெர்காமும் (Pergamum), பொன்டஸ் (Pontus) போன்றவை அவற்றுள் சில. இவை அனைத்துமே கி.மு. முதலாம் நூற்றாண்டின் நடுப்பகுதியளவில் ரோமப் பேரரசிடம் வீழ்ச்சி கண்டன. கிபி 324ல் இப்பகுதியிலிருந்த பைசன்டியத்தை "புதிய ரோம்" என்னும் பெயருடன் ரோமப் பேரரசின் தலைநகரம் ஆக்கினான். இது பின்னர் கான்ஸ்டண்டினோப்பிள் எனப்பட்டது. இதுவே இன்றைய இஸ்தான்புல் ஆகும். மேற்கத்திய ரோமப் பேரரசு வீழ்ச்சியடைந்த பின்னர், இது பைசன்டியப் பேரரசின் (கிழக்கத்திய ரோமப் பேரரசு) தலைநகரம் ஆனது.

துருக்கியரும் ஓட்டோமான் பேரரசும்

கினிக் ஓகுஸ் துருக்கியர்களின் ஒரு பிரிவினரான செல்யூக் குழுவினர், ஒன்பதாம் நூற்றாண்டில் கஸ்பியக் கடலுக்கும், ஆரல் கடலுக்கும் வடக்கே முஸ்லிம் உலகின் எல்லைப்பகுதியில் வாழ்ந்து வந்தனர். 10 ஆம் நூற்றாண்டில் செல்யூக்குகள் தமது தாயகத்தில் இருந்து அனத்தோலியாவின் கிழக்குப் பகுதிகளை நோக்கிப் புலம் பெயர்ந்தனர். 1071 இல் இடம்பெற்ற மான்சிகேர்ட் போரைத் தொடர்ந்து இப் பகுதிகள் செல்யூக்குகளின் புதிய தாயகம் ஆனது. செல்யூக்குகள் பெற்ற இவ்வெற்றி, அனத்தோலிய செல்யூக் சுல்தானகங்கள் என்னும் அரசுகள் தோன்றக் காரணமாகியது. இவை, மத்திய ஆசியாவின் சில பகுதிகள், ஈரான், அனத்தோலியா, தென்மேற்கு ஆசியா ஆகியவற்றை உள்ளடக்கியிருந்த பெரிய பேரரசின் ஒரு தனிப்பிரிவுகளாக இருந்தன.

1243 ஆம் ஆண்டில், செல்யூக் படைகள் மங்கோலியர்களால் தோற்கடிக்கப்பட, செல்யூக் பேரரசு மெதுவாகச் சிதைவடையத் தொடங்கியது. இதே வேளை, முதலாம் ஒஸ்மான் என்பவரால் ஆளப்பட்ட துருக்கியப் பகுதியொன்று ஓட்டோமான் பேரரசாக வளர்ச்சியுற்றது. இது செல்யூக்குகளினதும், பைசண்டியர்களினதும் வீழ்ச்சியால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியது.

ஓட்டோமான் பேரரசு தனது 623 ஆண்டுகால வரலாற்றில், கிழக்கு நாடுகளோடும், மேற்கு நாடுகளோடும் தொடர்புகளை வைத்திருந்தது. 16 ஆம் 17 ஆம் நூற்றாண்டுகளில் இது உலகின் பலம் வாய்ந்த வல்லரசுகளில் ஒன்றாகத் திகழ்ந்தது.

அரசியல்

முதலாம் உலக யுத்தத்தில் தோல்வியைத் தழுவிய, அன்றைய ஒட்டோமான் சாம்ராஜ்யத்தை ஆண்ட சக்கரவர்த்தி பதவியில் இருந்து நீக்கப்பட்டு , அரசியல் உள்நோக்கம் கொண்ட கெமல் அட்டடுர்க் என்ற இராணுவ அதிகாரி துருக்கியின் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அது நவீனமடைய தொடங்கியது. மேற்கு ஐரோப்பிய பாணியில் கல்வி, ஒரு கலாச்சார புரட்சியை உருவாக்கியது. பழமைவாதத்தை ஆதரித்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மதச்சார்பற்ற கொள்கை வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு அட்டடுர்க் அரசாங்கம் ஒருபக்கம் முற்போக்கானதாக இருந்தாலும், மறு பக்கம் பாசிச மயமாகி சிறுபான்மை இனங்களை அடக்கி, துருக்கி மொழி திணிப்பு இடம்பெற்றது. ஆர்மேனிய மொழி பேசும் மக்கள் இந்தப் பேரினவாதத்திற்கு அதிக விலை கொடுத்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டு, மிகுதிபேர் தமது குடியுருப்புகளை விட்டு விரட்டப்பட்டனர்.

அந்த இனப்படுகொலைக்குப் பிறகு எஞ்சியிருந்தோரும், பிற இனத்தவர்களும், துருக்கி மொழி மட்டுமே பேச வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டனர். அவ்வாறே தென் கிழக்கு மலைப்பிரதேசங்களில் வாழும் குர்து மொழி பேசும் மக்களின் இன அடையாளமும் புறக்கணிக்கப்பட்டு, அவர்கள் "மலைநாட்டு துருக்கியர்" என்று அழைக்கப்பட்டனர். இஸ்லாம் என்ற மதம் மட்டுமே இவ்விரு இன மக்களுக்கும் பொதுவானது. மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய துருக்கி மொழி பேசுவோரும், இந்தோ-ஈரானிய மொழி பேசும் பூர்வ குடிகளான குர்த்தியரும், கலாச்சார ரீதியாக வேறுபட்டவர்கள். இத்தகையக் கலாச்சாரப் பாரம்பரியம் கொண்ட மக்கள், தமக்கென பாடசாலை இன்றி துருக்கி மொழியில் கல்வி கற்க வேண்டிய நிலை. எந்தப் பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு குர்து மொழிப் பெயர் இட்டால் சிறை செல்ல வேண்டும். குர்து மொழியை வீதியில் பேசுவது கூட தடை செய்யப்பட்டது. அந்த இன மக்களுக்கே உரிய "நெவ்ரோஸ்" எனப்படும் புத்தாண்டு கொண்டாடுவது கூட அண்மைக்காலமாகத் தடை செய்யப்பட்டிருந்தது.

துருக்கி-குர்து கலப்பினப் பெற்றோருக்குப் பிறந்த அப்துல்லா ஒச்சலான், குர்திய தொழிலாளர் கட்சி (pkk) என்ற ஆயுதப்போராட்ட வழியில் நம்பிக்கை கொண்ட அமைப்பை நிறுவிய பிறகு, அந்த பிராந்தியத்தில் வன்முறைக் கலாச்சாரம் பரவியது. துருக்கியின் போலிஸ், இராணுவத்தைக் குறிவைத்து கெரில்லாக்கள் தாக்கத் தொடங்க, பதிலடியாக இராணுவம் அப்பாவி பொதுமக்களைக் கொன்று, அவர்களின் குடியிருப்புக்களை அழித்து, பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கி , சொத்துகளை நாசமாக்கி, அடக்குமுறையை ஏவி விட்டது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராளிகளாக மாற, தனது போராட்டம் முன்னேறி, அது ஒரு மக்கள் புரட்சியாக மாறும் என்று ஒச்சலான் கணக்குப் போட, தள நிலைமை எதிர்பாராத அளவு மோசமடைந்தது.

துருக்கி இராணுவம் பெருமளவு குர்து மக்களை, அவர்களது கிராமங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றி, ஆயிரம் மைல்களுக்கு அப்பால், துருக்கியின் மேற்கு பகுதியில் குடி அமர்த்தியது. நேட்டோ அமைப்பில் உறுபினராக இருந்ததால், அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து இராணுவ ஆலோசனைகள், ஆயுத தளபாடங்கள் ஆகியனவற்றை பெற்றுக் கொண்டது. இதனால் பி.கே.கே.யின் தாக்குதிறன் கணிசமாக குறைக்கப்பட்டு, போராளிகள் மலைகளில் மட்டும் முடங்கி கொள்ள நேர்ந்தது. அண்டை நாடான சிரியாவை, பி.கே.கே. நீண்ட காலமாக தனது பின்தளமாக பயன்படுத்தியது. இயக்கத்தின் தலைவர் ஒச்சலான் அங்கே தங்கியிருந்தது மட்டுமல்ல, பல பயிற்சி முகாம்களும் இருந்தன. பின்னர் துருக்கி அரசாங்கம் சிரியா மீதும் படையெடுப்போம் என்று மிரட்டியதால், அங்கிருந்து வெளியேறிய ஒச்சலனை கென்யாவில் வைத்து, துருக்கிய கொமாண்டோக்கள் சிறை பிடித்து கூட்டி வந்தனர். இந்த பின்னடைவு,பி.கே.கே. இயக்கத்தில் பெரும் பதிப்பை உண்டாக்கி, இரண்டாக உடைந்து பலவீனப்பட்டது. தற்போது பி.கே.கே.யின் முக்கிய முகாம்கள் துருக்கி எல்லையோரமாக இருக்கும் ஈராக்கின் மலைப் பகுதிகளில் உள்ளன.

இரயில்வே சுரங்கப் பாதை

ஆசிய, ஐரோப்பிய கண்டங்களுக்கு நடுவில் அமைந்துள்ள துருக்கியின் ஐரோப்பிய பகுதியான அல்கலி நகரில் இருந்து ஆசியப் பகுதியான ஜெப்ஸிக்கு 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்வே பாதை அமைக்கும் பணி 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பாதையில் போஸ்போரஸ் ஜலசந்தி கடற்பகுதியில் 16.6 கி.மீட்டர் தொலைவு ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டது. இப் பணியை ஜப்பான்- துருக்கி கூட்டு நிறுவனமான தைஷி மேற்கொண்டது.இதில், 1.4 கிலோ .மீட்டர் தொலைவு கடலுக்கு அடியில் சுமார் 200 அடி ஆழத்தில் டியூப் வடிவிலான சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள டியூப் வடிவ சுரங்கப் பாதை ரயில்வே கட்டுமானத் துறையில் மிகப்பெரிய சாதனை என்று வர்ணிக்கப்படுகிறது. கடலுக்குள் 3 ரயில் நிலையங்களும் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் யனிகபி ரயில் நிலையம் இத்தாலியின் வர்த்தக நகரமான இஸ்தான்புல் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது. [6]

ஐரோப்பிய யூனியனில் அங்கமாக இல்லாத ஐரோப்பிய நாடு

ஐரோப்பாவில் இருந்த போதும் துருக்கி ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கவில்லை. இதனால் விமானப்பயணிகள் பொருட்களை இங்கிருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்லும்போது சுங்கவரி முறை மாறுபாட்டால் குழப்பமுறும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மேற்கோள்கள்

  1. Address-based Population Register System (2007 census). Results announced on January 20, 2008.
  2. IMF: World Economic Database, April 2008 Gross Domestic Product based on Purchasing-Power-Parity (PPP) valuation of country GDP. Figures for 2007 and 2008.
  3. IMF: World Economic Database, April 2008 Gross Domestic Product based on Purchasing-Power-Parity (PPP) valuation of per capita GDP. Figures for 2007 and 2008.
  4. IMF: World Economic Database, April 2008 Nominal Gross Domestic Product (GDP) of Turkey. Figures for 2007 and 2008.
  5. IMF: World Economic Database, April 2008 Nominal Gross Domestic Product (GDP) per capita of Turkey. Figures for 2007 and 2008.
  6. "ஆசியா - ஐரோப்பாவை இணைக்கும் கடல்வழி ரயில்வே சுரங்கப் பாதை: 150 ஆண்டு கனவை நனவாக்கியது துருக்கி". தி இந்து (31 அக்டோபர் 2013). பார்த்த நாள் 22 அக்டோபர் 2013.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.